Friday, September 12, 2025
Home Blog Page 3

விலையில்லா ஊடகம்|கவிஞர் ச.குமரேசன்

விலையில்லா ஊடகம் - கவிஞர் ச. குமரேசன்

🍵 அரசமர நிழலில்


ஆறுக்கு ஆறு


அளவமைந்த


கீற்றுக் கொட்டகை..!


 

🍵 தொண்ணூறுகளின்


பேருந்து நிறுத்த அடையாளம்,


எங்கள் ஊரின் இருட்டுக்கடை அது..!


 

🍵 கீரைப்பட்டி 


பாட்டியின் கைப்பக்குவம் !


பனிக்கால குளிர்,


வெயில் கால அயற்சி,


அனைத்தையும் போக்கும்


தித்திக்கும் தேநீருக்கு


பெயர் போன கடை அது..!


 

🍵 முதல் பேருந்துக்கு


முந்தி நிற்போருக்கு


பிரம்ம முகூர்த்த தீர்த்தம்..!


 

🍵 இரவு நேர


இறுதிப் பேருந்தில்


இறங்குவோருக்கு


இனிமையான அமிர்தம்..!


 

🍵 காலை நேர பணியாரம்,


மாலை நேர சுண்டல்


ஆறிப்போனாலும்


அங்கே பேச்சுக்கள்


சூடாக இருக்கும்..!


 

🍵 பித்தளையில்


பால் கொதிக்கும் பாத்திரமும்


குவளையில் ஆற்றித் தரும் தேநீரும் !


பாட்டியின்


வெற்றிலைப் போட்ட பற்களும்


ண்ணத்தில் ஒன்றாக வந்து நிற்கும்..!


 

🍵 பாமரரின்


உள்ளூர் செய்திகளுக்கு


உரமாகும் பாட்டி


அவளின் வாய்..!


படித்தவரின்


வெளியூர் செய்திகளுக்கு


வரமாகும் தாள்களுக்கு


அவள் தாய்..!


 

🍵 எங்கள் ஊரின்
 

முதல் வானொலி,


தொலைக்காட்சி,


நூலகம் எல்லாமே


பாட்டிக்கடை தான்!


விலையில்லா
அன்பான ஊடகம் அது..!


 

🍵 மங்கலான இராந்தல் ஒளியும்


மங்கும் நேரம்..


பத்து மணி ஆன பின்னும்


பாட்டியின் கடை


பகலாகத்தான் இருக்கும்..!


 

🍵 ஆண்டுகள் பல ஓடிய பின்..


அங்கே மின்விளக்குகள்


மின்ன மின்ன பேக்கரிகள் பெருகிவிட்டன..!


 

🍵 திரும்பிப் பார்த்தால்


விளம்பரமற்ற ஊடகம் !


விலையில்லா ஊடகம் !


என்று எதுவும் இல்லை !


 

🍵 தொகைக் கொடுத்து


தோண்டிப் பார்த்தாலும்,


இந்தத் தகவல்கள்


அதைப்போல்


சுவாரசியத்தை கொடுக்கவில்லை..!


 

🍵 எதிர்பார்க்கிறேன்


விலையில்லா ஊடகத்தை..!


கவிதையின் ஆசிரியர்

கவிஞர் ச. குமரேசன்,
 

உதவிப்பேராசிரியர்,
 

தமிழ்த்துறை,
 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, 

இராசிபுரம்.

 

எது சுதந்திரம்?|த.கருணா

எது சுதந்திரம் - த.கருணா

நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                   இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

கடைக்கூழ் கஞ்சி என்றாலும்
  

பகிர்ந்து உண்ட காலம் அதுவன்றோ………. !


10 பேரின் உணவை ஒருத்தரே உண்பது போல்


நடித்து லைக் சிறிது உண்டு பெரிது வீணடிக்கும் 

காலம்
  இதுவன்றோ………………!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!                

                 இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

நாடு விடுதலை பெற தொண்டை தண்ணீர் வற்றுமளவில்
           

புரட்சி மிக்க பாடலை பாடிய காலம் அது ஒன்றோ…………..!


பிறர் பாடலை திருடி வாய் அசைத்து ரீல்ஸ் போட்டு
   

பணத்தை பார்க்கும் காலம் இது இதுவன்றோ………………!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….!                

               இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

ஒருவனுக்கு ஒருத்தி சிலர் உடன்கட்டை ஏறி

அன்பைக் காட்டிய காலம் அதுவன்றோ
               

ஒரு கணவருக்கு பல மனைவிகளும்…………………!
                            

ஒரு மனைவிக்கு பல கணவர்களும்…………………..!
                                        

லிவ்விங் டுகெதர் என்று வாழும் காலம் இதுவன்றோ……………………..!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

முல்லைக்கு தேர் தந்த பாரி போன்ற வள்ளல்கள்


பலர் வாழ்ந்த காலம் அதுவன்றோ………………………………………..!
               

தேர் சக்கரம் உருண்டு தன்னை நோக்கியே வந்தாலும்
 

செல்பி எடுத்து சாகும் காலம் இதுவன்றோ…………………………..!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                  இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

சித்திரங்களும் கதைகளும் கவிதைகளும் கொஞ்சித் தமிழில் மிஞ்சி


       விளையாடிய காலம் அதுவன்றோ………………………………….!
               

ஏ ஐ டி உயிர் கொடுத்து மனித மூளையின் உயிரை எடுத்து மாற்றுரு

கொடுக்கும் காலம் இதுவன்றோ……………………………………..!


நாம் சுதந்திரத்தை பெற்றோமா…….! 

                இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா…..!

காலங்கள் மாறலாம் யுகங்களும் மாறலாம்

என்றும் மாறாத ஒன்று
பாரம்பரியமும் பண்பாடும்…………………!
 

சுதந்திரம் நம்மை ஆட்சி செய்தால் அழிவு நிச்சயம்


நாம் சுதந்திரத்தை ஆட்சி செய்தால் ஆக்கம் நிச்சயம்……………..!


இப்பொழுது சொல்லுங்கள்

நாம் சுதந்திரத்தை பெற்றோமா………………………….?
         

இல்லை சுதந்திரம் நம்மை பெற்றதா……………………………………?


கவிதையின் ஆசிரியர்

பேராசிரியர் த. கருணா

தமிழ்த்துறை தலைவர்



கிறிஸ்தவ அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி


ஆலம்பாடி (கிராமம் ), சிக்கதிருப்பதி (அஞ்சல்)


மாலூர் வட்டம். கோலார் (மாவட்டம் ),


கர்நாடக(மாநிலம்) 563150.

 

SOOL PUDHINATHTHIL PALAYAPATTU AATCHIMURAI|MARIA DEVA NESAM P

Abstract
           
Tamil Nadu has been ruled by different rulers at different times. When they all embark on a mission to expand their borders, there is a war with other countries. The administration of the country is not merely about expanding borders of waging war; It is also in the interest of the people of the country to redress their grievances, establish justice and increase their prosperity. A good leader is a one who considers the welfare of the people of his own. In this context, the main idea of this article is to know how the administration was in the Palayappattu administration established by the Nayaks through the Novel Sool.

Keywords:
 Ettappan, Palayappattu, Ettaiyapura Palayam, Justice, Respect.


சூல் புதினத்தில் பாளையப்பட்டு ஆட்சிமுறை

ஆய்வுச் சுருக்கம்
         
       தமிழகத்தை வெவ்வேறு காலக்கட்டங்களில் பல்வேறு ஆட்சியாளர்கள் ஆண்டுள்ளனர். அவர்கள், அனைவரும் தங்கள் எல்லைகளை விரிவாக்கும் பணியில் இறங்கும்போது, பிற நாடுகளுடன் போர் ஏற்படுகிறது. நாட்டின் நிர்வாகம் என்பது வெறும் எல்லையை விரிவுபடுத்துவதோ போரை நடத்துவதோ மட்டுமல்ல; நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு அவர்களின் குறைகளைக் களைதல், நீதியை நிலைநாட்டல் மற்றும் வளத்தைப் பெருக்குதல் ஆகியவையும் ஆகும். நல்ல தலைவன் என்பவன் மக்கள் நலனையே தன் நலனாகக் கொள்வான். அந்த வகையில், நாயக்கர்கள் ஏற்படுத்திய பாளையப்பட்டு ஆட்சிமுறையில் நிர்வாகம் எவ்வாறு இருந்தது என்பதை சூல் புதினத்தின்வழி அறிவதே இக்கட்டுரையின் மையக்கருத்தாகும்.

குறியீட்டுச் சொற்கள்
 : எட்டப்பன், பாளையப்பட்டு, எட்டையபுர பாளையம், நீதி, மதிப்பு.

முன்னுரை
            மக்களின் வாழ்க்கை முறைகளை எதார்த்தமாக எடுத்துக்கூறுவதே, வட்டாரப் புதினங்களின் சிறப்பு ஆகும். சூல் புதினம், எட்டையப்புரப் பாளையத்திற்கு உட்பட்ட மக்களின் வாழ்வியலைக் கூறுகிறது. இம்மக்களின் வாழ்வோடு ஒன்றிப்போன கண்மாய் பற்றிக் கூறுகிறது. எட்டையபுர பாளையத்தின் தலைவர்களான எட்டப்பர்களின் ஆட்சிமுறைகளையும் அவர்கள் தங்கள் நாட்டு மக்களின்மீது கொண்டிருந்த அன்பும், மக்கள் மன்னர்மீது கொண்டிருந்த மதிப்பும், பற்றும் இப்புதினம் வாயிலாக சிறப்பான முறையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

சூல்
        சோ. தர்மனின் சூல் எனும் புதினம் சாகித்திய அகாடமி உள்ளிட்ட நான்கு விருதுகளைப் பெற்றுள்ளது. சோவியத் நாட்டைச் சேர்ந்த பிரஷ்னேவ் என்பவர் எழுதிய தரிசுநில மேம்பாடு எனும் நூலில் இடம்பெறும் ஒரு நிகழ்வின் உந்துதலாலேயே இப்புதினம் உருவானது என, சோ. தர்மன் அவர்கள் குறிப்பிடுகிறார். புதினம், உருளைக்குடி எனும் ஊரின் வரலாறு குறித்து கூறும் விதமாக அமைகிறது. இந்திய விடுதலைக்கு முன் உருளைக்குடியின் நிலை மற்றும் விடுதலைக்குப் பின் அதில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவை விரிவாகக் கூறப்பட்டுள்ளன. இப்புதினம் பல தலைமுறைகளின் கதையை உள்ளடக்கியது.

உருளைக்குடி
         தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டிக்கு அருகில் உருளைக்குடி எனும் ஊர் அமைந்துள்ளது. அந்த ஊரில் வாழ்ந்த பல தலைமுறையினரை இப்புதினம் வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறது. கற்பனை கதை தான் ஆயினும் மக்களின் வாழ்வியலை எதார்த்தமான நிகழ்வுகளோடு ஒன்றிணைக்கின்றார்.

கதையின் போக்கு
         உருளைக்குடி கண்மாய் உருளைகுடிக்கு மட்டுமல்லாது சுற்றி இருக்கும் அனைத்து ஊர்களுக்கும் குடிநீர் ஆதாரமாக இருக்கிறது. அத்தகைய கண்மாயை குடிமராமத்து செய்யும் காட்சியில் இருந்தே புதினம் தொடங்குகிறது. அவ்வூர் மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் வழிபாடுகள் ஆகியவை மிகவும் எளிய மற்றும் வட்டார மொழியில் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. நிறைமாதப் பெண் போல கண்மாய் காட்சி அளிக்கிறது. அதை மையப்படுத்தியே கதை நகர்கிறது. இந்திய விடுதலைக்குப் பின்னர் கண்மாய் எவ்வாறு அழிந்தது, மற்றும் அதற்கான காரணிகள் என்னென்ன, என்பதை தெளிவாக எடுத்துரைக்கிறது. கண்மாயின் அழிவு ஊரின் அழிவுக்கு எந்த விதத்தில் காரணமாக அமைகிறது என்பதை சூல் புதினம் பேசுகிறது. மன்னராட்சி , மக்களாட்சி இரண்டிலும் இருக்கும் நிறை மற்றும் குறைகளை சொந்த அனுபவம் போல பேசுகிறார் சோ. தர்மன்.

பாளையப்பட்டு ஆட்சிமுறை
       முகலாய மன்னர்களின் வீழ்ச்சியில் அடிகோலிடப்பட்டதே நாயக்கர் ஆட்சி ஆகும். ஹரிஹரன் எனும் அரசன் தன்னை தன்னாட்சி பெற்றதாக அறிவித்து முதன்முதலில் கி.பி.1336-இல் விஜயநகர அரசை தோற்றுவித்தான். அவனுக்குப் பிறகு நான்கு மரபுகளை சேர்ந்தவர்கள் விஜயநகர பேரரசை ஆட்சி செய்தனர். நாயக்க மன்னர்களின் ஆட்சி தென்னாட்டிலும் விரிவு பெற்றது. கி.பி.1529- இல் தமிழகத்தில் நாயக்கராட்சி தொடங்கியது. இவர்களுள் 13 பேர் தமிழகத்தை ஆண்டனர். அவர்களுள் குறிப்பிட தக்கவராக விளங்குபவர் மதுரையை ஆண்ட விசுவநாத நாயக்கர் ஆவார். இவர் தனது தளவாயான அரியநாதன் என்பவரின் அறிவுரைப்படி பாளையப்பட்டு எனும் ஆட்சிமுறையை அறிமுகப்படுத்தினார். இவ்வாட்சிமுறை ஏற்கனவே காகதீய அரசன் இரண்டாம் பிரதாபருத்ரன் என்பவனால்  கடைபிடிக்கப்பட்டிருப்பினும், தமிழகத்தில் அதுவே முதன்முறை ஆகும். அவ்வாறு பிரிக்கப்பட்ட 72 பாளையங்களுள் ஒன்றாக விளங்குவதே எட்டைய புரம்.

எட்டையபுரம்
         தற்போதைய தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்திருந்தது எட்டயபுரம் பாளையம். இதன் ஆட்சியாளராக இருந்தவர்கள் எட்டப்பன் எனும் அடைமொழியால் அழைக்கப்பட்டனர். அந்த பெயருக்கும் ஒரு கதை கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம், சந்திரகிரி பகுதியில் ஆட்சி செய்து வந்த குமாரமுத்து நாயக்கரின் மகனான நல்லம நாயக்கர், விஜயநகரத்தை ஆண்ட சாம்பு மன்னனை சந்திக்க சென்ற போது, அங்கு வடக்கு வாயிலை காவல்காத்த, யாராலும் வீழ்த்த முடியாத, சோமன் எனும் மல்யுத்த வீரனைக் கொன்று, வென்று வேரெந்த பற்றுக் கோடும் இன்றித் தவித்த, அவனது எட்டு தம்பியரையும் தன் மகன்களாக ஏற்றுக் கொண்டமையின் ’எட்டு அப்பன்’ என்பது காரணப் பெயராயிற்று. பின்னர், அவன்வழி வந்தோர்க்கும் அதுவே பெயராயிற்று. எனவே, எட்டப்பன் என்பது ஒரு தனி மனிதனின் பெயர் அல்ல. அது ஒரு குடிவழியினரின் பெயர். சூல் புதினம் உருளைக்குடி ஊரானது எட்டப்ப வழியினர் ஆட்சி செய்த எட்டையபுர ஆட்சியின் கீழ் எவ்வாறு இருந்தது என்பதை கூறும் விதமாக அமைந்துள்ளது.

பாளையக்காரர்களின் கடமைகள்
        பாளையக்காரர்களின் கடமைகளாக 3 பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. அவை,
       
1.நிதித்துறை
       மக்களிடம் வரி வசூலிக்கும் பொறுப்பு, பாளையக்காரர்களிடம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்கள் வசூலித்த வரியில் மூன்றில் ஒரு பங்கு, மதுரை நாயக்க மன்னனுக்கு அனுப்பப்பட்டது. ஒரு பங்கு படைக்கும், மற்றொரு பங்கு, நிர்வாகச் செலவிற்கும் பயன்பட்டது.
       
2.நீதித்துறை
         பாளையத்தின் எல்லைக்குள் நடக்கும் எந்த ஒரு வழக்கையும் பாளையக்காரர்களே விசாரித்து நீதி வழங்கலாம். இதில், நாயக்க மன்னர்கள் தலையிடுவதில்லை.

3.படை பராமரிப்பு
         பாளையக்காரர்கள் படைகளைப் பராமரித்தனர். அதற்காக வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கை செலவிட்டனர். நாயக்க மன்னர்களுக்கு தேவை ஏற்படும் போது, படையை அளித்து உதவ வேண்டும்.
இவை மூன்றும் பாளையக்காரர்களின் முதன்மையான கடமையாக இருந்தது.

சூல் புதினத்தில் எட்டப்பர்களின் ஆட்சிமுறை
               எட்டப்பர்களின் ஆட்சிக்காலத்தில், பாளையக்காரர்கள் நாயக்க மன்னர்களுக்குக் கீழ் இல்லாமல், தனியாக ஆட்சி செய்து வந்தனர். மக்கள், பாளையக்காரர்களை மகாராஜா என்றே அழைத்துவந்துள்ளனர். மகாராஜாவின் நேரடி ஆட்சியின் கீழ், அனைத்து ஊர்களும் இருந்துள்ளன. ஊரின் அனைத்து பொது நடவடிக்கைகளும் மன்னனின் பார்வைக்கு எடுத்து செல்லப்படுகிறது. எட்டையபுரத்தின் ஆட்சியின் கீழ் இருந்த ஒரு ஊர் சொக்கலிங்கபுரம். தனது சொந்தப்பகையின் காரணமாக சித்தாண்டி என்பவன், கண்மாயை உடைத்து விடுகிறான். இதை அறியாத ஊரார் அதனை தெய்வக்குற்றம் என்றே கருதுகின்றனர். அது உடனடியாக மன்னனின் பார்வைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
      “ அட கடவுளே, பெரிய ஓடையாப் போச்சே கரை, எப்பிடி அடைக்க, மகாராசா என்ன சொல்றாரோ! ”
ஊர் நலனுக்கு வேண்டிய நடவடிக்கைகள் உடனே எடுக்கப்பட்டன.
“ உடைப்புக்கு நேராக கரையின் மேலேறி கண்மாயின் உள் வாகரையை ஆராய்ந்தது அதிகாரிகள் குழு… பக்கத்து ஊர்களில் உங்கள் ஊருக்கு ஏதும் பகை உண்டா என்றும் விசாரித்தார்கள்…  உடைப்பை அடைத்துக் கண்மாய்க்கரையைப் பழையபடிக்கு கொண்டு வருவதற்கு எத்தனை ஆட்களின் உழைப்பு தேவைப்படும் என்று கணக்குப் போட்டார்கள்… நாளையே வேலையை ஆரம்பித்துவிடுங்கள் என்றும், மடைக்குடும்பனையும் இன்னும் சில நபர்களையும் வரச்சொல்லி, மகாராசா கொடுக்கும் தொகையை வாங்கிக்கொள்ளச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார்கள்.”
மக்கள், தங்களுக்கு வேண்டியவற்றைப் பெற எப்போது வேண்டுமானாலும் அரண்மனை அதிகாரிகளையும், மிக அவசியமான நேரங்களில் மன்னனையும் கூடச் சந்திக்கும் வாய்ப்பைப்  பெற்றிருந்தனர்.  மக்களின் தேவையை அறிந்தே மன்னனும் செயல்பட்டான்.
               எட்டையபுர மக்கள், மன்னன் மீது பயம் மட்டுமின்றி மரியாதையையும் அன்பையும் வைத்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. எனவே, மக்கள் இயல்பாகவே மன்னனுக்கு விசுவாசமாக இருந்தனர்.
“ கட்டபொம்முவோட ஆட்க ஒங்க ஊருக்கு வரப்போக இருக்கிறதா அரண்மனைக்குத் துப்பு கெடச்சிருக்கு. அத வெசாரிக்கத் தான் ராஜா எங்கள அனுப்பியிருக்காரு.”“ தப்பு சாமி. நம்ம மகாராஜாவுக்கு துரோகம் பண்ணுவமா? அப்பிடி எங்களுக்குத் தெரியாம யாராவது தொடர்பு வச்சிருந்தா நாங்களே புடிச்சி அரண்மனையில ஒப்படைச்சிர மாட்டமா சாமி.”“ அரண்மனைக்குள்ள ஆயிரம் இருக்கும், எப்பிடி இருந்தாலும் அவரு தான் நமக்கு ராசா. இந்தா இந்த கண்மாய் யாரு கண்மா, இந்தக் கரையில இருக்கிற பனைக யாரு பனை எல்லாமே ராசாவுக்கு சொந்தம். அவரு பனையில கள் எறக்கி, பதநீர் எறக்கி, அவரு வயக்காட்டுல பாடுபட்டு சாப்பிட்டுட்டு அவருக்கு துரோகம் பண்ணக்கூடாதுடா, அது பெரிய பாவம்.”    
செயலால் மட்டுமின்றி, மனதால்கூட மன்னனுக்கு எதிரான எதையும் நினைக்கக் கூடாது என மக்கள் எண்ணியதை இத்தகைய சொற்களால் அறிய முடிகிறது.

எட்டப்பன் மற்றும் ஆங்கிலேயர் உறவு
         இந்தியா ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் இருந்த வேளையில், எட்டப்ப மன்னன், ஆங்கிலேயருடன் நட்பு பாராட்டினான். இது வரலாற்றில் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆயினும் சூல் புதினத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆங்கிலேயர், தன் மக்களை துன்புறுத்த மன்னன் அனுமதித்தாக தெரியவில்லை. அதேபோல், அரண்மனை வீரர்களும் தேவையின்றி மக்களை துன்புறுத்தவில்லை. மாறாக, ஆங்கிலேயர்கள் மூலமாக தன் நாட்டிற்குத் தேவையான பல  நன்மைகளைக் கொண்டு வந்தான்.
“ கள்ளிக்கும் கரிசல் மண்ணுக்கும் கொண்டாட்டம். கள்ளிச் செடிகளை அகற்ற வழி தெரியாமல் சம்சாரிகள் சங்கடப்பட்டார்கள்… வெட்டிய கள்ளிகள் முளைத்துக்கொண்டன. சம்சாரிகள் தினமும் கள்ளியுடன் மல்லுக்கட்டினார்கள்.”“ இவன் லண்டன்லருந்து இங்க வந்து பத்து நாள் தான் ஆகுது, பெரிய ஆராய்ச்சியாளனாம். இந்த கள்ளிச் செடிப் பொதர்க் காடு பூராவும் பெருகிப் போச்சு,… கள்ளிய ஒழிக்க புதுசா மருந்து கண்டு பிடிக்கிறதுக்காக சீமையிலருந்து ராணி இவன இங்க அனுப்பி வச்சிருக்கு.”
மக்களும் மன்னனை முழுவதுமாக நம்பினார்கள்.
“ ஆமா, இது பூராவும் பூச்சிகளோட முட்டைக. இதுகள லண்டண்லருந்து நம்ம நாட்டுக்கு கொண்டாந்திருக்காம்னு அரண்மனைல பேசிகிட்டாக. நம்ம நாட்லயே கள்ளிச்செடி துப்புரவா இருக்காதாம், அம்புட்டும் பட்டு போயிருமாம்.”“ வேற வெள்ளாமைய சோலிய முடிச்சிரக் கூடாது, அதயும் பாக்கணுமில்ல…”“ சே… சே… ராசா அதையெல்லாம் வெசாரிக்காம இருப்பாகளா? அப்பிடி இருக்காது.”
மன்னன், மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டமை இவ்வரிகளில் விளங்குகிறது. தன் நாட்டிற்கும் தன் மக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் எதையும் மன்னன் அனுமதிக்கவில்லை என்பதை மக்களின் சொற்கள் மூலம் அறியலாம். மன்னன் மீதான மரியாதை இப்போதும்கூட தொடர்வதைக் காண முடிகிறது.

மக்கள் நலன்
       விவசாயிகளுக்கு இடையூறாக இருக்கும் கள்ளிச்செடிகளை அழிக்க ஆங்கிலேயர் உதவிகொண்டு நடவடிக்கை எடுத்ததே மக்கள்நலனில் எட்டப்ப மகாராஜா கொண்டிருந்த பற்றைக் காட்டுகிறது. மக்கள் பயன்பாட்டிற்காக வெட்டப்பட்டிருந்த குடிதண்ணீர் குளத்தை யாரும் அசுத்தப்படுத்தக்கூடாது. அவ்வாறு, செய்தால் அதற்கு தண்டனை கடினமானதாக இருக்கும். எனவே, அவ்விடத்தில் எப்போதும் காவலர்கள் இருப்பார்கள். ஆனால், குளத்தினுள் ஒரு கெட்ட ஆவி புகுந்துள்ளதை அறிந்த குஞ்ஞான் அதை பிடிப்பதற்காகச் செல்லும்போது, அங்கு காவலுக்கு நின்ற வீரர்கள் அவனைப் பிடித்து அரசனிடம் கொண்டு சென்றனர். விசாரணையின்போது அவன் கூறிய அனைத்தையும் கட்டுக்கதைகள் என நினைத்த அரசன் அவனை சிறையிலிட்டான்.  

நீதி
       சில சிறப்புமிக்கத் தீர்ப்புகள் மற்றும் தண்டனைகள், இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றுள், சிலப்பதிகாரத்தில் பாண்டியன் கூறியத் தீர்ப்பினை மிக முக்கிய ஒன்றாகக் கொள்ளலாம். இதில்  சிறப்பு என்னவெனில், பாண்டியன் தன் தவறை மறைக்க எண்ணாது அதனை உணர்ந்து, அதற்காகத் தன் உயிரையே விட்டான். அதுபோல, ஒரு மன்னன் தான் செய்தது தவறு என்று உணரும்போது, தனது அதிகாரத்தின் வலிமையினால் அதனை மறைக்க முனையாமல், அத்தவறினை நினைத்து வருந்துதல் என்பது, ஒரு அரசனின் ஒரு உயரியப் பண்பாகும். அவ்வுயரியப் பண்பினை சூல் புதினத்தில் எட்டப்ப மகாராஜா பெற்றிருந்ததாக சோ.தர்மன் குறிப்பிடுகிறார்.
“ மன்னரின் முகக் கலவரம் மாறி சந்தோஷக்களை தெரிந்தது. உத்தரவுகள் பறந்தன. மேலெல்லாம் ரத்தத் திட்டுக்கள் உறைந்திருக்க குஞ்ஞான் நொண்டியபடியே அழைத்துச் செல்லப்பட்டான். அவனைச் சித்ரவதை செய்ததை நினைத்து வருந்தினான்.”
மன்னன் தவறு செய்யாத ஒருவனை சிறையிலிட்டதற்காக வருந்தியதைப் பார்க்க முடிகிறது. தான் செய்தத் தவறைத் திருத்திக் கொள்ளும் வழியையும் அவன் தேடினான்.
         
