Tuesday, June 30, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி?|முனைவர் ஈ.யுவராணி

தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி?|முனைவர் ஈ.யுவராணி

தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி - யுவராணி
        தடைகளைத் தகர்த்து வெல்வது எப்படி? இதை மூன்றறிவு உள்ள எறும்புகள் நமக்குக் கற்றுத் தருகின்றன. ஒரு உயிரியல் நிபுணர் எறும்புகளைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வமாய் இருந்தார். அவர் எறும்புகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார். அப்போது ஒரு எறும்பு அதனுடைய வாயில் நீளமான ஒர்  உணவைத் தூக்கிக்கொண்டு ஊர்ந்து சென்றது. தரை வழியாகச் சென்று கொண்டு இருந்த அந்த எறும்பு வழியில் ஒரு வெடிப்பை இருப்பதைப் பார்த்துவிட்டு திடீரென்று அங்கேயே நின்றது. தொடர்ந்து அந்த வழியில் ஊர்ந்து செல்ல முடியாமல் தவித்தது. சிறிது நேரத்தில் அந்த எறும்புக்கு ஒரு யோசனை தோன்றியது. அது  தான் வாயில் சுமந்து வந்த இரையை அந்த வெடிப்பின் மேல் வைத்துப் பாலமாக மாற்றியமைத்து அதன் மீது ஊர்ந்து சென்று வெடிப்பைக் கடந்தது.  அந்த வெடிப்பின் மீது வைத்திருந்த அந்த உணவைத் தன் வாயால் மீண்டும் கவ்வி எடுத்துச் சென்றது எறும்பு. இந்த மாதிரி செயலைப் பார்க்கும்போது தனக்கு மிகுந்த வியப்பு அளிப்பதாக இருக்கிறது என எழுதினார் அந்த நிபுணர்.
           
        அதேபோல் நமக்கு துன்பம் வரும் போது கவலை பட வேண்டாம். அத்துன்பத்தையே பாலமாக (Bridge) வைத்து முன்னேற வேண்டும். இதை நாம் மூன்றறிவு உள்ள எறும்பிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஒரு மிகச்சிறிய எறும்பின் தன்னம்பிக்கை இருந்தால் கூடப்போதும் எந்தத் தடையையும் நம்மால் வெல்ல முடியும். எறும்புகள் எப்பொழுதும் சாரை சாரையாகச் செல்லும். அந்த அடர்ந்த காட்டில் படர்ந்தச் செடி கொடிகளுக்கும் அடியில் எறும்புகள் எல்லாம் சேர்ந்து ஒரு புற்று (Ant House ) ஒன்று கட்டி இருந்தது. அந்த எறும்பு புற்றில் எறும்புகள் அனைத்தும் கூட்டமாக வாழ்ந்து வந்தன. அதில் ஒரு செவ்வெறும்பும், கட்டெறும்பும் ஒரு நல்ல நண்பர்களாக வாழ்ந்து வந்தன. இரை தேடிச் செல்கின்றபோது அந்த இரண்டு எறும்புகளும் ஒன்றாகவே சேர்ந்து செல்லும்.  அதில் கட்டெறும்புக்கு உணவு கிடைக்காத நாளில் செவ்வெறும்பு தன் சேகரித்த உணவைக் கட்டெறும்புக்கு கொடுத்து உதவும். அது போலவே கட்டெறும்பும் செவ்வெறும்புக்கு உணவை கொடுத்து உதவும்.
           
       ஒரு நாள் இந்த இரண்டு எறும்புகளும் இரைத் தேடி ஒர் இடத்தில் அலைந்து கொண்டிருந்தன.  நிறைய இடங்களைத் தேடிப்பார்த்தும் உணவே கிடைக்கவில்லை. கடைசியில் ஒரு குளத்தின் கரையில் இருக்கும் மாமரத்தை பார்த்தது. அந்த மரத்தில் நிறைய மாம்பழங்கள்  பழுத்து வாசனைக் காற்றில் வீசிக் கொண்டு இருந்தன. அந்த இரண்டு எறும்புகளும் ரொம்ப பசியாக இருந்ததால் அந்த மாமரத்தில் ஏறி தொங்கி கொண்டிருந்த ஒரு பழுத்த மாம்பழத்தின் மீது அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தன. உடனடியாக ஒரு பயங்கரமான காற்று வீச ஆரம்பித்தது. அந்த எறும்புகள் சாப்பிட்டுக் கொண்டிருந்த மாம்பழம் அறுந்து குளத்தில் விழுந்தது. அதில் இருந்த இரண்டு எறும்புகளும் குளத்துத் தண்ணீரில் விழுந்து தத்தளிக்க ஆரம்பித்தன.
    
