என்.ஸ்ரீராமின் கதைகளில் இறப்புச் சடங்குகள் | நா.மோகனசெல்வி

என்.ஸ்ரீராமின் கதைகளில் இறப்புச் சடங்குகள் நா.மோகனசெல்வி
ஆய்வுச்சுருக்கம்
                 
     தமிழரின் வாழ்வியலோடு ஒட்டிய நிகழ்வுகளை கொங்கு நாட்டின் பழக்க வழக்கங்கள் என்ற தன்னுடைய பார்வையில் பட்டதை உயிரோட்டமாக மண்மனம் மாறாமல் எடுத்து எழுத்துக்களில் படைத்தவர் நம் எழுத்தாளர். மனிதனின் வாழ்நாளை முழுமைப்படுத்திய இறப்பின் சடங்குகளை விருப்பு வெறுப்பு இன்றி உரத்த தொனியில் கூறுகின்றார். சொர்க்கம் நரகம் என்ற நம்பிக்கையை ‘பீடி’ என்ற சிறுகதை வாயிலாக இறந்தவர்களின் உடலுக்கு செய்யும் மரியாதையையும், அவர்களின் நிறைவேறாத ஆசைகள் அவர்கள் வாழ்நாளில் விரும்பிய பொருட்களை அவர்களின் இறப்பு சடங்குகளில் வைத்து நிறைவேற்றப்படுகின்றது.
               
         அது போலவே ‘சிதைக்கோழி’ என்ற சிறுகதையில் ஒருவர் இறந்ததாக நினைத்து செய்யப்பட்ட இறப்பு சடங்குகளின் போது உயிர் பெற்று விட்டால் அவர்களின் வாழ்நாள் நீடிக்கப் பெற்று விட்ட காரணத்தினால் இறப்பு சடங்கை தவிர்க்க முடியாத நிலையில் ஒரு மனித உயிரின் மகத்துவத்திற்காக பாடையில் கோழியை கட்டி இடுகாட்டுக்கு எடுத்துச் செல்லும் பழக்கம் இருப்பதையும் தம் கதையில் நம்பிக்கையின் நிகழ்வாக காட்டியுள்ளார்
               
மரணம் பற்றிய நம்பிக்கைகள் என்ற கருத்தில் ஒரு வீட்டில் இறப்பு நிகழ்ந்தால் அந்த வீட்டில் ஒருநல்ல நிகழ்வுகள் நடைபெறும் என்றும் அதை மெய்பிக்கும் விதமாக ‘தாமரை நாச்சியார்’ என்ற கதையில் அந்த பெண் இறந்து விடுகிறாள்.அது வரை அவர்கள் பட்ட கஷ்டங்களும் இன்னல்களும் குறைந்ததாக தாமரை நாச்சியாரின் இறப்பிற்க்கு பின்னர் வீட்டில் உள்ள பெண்களுக்கு திருமணம் கைகூடி வருவதாகவும் அமைந்துள்ள இக்கதை ஒரு விதமான நம்பிக்கையை மெய்ப்பிப்பதாகவே அமைகின்றது.  
முன்னுரை
        
      சடங்குகள் என்பது ஒரு மனிதனின் வாழ்வியலோடு ஒட்டிய முக்கிய நிகழ்வாகவே அமைகின்றது. காலங்காலமாக முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த பழக்க வழக்கங்களே பின்னாளில் சடங்குகளாக உருப்பெற்றது. இன்றைய காலகட்டத்தில் இளம்தலைமுறையினர் சம்பிரதாயம் என்ற ஒரு நிகழ்வை செய்து வருவதைக் காணலாம். பெரும்பாலும் சடங்குகள் முன்னோர்களின் வழித்தோன்றலாகவே அமைகின்றது.
                  
      தமிழரின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு வாழ்வியல் முறைகள் பழக்க வழக்கங்கள் சமயங்கள், வழிபாட்டு முறைகள், திருவிழாக்கள்,விளையாட்டுகள் ஆகியவை குறிப்பிடப்படுகின்றது. சடங்கு முறைகள் ஏற்பட்டுவிட்ட காலத்தில் இருந்தே மக்களுடைய ஒவ்வொரு செயலுக்கும் அடிப்படையாக அமைவது அவர்களது நம்பிக்கை. அது இறை நம்பிக்கை,மறுபிறவி நம்பிக்கை, சொர்க்கம், நரகம் என்ற அடிப்படையில் சடங்குகள் பின்பற்றப்பட, சிறுகதைகளில் சடங்குகளுக்கு கொடு;க்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாக இக்கட்டுரை அமைகிறது.

சொர்க்கம் நரகம் பற்றி நம்பிக்கைகள்
                
      மனிதர்கள் இறப்பிற்கு பிறகு மறுபிறவி உண்டென்றும் அவைபல பிறவிகள் தொடரும் என்றும் நம்பினர்.பீடி என்ற சிறுகதையில் இளங்கோ என்பவனின் சித்தி இறந்துவிடுகின்றாள், அடக்கம் செய்யும் நிகழ்வு குறித்து ஆசிரியர் சிறப்பாக தன் எழுத்துக்களின் கோர்ப்பில், சித்தப்பாவுக்கு குரல் தழுதழுத்தது விம்மி விம்மிஅழுதார.; இவன் முகத்தை இறுக்கமாக்கிக்கொண்டு நடந்தபடி இருந்தான்.கொட்டுச்சத்தம் கேட்கத்தொடங்கியது.

     பெரியவெட்டியான் பங்காளிகளின் உதவியுடன் பிணத்தை குழியில் இறக்குகின்றார்.
    “மண்ணுதள்ளர எசமாங்கஆரு மளார்ன்னு வாங்க” அழைக்க, சித்தப்பாவை குழிமேட்டிற்கு கூட்டிப் போகின்றனர்.  மீண்டும் பெரியவெட்டியான்,
      
“சாமீ எசமாங்க மேலோகம் போராங்க நிராசையா போகக்கூடாதுங்க அவுங்களுக்கு புடுச்சது ஏதாச்சும் இருந்தா குழியில போடறது சாங்கீதமுங்க” என கூறுகின்றான். இதிலிருந்து ஒருவர் இறந்தால் அவர்களின் ஆசைகள் மதிக்கப்படுவதும் இறந்த பின் சடங்குகள் என்ற பெயரில் அவை நிறைவேற்றப்படுவதையும் அறிய முடிகின்றது.
               
இதை மனிதர்கள் இறப்பிற்குப் பிறகு உண்டென்றும் அவை பல பிறவிகள் தொடரும் என்றும் நம்பினர்.
 
“ எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்  
பண்புடை மக்கட் பெறின்” -1 – குறள் (62)
என்ற குறளில் ஏழு பிறவிகளிலும் ஏற்படுகின்ற நன்மை தீமைகளை எடுத்துக்கூறுகின்றார்.
      
சித்திக்குப் பிடித்ததை எல்லாம் ஒரு சிறிய மஞ்சள் பையில் போட்டுக்கட்டி எடுத்து வந்து குழியில் போடுகின்றனர்.பெரியவெட்டியான் மீண்டும் சத்தமிடுகின்றார்,
 
“ வேற ஏதாச்சும் இருக்கா சாமீ…ஒன்னும் உட்டுப்போகலையே… ஏன்னா மேல போற உசிரு அதுக்கு ஆசைப் பட்டு இங்க அலைபாயக்கூடாது பாருங்க” என்று கூறிவிட்டு,
 “சாமீ…. மூணு கை மண்ணு அள்ளி உள்ள போடுங்க” என்கின்றார்.
          
இவ்வாறாக இறப்பின் போதுபின்பற்றப்படும் சடங்குகளில்இறந்தவர்களின் ஆசைகளை நிறைவேற்ற செய்யப்படும் செயல்கள் இறந்தவர்களின் ஆன்மாவிற்க்கு செய்யும் ஒரு மானசீகமான நிகழ்வாக அமைவதைப் பார்க்க முடிகின்றது.

இறப்பு சடங்குகள்
           
       தமிழர்களிடையே சடங்குகள் மற்றும் நம்பிக்கைகள் ஏராளம் இவற்றில் சில அர்த்தமற்றதாக இருந்தாலும் முன்னோர் செய்து வந்த சடங்குகள் என்று பாரம்பரியத்தை விட்டுவிடாமல் செய்து வரப்படுகின்றன. சடங்குகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் பின்னால் மறைந்துள்ள உண்மைகளைத் தேடிக்கொண்டு நாம் பயணிக்கின்றோம்.
          