          மக்கள் உயிர் மட்டுமின்றி மற்ற உயிர்களுக்கு உற்ற துன்பத்திற்கும் நீதி கிடைத்தது எட்டையப்புரத்தில். அரண்மனையில், பசுக்களைப் பராமரிக்கும் பணியில் இருந்த நங்கிரியான், தனக்கு இறைச்சி உண்ணும் ஆசை மேலிடும்போதெல்லாம், தனது பராமரிப்பில் இருந்தப் பசுக்களை ஒரேடியாக அல்லாமல் அவை அணுஅணுவாக கொடுமை அனுபவித்து சாகும்படி செய்து, அதை இயற்கை மரணமாக அனைவரையும் நம்பச் செய்து, அக்கறியைத் தின்றான். இதை அவன் போதையில் உளறியதும், உடனே, மன்னனின் காதுகளில் அது விழுந்தது. அவன் கைகளிரண்டும் கட்டப்பட்டு சிறையிலடைக்கப் பட்டான்.
     “புறங்கை கட்டப்பட்டுத் தனியறையில் அடைபட்டுக் கிடந்தான் நங்கிரியான். விடிந்தால் மரணம் நிச்சயம்…. இதுவரை மன்னரின் முகத்தில் இப்படியொரு கோபத்தைப் பார்த்ததே இல்லை. சிவந்த முகம் மேலும் சிவந்து பழுக்கக் காய்ச்சிய இரும்பைப் போல் கொதித்துக்கொண்டிருந்தது.”
அவனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மன்னன் விரும்பிய போதும், அமைச்சரின் அறிவுரைப்படி, அவனது வேலை மட்டுமே பறிக்கப் பட்டது. இருப்பினும், அவன் பசுக்களைக் கொன்ற விதம் குறித்து சொன்ன வாக்குமூலம், மன்னனைக் கலங்கவைத்தது. அதன் நிலையை எண்ணி வருந்தினான்.

          ஒவ்வொரு ஊர்களிலும் தலைவர்கள் இருந்தனர். இவர்கள் தங்கள் ஊர்களில் ஏதேனும் சிறு சிறு பிரச்சனைகள் வரும்போது, அதனைத் தாங்களே தீர்த்துக் கொண்டனர். ஆயினும், அதன் நடவடிக்கைகள் அனைத்தும் மன்னனிடம் கொண்டுசெல்லப்பட்டன.

முடிவுரை
         
          எட்டையப்புரம் என்றாலே, கட்டபொம்மனைக் காட்டிக்கொடுத்த எட்டப்பன் என்பதுதான் பலரின் நினைவுக்குவரும் ஒன்றாகத் திகழ்கிறது. ஆயினும், அப்பழி அவனைச் சாராது. எட்டையப்புரத்தின் தலைவர்களாக விளங்கிய எட்டப்பர்கள், தங்களின் ஆட்சிக் காலத்தில், மக்கள்நலனைப் பெரிதென எண்ணி வாழ்ந்துள்ளனர். மேலும், மக்கள் மன்னன்மீது கொண்டுள்ள மதிப்பு இன்றுவரை நிலைக்கிறது.  காரணம், அவர்கள் செய்த பல நற்செயல்களே அவர்களது பெயரை இன்றும் தாங்கி நிற்கிறது.

துணைநூற்பட்டியல்
1.சிவசுப்பிரமணியன். ஆ., இனவரைவியலும் தமிழ் நாவலும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, இரண்டாம் பதிப்பு, 2019.

2.செல்லம். வே. தி., தமிழக வரலாறும் பண்பாடும், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2021.

3.தர்மன். சோ., சூல், அடையாளம் பதிப்பகம், திருச்சி, மூன்றாவது மீளச்சு, 2019.

4.நடராசன் தி. சு., நாவல்களின் மகத்துவம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, முதலாம் பதிப்பு, 2022.

5.பரந்தாமனார். அ.கி., மதுரை நாயக்கர் வரலாறு, பாரி நிலையம், சென்னை, இரண்டாம் பதிப்பு, 1966.
5.புதுப்புனல், கலை இலக்கிய மாத இதழ், மலர் 14, இதழ் 6, ஜூன் 2023.

6.ராமசாமி அ., தமிழ்நாட்டு வரலாறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை, நான்காம் பதிப்பு, 2011.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ப. மரிய தேவ நேசம்
Iniyavaikatral_Article_Publishedமுனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் – 603203

நெறியாளர்
முனைவர் தா.இரா. ஹெப்சிபா பியூலா சுகந்தி,
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம்,
காட்டாங்குளத்தூர் – 603203.

 

MUSIC IN KURUNTHOGAI|Dr.M.RANI

குறுந்தொகையில் இசைகள் - முனைவர் மு.இராணி
Abstract
        There are no creatures on this earth who are not fascinated by music. Thus, music and musical instruments are found in the Kuruntogai, one of the eight volumes of Sangam literature. The Panars have mastered these musical instruments. This article aims to highlight the use of instruments such as the yazh, parai, panilam, padalai, muzhavu, kural, and the specialty of vallaipattu and the role of the Panars in the lives of the people of the Sangam period.

KEY WORDS : Yazh -panilam – parai – padalai – muzhavu – kural – Panar – vallaipattu.


குறுந்தொகையில் இசைகள்

ஆய்வுச்சுருக்கம்       
        இசைக்கு மயங்காத உயிர்கள் இப்புவியில் இல்லை. அவ்வகையில் சங்க இலக்கியங்களில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் இசைகளும் இசைகருவிகளும் காணப்படுகின்றன. இவ்விசைக் கருவிகளைத் திறம்படப் பாணர்கள் கையாண்டுள்ளனர். யாழ், பறை, பணிலம், பதலை, முழவு, குளிர், போன்ற கருவிகளின் பயன்பாட்டையும் வள்ளைப்பாட்டின் சிறப்பினையும் சங்க கால மக்களின் வாழ்வில் பாணர்களின் பங்கையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.

கலைச்சொற்கள் : யாழ் -பணிலம் – பறை – பதலை – முழவு – குளிர் –
 பாணர் – வள்ளைப்பாட்டு.

             சங்க இலக்கியம் என்பது பழந்தமிழ் இலக்கியங்களைக் குறிக்கும் ஒரு தொகுப்பாகும். இத்தொகுப்பு பண்டைய தமிழ் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் எடுத்துரைக்கும் ஒரு கருவூலமாகும். இக்கருவூலம் எட்டுத்தொகை பத்துப்பாட்டு என்னும் இருவகையாகப் பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்விலக்கியங்கள் அகத்திணை, புறத்திணை என வகுக்கப்படுகின்றன. அகத்திணை காதலையும் புறத்திணை வீரம், போர், அரசியல் போன்ற பிற செய்திகளையும் எடுத்தியம்புகின்றன. அவ்வகையில் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையில் இசைக்கலை பற்றியும் பாணர்களின் இசை நுட்பம் குறித்தும் ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

எட்டுத்தொகை நூல்கள்       
“நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூறு       
ஒத்த பதிற்றுப்பத்து ஓங்கு பரிபாடல்       
கற்றறிந்தோ ரேத்துங் கலியோடு அகம் புறம்என       
இத்திறத்த எட்டுத்தொகை”1
         
         நல்ல குறுந்தொகை எனச்சிறப்பிக்கப்படும் குறுந்தொகையில் நானூறு பாடல்கள் உள்ளன. குறுந்தொகை பாடலடிகள் நான்கு அடி சிற்றெல்லையும் எட்டு அடி பேரெல்லையும் கொண்டுள்ளன. இவற்றுள் குறிப்பாக 307, 391 ஆகிய இருபாடல்கள் மட்டும் ஒன்பது அடிகளைக் கொண்டுள்ளன. இந்நூலைத் தொகுத்தவர் பூரிக்கோ ஆவார். தொகுப்பித்தவர் பெயர் அறியவில்லை.

குறுந்தொகையின் சிறப்புகள்       
           குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துப் பாடிய பெருந்தேவனாரையும் சேர்த்து 206 புலவர்கள் பாடியுள்ளனர். மேலும் கரிகால் வளவன், குட்டுவன் திண்தேர் பொறையன், பசும்பூண் பாண்டியன், போன்ற பேரரசர்களையும் பாரி, ஓரி, நள்ளி, நன்னன், போன்ற சிற்றரசர்களையும் இவ்விலக்கியம் எடுத்துரைக்கிறது.
“வினையே ஆடவர்க்கு உயிரே”2
 என்னும் அடி ஆண்களின் கடமையை எடுத்துரைக்கிறது. இவ்வடி இந்நூலுக்கு மேலும் பெருமை சேர்க்கிறது.
தொல்காப்பியர் சுட்டும் இசைக்கருவி       
        தமிழில் முதலில் நமக்குக் கிடைத்த இலக்கண நூலாகிய தொல்காப்பியத்தில் இசைகள் பற்றியக் குறிப்புகள் காணப்படுகின்றன.

“தெய்வம் உணாவேமா மரம் புட்பறை
செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
அவ்வகை பிறவும் கருவென மொழிப”3
         
      என்று, தொல்காப்பியர் கருப்பொருளில் பறையையும் யாழையும் சுட்டுகிறார். அவ்வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். பாலை என்னும் ஐந்திணைகளுக்கும் உரிய பறைகளை முறையாக வெறியாட்டுப்பறை, நெல்லறிப்பறை, நாவாய்ப்பறை, ஆறலைப்பறை என்று வகைப்படுத்துவர்.  யாழினால் மீட்கக்கூடிய பண்களைக் குறிஞ்சிப்பண், சாதாரிப்பண், மருதப்பண், செவ்வழிப்பண், பாலைப்பண் என வகைப்படுத்துவர். குறுந்தொகையில் படுமலைப் பண்ணும் விளரிப் பண்ணும் இசைக்கப்படும்.

யாழ்       
       பாணர்கள் யாழினால் படுமலைப் பாலைப்பண்ணை வாசித்தனர். இவ்விசை வானோக்கி உயர்ந்து நல்லிசையாக முழங்கி நல்ல மழைவளம் தருகிறது.  அம்மழையின் செழிப்புக் காரணமாகப் பூத்த முல்லைப் பூக்களின் நறுமணம் எங்கும் வீசி மகிழ்விக்கின்றன என்பதை,
       
“எல்லாம் எவனோ? பதடி வைகல்       
பாணர் படுமலை பண்ணிய எழாலின்       
வானத்து எழும் சுவர் நல்லிசை வீழப்       
பெய்த புலத்துப் பூத்த முல்லைப்       
பசுமுகைத் தாது நாறும் நறுநுதல்       
அரிவை தோள்இணைத் துஞ்சிக்       
கழித்த நாள் இவண் வாழும் நாளே!”4
     என்னும் அடிகள் சுட்டுகின்றன. யாழ் – எழால். பாணர்கள் யாழ் மீட்டும் திறன் மிக்கவர்கள் என்பதும் யாழிசையால் பெற்ற சிறப்பினையும் அறியமுடிகிறது.

பறையும் பணிலமும்
         பணிலம் – சங்கு. அழகிய வளையல்களைத் தன் முன்கைகளில் அணிந்த தலைவி, அழகிய வீரக்கழலையும் செம்மையாகிய இலையைக் கொண்ட வெண்ணிற வேலைக்கொண்ட பாலைநிலத் தலைவனைப் பறை ஒலிக்கச் சங்கு முழங்கத் திருமணம் செய்து கொள்வது நாலூரில் உள்ள கோசரது மொழியைப்போல் உண்மையாகியது. என்பதை,

“பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு
தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய
நாலூர்க் கோசர் நன்மொழி போல
வாயா கின்றே தோழி ஆய்கழற்
சேயிலை வெள்வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே”5
        என்னும் அடிகள் சுட்டுகிறது. இதன்வழி பறையும் சங்கும் மங்கல இசைக் கருவியாகக் காணப்படுவதை அறியமுடிகிறது.

பதலை
       பதலை என்பது சங்ககாலத்தில் பாணர்கள் இசைப்பாட்டுகளுடன் பக்க வாத்தியமாக இசைத்து வந்த ஓர் இசைக்கருவி. ஒரு பக்கத்தில் மட்டும்தோல் போர்க்கப்பட்ட இசைக்கருவி.
பாணர்கள் ஒரு கண் பறையை இசைத்தனர் என்பதை,
  “பதலைப் பாணிப் பரிசிலர் கோமான்”6
என்னும் அடி சுட்டுகின்றன.

முழவு
         
           முழவு -முரசு. பனைமரத்தின் அடியானது முரசைப்போன்று உள்ளது. அப்பனை மரத்தின் கிளையில் கரிய கால்களையுடைய அன்றில் பறவை சிறிய கூடுகட்டி வாழ்கின்றன என்பதை,
         
“முழவு முதலரைய தடவுநிலைப் பெண்ணைக்
கொழுமட லிழைத்த சிறுகோற் குடம்பைக்”7
என்னும் அடிகள் எடுத்துரைக்கின்றன.

குளிர்
         
      குளிர் – மூங்கிலால் செய்த ஓர் இசைக்கருவி. திணைப்புனங்காப்போர் மூங்கிலை வீணைபோல் கட்டித் தம் விரலால் அசைத்து இசை எழுப்புவர் இவ்வாறு இசை எழுப்பும் கருவிக்கு குளிர் என்று பெயர்.
         
“சுடுபுன மருங்கிற் கலித்த வேனற்       
படுகிளி கடியுங் கொடிச்சிகைக் குளிரே
இசையின் இசையா இன்பானித்தே”8
      நன்கு விளைந்த திணைப்புனத்தில் வீழ்கின்ற கிளிகளைத் தலைவி குளிர் என்னும் இசைக்கருவி கொண்டு ஓட்டுவாள் என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன.

வள்ளைப்பாட்டு
         
மகளிர் நெல் முதலிய தானியங்களை உரலில் இட்டு உலக்கையால் குற்றும் போது உண்டாகும் களைப்பினை நீக்கப் பாடப்படும் பாடல் வள்ளைப் பாடலாகும். தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி தன்னுள்ளே சொல்லுவாளாய்ச் சொல்லியதை,
         
“பாவடி உரல பகுவாய் வள்ளை       
ஏதில் மாக்கள் நுவறலும் நுவல்ப       
அழிவ தெவன்கொலிப் பேதையூர்க்கே       
பெரும்பூண் பொறையன் பேஎம்முதிர் கொல்லிக்       
கருங்கட் தெயவம் குடவரை எழுதிய       
நல்லியற் பாவை அன்னஇம்       
மெல்லியற் குறுமகள் பாடினள் குறினே”9
        என்னும் அடிகள் சுட்டுகின்றன. வள்ளைப்பாட்டு களைப்பைப் போக்கும் மருந்தாவதை அறியமுடிகிறது.

பாணர்கள்       
          வில்லையுடைய படைகளைக் கொண்ட விச்சிக்கோ எனப்படும் விச்சியர்தம் தலைவன் வேந்தர்களோடு போர் புரியும் போது பாணர்கள் பாடுவர் என்பதை,
“சிறுவீ ஞாழல் வேர்அளைப பள்ளி       
அலவன் சிறுமனை சிதையப் புணரி       
குணில்வாய் முரசின் இரங்கும் துறைவன்       
நல்கிய நாள்தவச் சிலவே அலரே       
விமல்கெழு தானை விச்சியர் பெருமகன்       
வேந்தரொடு பொருத ஞான்றைப் பாணர்       
புலிநோக்கு உறழ்நிலை கண்ட       
கலிகெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே” 10
என்னும் பாடல் சுட்டுகின்றது.

பாணன் தூது         
          தலைவன் பரத்தை வீட்டில் இருந்து கொண்டு பாணனிடம் ’நான் இங்கு இல்லை என்றுத் தலைவியிடம் கூறு’ என்று,பாணனைத் தூது அனுப்புவான். பாணனும் அவ்வாறு பொய் கூறியதால், பாணன் மீது நம்பிக்கையில்லாத தலைவி, தலைவன் விரைவில் வந்து விடுவான் என்று சொல்லும் பாணனின் கூற்றும் பொய்யாகும் என்பதையும் ஒரு பாணன் பொய் கூறியதால் அனைத்துப் பாணர்களும் பொய் சொல்லும் கள்வர்கள் என்றுரைப்பதை,
         
“குருகுகௌக் குளித்த கெண்டை அயலது       
உருகெழு தாமரை வான்முகை வெரூம்உம்       
கழனியம் படப்பைக் காஞ்சி ஊர!       
ஒருநின் பாணன் பொய்ய னாக       
உள்ள பாணர் எல்லாம்       
கள்வர் போல்வர், நீ அகன்றிசி னோர்க்கோ”11         
         என்னும் பாடல் சுட்டுகின்றது. “ஒருமுறை கொக்குக் தப்பித்து அஞ்சியதால், அது போன்ற தோற்றமுள்ளத் தாமரை மொட்டுக்களைக் கண்டு கெண்டைமீன் அஞ்சுகிறது. ஒருவன் பொய் சொல்லவே ஊரிலுள்ள பாணர் எல்லோரும் பொய்யராகத் தோற்றுவதை, இது உள்ளுறை உவமையாக நின்று விளக்குகிறது.”12 இதன் வழி பாணன் தலைவனுக்காகத் தூது சென்றது புலப்படும்.

முடிவுரை         
           சங்ககால மக்களின் வாழ்வியலில் பாணர்களின் பங்கு இன்றியமையதது. யாழ், பறை, பணிலம், பதலை, முழவு, குளிர், போன்ற இசைக்கருவிகளைப் பாணர்கள் திறம்படக் கையாண்டுள்ளனர் என்பதைத் தெளிவுறுத்துகிறது.  பாணர்களின் யாழிசையால் நாடு சிறக்க நல்ல மழைவளம் பெற்றதை அறியமுடிகிறது. பறையும் சங்கும் மங்கல இசைக்கருவியாகக் காணப்படுவது புலப்படுகிறது. பாணர்கள் இசை மட்டுமல்லாது தலைவனுக்காகத் தலைவியிடம் தூது சென்றதும் புலப்படும்.

சான்றெண் விளக்கம்
1.மது.ச.விமலானந்தம், இலக்கிய வரலாறு, ப.39

2.குறுந்.135

3.தொல். அகத். 20

4.குறுந்.323

5.மேலது.15

6.மேலது.59

7.மேலது.301

8.மேலது.291

9.மேலது.89

10.மேலது.328

11.மேலது.127

12.தமிழண்ணல், குறுந்தொகை, மூலமும் உரையும், ப.168

துணைநூற்பட்டில்
1.விமலானந்தம் மது.ச., இலக்கிய வரலாறு, முல்லை நிலையம், 9, பாரதி நகர் முதல் தெரு. தி.நகர், சென்னை – 17.

2.தொல்காப்பியம் இளம்பூரணனார்,சாரதா பதிப்பகம், சென்னை.

3.தமிழண்ணல் முனைவர், குறுந்தொகை மூலமும் உரையும், கோவிலூர் மடாலயம், வர்த்தமான் பதிப்பகம், 21, இராமகிருஷ்ணா நகர், சென்னை – 17.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் மு.இராணி
உதவிப்பயிற்றுநர்,
தமிழ்த்துறை,
அழகப்பா பல்கலைக்கழகம்,
காரைக்குடி.3

 

Yogic Life shown in Naladiyar|S.Malathi

நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல் - ச. மாலதி
Abstract
           
     Mental health is equally important to human well-being as physical health. In the past, humans used to live a simple and peaceful life, in harmony with nature. But, adapting to the rapid advancements in modern technology is essential for human survival in today’s world. As a result of this, he now leads an anti-natural lifestyle. Hence, the human body and mind are becoming sick. In this scenario, yoga becomes an essential for preserving mental and physical well-being among people. In this era of rampant commercialization, it is crucial for us to grasp the ancient wisdom of our forefathers in order to understand the true essence of yoga and how it can enhance our well-being, both physically and mentally. This article compares the Jain sages’ Naladiyar song to the Atanga yoga standards of Iyama, Niyama, Adhana, Pranayama, Pratyakara, Dharana, Dhyana, and Samadhi as described in Thirumandram, the first Tamil book to comprehensively explore the practise of yoga. Additionally, it has been noted how yoga aspects influenced the ancient Tamil people’s way of life, which was centred on nature and morality. Yoga is not just a physical activity, but a way of life that nurtures the mind, as exemplified by the songs of Naladiyar. In addition, it demonstrates how essential it is for people to conduct themselves following yogic principles in the modern world.

Keywords: yoga, Atanga yoga, Naladiyar, Thirumandiram, Iyama, Niyama, Adhana, Pranayama, Pratyakara, Dharana, Dhyana,  Samadhi.


நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல்

ஆய்வுச் சுருக்கம்
         
        மனிதனின் நலம் என்பது உடல்நலத்தினை மட்டுமன்று; அஃது மனநலத்தினையும் சார்ந்தது. இயற்கையோடு இணைந்து எளிமையாகவும் அமைதியாகவும் வாழ்ந்துகொண்டிருந்த மனிதன், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுத்து வாழவேண்டியத் தேவை ஏற்பட்டுவிட்டது. இது அவன் வாழ்க்கைமுறையை இயற்கையிலிருந்து விலகி ஓடவைத்திருக்கிறது. இவ்வோட்டம் மனிதனின் உடலையும் மனத்தையும் நலம் குன்ற வைத்துள்ளது. இந்நிலையில் மனிதனின் உடலையும் மனத்தையும் நலமுடன் பேணுவதற்கு ஓகம் முக்கியப் பங்குவகிக்கிறது. அதுவே, வணிகமாகிவிட்ட இக்காலக்கட்டத்தில், நம் முன்னோர்கள்  ஓகப் பயிற்சிகளை எவ்வாறு கடைபிடித்து,  தங்கள் உடலையும் மனத்தையும் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொண்டனர் என அறிவது தேவையாகிறது. இக்கட்டுரையில், ஓகக் கலையை முழுமையாகப் பேசும் முதல் தமிழ் நூலான திருமந்திரம் வரையறுத்துள்ள அட்டாங்க யோக நெறிகளான இயமம், நியமம், ஆதனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம் மற்றும் சமாதி போன்றவற்றின் கூறுகள், சமண முனிவர்கள் பாடிய நாலடியாரில் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், பழந்தமிழ் மக்களின்   வாழ்வியல் செயல்பாடுகள் இயற்கைச் சார்ந்தும் அறநெறியோடும் இருந்தமையில் ஓகக் கூறுகளின் பங்கு குறித்தும் ஆராயப்பட்டுள்ளது. ஓகம் என்பது உடலினை வருத்திச் செய்யும் பயிற்சிகள் மட்டுமல்லாமல்  மனத்தையும் பண்படுத்தும்  வாழ்வியலாக இருந்தமையை நாலடியார் பாடல்கள் வழி வெளிக்கொணரப்பட்டுள்ளது. அதோடு, இன்றைய நாளது செயல்பாடுகளில், ஓக நெறிமுறைகளை மக்கள் கடைபிடித்து வாழவேண்டியதின் இன்றியமையாமையும் உணர்த்துவதாக அமைந்துள்ளது.

குறிப்புச் சொற்கள்         
       அட்டாங்க ஓகம், ஆதனம், இயமம், ஓகம், சமாதி, தாரணை, தியானம், திருமந்திரம், நாலடியார்,  நியமம், பிரத்தியாகாரம், பிராணாயாமம்.

முன்னுரை
         
       மனிதனின் உடலையும் மனத்தையும் நலமுடன் வைக்கும் ஓர் ஒப்பற்ற பயிற்சிதான் ஓகக்கலை. குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்து, இன்ப-துன்பங்களைப் பகிர்ந்துகொண்ட மனிதன் இன்றைய வாழ்முறைச் சூழலில் தனித்தனியாக வாழ்கிறான். இச்சூழலில், வாழ்க்கையை மகிழ்ச்சியாக அமைத்துக்கொள்ள கூடுதல் அக்கறையை உடல்நலத்திலும்  மனநலத்திலும் செலுத்தவேண்டியுள்ளது; உடலையும் மனத்தையும் நலமுடன் பேணுவதற்கு ஒவ்வொரு மனிதனும் தமக்குத்தாமே முயற்சியும் பயிற்சியும் செய்யவேண்டியிருக்கிறது. உடலையும் மனத்தையும் ஒருங்கிணைத்து, தனிமனிதனின் வாழ்வியல் செயல்பாடுகளைச் செம்மையாக்குவதில் ஓகக்கலை பெரும்பங்கு வகிக்கிறது. இயற்கையை விட்டு விலகியும் தனித்தீவாகவும் வாழ்ந்துகொண்டிருக்கும் இக்காலத் தலைமுறைக்கு ஓக வாழ்க்கை நெறிகளின் இன்றியமையாமையை உணர்த்துவதோடு, பழந்தமிழரின் வாழ்வியலில் ஓக நெறிகள் பெற்றிருந்த இடத்தை அறிவதும் அதுகுறித்தான நுட்பங்களை மீட்டுருவாக்கம் செய்வதும் தேவையாக இருக்கிறது. அந்தவகையில், பதினெண்கீழ்க்கணக்கில் சமண முனிவர்கள் எழுதிய நாலடியாரை ஆய்வுக்களமாகக் கொண்டு இக்கட்டுரை அமைந்துள்ளது.      
         
     ‘நாலடியார் காட்டும் ஓக வாழ்வியல்’ என்ற தலைப்பில் அமையும் இக்கட்டுரை, உடலை வருத்திச் செய்யும் உடற்பயிற்சி மட்டுமல்லாமல், செம்மையான வாழ்க்கை நெறிமுறைகளைப் பின்பற்றி வாழும் வாழ்க்கைமுறையே ஓகம் என்பதைக் கருதுகோளாகக் கொள்கிறது.  மேலும், உடல்நலத்தோடு மனநலத்தையும் பேணும் ஓக வாழ்க்கை முறையின் தேவையை, இன்றைய தலைமுறைக்கு உணர்த்துவதை  நோக்கமாகக் கொள்கிறது.

ஓகம் – விளக்கம்           
        ‘யூஜ்’ என்ற வடசொல் திரிந்து, யோகா என ஆங்கிலத்திலும் வடமொழியிலும் யோகம் எனத் தமிழிலும் வழங்கப்படுகிறது. அகரமுதலி செந்தமிழ் சொற்களஞ்சியம் அதனை  ‘ஓகம்’  என்று  முழுமையான தமிழில் வழங்கி, அதற்கு உடலியற் கலை எனப் பொருள் வழங்கியுள்ளது. மேலும், ஓகம் என்பதற்கு  மூச்சுடன் கலந்த உடற்பயிற்சி எனப்  தமிழ் – தமிழ் பையடக்க அகராதி பொருள் தருகிறது (செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம், ப.69). பொதுவாக ஓகம் என்றால், ஒன்று மற்றொன்றுடன்  இணைதல், கலத்தல் மற்றும் ஒன்றுதல். உடலைக் கருவியாக்கி அதன்வழியாக உள்ளத்தை உயிரைக் கட்டியாள்கிற எல்லா முயற்சிகளும் ஓகமாகிறது.  அவ்வாறு கட்டியாண்டு ஓகம் செய்தவர்கள் ஓகிகள் என்று ஆறுமுகத் தமிழன் கரு. உயிர்வளர்க்கும் திருமந்திரம் என்ற கட்டுரையில்  விளக்கம் தருகிறார். (இந்து தமிழ்திசை, 20.ஜூன் 2018). இவற்றிலிருந்து உடலும் உயிர் மனம் மூன்றும்  இணக்கமாக இருக்க பழகும் பயிற்சிகள்   ஓகம் என்று புரிந்துகொள்ளலாம்.
         
         பதஞ்சலியின்  ‘யோகசூத்திரம்’ மற்றும்  வியாசரின் ‘பகவத் கீதை’ இரண்டு நூல்களும் ஓகம் குறித்து விரிவாக விளக்கியுள்ளன. தமிழில்  திருமூலரின் ‘திருமந்திரம்’ ஓகம் குறித்த  விளக்கங்களையும்  பயிற்சி முறைகளையும்   விளக்கியுள்ள முதல் நூலாகும்.  ஓகத்தினைத் திருமந்திரம் எட்டு வகையான  நிலைகளாகப் பிரித்து அதை வாழ்வியல் முறையாக வகுத்துக்கொடுத்துள்ளது. அவ்வெண்வகை ஓக நிலைகளை அட்டாங்க யோகம் என்கிறார் திருமூலர்.
                            
இயம நியமமே எண்ணிலா ஆதனம்                       
நயமுறு பிராணாயா மம்பிரத்தி யாகாரம்                       
சயமிகு தாரணை தியானஞ் சமாதி                       
அயமுறும் அட்டாங்க மாவது மாமே.         (திருமந்திரம், பா.552)
      என்ற திருமந்திர சூத்திரம், 1.தீதகற்றல் 2.நன்றாற்றல் 3. இருக்கை நிலைகள் 4. வளிநிலை 5.தொகை நிலை 6.பொறை நிலை 7.நினைதல் 8.நொசிப்பு என்னும் ஓக நிலைகளைக்  கூறுகிறது. இவ்வெட்டு ஓக நிலைகளின் அடிப்படையில்,  நாலடியார் பாடல்களில் பொருத்திப் பழந்தமிழர்களின் ஓக வாழ்வியல் முறைகளைக் காண்கிறது இக்கட்டுரை.
 
இயமம் – தீதகற்றல்         
        தன்னிடம் உள்ள தீயகுணங்களை நீக்கி நல்ல குணங்களை பழகிக்கொள்ளுதல்தான்,  மனிதன் மேன்மையடைவதற்குச் செய்யவேண்டிய முதல் செயலாகும். அதனையே திருமத்திரம், ஓகத்தின் முதல் நிலையாக ‘இயமம்’ என்று வகுத்து, மனிதன், தீய குணங்களை நீக்க கடைபிடிக்கவேண்டிய பத்து தீதகற்றும் குணங்களை   பட்டியலிட்டுள்ளது.
     கொல்லாமை, பொய்யாமை, களவு செய்யாமை, நல்ல குணங்கள், அடக்கமுடைமை, நடுநிலைமை எனும் விருப்பு வெறுப்புகள் இன்மை, பகுத்துண்டல், குற்றமின்மை, கள்ளுண்ணாமை, காமம் இன்மை என்னும் பத்தினையும் உடையவனே இயம யோகம் கைவரப் பெற்றவனாவான் என்பதைத்   திருமந்திரம்  தீதகற்றலுக்கான குணங்களாகச் சுட்டுகிறது. (திருமந்திரம், பா.554)

கொல்லாமை          
   நல்ல ஒழுக்கம் எனப்படுவது யாதென்றால், எந்தவொரு உயிரையும் கொலை செய்யாமல் காக்கும் நெறி(திருக்குறள், பா.324)  என்கிறார் வள்ளுவர். அத்தகைய நெறியைக் கடைப்பிடிக்காமல் உயிர்க் கொலைப் புரிவோர் மிகுந்த துன்பத்தில் உழல்வர்    என்பதும் சான்றோர் கருத்து. இதனை,
                    
இரும்பார்க்கும் காலராய் ஏதிலார்க் காளாய்க்                 
கரும்பார் கழனியுட் சேர்வர் – கரும்பார்க்கும்                 
காட்டுளாய் வாழுஞ் சிவலும் குறும்பூழும்                  
கூட்டுளாய்க் கொண்டுவைப் பார்.                 (நாலடியார், பா.122:3-4)
       என்ற நாலடியார் பாடல், காட்டில் வாழும் பறவைகளான காடை, கவுதாரி போன்ற பறவைகளைப் பிடித்து கூண்டில் அடைத்து வைப்பவர்கள், தொடரும் பிறவிகளில் இரும்பு விலங்குகளால் பூட்டப்பெற்ற அடிமைகளாகத் துன்புறுவர் என்று குறிப்பிடுவதிலிருந்து, உயிர்களைக் கொல்வதால் உண்டாகும் துன்பங்களை எடுத்துரைத்துக் கொல்லாமையை வலியுறுத்துவதினை ஓகத்தின் இயம நிலையாகக் காணமுடிகிறது.
நடுநிலைமை         
பல்வேறு நற்குணங்கள் இருந்தாலும் நடுநிலைமையே சான்றோர்க்கு அணியானபடியால் நாலடியாரும் மனிதர் மேன்மையடைய நடுநிலைமை தேவை என்பதை பின்வருமாறு விளக்குகிறது.
                             
———————-நயமுணராக்                       
கையறியா மாக்கள் இழிப்பும் எடுத்தேத்தும்,                       
வையார் வடித்தநூலார்.                      (நாலடியார், பா.163:3-4)
        என்ற பாடலடிகள், நல்லொழுக்கமில்லா மனிதர்களின் புகழ்ந்துரையும் இழிந்துரையும் பெரியோர் ஒக்கவே நோக்குவர் என்று குறிப்பிட்டுள்ளது. இதிலிருந்து, ஒருசார்பாக இயங்குதல் தீமையையே விளைவாகக் கொடுக்கும் என்பதால்,  மனிதருக்கு விருப்பு வெறுப்பில்லா நடுநிலைமை என்ற அறிவின் செயல்பாடு தேவை என்பது தெளிவுறுகிறது.

அடக்கமுடைமை
         
       அடக்கமுடைமையாவது மனம்‌, மொழி, மெய்கள்‌ தீய நெறிகளிலே செல்லாமல்‌ அடங்கி ஒழுகுதல்‌ ஆகும்‌ என்று டாக்டர். சஞ்சீவி குறிப்பிட்டுள்ளார் (திருக்குறள்‌ அமைப்பும்‌ முறையும்‌, ப.48). இதனை ஓகத்தின் இயமப் பண்பாக திருமந்திரம் வகுத்துள்ளதைப்போல்  நாலடியாரும் சுட்டுகிறது
                            
பெரியார் பெருமை சிறுதமைமை ஒன்றிற்கு                         
உரியார் உரிமை  அடக்கம்.        (நாலடியார், பா.170:1-2)
      என்ற பாடலடிகள், பெரியோர்க்குப் பெருமைத் தருவது பணிவுடைமை என்பது போல வீடுபேற்றினை வேண்டுவர்க்கு அடக்கம் இன்றியமையாதது  என்று கூறுகிறது. எனவே, அடக்கமுடைமை ஓகப்பயிற்சியின் அடிப்படையான இயல்பாகக் சான்றோர் சுட்டுவதை உணரமுடிகிறது.

பகுத்துண்டல்         
       பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் என்ற வள்ளுவரின் வாக்கைச் சமண முனிவர்களும் மக்களுக்கு கற்பித்துள்ளனர். இதனை,
                  
பரவன்மின் பற்றன்மின் பார்துண்மின் யாதும்                
கரவன்மின் கைத்துண்டாம் போழ்து.               (நாலடியார்,  பா. 92:3-4)
       என்ற பாடலடிகள், மேலும் மேலும் பொருள் தேடி அலையாதிருங்கள், தமக்கு மட்டும் என்று பற்றிக்கொண்டிருக்காதீர்கள், பலருக்கும் பகுத்துக் கொடுத்து உண்ணுங்கள் மேலும், கையிலிருப்பதை ஒளிக்காமல்  கொடுத்து உதவுகள் என்று,  அறிவுறுத்துகிறது.  இது, எல்லா உயிர்களையும் தன்னுயிர் போல் நினைத்து பகிர்ந்துண்டு வாழ்தல் மனிதரை இயல்பாகத் தீயவற்றிலிருந்து விலகி நற்செயலைச் செய்விக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.
 