         நண்பா, இப்படி வந்து குளத்துத் தண்ணீரில் விழுந்து விட்டமே. ‘இப்பொழுது நாம் என்ன செய்வது?’ என்றது செவ்வெறும்பு. நிச்சயம் நமக்கு எதாவது ஒரு உதவி கிடைக்கும். அதுவரை குளத்தில் நீந்திக் கொண்டே இருப்போம் என்று கூறியது கட்டெறும்பு. நீண்ட நேரமாகியும் எந்த உதவியும் கிடைக்கவில்லை. எறும்புகளும் ரொம்ப நேரமாகக் குளத்துத் தண்ணீரில் நீந்தி நீந்தி சோர்ந்து போயின. நண்பா, இவ்வளவு நேரமாகத் தண்ணீரில் நீந்திக் கொண்டே இருந்த காரணத்தால் என்னுடைய கால், கை எல்லாம் சக்தி இல்லாமல் போய்விட்டது. இதற்கு மேல் என்னால் நீந்தவே முடியாது.  எப்படியும் தண்ணீரில் மூழ்கி செத்துதான் போகிறேன் என்று சொன்னது செவ்வெறும்பு. இல்லை இல்லை அப்படி சொல்லாதே. இன்னும் கொஞ்சம் நேரம் குளத்தில் நீந்தி போராடு. நிச்சயம் நாம் உயிர் பிழைப்பதற்கு எதாவது ஒரு வழி கிடைக்கும் என்றது கட்டெறும்பு. இனியும் நமக்கு எந்த உதவியும் கிடைக்க போவது இல்லை. நாம் இறந்துதான் போகின்றோம் என்று கூறிய படி குளத்துத் தண்ணீரில் மூழ்கி உயிரை விட்டது அந்த செவ்வெறும்பு.
           
       அந்த கட்டெறும்பு எப்படியாவது உயிர் பிழைத்துவிடுவோம் என்ற முழு நம்பிக்கையில் போராடிக் கொண்டே இருந்தது. கட்டெறும்பு நீண்ட நேரம் தண்ணீரில் நீந்திக் கொண்டி இருந்ததால் கை, கால்கள் சோர்ந்து பயங்கரமாக வலி எடுக்க ஆரம்பித்தது. இனி நம்மாலும் முடியாது போல் இருக்கிறது. இனி நாமும் இறந்து போய் விடுவோமோ? என்று கட்டெறும்பு மனதில் தோன்றியது. இப்படி செத்து மடிவதற்காக பிறந்தோம். வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் நிறைந்ததுதான். அதற்கு பயந்தால் வாழ்க்கை வாழ முடியாது. அதனால் துணிச்சலோடு போராட வேண்டும் என்று மனதிற்குள் கூறிக்கொண்டது. ஆகையால் கட்டெறும்பானது துணிச்சலோடு போராட தொடங்கியது. சிலமணி நேரம் சென்ற பிறகு ஒரு பலத்த காற்று அடிக்க ஆரம்பித்தது. அப்போது அந்த மாமரத்திலிருந்து ஒரு மாவிலை அந்த கட்டெறும்பு பக்கதில் வந்து விழுந்தது. சட்டென்று கட்டெறும்பு அந்த மாவிலையைப்  பிடித்து ஏறி அதன் மீது அமர்ந்து அதை ஒரு படகாகப் பயன்படுத்தி கரையேறியது.
           
       இந்த அனைத்து நிகழ்வுகளையும் குளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த மீனானது கட்டெறும்பை பார்த்துச் சொன்னது. நீ துணிச்சலோடு விடாமல் போராடிக் கொண்டே இருந்தாய். அதனால்தான் உன்னால் கரை ஏற முடிந்தது. வாழ்த்துக்கள் நண்பா என்றது அந்த மீன். நண்பர்களே, எந்த விஷயத்திற்கும் பயந்துக் கொண்டே வாழாமல் போராடு. எதற்கும் துணிச்சலோடு போராடினால் எதையும் வென்றிடலாம்!
தன்னம்பிக்கை கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் ஈ.யுவராணி
இணைப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

பி.கே.ஆர் மகளிர் கல்லூரி,

கோபிச்செட்டிபாளையம்,

ஈரோடு – 638 476


 

முனைவர் ஈ.யுவராணி அவர்களுடையப் படைப்புகளைக் காண்க…

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »