அலுவலகம் சார்ந்த கடிதங்கள்|இனியவை கற்றல் மின்னிதழ்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள் கீழ்வரும் நான்கு வகைகளாகப் பிரிக்கலாம்.

1.விண்ணப்பக்கடிதங்கள்
2.அலுவலகக் கடிதங்கள்
3.புகார்க்கடிதங்கள்
4.வணிகக்கடிதங்கள்

அலுவலகம் சார்ந்த கடிதங்கள் எழுத கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்


1.அனுப்புநர், பெறுநர் என்றே போட வேண்டும். அனுப்புதல் – பெறுதல் என்று போடக்கூடாது.

2.அதேபோல் அனுப்புநர், பெறுநர் என்பதற்குப் பக்கத்தில் முற்றுப்புள்ளி      ( . ), காற்புள்ளி ( , )  என எதுவும் போட வேண்டாம்.

3.அனுப்புநரில் பொதுவான கடிதம் எனில் ஊர்ப்பொதுமக்கள் என்றே போடலாம். இல்லையாயின் தனிநபர் எழுதுவது போன்றும் பெயரிட்டும் எழுதலாம். அது தவறில்லை. ஆனால் இறுதியில் தங்கள் உண்மையுள்ள என்ற இடத்தில் அனுப்புநரில் என்ன உள்ளதோ அதுதான் இங்கும் இடம்பெறுதல் வேண்டும்.

4. அனுப்புநர், பெறுநர்- இல் இடம்பெறும் முகவரி ஒவ்வொன்றின் இறுதியிலும் காற்புள்ளி இட்டு கடைசியில் மட்டும் முற்றுப்புள்ளி வைப்பது கட்டாயம் இடம்பெற்றிருத்தல் வேண்டும்.

5.பெறுநர் என்னும் முகவரி பகுதியில் பெயர் இருந்தால் (திரு. அ. கந்தசாமி அவர்கள்) மட்டுமே திரு, அவர்கள் போட வேண்டும். பெயரில்லாமல் பதவி இருப்பின் திரு, உயர்திரு மற்றும் அவர்கள் என எதுவும் போடக்கூடாது.

6. ஐயா / அம்மையீர் எனும் பகுதியில் பெறுநரில் உள்ளவர் ஆண் / பெண் எனத் தெரியாமல் இருந்தால் மேற்கண்டவாறு இரண்டுமே போட்டுக்கொள்ளலாம். உங்களுக்குத் தெரியும் எனில் ஒன்றை மட்டும் போட்டுக்கொள்ளுங்கள்.

7. ஐயா / அம்மையீர் எனும் இடத்தில் காற்புள்ளி வைத்தல் அவசியம்.

8. பொருள் என்னும் இடத்தில் முக்காற்புள்ளி ( : ) வைத்தல் வேண்டும். மேலும், நாம் பெறுநரிடம் என்ன கேட்கின்றோமோ அவற்றை சுருக்கமாகச் சொல்லி – தொடர்பாக… என முடிக்க வேண்டும். 

9.தொடர்பாக… என்பது இதைப்பற்றி இன்னும் பேசப்போகின்றேன் எனப் புரிந்து கொள்ளலாம்.

10. பொருள் பகுதியில் நாம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை தெளிவான முறையில் சொல்ல வேண்டும். சுற்றி வளைத்துச் சொல்லுவது, சொன்னதை திரும்பதிரும்ப சொல்லுவது கூடாது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தவொரு விதியும் இங்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு வருகின்ற நடையை ஒட்டி எழுதலாம். ஆனால் பெறுநருக்குப் புரிய வேண்டும்.

11. பொருள் ஆரமிப்பதற்கு முன்னால் வணக்கம் என்று குறிப்பிடுவது சிறப்பு. ஏனெனில் உயர் பதவியில் உள்ளவர்கள் மற்றும் நாம் தனக்கு இதுஃஇவை வேண்டும் என்று விண்ணப்பம் செய்கின்றோம். அதனால் இம்முறை தவறில்லை. (இக்குறிப்பானது அலுவலகக் கடிதத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் அங்கு, உயர்ந்த பதவியில் இருப்போர் கீழுள்ள பதவியில் உள்ளோருக்கு சுற்றறிக்கை அனுப்புவர். அவற்றில் இடம்பெற வேண்டும் என்ற அவசியம் இல்லை)

12.வணக்கம் சொல்லிவிட்டால் முடிவில் நன்றி கட்டாயம் இடம்பெற்றிருத்தல் அவசியம்.

13.வணக்கமும் நன்றியும் அலுவலகம் சார்ந்த கடிதங்களில் போட்டே ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை. இருந்தால் மகிழ்ச்சி.

14. அலுவலகம் சார்ந்த கடிதங்களில் பொறுத்தவரை கையெழுத்துப் போடுகின்ற பகுதியில் இப்படிக்கு, தங்கள் அன்புள்ள எனப் போடுதல் கூடாது. தங்கள் உண்மையுள்ள என்றே போட வேண்டும். இறுதியில் காற்புள்ளி ( , )  வைத்தல் அவசியம்.  அதுவும் வலப்பக்கத்தில் இருத்தல் வேண்டும். (இக்குறிப்பானது அலுவலகக் கடிதத்திற்குப் பொருந்தாது. ஏனெனில் அங்கு, உயர்ந்த பதவியில் இருப்போர் கீழுள்ள பதவியில் உள்ளோருக்கு சுற்றறிக்கை அனுப்புவர். அவற்றில் சுற்றறிக்கை அனுப்புவோர் நேரிடையாகப் பெயரிட்டு பெயருக்கு மேல் கையெழுத்திடுவர்)

15.இடப்பக்கத்தில் இடம், நாள் என்பவைகள் இடம்பெற்றிருத்தல் அவசியம்.

16. தங்கள் உண்மையுள்ள என்பதின்கீழ் கையெழுத்துப் போட வேண்டும். அதற்குகீழ் அனுப்புநரின் பெயரினைத் தெளிவான முறையில் எழுதுதல் அவசியம்.

17.இறுதியில் கட்டாயம் இணைப்பு இருக்க வேண்டும். இணைப்பில் நீங்கள் கேட்ட பொருளுக்கு ஏற்றவாறு சான்றுகள், புகைப்படங்கள், பொதுமக்கள் கையொப்பங்கள், அளவு வகைபாடுகள் என அனைத்தும் இணைக்கப்பட வேண்டும்.

18.இறுதியில் நீங்கள் எழுதிய அலுவலகம் சார்ந்த கடிதத்தை ஒருமுறை நன்றாகப் படித்துச் சரிப்பார்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் வைத்திருக்கும் அனைத்தையும் ஒரு மின்நகல் (Xerox) எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி அலுவலகம் சார்ந்த கடிதங்கள் எழுதிப் பழகிக்கொள்ளுங்கள்

1.விண்ணப்பக்கடிதங்கள்
 

          வேண்டல், கேட்டல், விரும்புதல், முடித்துத் தரச்சொல்லல், அமைத்துக் கொடுக்க கேட்டல் ஆகியன பொருளாகக் கொள்ளலாம்.
 
       நாம் ஒருவரிடம் தனக்கு இது அல்லது இவை வேண்டும் அல்லது செய்து கொடுக்கும்படி என்று கேட்பது விண்ணப்பம் ஆகும். அவை கீழ்க்கண்ட உதாரணம்படி இருக்கலாம். இன்று நாம் ஒரு வேலைக்குச் செல்லவேண்டும் என்றால் அதற்கு விண்ணப்பம் என்பது அவசியமாகிறது.
           விண்ணப்பம்  (சுயவிபரம்) என்பது, ஒருவரின் பெயர், வயது, முகவரி, கொடுக்கப்படும் வேலையின் முன் அனுபவம், கல்விநிலை என்ற முழுமையான தகவல் இருக்கக்கூடியது.

விண்ணப்பக்கடிதம் சார்ந்த சில உதாரணங்கள்
1.தலைமை ஆசிரியருக்கு விடுமுறை கேட்டு விண்ணப்பம் வரைக.

2.உங்கள் ஊருக்குச் சாலை சீரமைத்துத் தரும்படி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.

3.பழுதடைந்த தெருவிளக்கை சீரமைத்துத் தரும்படி மின்பொறியாளருக்கு விண்ணப்பம் வரைக.

4. உங்கள் ஊருக்கு நூலகம் அமைத்துத்தர வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

5.உதவிப்பேராசிரியர் பணி வேண்டி முதல்வருக்கு விண்ணப்பம் வரைக.

6. மூவாளூர் ராமாமிருதம் அம்மையாரின் திருமண உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

7. பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை வேண்டி மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பம் வரைக.

8. வருமானச்சான்று சாதிச்சான்று இருப்பிடச்சான்று பெற வட்டாச்சியர் அவர்களுக்கு விண்ணப்பம் வரைக.

9. மாணவர்களைப் பள்ளிக்கூடம் சேர்க்க வேண்டி தலைமை ஆசிரியருக்கு விண்ணப்பம் வரைக.

10.குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு விண்ணப்பம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

குடிநீர் வசதி வேண்டி நகராட்சி ஆணையாளருக்கு விண்ணப்பம் வரைக.
அனுப்புநர்
                       
                     ஊர்ப்பொதுமக்கள்,
                       
                     விவேகானந்தர் தெரு,
                       
                     எர்மசமுத்திரம் கிராமம்,
                       
                     பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,
                       
                     சேலம் மாவட்டம்,

பெறுநர்
                       
                    நகராட்சி ஆணையாளர்,
                       
                    நகராட்சி அலுவலகம்,

                    பெத்தநாயக்கன் பாளையம்,
                    சேலம் மாவட்டம்.

ஐயா / அம்மையீர்,
           
                     பொருள் : குடிநீர் வசதி செய்து தருதல் தொடர்பாக…
           
                  வணக்கம். எங்கள் கிராமத்தில் கிட்டதிட்ட 150 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குடிநீருக்காகப் பக்கத்தில் உள்ள கிணற்றிலிருந்து பயன்படுத்தி வருகின்றோம். அதுவும், நீண்டதொரு தூரத்திலிருந்து பெண்கள் தலையிலும் இடுப்பிலும் சுமந்து வருகின்றனர். ஆண்கள் மிதிவண்டியின் மூலமாகத் தண்ணீர் எடுத்து வருகின்றனர். அந்தத் தண்ணீரைத்தான் குடிநீருக்காகவும் உணவு சமைக்கவும் பயன்படுத்தி வருகின்றோம். மேலும், கோடைகாலத்தில் கிணற்றிலுள்ள தண்ணீர் வற்றிப்போவதால் குடிக்க ஒருவீட்டுக்கு ஒரு குடம்  தண்ணீர் கிடைப்பதே மிக அரிதாகிறது. அதனால் எங்கள் ஊர் வழியாகச் செல்லும் மேட்டூர் குடிநீர் இணைப்பை எங்களுக்கு வழங்கியும், நகராட்சியின் சார்பாகத் தெருவெங்கும் குடிநீர்த் தொட்டி அமைத்து கொடுத்து உதவும்படியும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                   தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                             ஊர்ப்பொதுமக்கள்

இணைப்பு
1.ஊர்பொதுமக்களின் கையொப்பம்

குறிப்பு
1.பெறுநர் பகுதியில் யாருக்கு எழுத வேண்டும் என்பதை தெளிவாகத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

 

2.அலுவலகக் கடிதங்கள்           

       அலுவலகங்கள் சார்ந்து எழுதப்படுகின்ற கடிதங்களை அலுவலக கடிதங்கள் என்கிறோம். இவ்வகையான கடிதங்கள் பெரும்பாலும் அரசு அலுவலகங்கள் சார்ந்தவைகளே அதிகம் இடம்பெறுகின்றன. தனியார்த் துறையில் குறைவானதாகவே காணப்படுகின்றன. ஏனெனில் அரசு சார்ந்த இடங்களில் பழைய கோப்புகளைப் பாதுகாத்து,  அதனை முன்வைத்து வரும்காலங்களில் பயன்படுத்தி வருவதுண்டு. அதுமட்டுமில்லாமல் பொதுமக்களின் செயல்பாடுகள் குறித்துக் கடிதம் இடம்பெற்றிருப்பின் அதனை கோப்பில் பாதுகாத்தும் வருகின்றனர்.

        இக்கடிதங்கள் மேலதிகாரி தனக்கு கீழ் வேலை செய்யும் அதிகாரிகளுக்கு அனுப்புவார். அவர் அவரின் கீழ் வேலை செய்யும் நபர்களுக்கு பரிந்துரை செய்வார். இப்படியே இறுதியாகப் பொதுமக்களிடம் சென்றடையும். 

   அலுவலக கடிதங்களைப் பொறுத்தவரை ஆணை பிறப்பிப்பதற்காகவும் செய்திகளைத் தெளிவுப்படுத்தவும் எழுதப்பப்படுகின்றன.
கீழ்க்கண்டவாறு அலுவலக கடிதங்கள் அமையலாம்
1.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து வட்டாச்சியர்களுக்கு கடிதம் எழுதுதல்.

2.வட்டாச்சியரிடமிருந்து கிராம நிர்வாக அலுவலர்களுக்குக் கடிதம் வரைக.

3. ஏதேனும் ஒரு பிரச்சனையை முன்வைத்து அமைச்சர்களிடமிருந்து துறைதோறும் கடிதத்தை அனுப்புதல்.

4. கிராம நிர்வாக அலுவலர் தாசில்தார்க்குக் கடிதம் வரைதல்.

5. காவல்துறை ஆய்வாளர் தான்சார்ந்த காவல் நிலையங்களுக்கு ஆணையிட்டு கடிதம் அனுப்புதல்.

6. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்க்கும் பொதுமக்களுக்கும் ஆணையிட்டு கடிதம் எழுதுதல்.

7. பல்கலைக்கழகங்கள் தங்கள் கீழ்ச்செயல்பட்டு வரும் கல்லூரிகளுக்குச் செய்திகளை அனுப்ப கடிதம் எழுதுதல்.
8. சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர்களுக்குப் பொதுநலம் கருதி கடிதம் எழுதுதல்.

9.பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வேலைக்கு உண்டா ஆணை, அங்கீகாரம் ஆகியன இவையுள் அடங்கும்.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலக கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சியர்க்கும் பொதுமக்களுக்கும் ஆணையிட்டு கடிதம் எழுதுதல்.
அனுப்புநர்
                       
                     முதலமைச்சர்,
                       
                     தமிழ்நாடு.

பெறுநர்
                     மாவட்ட ஆட்சியர்கள்

                     தமிழ்நாடு.

ஐயா / அம்மையீர்,
           
                     பொருள் : கோவிட் – 19 பொது ஊரடங்கு செயல்படுத்துதல் தொடர்பாக…
           
             வணக்கம். நம் மாநிலத்தில் கோவிட் – 19 என்கிற பெரும் தொற்றுநோய் நமது மக்களிடையே அதிகளவில் தொற்றி வருகிறது. இதன்காரணமாகத் தினம்தினம் மக்கள் பலர் உயிர்நீத்து வருகின்றனர். இந்நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். கோவிட் – 19 க்கான புதிய மருந்தை கண்டுபிடிக்கும் வரையில் அனைத்துப் பொதுமக்களும் வீட்டினுள் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். எந்தவிதமான போக்குவரத்தும் இல்லாமல் ஊரடங்கு நாளை முதல் செயல்பட தொடங்குகிறது என்பதை தெளிவுப்படுத்த விரும்புகின்றேன். மேலும், அனைவரும் முககவசம் அணிந்தும் ஒருவர்க்கு ஒருவர் இடைவெளிவிட்டும் அடிக்கடி கைகளைச் சுத்தப்படுத்தியும் இருப்பது அவசியமாகிறது. இதனை மாவட்ட ஆட்சியர்கள் கவனத்தில் கொண்டு அனைத்துப் பொதுமக்களுக்கும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  சென்னை                                                                                                                                              முதலமைச்சர்
நாள் :                                                                                                                                                                           (தமிழ்நாடு)

இணைப்பு
1.செய்தித்துறை

2.மக்கள் தொடர்பு துறை

3.அனைத்து மாவட்ட ஆட்சியர்கள்

4.முதலமைச்சர் தனிப்பிரிவு

 

3.புகார்க்கடிதங்கள்


     புகார் என்பது பிறமொழிச்சொல்லாகும். தமிழில் புகார் என்பதற்கு முறையீடு என்று பெயர் கொள்ளலாம். புகார் அளிப்பது என்பதை தவிர்த்து முறையீடு செய்யப்பட்டது என்று குறிப்பிட்டால் நலம். ஆனால் மக்கள் பேச்சு வழக்கில் முறையீடு கடிதம் என்பதைவிட புகார் கடிதம் என்பதே அதிகம் பயின்று வந்துள்ளதைக் காணமுடிகிறது. இங்கு புகார் என்பது பொதுச்சொல்லாக வைத்து கடிதம் எழுதப்படுகிறது.

       புகார், முறையீடு என்பதற்கு மீட்டுக்கொடுக்க வேண்டல், நீதி கேட்டல், சொந்தம் கொண்டாடல், உரிமை வேண்டல், என்னுடையது என்று முறையிடல் ஆகியனவும் இன்னும் பிறவும் பொருளாகக் கொள்ளலாம்.

      நீதி கேட்டோ அல்லது உரிமையைக் கேட்டோ அந்தந்த மேலதிகாரிக்கு தனக்குள்ள நிறையைத் தெரிவித்து எதிரானவரைப் பற்றி புகார் அளித்தல்.

           காணாமல் போன ஒன்றை கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு புகார் கடிதம் எழுதுதல்.

        சண்டையிட்டும், வழக்கு சார்ந்தும், குடும்ப பிரச்சனைகளை முன்வைத்தும் காவல் நிலையங்களில் புகார் அளித்தல்
.
இம்மாதிரியான புகார் கடிதங்கள் அதிகமாகக் காவல் நிலையங்கள் சார்ந்தே இருக்கும். 
கீழ்க்கண்டவாறு புகார் கடிதங்கள் அமையலாம்

1.காணாமல் போன மிதிவண்டியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

2. காணாமல் போன நகையைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

3. காணாமல் போன மகனைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

4. காணாமல் போன இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

5. எங்கள் வீட்டில் திருட்டுப்போன பொருட்களைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

6. காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

7. காணாமல் போன கைக்கடிகாரத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

8. பாலியல் கொடுமையை எதிர்த்துக் காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

9. சமூக பிரச்சனைகளுக்காக அந்தந்த உயரதிகாரிகளுக்கு புகார் கடிதம் வரைக.

10.குடும்ப பிரச்சனைகளை முன்வைத்துக் காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.

இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு புகார்க்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

காணாமல் போன இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி காவல் ஆய்வாளருக்கு விண்ணப்பம் வரைக.
அனுப்புநர்
                       
                      அமுதன்,
                       
                      காமராஜர் தெரு,
                       
                      எர்மசமுத்திரம் கிராமம்,
                       
                     பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,
                 
                      சேலம் மாவட்டம்,

பெறுநர்
                       
                    காவல் ஆய்வாளர்,
                       
                    காவல் நிலையம்,
                       
                   ஏத்தாப்பூர்,

                   பெத்தநாயக்கன் பாளையம் வட்டம்,

                   சேலம் மாவட்டம்.