       பிணம் தழுவியவன் என்ற கதையில், ஒருபெண் இறந்துவிடுகிறாள் அவள் மணமாகாமல் இறந்துவிடும் நிலையில் அவளுக்கு செய்யும் சடங்குகள் நம்பிக்கையின் அடிப்படையில் நிறைவேற்றப்படுவதை அறிய முடிகின்றது.

         அந்தக்காலத்தில் சாமி,பேய் பிசாசு,ஆவிகள் மேலே நிஜமான நம்பிக்கையிருந்தது. ஓர் உயிர் உடலைவிட்டுப் பிரியும் போது நிராசையோடு பிரிந்ததென்றால் அது ஆவி ரூபத்தில் ஊரையே சுற்றி அட்டூழியங்கள் செய்யும் என்பது நம்பிக்கை,அப்படி ஓர் உயிர் இறந்தால் அதன் நிராசையெல்லாம் தீர்த்துவைத்த பின்பு தான் அதன் உடலைத் தகனமோ,அடக்கமோ செய்வார்கள்.
       
      ஒருவன் நல்ல சாப்பாட்டின் மேல் ஆசைகொண்டு அவனுக்கு அது கிடைக்காமலேயே இறந்துவிட்டால் அவனை அடக்கம் செய்யும்பொழுது நல்ல சாப்பாட்டு வகைகளைப் படையல் வைத்துப் பூஜை செய்து பிணத்திற்கு ஊட்டிவிட்ட பின்புதான் அடக்கம் செய்வார்கள். இல்லையென்றால் அவன் அதிகம் ஆசைப்பட்ட பொருளை குழியில் போடுவார்கள் அப்படிச் செய்தால் நிராசையெல்லாம் நிறைவேறிவிட்டதாக அர்த்தமாகிறது.
       
   அது போல் ஒரு கன்னிப்பெண் இறந்துவிட்டால் அப்பெண்ணை கன்னி கழிக்காமல் அடக்கம் செய்யமாட்டார்கள். கன்னிப்பேய்க்கு விசை அதிகமாம் ஊரையே பிடித்து ஆட்டிவிடுமாம். சுடுகாட்டில் அது மாதிரி கன்னிப் பிணங்களைத் தழுவுவதற்கென்றே ஒரு கூட்டம் முறைமை வாங்கி எல்லா ஊர்களிலும் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
                
     அதே மாதிரி கல்யாணமாகாத ஆண்கள் இறந்துவிட்டால் அவர்களுக்கு ஆண்களின் ஒழுக்கத்தின் மேல் அப்போதைய மக்களுக்கு நம்பிக்கையில்லை போலும் அவர்களை யாரும் தழுவுவதில்லை என்ற ஒரு கருத்தையும் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.
               
    இறப்பு, இழப்பு போன்றவை நிகழும்போது மேற்கொள்ளப்படும் சடங்குகள் இறப்பு சடங்காகும் இதைத்தான் திருவள்ளுவர்,

“உறங்குவது போலும் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு”   ( குறள்.339)
               
      இறப்பு என்பது உறங்குவதைப் போன்றது, பிறப்பு என்பது உறங்கியவன் மீண்டும் விழிப்பது போன்றதே எனவே இறப்பு உண்டென்றால் பிறப்பு உண்டு என நம்பி இறந்தபிறகு சடங்குகள் மேற்கொள்ளப்படுகின்றன.

துக்க நிகழ்வுகளில் சடங்குகள்
                
      மனிதனுடைய வாழ்க்கையில் ஒவ்வொருவருடைய சாவும் இறைவனால் நிர்ணயிக்கப்படுகின்றது. அவை இயற்கையான மரணம், தற்கொலை மரணம் இவற்றைத் தனது சில கதைகளில் ஆசிரியர் படைத்துள்ளார்.
  
               இதை ‘சிதைக்கோழி’ என்ற கதையில் இறந்த கிழவிக்கு செய்யப்படும் சடங்குகள் பற்றி தனது கதையில் கிராமத்தின் பின்னனியில் அமைந்த சில சடங்குகளை செய்வது குறித்து எதார்த்தமாக பல சம்பிரதாயங்களை படைத்துள்ளார்.
                 
