அன்னை தந்த ஒளி சிறுகதைகள் காட்டும் குடும்பம்

அன்னை தந்த ஒளி சிறுகதைகள் காட்டும் குடும்பம் - சே.சீனிவாசன்
முன்னுரை
               
சமுதாயத்தில் பல நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்திலும் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வருவது குடும்பமே ஆகும். குடும்பம் தான் சமுதாயத்தின் அடையாளமாக விளங்குகிறது. குடும்பமே சமுதாயம் உருவாக காரணமாக இருந்து வருகிறது. மனிதர்கள் தங்கள் நிலையிலிருந்து தாளாமலும் அன்பு, பரிவு, பாசம், ஒற்றுமை போன்ற நிலையில் இருந்து தவறாமலும் மிருகத்தன்மையை ஒழித்தும் சரியான பாதையில் வாழச் செய்வது குடும்ப அமைப்பே ஆகும். குடும்ப அமைப்பின் மூலம் மனிதர்கள் தங்களுடைய தேவைகளைச் சரியான வழியில் பெற முடிகிறது.

குடும்பச் சமூகம்
               
குடும்பமானது தனி குடும்பம், கூட்டுக் குடும்பம் என்ற இரு நிலையில் சமுதாயத்தில் செயல்பட்டு வருகிறது. தந்தை, தாய்,மகன் என்று குறைந்த நபர்களைக் கொண்டு விளங்குவது தனி குடும்பம் ஆகும். ஒரு மரத்தில் பல கிளைகள் இருப்பது போல், ஒரு குடும்பத்தில் உறவுகளுடைய பல நபர்கள் சேர்ந்து வாழ்வது கூட்டுக் குடும்பம் ஆகும். இந்த இரண்டு நிறுவனங்களிலும் கடல் அலைகள் வந்து வந்து செல்வதைப் போன்று நன்மை, தீமைகள், இன்ப துன்பங்கள் வந்து வந்து செல்லும். இதனைச் சரி செய்து சீராக நடத்திச் செல்வது அந்தந்தக் குடும்பங்களின் தலைவரையே சாரும்.
               
“குடும்பமே சமூகத்தின் மிகச்சிறிய ஆனால் அதிநெருக்கமான குழுவாக உள்ளது. இங்குதான் மனித வர்க்கத்தினுடைய ஒற்றுமை, பாசம் போன்ற உன்னத  ஆசைகளும், தேவைகளும் முழுமையாக திருப்தி பெறுகிறது”1 என்று கூறுகிறார் குமாரசாமி.
     
“குடும்ப ஒற்றுமைக்குத் தலைமை பண்பும், நிர்வாக திறமையும் அவசியம் இருத்தல் வேண்டும்”2 என்று கூறுகிறார் ரவிச்சந்திரன்
               
குடும்ப அமைப்பு நிலைக்க அன்பு உணர்வும், பிணைப்பும் எல்லா நிலைகளிலும் இருக்க வேண்டும். அங்ஙனம் இல்லாது தான் சென்ற உணர்வு மேலிட்டால் குடும்பஅமைப்பு சிதையும். இம்முனைப்பு இல்லாத அன்பார்ந்த செயல்பட்டால் குடும்பம் தழைக்கும். அது மட்டுமல்லாமல் சமுதாயத்தின் நன்மதிப்பைப் மபெறும்.

“அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு”3
என்று கூறுகிறார் திருவள்ளுவர்.  குடும்பத்தில் சிக்கல்கள் என்பது இயற்கையானதே. நிலவில் களங்கம் இருப்பது போன்று குடும்பத்தில் சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனைப் பெரிய சுமையாக கருதாமல் சாதாரணமாக எண்ணி செயல்பட வேண்டும். அப்போதுதான் குடும்பத்தில் அமைதியை நிலைநிறுத்த இயலும். அதுமட்டுமல்லாமல் குடும்பம் கட்டுக்கோப்பாக இயங்கும் நிலையில் சிக்கல் ஏற்படுவதற்கு இடமில்லை.
 “குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டியது மிகவும் விரும்பத்தக்கது தான். ஆனால் அமைதி ஒன்றே அதற்கு இறுதியான லட்சியமாகி விட முடியாது. மண வாழ்வின் நிலை என்பது கட்டுப்பாடான நிலை என்று நான் கருதுகின்றேன்”4
என்று கூறுகிறார் மகாத்மா காந்தி. மேலும் குடும்பங்கள் வழி வழியாக எவ்வாறு செயல்பட்டு வருகின்றன என்பதையும் பாசம் உறவுகள் இல்லறம் வறுமை வேதனை ஆகியன எவ்வாறு குடும்பத்தில் இருக்கின்றன என்பதையும் ஆசிரியர் தம் கதைகளில் எவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார் என்பதையும் இவ்வாய்வின் வழி ஆராயப்படுகிறது.

தந்தையின் பாசம்
               
‘தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை’ என்று ஒளவைக் கூற்றின்; மூலம் தந்தையின் சிறப்பினை அறியலாம். ஒரு குடும்பத்தினைச் சீரான அமைப்போடு நல்ல நிலையில் நடத்திச் செல்வது தந்தையின் கடமையாகும். குடும்பத்தைத் தாங்கும் தூணாக அவர் திகழ்கின்றார். அவர் இல்லை என்றால் குடும்பமானது பல்வேறு இன்னல்களையும் அவமானங்களையும் அடையும். தந்தை குழந்தைகளை நல்ல நெறியில் வளர்ப்பவர். குடும்பத்திற்கு உண்டான தேவைகளை அறிந்து செய்வதும் தந்தையின் கடமையாகும்.
                “அரிதொரு வகையான் அறிவின் தாய் அன்பில் நனைந்து உரிய வழி வகுத்தவன்: வித்தினை மகிழ்ந்து விதைத்தவன் எரிகின்ற மெழுகு போல் இரு என்று வாழும் நெறி காட்டியவன் பரிவையுள் வைத்து என்னை அடித்து வளர்த்தவன் என் தந்தை”5 என்று கூறுகிறார் நாகராஜன். இதன் மூலம் தந்தையின் கடைமையும், பொறுப்பையும் அறிந்து கொள்ளலாம்.
               
‘அவள் வளர்த்த கடாரி’ என்ற கதையில் வீரப்பன் தன் மகள் வள்ளியாத்தாளுக்குத் திருமணம் செய்வதற்காக ஒரு கடாரி வளர்த்து வந்தான். அதனை விற்பதற்காக சந்தைக்கு ஓட்டிச் செல்லும் வழியில் மிரண்டு காட்டுக்குள் ஓடியது. அங்கு புலியால் அடித்து கொல்லப்பட்டு கிடந்தது. அதனை கண்டு வருந்தி,  “அவளுக்குச் செய்ய வேண்டிய கடமையை விரைவில் செய்ய முடியாமல் போய்விட்டதே”6 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளின் திருமணம் தடைபட்டு விட்டது என்பதை எண்ணி வருந்தும் தந்தையின் பாசத்தினை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.
               
“சீர்” என்ற கதையில் சொங்கப்ப கவுண்டர் தான் அனைத்தையும் இழந்து வறுமையில் இருந்தபோது அவர் மகள் குழந்தை பேற்றிற்காக வருகிறாள். குழந்தை பிறந்து செல்லும்போது சீராக கொடுப்பதற்கு ஒரு கடாரியை வளர்க்கிறார். ஆனால் அவளுக்கு கொடுக்கும் நாள் அன்று கடாரி இறந்து விடுகிறது.அதனை நினைத்து வருந்தி, “வள்ளியாத்தா என் ஆசை எல்லாம் வீணாய் போச்சு”7 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளுக்குச் செய்ய வேண்டிய கடமையானது தடைபட்டதை எண்ணி வருந்தும் தந்தையின் பாசநிலையை ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.
               
