Saturday, July 27, 2024

தலைகொண்டம்மன் கோயில் வழிபாட்டு முறையும் விழாவும் (ஆய்வுக்கட்டுரை)

 
 

மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்”

(தொல்.அகத்திணை.நூ.5)

என்று தொல்காப்பியர் முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலங்களுக்கு திருமால், முருகன், இந்திரன், வருணன் ஆகிய நான்கு நிலக்கடவுள்கள் இருந்திருக்கின்றனர் என்கிறார். இறைவழிபாடு என்பது தமிழ் மக்களுக்குப் புதிய ஒன்றன்று.  பன்னெடுங் காலத்திற்கும் மனிதன்  தன்னை அச்சுறுத்திய இயற்கையை வணங்கினான். தனக்கு ஊறு விளைவித்த உயிரினங்களைப் பயத்தின் காரணமாகவும் தனக்கு இணக்கமாக இருந்து இறந்த உயிரினங்களை அன்பின் காரணமாகவும் வணங்கினான். இம்முறை வழிபாடு எந்த நூற்றாண்டில் யாரால் எப்படி தோற்றுவிக்கப்பட்டது என்பது அறிய முடியாத ஒன்று.

     பிற்காலத்தில் மனிதன் தனக்கு ஏற்படும் இன்னல்களுக்கு எல்லாம் தன் முதாதையர்கள், போரில் வீரமரணம் அடைந்தவர்கள், அகால மரணம் அடைந்தவர்கள்தான் காரணமென்று நடுகல் வைத்து வழிபட்டான். இவ்வழிபாட்டு முறையே சிறுதெய்வ வழிபாட்டிற்கு கால்கோல் இட்டது எனலாம். இக்கருத்தை மெய்பிக்கும் வகையில் “இயற்கை வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து பல தெய்வ வழிபாட்டுக் கொள்கை ஏற்பட்டது. அதில் கிராமப் பகுதியில் உள்ள அம்மன், மதுரை வீரன், முனியாண்டி, கருப்பண்ணசாமி, காத்தவராயன், ஆரியமாலா, ஆகியோர் சிறுதெய்வங்கள் எனப்பட்டனர். முன்னோர்களின் நினைவாகவே சிறுதெய்வங்கள் அமைக்கப்பட்டன”1 என்று பறைச்சாற்றுகின்றார் அநங்கன். கரகப்பட்டியில் பச்சைநாச்சியம்மன், வேட்டை நாச்சியம்மன், பட்டாளம்மன், செல்லியம்மன், அங்காளம்மன் ஆகிய சிறுதெய்வங்களோடு தலைகொண்ட அம்மனையும் மக்கள் வணங்குகின்றனர். இச்சிறுதெய்வங்களில் தலைகொண்ட அம்மனைப் பற்றிய வரலாறும் வழிபாட்டு முறைகளும் இக்கட்டுரையின்கண் ஆராயப்படுகிறது.

தலைகொண்டம்மன் கோயில் அமைவிடம்

     தலைகொண்டம்மன் கோயில் தர்மபுரி கிருஷ்ணகிரிக்கு இடையில் உள்ள காரிமங்கலம் எனும் இவ்வூரில் இருந்து கிழக்கு திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் கரகப்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு தெற்கு திசையில் ஆற்றங்கரையின் மருங்கில் இயற்கை எழில் கொஞ்சும் இடத்தில் இக்கிராமத்திற்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது இவ்வழிபாட்டுத்தலம்.