ஐயா / அம்மையீர்,
           
                   பொருள் : இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தருதல்  தொடர்பாக…
           
                       வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் கடந்த முப்பது வருடங்களாக வாழ்ந்து வருகின்றேன். தற்போது எனது தங்கையின் திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு ஆத்தூருக்கு என்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்றிருந்தேன். ஆத்தூரில் NM ஜுவல்லர்ஸ் – க்கு முன் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு கடைக்குள்ளே நகை வாங்க சென்றிருந்தேன். கிட்டதிட்ட இரண்டு மணி நேரங்களுக்குப்பின் நகை வாங்கிவிட்டு வெளியில் வந்து பார்க்கும்போது எனது வண்டியைக் காணவில்லை. அக்கம்பக்கத்திலும் சென்று பார்த்தேன். பக்கத்தில் உள்ளோரிடம் விசாரித்தும் பார்த்தேன். எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. ஆதலால், என்னுடைய இருசக்கர வாகனத்தைக் கண்டுபிடித்துத் தரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                        தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                                               ( அமுதன் )
இணைப்பு
1.TVS – WEGO, Blue color

2.வண்டி எண் – TN 27 A 2314

3.வண்டியின் RC  புத்தகம்

4.என்னுடைய ஓட்டுநர் உரிமம் நகல்

5.  NM ஜுவல்லர்ஸ் கடையின் நாங்கள் வாங்கின நகையின் அன்றைய ரசீது

 

4.வணிகக் கடிதங்கள்

         வணிகம், வாணிபம் என்று சொல்லலாம். இங்கு வணிகம் என்பது தொழில் சார்ந்த நிகழ்வுகளைக் குறிக்கிறது. அவ்வாறு தொழில் சார்ந்து நடக்கும் கடித போக்குவரத்துக்களை நாம் வணிகக் கடிதம் என்கிறோம். இவ்வகையான கடிதங்கள் சிறுகுறு தொழில்களிலிருந்து பெருந்தொழில்கள் நடக்கும் அனைத்து வகையிலும் உண்டு எனலாம்.

          சிறுகுறு தொழிலகங்கள் பெரும் தொழிற்சாலைகளிடமிருந்து தனக்கு இந்தப் பொருட்கள் அல்லது கருவிகள் தனக்கு வேண்டும் என்று கடிதம் எழுதப்படுவது ஆகும்.
         
இவ்வகையான கடிதங்களைப் பொறுத்தவரை அந்தந்த தொழிற்சாலைகளின் தலைமை மற்றும் மேனேஜர் அவர்களுக்கு எழுதக்கூடியதாகும்.

கீழ்க்கண்டவாறு வணிகக் கடிதங்கள் அமையலாம்
1.புத்தகங்கள் வேண்டி பதிப்பகத்தார்க்கு கடிதம் வரைக.

2.சக்கரை வேண்டி சக்கரை தொழிற்சாலை மேனேஜருக்கு கடிதம் வரைக.

3. வாகனங்களின் உபரி கருவிகள் வேண்டி அவ்தொழிற்சாலைக்குக் கடிதம் வரைக.
3. அரிசி, பருப்பு, வெங்காயம் போன்றவைகள் பெற அந்தந்த மண்டிகளின் (மார்கெட்) தலைமை பொறுப்பாளருக்குக் கடிதம் வரைக.

4. எலெக்ட்ரானிக் சாதனங்கள் (TV, Phone, Watch, Computer, Fan Ex..) வேண்டி அவ்வவ் துறைகளுக்கு கடிதம் வரைக.

5. எலெக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ( Bulb, Switch Ex..)  வேண்டி கடிதம் வரைக.

6. வர்ணங்கள் (பெயிண்ட் ) வேண்டி அந்தந்த தொழிற்சாலைகளுக்கு (Asian Paints Ltd, Berger Paints India Ltd, Kansai Nerolac paints Ltd Ex..) கடிதம் வரைக.

7. துணிக்கடைக்கு புதிய ஆடைகள் வேண்டி கடிதம் வரைக.

8. பர்னிச்சர்ஸ் ஷோரூம் – க்குப் புதிய கட்டில், நாற்காலி, மெத்தை ஆகியன வேண்டி கடிதம் வரைக.

9. மளிகைப் பொருட்கள் வேண்டி கடிதம் வரைக.

10.மருந்து கடைக்கு தேவையான மருந்துகள் வேண்டி கடிதம் வரைக.

       இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். இங்கு ஒருசில கேள்விகளுக்கு இதற்கு கூடவா கடிதம் எழுத வேண்டும் என்று எண்ணலாம். ஆனால் வணிகக் கடிதம் என்று வரும்போது இவையெல்லாம் சேர்ந்துதான் வரும். மேலும், கடித வடிவில் இல்லாமல் நீங்கள் சாதாரணமாக கேட்கும் பொருட்களை அவர்களும் கொடுத்து விடுவதால் நமக்கு இதுவே போதும் என்ற எண்ணம் உருவாகிவிடுகிறது. பொருட்கள் தரக்கூடியவர்கள் இப்படித்தான் தனக்கு வேண்டும் என்று கேட்டால் எல்லோரும் கடித முறையைப் பின்பற்றுவார்கள் என்பதில் ஐயமில்லை.

உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு வணிகக்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

பர்னிச்சர்ஸ் ஷோரூம் – க்குப் புதிய கட்டில், நாற்காலி, மெத்தை ஆகியன வேண்டி கடிதம் வரைக.
அனுப்புநர்
                       
                      கதிரவன்,
                       
                      கதிர் பர்னிச்சர்ஸ்,
                      
                      நேரு தெரு,
                       
                      சேலம் மாவட்டம்,
                       
பெறுநர்
                      மேனேஜர்,

                      ராயல் பர்னிச்சர்ஸ் & கோ

                      அண்ணா நகர்,
                       
                      சென்னை – 600 021.

ஐயா / அம்மையீர்,
           
                       பொருள் : பர்னிச்சர்ஸ் வாங்குதல்  தொடர்பாக…
           
                வணக்கம். நான் மேற்கண்ட முகவரியில் கடந்த இருப்பத்தைந்து வருடங்களாகப் பர்னிச்சர்ஸ் கடை நடத்தி வருகின்றேன். தற்போது எனது கடைக்குச் சில பொருட்கள் தேவைப்படுகின்றன. மரத்தாலான கட்டில்களும் ஷோபாக்களும் நல்லதொரு வடிவிலும் உறுதியான நிலையில்  அமைந்திருப்பதாகக் கேள்விப்பட்டேன்.  மேலும் நாற்காலிகள் சிறந்த தச்சர்களால் உருவாக்கப்பட்டது என்றும் அறிந்தேன். அதனால் எனக்கு கீழ்க்கண்ட பொருட்களை என்னுடைய முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கின்றேன். 
            நீங்கள் எங்களுக்கு அனுப்புகின்ற பொருட்களுக்கு ரசீது அனுப்பியவுடன் உங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகையை வங்கியில் செலுத்திவிடுகின்றோம்.

நன்றி

இடம் :  எர்மசமுத்திரம்                                                                                                                     தங்கள் உண்மையுள்ள,
நாள் :                                                                                                
                                                                             ( கதிரவன் )

இணைப்பு
1. Wood Shoba Set  – 25 Nos

2.Chair (Rs.500) – 100  Nos

3. Small size Chair (Rs.350) – 100 Nos

4. Bed Smart Design – 75 Nos

5.  Dressing Table – 100 Nos

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here