“சீதனம்” என்ற கதையில் வள்ளியாத்தாவின் கணவன் கந்தப்பன். அவன் கள்ளச்சாராயம் காய்ச்சி போலீசில் மாட்டிக் கொள்கிறான். வெளியில் கொண்டு வருவதற்குப் பணம் தேவைப்பட வள்ளியாத்தா தந்தையை நாடிச் செல்கிறாள். அப்போது அவள் தந்தை,
“வள்ளியாத்தா நான் உனக்கு பணம் கொடுக்கிறேன். நீ இப்பவே உங்கள் ஊருக்குப் போய் அவருக்கு ஆறுதல் சொல்லு”8 என்று கூறுகிறான். இதன் மூலம் மகளின் துன்பத்தைப் போக்கும் தந்தையின் பாச உணர்வினை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.

தாயின் பாசம்
               
உலகமானது எவ்வளவு அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து வெற்றி பெற்று முன்னேற்றம் அடைந்தாலும், அதைக் காட்டிலும் சிறந்தது தாய்மையை ஆகும். தாயில்லாமல் உலகத்தில் எந்த மனிதனும் சிறப்பாக வாழ முடியாது. குழந்தைகளின் மனநிலை அறிந்து அவர்களின் துன்பத்தினைப் போக்க வல்லவள் தாயே. தாய் தன் பிள்ளைகளிடம் செலுத்தும் அன்பினை அளவிட முடியாது. சமுதாயத்தில் ஒரு பெண்ணுக்கு ஓர் இடம் கிடைப்பது தாய்மையால்தான். தாய் தெய்வத்திற்குச் சமமாவாள். “குழந்தைகளிடம் தந்தையாரை விட தாய்மார்கள்தான் அதிக வாஞ்சையுடன் இருப்பார்கள். ஏனெனில் குழந்தைகளைப் பெறுகின்ற கஷ்டம் தாய்மார்களுக்குத் தெரியும், தவிர குழந்தைகள் தங்களுடையது தான் என்று தாய்மார்களுக்கு அதிக நிச்சியமாகத் தெரியும்”9 என்று அரிஸ்டாட்டில் கூறுகிறார்.
               
“அன்னை தந்த ஒளி” என்ற கதையில் அனாதையான சொங்கப்பன் ராமாத்தாளுக்கு ஆப்பக்கூடையை ஓர்நாள் சுமக்கிறான். அன்று முதல் தினமும் சுமக்கிறான். ராமாத்தாளுக்கு மகன் என்கின்ற உணர்வு ஏற்படுகிறது. திடீரென்று அவள் நோய்வாய்ப்பட சொங்கப்பனை அழைத்து தான் சேர்த்து வைத்த பணத்தை அவனிடம் கொடுத்து, “சொங்கப்பா, நீ இந்த பணத்தை வைத்துக்கொள். நாற்பது வருஷமா ஆப்பம் சுட்டு சம்பாதிச்ச மிச்சம் எல்லாம் உனக்குத்தான். அதை வைத்து ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நீ சுகமா பிள்ளை குட்டிகளோடு வாழ வேண்டும்”10 என்று கூறுகிறாள். இதன்மூலம் வளர்ப்பு மகனாக இருந்தாலும் அவனின் எதிர்காலம் சிறப்பாக இருப்பதற்கு சிறு வயது முதல் உழைத்த அனைத்து பணத்தையும் கொடுக்கும் தாய்மை நிலையை ஆசிரியர் வெளிக்காட்டி உள்ளார்.
           