“அம்பட்டையான் பாடைக்கோல் கொண்டு வந்துட்டான் சட்டுன்னு எடுக்குற காரியத்தை பாருங்க”
               
அதன் பின்பு செயல்கள் துரிதமாகவே நடந்தன. மகள் ஊருக்கு சொன்னதும் அன்று மதியம் தான் மகள் வந்து சேர்ந்தாள். மஞ்சள் கொட்டிப் போட்டதும் இவன் வெளியே வந்து சப்தமிட்டான்.
               
 “எடுக்கற பங்காளி எசமாங்க எல்லாம் வாங்க சாமியோவ்”
பங்காளிகள் என்று கூடயாரும் இல்லை மாமன் மைத்துனன் என கலந்தே நாலுபேர் வந்தார்கள்.தண்ணீர் சுற்றிபோட்டதும் சவத்தை தூக்கிக் கொண்டுவந்து பாடையில் கிடத்தினார்கள்.
               
      இவன் கால்கட்டு கட்டும்போது கிழவியின் கால்கள் சூடாக இருப்பதை உணர்ந்தான். இவன் சட்டென முகத்தைப் பார்த்தான். கிழவியின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவன் கழுத்து ஆரத்தை சரிசெய்வது போல நெஞ்சுக்கூட்டைத் தொட்டுப்பார்த்தான்;. நெஞ்சுக்கூடு ஏறி அமிழ்ந்து கொண்டிருந்தது. அவனுக்குப் புரிந்துவிட்டது கிழவிக்கு இன்னும் உயிர்இருக்கிறது. அவன் அருகில் உள்ளவர்களிடம் விஷயத்தைச் சொல்கிறான்.
               
     ஊர் எல்லை வரை ஒப்பாரிவைத்து சடலத்தை வழியனுப்ப இருந்த பெண்கள் கூட்டம் கிழவியை சுற்றிக்கொண்டனர். கிழவியை வீட்டில் கொண்டு போய் கோரைப்பாயில் கிடத்தினர். இதுவரை இந்தப்பகுதியில் இதுபோல் ஒரு சம்பவம் நடந்ததேயில்லை.  வாசலில் நின்றிருந்த பெரியவர்,
 “ஏம்பா கெழவி பொழச்சுகிச்சு வெறும்பாடையைக் கொண்டு போய் எங்க போடறது”,பாடையையாவது தூக்கி கடாசிறலா, சிதைக்கு அடுக்;கிறதுக்கு சுடுகாட்டுக்கு போனவெறக என்ன செய்யறது? 
               
     ஊரில் சில பெரியவர்கள் ஆதீஸ்வரர் கோயில் பெரிய குருக்களிடம் கேட்டுவருவதாகக் கிளம்பிப் போனார்கள். விஜயரங்கன்வலசு அருமைக்கார அய்யனிடம் பார்த்து வருவதாக சென்றனர்.அந்த அய்யனுக்கு இது மாதிரி ஐதீகங்கள் அத்துப்படியாக தெரியும்.
                  
       பெரிய குருக்களைப் பார்க்கப் போனவர்கள் வந்தனர். பெரிய குருக்களுக்கு இதைப்பத்தி ஒன்னும் தெரியலை. அருமைக்கார அய்யன் சொன்னாரு ரெண்டு தலைக்கட்டுக்கு முன்னால் இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்காம். அப்போ… கோழியைக் கொண்டுபோய் சீர் செய்து அடக்கம் பண்ணினாங்களாம். ஆதனால நாமளும் அப்படியே செஞ்சுருவோம். நீ போயி ஒரு சேவலை வெலைக்கு வாங்கிட்டு வா. “சட்டுன்னு காரியம் ஆவட்டும் கிளம்பு என கூறுகின்றனர்.
               
     பின்னர் சேவலின் கால்களை சரட்டினால் பாடையில் சேர்த்து கட்டுகின்றனர்.
தோட்டிகள் விறகு அடிக்கி வைக்கப்பட்டிருந்த சிதையில் சேவலை வைத்து மூடி தீ மூட்டினர். இவ்வாறு இறப்புகளுக்கு ஒரு விதமான சடங்குகள் காலங்காலமாக பின்பற்றப்பட்டு வருகின்றது.

மரணம் பற்றிய நம்பிக்கை
                   
வீட்டினுள் மூத்த குழந்தை இறந்தால் வீட்டினுள் புதைக்கின்ற வழக்கம் இன்றைய காலங்களில் பழக்கத்தில் இருந்து வருகின்றன. மரண வீட்டிற்குச் செல்பவர்கள் குளித்த பின்பு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற ஒரு சம்பிரதாயம் இருந்து வருகின்றது.
               
 மரண வீட்டில் நாள் முழுவதும் விளக்கு எரிய வேண்டும் என்ற ஒரு வழக்கம் இருந்து வருகின்றது. இறந்தவர்களுக்கு பறை கொட்டும் பழக்கமும் காணப்பட்டது. இதனை,
                 
“இறந்தவர் வீட்டில் சாவுமேளம் கொட்டும் முன்பு இறந்தவர்களை ஒரு நாள் இறக்கப் போகிறவர்கள் துணியால் மூடித் தோளில் ஏந்திக் கிளம்புவர்” (நாலடி.24)   என்றும்
               
“முற்பகலில் திருமணம் நடந்த வீட்டில் பிற்பகலில் சாவு தப்பட்டை ஒலிக்கவும் கூடும்”  ( நாலடி -23 )
                 
அது போலவே இறப்புக்கு செய்யப்படும் சடங்குகள் வழிவழியாக சமுதாயத்தில் வேறூன்றியே காணப்படுகின்றது. அது சங்ககால முதல் தற்போது வரை நடைமுறையில் இருந்து வருகின்றது.
                  
      சங்ககாலத்தில் நடுகல்கள் குறித்த சான்றுகள் பல கிடைக்கப்பெற்றுகின்றன. இறந்தவரது உடல்களின் மீது பதுக்கைச் சேர்த்துக் கல் எழுப்புதலும் உண்டு. நிரைமீட்டு மடிந்த வீரர்களுக்கு இவ்வாறு கல் எழுப்பும் வழக்கம் காணப்படுகின்றது. வீரன் இறந்த இடத்திலேயே கல் எழுப்பும் நிலை இருந்தமையை இது காட்டுகிறது.    புறநானூற்றில் நடுகல் பற்றிய பல செய்திகள் காணப்படுகின்றன.
         
“உயர் இசை வெறுப்பத் தோன்றிய பெயரே         
மடஞ்சால் மஞ்ஞை துணிமயிர் சூட்டி         
படஞ்செய் பந்தர்க் கல்மிசையதுவே” (புறநானூறு)
முடிவுரை
               
நம்பிக்கைகளும் பழக்கவழக்கங்களும் மனித சமுதாயத்திலிருந்து எளிதாக பிரிக்க முடியாத ஒரு நிகழ்வே. சமுதாயத்தின் நம்பிக்கையின் மீது நம்பிக்கை இல்லாத மனிதனைக் காண்பது அரிதாகும். மேலும் இன்றைய விஞ்ஞான யுகத்திலும் நம்பிக்கைகளும் அதை ஒட்டிய சடங்குகளும் தனக்கென உள்ள தனியிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளன.

தொகுப்புரை
           
🌴 சொர்க்கம் நரகம் பற்றிய நம்பிக்கையில் மறுபிறவி உண்டென்று ஆராயப்படுகின்றது.            
🌴 பிணம்தழுவியவன் கதையில் தமிழர்களுக்கு இடுகாட்டு பழக்கங்கள் பின்னப்படுவதை ஆராயலாம்.
             
🌴 துக்கநிகழ்வுகள் நடந்த வீட்டில் செய்யப்படும் சம்பிரதாயங்கள் குறித்து விளக்கப்படுகின்றது. இதன் மூலம் ஒருவர் இறப்பின் போது பாடை கட்டுதல் மஞ்சள் கொட்டிப் போடுதல் போன்ற நிகழ்வுகள் நடைபெறுவதை அறியலாம்.
🌴மரணம் நடந்த வீட்டில் நல்ல விஷேசங்கள் அடுத்ததாக நடைபெறும் என்பதை தாமரை நாச்சி என்ற கதையின் மூலம் அறியப்படுகின்றது.

    ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்                   
நா.மோகனசெல்வி
    
முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,
     
கோபி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
               
கோபி, தமிழ்நாடு, இந்தியா

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here