கோயில்அமைப்பு

 
 

வடக்கு வாசல்படியினைக் கொண்டுள்ள தலைகொண்டம்மன் கோயில்   எண்பது அடி அகலமும் நூற்றுபத்து அடி நீளமும் பத்தடி உயரமும் கொண்ட மதில் சுவரை உடையது. இராசகோபுத்திற்கு முன் பலிபீடமும் அம்மனின் சிங்க வாகனமும் அமைந்துள்ளது. உள்ளே சென்றால் முதலில் இடது பக்கத்தில் இருப்பது நவகிரக கோயில். அதை அடுத்து இக்கோயிலில் வாழ்ந்து இறந்த பூசாரியின் நினைவிடம் அமைந்துள்ளது. கருவறைக் கோயிலுக்குப் பின் இடபுறத்தில் விநாயகர் கோயிலும் வலது புறத்தில் முருகன் கோயிலும் அமைந்துள்ளது. தென்மேற்கு மூலையில் தலகொண்டான் எனும் ஆண்தெய்வத்திற்கான தனிக்கோயிலும் அமைக்கப்பட்டுள்ளது. மகாமண்டபத்திற்கும் இராசகோபுரத்திற்கும் இடையில் நான்கு தனித்தனி ஊஞ்சல் கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோயிலின் கர்ப்பகிரகத்தில் பஞ்சலோகத்தால் ஆன அரை அடி உயர அம்மன் சிலையின் ஆகும். இச்சிலைக்குப் பின்னால் ஐந்து அடி உயர மூன்று அம்மன் கற்சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கோயில் பற்றி மக்களின் கூற்று

     தலகொண்டம்மனின் தாய்வீடு தர்மபுரி பக்கத்தில் உள்ள மூக்கனூர் மலை என்றும், அம்மலைக்குத் தன் கணவனிடம் சொல்லாமல் சென்ற அம்மன் அவர் வருவதற்குமுன் தான்வீடு திரும்ப வேண்டும் என்று குதிரையின் மேல்ஏறி மூக்கனூர் மலையில் இருந்து ஒரேத்தாவு தாவி இந்த இடத்திற்கு வந்து சேர்ந்ததாகவும் கூறுப்படுகிறது. அந்தளவிற்குத் தன்னுடைய கணவன் மீது பற்றும் பக்தியும் கொண்டவராக இத்தாய் விளங்குகின்றாள். குதிரை குதித்த அந்த அச்சு கோயிலின் பக்கத்தில் பெரியாற்றுப் பாறையில் இன்றளவும் இருக்கின்றது. 

பெயர்க்காரணம்

     தலைகொண்டம்மன் என பெயர் வருவதற்கு மக்களிடையே வாய்மொழிக் கதைகள் பேசப்படுகின்றன. அக்கதை இத்தலப் பெயருக்கான காரணங்களைக் கூறுகின்றது.   தொடக்கக் காலத்தில் அம்மன் என்ற பெயரிலே இருந்த இச்சிறுதெய்வத்தின் சிலையை கள்வன் ஒருவன் களவாடிச் சென்றபோது கண் தெரியாமல் போனது. அதனால் சிலையை அங்கிருந்த வயல்வெளியிலேயே போட்டுவிட்டு சென்று விட்டான். அவற்றை அறியாத விவசாயி ஒருவன் தன் வயல் வரப்பில் அம்மன் சிலை இருப்பது தெரியாமல் வரப்பை வெட்டிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மண்வெட்டி அம்மனின் தலையில் பட்டுவிடுகிறது. பட்டவுடனே இரத்தம் பீறிட்டுக் கொட்டியது. அத்தவறைச் செய்த விவசாயின் தலை அப்பொழுதே துண்டாகி விழுந்தது என்றும் அப்பகுதி மக்கள் கூறுகின்றார்கள்.

     தன் குழந்தையை இழந்த தாய் ஒருத்தி தன் குழந்தை மீண்டும் கிடைத்து விட்டால் என்னுடைய தலை முடியைத் தருகிறேன் என்பதற்குப் பதிலாக என் தலையையே தருகிறேன் என்று வேண்டிக்கொண்டாளாம். இவள் வீட்டிற்குச் செல்வதற்கு முன் அக்குழந்தை வீட்டில் இருப்பதைக் கண்டு அகம் மகிழ்கின்றாள். பின்னர்தான் அவள் நினைவுக்கு வருகின்றது அவள் வேண்டியது. அதனால் பயந்து போய் எங்கெங்கோ சென்று மறைகின்றாள். மறைந்தாலும் சொன்னதைச் செய்யாத அப்பெண்ணின் தலையை அம்மனே கொய்து எடுத்தார். அவ்வாறு கொய்து எடுத்ததால் அன்று முதலே இவ்வம்மனுக்குத் தலகொண்டம்மன் என்று மக்களால் அழைக்கப்பட்டாள். இக்கருத்து ஒருவருக்கொருவர் முரண்பாடாக கூறினாலும் தலையை வெட்டிய செய்தி மட்டும் ஒன்றாகவே இருக்கிறது. இதன்மூலம் தலையைக் கொய்து எடுத்ததால் தலைக்கொண்டம்மன் என்ற பெயர் வந்திருக்கும் என்பது தெளிவாகிறது.

வழிபடும் இனக்குழுக்கள்

     சமத்துவ சிறுதெய்வ கோயிலுக்குச் சிறந்த சான்றாக விளங்குவது கரகப்பட்டி தலைகொண்டம்மன் கோயில்தான். பெரும்பாண்மையான சிறுதெய்வக் கோயில்கள் ஒருசில இன மக்களுக்கு மட்டும் வழிபடும் தெய்வமாகவும் குல தெய்வமாகவும் விளங்குகின்றது. சிறுதெய்வக் கோயில்களில் ஒரு குறிப்பிட்ட இனத்தைத் தவிர இதர சாதியினரை உள்ளே நுழைய அனுமதிப்பதுக் கூட கிடையாது. இம்முறைகளுக்கெல்லாம் மாறாக அமைந்துள்ளது இந்த ஒரு கோயில் மட்டும்தான்.

 இக்கோயிலுக்குப் பூசாரியாக வெள்ளாளக்கவுண்டர்கள் இருக்கிறார்கள். இத்தெய்வத்தைக் குலதெய்வமாகக் கொண்டவர்கள் வேளாளர், பறையர், வன்னார், ஆகியோர் ஆவார்கள். இக்கோயிலுக்கு உரிமை பூண்டுள்ள கிராமங்கள் மொத்தம் பதினெட்டு ஆகும். இப்பதினெட்டுக் கிராமங்களில் இருக்கக்கூடிய அனைத்து மக்களும் ஒன்று கூடிதான் கோயிலுக்குச் சம்பந்தப்பட்ட எந்தவொரு முடிவையும் எடுப்பர். கோயிலுக்கு முன்னால் இருக்கக்கூடிய ஊஞ்சல் கம்பம் கூட குரவர் இன மக்களால் எடுத்துவரப்பட்டு இரவோடு இரவாக வேண்டுதலின் பொருட்டு நட்டு வைத்துவிட்டு சென்றனர் என்கின்றனர் இப்பகுதி மக்கள். 

வழிபடும் முறைகள்

     பெரும்பாண்மையான சிறுதெய்வங்களுக்கு உயிர்பலிடும் முறை வழக்கமான ஒன்றுதான். அதற்கு விதிவிலக்கு அல்ல தலைகொண்டம்மன் கோயில். “தர்மபுரி பகுதியில் இருக்கும் மக்கள் காளிக்கு எருமை கிடாவை பலியிடுகின்றனர். மாரியம்மனுக்கு ஆட்டுக்கிடாவைப் பலியிடுகின்றனர். மற்ற சில சிறுதெய்வங்களுக்கு பன்றிகளைப் பலியிடுகின்றனர்”2 என்கிறார் இரா.இராமகிருஷ்ணன்.

     தலைகொண்டம்மனுக்கு ஆடு, கோழி தவிர வேறெந்த உயிரினங்களையும் பலியிடுவது இல்லை. பசுக்களையும் இளம் காளைகளையும் கோயிலுக்கு நேர்ந்து (நேர்த்திக்கடன்) விட்டாலும் அதை பலிஇடுவது இல்லை. பசு, ஆடு, மாடு, கோழி போன்றவைகளை இக்கோயிலுக்கு நேர்ந்து விடுகின்றனர். இக்கோயிலுக்கு நேர்ந்துவிடும் பசுக்களையும் காளைகளையும் இப்பகுதி மக்கள் இறைவியாகவே போற்றி மதிக்கின்றனர். இதற்கு சான்றாக நேர்ந்து விட்ட காளை ஒன்று இறந்து விட்டது. இறந்த காளையை கோயிலுக்கு முன்னால் இருக்க கூடிய இராசகோபுரத்திற்கு அருகில் புதைத்து அதன்மேல் நந்தி சிலையை நிறுவி இன்றளவும் வழிபட்டு வருகின்றனர்.

விழாக்கள்

     மக்கள் அனைவரும் ஒன்று கூடி வழிபடும் முறையே விழாவாகும். அனைத்து முக்கிய தினங்களில் பூஜை புனஸ்காரங்கள் செய்தாலும் கோயிலுக்கு விழா எடுப்பதே சிறப்பு. விழா எடுப்பதற்கு முன் அப்பகுதியிலுள்ள அனைத்து மக்களும் ஒன்றுகூடி  முன்னேற்பாடுகள் பற்றியும் விழாவின்போது மேற்கொள்ளப்படும்  செயல்கள், கட்டுபாடுகள், ஆகியவை ஆலோசிக்கப்பட்டு விழா தொடங்குகிறது. இம்மக்கள் கோயிலுக்கு எடுக்கும் விழாவை ‘ஜாத்தரை’ என்கின்றனர். ஜாத்திரை மொத்தம் ஐந்து நாட்கள் நடைபெறும். 

     இதில் ஆண் தெய்வத்திற்கான கரகத்தைப் பறையர்களும், பெண் தெய்வத்திற்கான கரகத்தை வேளாளக் கவுண்டர்களும் எடுக்கின்றனர். இவர்கள் தவிர வேறு சாதியினர் கரகத்தைத் தொடுவது கூட இல்லை.

  • விழாவின் முதல்நாள் வீடுகள், தெருக்கள், கோயில் என அனைத்தும் சுத்தம் செய்து காப்புக் கட்டுகின்றனர். காப்புக் கட்டுபவர் அவ்வூரின் தோட்டியாவார்.
  • இரண்டாம் நாள் மேளதாளத்துடன் இசைக்கருவிகள் முழங்க கரகக்காரரின் வீட்டில் இருக்கும் கரகத்தைக் கரகக்காரரின் துணையோடு கரக கலசம் மற்றும் அம்மனின் வாள், பிரம்பு ஆகிவற்றை எடுத்துக்கொண்டு கோயிலுக்குப் பின்னால் இருக்கும் ஆற்றில் சுத்தம் செய்து அக்ரஹாரம் என்னும் ஊரின் மண்டில் (பொதுவிடத்தில்) வைத்து பூசை நடத்துகின்றனர். அதேபோல் ஆண் கரகத்தை ஆண்கரகத்தாரரும் அங்கு வந்து அக்கரகத்தை சேர்கின்றனர்.
  • மூன்றாம் நாள் மாலை ‘மகுமேரி’ என்னும் நிகழ்வு நடைபெறும். ஓவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான வேடம் அணிந்து மண்டினை அலங்கரிப்பர். மகுமேரி என்றால் வன்னியர் இனத்தில் ஒரு குடும்ப வகையாறாக்கள் அவர்களின் குல வழக்கப்படி வெவ்வேறு விதமாக வேடமிட்டுக் கொண்டு குறும்பர் பலகை எடுத்தும், பூங்கரகம் எடுத்து வந்தும் சிறப்பு செய்கின்றனர். அப்பொழுதே ஆண் கரகமும் பெண் கரகமும் ஒன்று சேரும் நிகழ்வும் நடைபெறுகின்றன.
  • நான்காம் நாள் செங்கமுத்தம்மன் கோயிலில் ‘சொக்குபுடி சோறு’ சாப்பிட்டக் குதிரை, அம்மன் அருளோடு வேகமாக அம்மனைப் பார்க்க கிட்டத்தட்ட ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஓடியே வந்து தலைகொண்டம்மன் கோயில் ஊஞ்சலில் உள்ள கரகத்தை நுரைப் பொங்கும் வாயால் முத்தமிட்டு ஊஞ்சலை ஆட்டும். ஆட்டியபின் கரகம் கருவறையில் கொண்டு வைக்கப்படுகின்றது.
  • ஐந்தாம் நாள் கருவறையில் கரகத்தை கரகக்காரர்களின் துணையோடு ஆண்கரகத்தை பறையர்களும், பெண்கரகத்தை வேளாளர்களும் மேளதாளத்துடன் வீட்டிற்கு கொண்டு சென்று வைக்கும் நிகழ்வு நடக்கும்.மூன்றாம் நாள் மற்றும் நான்காம் நாள் நடக்கும் நிகழ்வகள் விலங்குகளோடு அப்பகுதி மக்கள் பிணைந்துள்ள நிலையினை எடுத்துக்காட்டுகின்ற. விழாவின் கடைசிநாளன்று வேளாளக் கவுண்டர்களுடைய கூளி ஆட்டம் (எருதாட்டம்) ஆடப்படுகிறது. அதன்தொடர்ச்சியாக வன்னியர்களின் கூளியும்  மண்டை (பொதுவிடம்) அலங்கரிக்கும்.

முடிவுரை

     மக்கள் கூறும் ஊர்ப்பெயர்க் காரணங்களும் வழிபாட்டு முறைகளும் விழாக்களையும் அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் தலைகொண்டம்மன் எனும் சிறுதெய்வம் முன்னொரு காலத்தில் போர்க்கடவுளாகவும் போர் புரிந்து வீர மரணம் அடைந்த பெண்ணாக இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

 

சான்றெண் விளக்கம்

1. அநங்கன், ஆலய வழிபாடு, அழகு பதிபகம், சென்னை – 49,  ப.9

2. இரா.இராமகிருஷ்ணன், தகடூர் நாட்டு திருக்கோவில்கள்,  நாம் தமிழர் பதிப்பகம், சென்னை-5, ப.50

தகவலாளர்கள் பட்டியல்

1.     அமராவதி, வயது – 58, வேளாளக்கவுண்டர், கரகப்பட்டி.

2.    தலகொண்டான், வயது – 40, பறையர், கரகப்பட்டி

3.   செல்வி, வயது – 60, வன்னியர், கிரியானஅள்ளி

 

 ஆசிரியர் : திரு.இல.பெரியசாமி, எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130. 

 

 

தலைகொண்டம்மன் நுழைவாயில்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[td_block_social_counter facebook="tagdiv" twitter="tagdivofficial" youtube="tagdiv" style="style8 td-social-boxed td-social-font-icons" tdc_css="eyJhbGwiOnsibWFyZ2luLWJvdHRvbSI6IjM4IiwiZGlzcGxheSI6IiJ9LCJwb3J0cmFpdCI6eyJtYXJnaW4tYm90dG9tIjoiMzAiLCJkaXNwbGF5IjoiIn0sInBvcnRyYWl0X21heF93aWR0aCI6MTAxOCwicG9ydHJhaXRfbWluX3dpZHRoIjo3Njh9" custom_title="Stay Connected" block_template_id="td_block_template_8" f_header_font_family="712" f_header_font_transform="uppercase" f_header_font_weight="500" f_header_font_size="17" border_color="#dd3333"]
- Advertisement -spot_img

Latest Articles

Translate »
Open chat
Scan the code
Hello
Can we help you?
hi please wait...