“மாவிளக்கு” என்ற கதையில் தன்னுடைய வளர்ப்பு மகளான வள்ளியாத்தாளுக்கு சிறுவயதில் நோய் ஏற்பட, அது தீருவதற்காக முத்தம்மாள் மாரியாத்தாளுக்கு மாவிளக்கு எடுப்பதாக வேண்டி, அன்று முதல் வருடா வருடம் மாவிளக்கு எடுக்கிறாள். கண் தெரியாத வயதான நிலையிலும் அதை நிறைவேற்றுகிறாள். அதை அறிந்து வள்ளியாத்தாள், இந்த நிலையிலும் எப்படி நிறைவேற்றினாய் அம்மா என்று கேட்க அதற்கு முத்தம்மாள், “வயலிலே நெல் அறுவடை காலத்தில் எத்தனையோ பேர் வேலை செய்ய முடியாத கிழவிகள் வந்து அங்கே நிலத்தில் உதிர்ந்து விழுந்து கிடக்கிற நெல்லை எடுத்துப் போவார்கள். அதை நான் பார்த்திருக்கிறேன் அந்த விசை நானும் அப்படி பண்ணினேன்”11 என்று கூறுகிறாள். இதன்மூலம் மகளின் நலனுக்காக தன்னுடைய குறையையும் பொருட்படுத்தாமல் வேண்டுதலை நிறைவேற்றும் தாயின் பாச உணர்வை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

பிள்ளைகளின் பாசம்
               
பெற்றோர்களின் மானத்திற்கு என்றும் ஒரு அவமானமும் ஏற்படுத்தி விடாமல் அவர்களுக்கு நற்பெயரைச் சேர்ப்பது ஒவ்வொரு பிள்ளைகளின் கடமையாகும். முதியவர்கள் ஆனபோது பெற்றோர்களை நீக்கி விடாமல் அவர்களுக்குத் துணையாய் நின்று தேவையான பணிவிடைகளைச் செய்ய வேண்டும். மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குறிப்பிடுவதன் மூலம் பெற்றோர்கள் எவ்வளவு சிறப்பானவர்கள் என்பதை அறியலாம். “தாயையும் தந்தையும் ஆதரித்தல் அமைதியானதொரு வாழ்க்கை நடத்துதல் இதுதான் மாபெரும் நற்பாக்கியம்”12 என்று கூறுகிறார் புத்தர்.

“அவள் வளர்த்த கடாரி” என்ற கதையில் வீரப்பன், மகள் வள்ளியாத்தா கல்யாணத்திற்காக ஒரு கடாரியை வளர்க்கிறான். அதை விற்க சந்தைக்கு அழைத்துச்  செல்கிறான். தந்தையைப் பிரிய விரும்பவில்லாத வள்ளியாத்தா அதை விற்க வேண்டாம் என்கிறாள். அவள் வார்த்தையை மீறி விற்கச் செல்லும் போது அந்தக் கடாரி புலியால் கொல்லப்படுகிறது. வீரப்பன் அதை தன் மகளிடம் கூற, அவள் மகிழ்ந்து, “ஐயா கடாரி போனால் போகிறது. அதற்காக மனதிலே உங்களுக்கு கவலை வேண்டாம். அது போனால் இன்னொன்று வாங்கி வளர்த்தால் போகிறது”13 என்று கூறுகிறாள். இதன் மூலம் தந்தையைத் தனிமையில் விட்டு விட்டு திருமணம் செய்து கொண்டு செல்ல விருப்பமில்லாத மகளின் பாச உணர்வினை ஆசிரியர் வெளிப்படுத்தி உள்ளார்.
           
“அன்னை தந்த ஒளி” என்ற கதையில் சொங்கப்பன் தனக்கு கிடைத்த வளர்ப்புத் தாய் இறக்கும் தருவாயில் தன்னிடம் கொடுத்த பணத்தைக் கொண்டு தன் தாய்க்கு மோட்சம் கிடைப்பதற்காக பல வழிகளைத் தேடுகிறான். அச்சமயம் கோயில் திருப்பணி நடக்கிறது. அப்பணத்தை அதற்கு கொடுத்துவிட்டு, “மோட்சம் எல்லாத்தையும் அம்மாளுக்கே சாமி கொடுக்கட்டும்”14 என்று கூறுகிறான். இதன் மூலம் இறந்த தாய்க்கு நல்லதொரு வகையான வீடு பேறு கிடைப்பதற்கான வழியினை அறிந்து நிறைவேற்றும் மகனின் பாசத்தை ஆசிரியர் புலப்படுத்தி உள்ளார்.
           
“பழிக்குப் பழி” என்ற கதையில் முத்துசாமி என்பவன் வேலுச்சாமி கவுண்டர் என்பவரின்  சதியின் காரணமாக சிறைக்குச் செல்கிறான். அவன் விடுதலையாகி வந்து கவுண்டரைக் கொல்வதற்காக காத்திருக்கிறான். அப்போது தன் தந்தையை நினைத்து, “நான் ஜெயிலுக்குப் போயிராவிட்டால் அவரும் இவனைப் போல் தான் தளர்ச்சியில்லாமல் இருந்திருப்பார். என் வீட்டில் அரிசி கொட்டி கிடக்காவிட்டாலும் வேலை செய்து சம்பாதித்து அவரை நான் நன்றாக வைத்திருப்பேன். இப்போ எப்படி இருக்கிறாரோ?”15 என்று வருந்தி கூறுகிறான். இதன் மூலம் தான் இல்லாத காலத்தில் தந்தை எவ்வாறெல்லாம் துன்பங்கள் அடைந்து இருப்பார் என்று என்னும் மகனின் வருத்தத்தை ஆசிரியர் உணர்த்தியுள்ளார்.

“மாவிளக்கு” என்ற கதையில் தன்னுடைய வளர்ப்பு தாய் முத்தம்மா கண் தெரியாத நிலையிலும் தன் நலனுக்காக மாவிளக்கு எடுத்ததை அறிந்து வள்ளியாத்தாள் கண்ணீர் விட்டு
“தாயில்லா குழந்தையான எனக்கு மாரியாத்தாள் தான் இந்த தாயை அனுப்பினாள்”16 என்று கூறுகிறாள். இதன் மூலம் தன்னுடைய மகளின் நலனே சிறந்தது என்று கருதும் தாய் கிடைத்ததை எண்ணி பெருமைப்படும் மகளின் பாசஉணர்வை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.
           
“சீர்” என்ற கதையில் சுங்கப்ப கவுண்டர் மகள் வள்ளியாத்தாளுக்குச் சீரும் சிறப்புமாக திருமணம் செய்து வைக்கிறார் மகள் கற்பவதி ஆகிறாள். தாயில்லா அவளை அழைப்பதற்காக அவர் செல்ல அப்போது தந்தையின் மீது கொண்ட பாசத்தினால் அவள்  “எதற்கப்பா உங்களுக்கு வீண் தொந்தரவு. அம்மா உயிரோடு இருந்தால் வர வேண்டியதுதான் உங்களுக்குக் கஷ்டம் இருக்காது”17  என்று கூறுகிறாள். இதன் மூலம் தந்தை எந்தவிதச் சிறு துன்பத்தையும் அடையக் கூடாது என்று எண்ணும்; மகளின் உயரிய பாசநிலையை ஆசிரியர் வெளிக்காட்டியுள்ளார்.

கணவன் மனைவி பாச உறவுகள்
               
கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வது நலமாகும். விட்டுக் கொடுத்து வாழ்வதன் மூலம் பல பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒருவரை ஒருவர் புரிந்து வாழ்வது சிறப்படையது ஆகும். மனம் விட்டு பேசி எதையும் மறைக்காமல் வாழ்ந்தால் குடும்பம் சிறப்புடையதாக அமையும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் மீது அன்பு செலுத்தி வாழ வேண்டும். “கணவன் மனைவி இருவருக்கும் இடையில் அன்பு, பாசம், பற்று, நட்பு, ஒற்றுமை, விட்டுக் கொடுத்தல் ஆகிய இசைவு, பண்பு, குடும்பப் பணிகளைப் பகிர்ந்து செய்தல், குடும்ப நலன் அழிக்கும் செயல்களை நீக்குதல் போன்றவை மேற்கொள்ளப்படுவது இன்றியமையாதது”18 என்று கூறுகிறார் குமாரசாமி.
           
“சீதனம்” என்ற கதையில் கிழவனும் கிழவியும் அன்பானது ஒரு வாழ்க்கை நடத்தி வந்தனர். ஒரு சமயம் கிழவன் இரவில் நெடுநேரம் இருமி கொண்டிருந்தான். கிழவி தூக்கம் கலைந்து எழுந்து கிழவனிடம் அன்புடன், “ரெண்டு மிளகு கொண்டு வரட்டுமா அதை வாயில் போட்டு மெல்லுங்கோ இருமல் நின்று போகும்”19 என்று கூறுகிறாள். இதன்மூலம் கணவனுக்கு மனைவி துன்பகாலத்தில் துணை நிற்பதை ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

தொகுப்புரை
📍குடும்பத்தின் தூணாக தந்தை திகழ்வதையும், குழந்தைகளைக் காத்து அவர்களின் தேவையை நிறைவேற்றி பிள்ளைகளின் ஆசைக்களுக்காகவே வாழும் ஒப்புயர்வற்ற ஒருவாராக தந்தை வாழ்வதையும்; இயல்வழி அறியமுடிகிறது.

📍குழந்தைகளுக்கு ஏற்படும் இன்னல்களைக் காப்பவளாகவும், குழந்தையின் எதிர்காலத்தைச் சிறப்புடையதாக செய்பவளாகவும், குழந்தைகளை அரவணைத்து அன்பு காட்டுபவளாகவும் தாய் திகழ்ந்துள்ளதை அறியமுடிகிறது.

📍பிள்ளைகள் பெற்றோர்களின் இன்னல்களைத் தீர்த்து வைப்பதையும், அவர்களுக்கு ஏற்படும் அவமானங்களைப் போக்குபவர்களாகவும், தன் பெற்றோர்களுக்கு ஊறு விளைவித்தவரைத் தண்டிக்கும் தன்மை உடையவர்களாகவும் படைத்துக் காட்டப்பட்டுள்ளனர்.

📍கணவன் மனைவி விட்டுக் கொடுத்து வாழும் தன்மை உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதையும், துன்பகாலத்தில் துணையாக இருக்க வேண்டும் என்பதையும் இயல் வெளிப்படுத்தியுள்ளது.

சான்றெண் விளக்கம்
1.சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.192.

2.எ.இரா.ரவிச்சந்திரன்(ப.ஆ), தற்கால நாவல்களில் காணலாகும் சமூக பிரச்சனைகளும் தீர்வுகளும் ப.160.

3.குறள்.75.

4.அரு.ராமநாதன்(ப.ஆ), மகாத்மா காந்தி பொன்மொழிகள், ப.16.

5. நாகராசன், இதயமே எழுக, ப.70,

6.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.32.

7.மேலது, ப.68.

8.மேலது, ப.92.

9.அரு.ராமநாதன் (ப.ஆ), சிந்தனையாளர் அரிஸ்டாட்டில், ப.162.

10.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.42.

11.மேலது, ப.61.

12.அரு.ராமநாதன்(ப.ஆ), புத்தரின் பொன்மொழிகள், ப.33.

13.பெ.தூரன், அன்னை தந்த ஒளி, ப.32.

14. மேலது, ப.44.

15.மேலது, ப.53.

16.மேலது, ப.61.

17.மேலது, ப.66.

18.சி.என்.குமாரசாமி, பெண்ணிய நோக்கில் பாரதி, ப.197,

19.பெ.துரன், அன்னை தந்த ஒளி, ப.91,

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சே.சீனிவாசன்,

முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு,

மஹேந்ரா கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி),

காளிப்பட்டி, நாமக்கல்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here