காமம் இன்மை
         
      எய்யப்பட்ட அம்பு, நெருப்பு, சூரியனின் வெப்பம் போன்றவைப் புறவுடலைச் சுடும் ஆனால்  காமம், மனத்தை  மிகுந்த வெப்பமுடையதாக்கிக், கவலையை உண்டாக்கிச் சுடும். (நாலடியார், பா. 89) மேலும், காமத்தீ ஒருவனுக்கு மனத்தில் உண்டாகிவிட்டால், நீரில்  மூழ்கினாலும் குன்றின் மேல் ஏறி ஒளிந்துகொண்டாலும் சுடும் எனக்  மிகுதியான காமத்தின் துன்பத்தை எடுத்துக் கூறுகிறது. (நாலடியார், பா. 90) எனினும் இத்தகைய காமநோய்  அறிவை உரமாக உடைய மனவலிமை மிக்கவரிடம்  மிகாது, அவ்வாறு மிகுந்தாலும்  மற்றவர் அறிய வெளிப்படாமல் உள்ளேயே தணிந்து ஆறிவிடும் என்பதைப் பின்வரும் நாலடியார் பாடல் சுட்டுகிறது.
                            
பரவா, வெளிப்படா, பல்லோர்கண் தங்கா;                       
உரவோர்கண் காமநோய் ஓஓ!- கொடிதே!                       
விரவாருள் நாணுப் படல்அஞ்சி யாதும்                       
உரையாதுஉள் ஆறி விடும்.                         (நாலடியார், பா. 88:2)
 
     இவற்றிலிருந்து, மிகுதியான காமம் பெரும் துன்பம் தருவதால் அதனை, மிகாமல்  காக்கவேண்டும் என்பதை   உணர்ந்துகொள்ளமுடிகிறது.

நல்ல குணங்கள்
          அறநெறிச் செயல்களைத் தெரிந்துகொள்ளுங்கள், உயிரைக் கொல்லும் எமனுக்குப் பயப்படுங்கள், மற்றவர்களின் கடுஞ்சொல்லைப் பொறுத்துக் கொள்ளுங்கள், வஞ்சகச் செயல்களைப் பொறுத்துக் கொள்ளுங்கள். தீச்செயல் செய்பவர் நட்பினை வெறுத்து ஒதுக்குங்கள் மேலும், எப்போதும் பண்பில் பெரியவர்  கூறும் சொற்களைக் கேட்டுப் பின்பற்றுங்கள் (நாலடியார், பா.172) என்று நாலடியார் நற்குணங்களைப் பட்டியலிடுகிறது. அதோடு, இயமத்தில் கடைபிடிக்க வேண்டிய  கள்ளுண்ணாமை, பொய்யாமை, களவு செய்யாமை,  போன்ற தீதகற்றும் செயல்களையும் பின்வரும் பாடலில் சுட்டுகிறது. 
கள்ளார்கள் ளுண்ணார் கடிவ கடிந்தொரீஇ                        
எள்ளிப் பிறரை யிகழ்ந்துரையரா – தள்ளியும்                        
வாயிற் பொய் கூறார்.                        (நாலடியார், பா. 157:2-3)
          திருமந்திரம் கூறும் இயமத்திற்கான நியதிகளை நாலடியார், ஓக நெறி எனத் தனித்து வகுக்காமல், மனிதரின் வாழ்வியல் நெறிகளாக, அவர்களின் நாளது செயல்பாடுகளில் கடைப்பிடிக்க வேண்டியச் செயல்பாடுகளாக அறிவுறுத்தியுள்ளதிலிருந்து, பழந்தமிழரின் வாழ்வியல் முறையாக ஓக நிலைகள் இருந்தமைத் தெளிவாகிறது.

நியமம் – நன்றாற்றல்         
       நற்செயல்களே மனிதனை நல்ல சிந்தனையோடும் மேன்மையுடைய குணங்களோடும் இருக்கப் பழகுகிறது. இதனைத்,  ‘தவஞ்செபஞ் சந்தோடம்’  என்ற திருமந்திர சூத்திரம் தனித்திருந்து இறைவனைத் தியானித்தல், மந்திரங்களை ஒரு மனத்துடன் ஓதுதல், அக மகிழ்வோடிருத்தல், கடவுள் நம்பிக்கை கொள்ளுதல், தானம் செய்தல், விரதம் இருத்தல், மெய்யறிவு பெறுதல், இறைவழிபாடு செய்தல், பரம்பொருளை அகச்சிந்தனைச் செய்தல், தெளிந்த அறிவுடையச் செயல்கள் போன்ற நன்னெறிகளைக் கடைப்பிடித்தல் ஓகத்தின் இரண்டாம் நிலையான  நியமம் எனத் திருமந்திரம் வரையறுக்கிறது.  (திருமந்திரம், பா.557) விரதமும் தவமும் மனிதன்  வாழ்க்கையை ஒழுக்க நெறியில் வாழ்வதற்குத் தேவை என்பதை,
                            
ஊக்கித்தாம் கொண்ட விரதங்கள் உள்ளுடையத்                          
தாக்கருந் துன்பங்கள் தாந்தலை வந்தக்கால்                          
நீக்கி நிறூஉம் உரவோரே நல்லொழுக்கம்                          
காக்கும் திருவத் தவர்.                      (நாலடியார், பா.57)
          என்ற நாலடியார் பாடல்,  தாம் தொடங்கிய விரதங்களில் இடையூறுகள் வந்தால், உறுதியான மனவலிமையுடன்  தடைகளை நீக்கி, விரதங்களைக் காத்து முடிக்க வல்ல நல்லொழுக்கமானவர்களைத் தவம் செய்பவர் என்கிறது. இதில், தவம் மற்றும் விரதம் ஆகியவற்றைக் கடைப்பிடிக்க மனவுறுதி தேவை எனச் சுட்டியிருப்பதன் மூலம்  அக்கால மக்கள்  விரதம், தவம் போன்ற  நியமங்களைக் கடைப்பிடித்து வாழ்ந்தமை  தெரியவருகிறது.

ஆதனம் – இருக்கை
         
          உடலைப் பல்வேறு கோணங்களில் நிறுத்தி, பயிற்சி செய்தல் ஆதனம் அல்லது இருக்கை நிலை எனப்படும். இதில் பத்மாசனம் முதலாகப் பல முக்கிய  இருக்கை நிலைகள் உள்ளன என்பதை,   ‘பங்கய மாதி பரந்தபல் ஆதனம் அங்குள வாம்’ (திருமந்திரம், பா. 540) என்று திருமூலர் கூறியுள்ளார்.  உடலினை உறுதி செய்யும் பயிற்சிகள் குறித்த தகவல்கள்  நாலடியாரில் காணப்படவில்லை எனினும், உறுதியான உடலினைக் கொண்டு பயனுள்ளச் செயல்களைச் செய்யவேண்டும் என்று  பின்வரும் பாடல்வழி குறிப்பிடுகிறது.
                                 
யாக்கையை யாப்புடைத்தாப் பெற்றவர் தாம்பெற்ற                 
யாக்கையா லாய பயன்கொள்க                          (நாலடியார், பா. 28:1-2) 
பிராணாயாமம் – வளிநிலை
         
    இன்றையச் சூழலில், பரவலாக மக்களிடையே ஓகப்பயிற்சியாகக் கற்றுக்கொள்ளப்படுவது பிராணாயாமம் ஆகும். வளிநிலை என்பது உடலுக்குள்  இயங்கும் உயிர் மூச்சுக்காற்றைக் கட்டுக்குள் கொண்டுவருதல்  ஆகும்.  இதனை, திருமூலர் பிராணன் மனத்தொடும் பேராது அடங்கி (திருமந்திரம், பா. 567) என்ற திருமந்திர சூத்திரத்தில் விவரித்திருக்கிறார். 
          நாலடியார், ஓக நிலையான மூச்சுக்காற்றைக் கட்டுப்படுத்தும் பயிற்சி முறைகளை விளக்கவில்லையெனினும் உயிர்க்காற்றின் இயக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது.  ‘தோற்பையுள் நின்று  தொழிலறச் செதூட்டும் கூத்தன்’ (நாலடியார், பா. 26:3-4) என்றப் பாடலடி, தோல் போர்த்திய உடலினுள் நடக்கவேண்டிய இயக்கத்தை நிகழவைப்பது, உயிர் (மூச்சுக்காற்று)  என்று குறிப்பிட்டுள்ளமை,  உயிர் காற்று குறித்த அக்கால மக்களின் நுண்ணறிவைக் காட்டுகிறது.

பிரத்தியாகாரம் – தொகை நிலை
         
        புலன்கள் வழி மனம்  செல்வதை நிறுத்தித் தன்னுள் நடக்கும் நிகழ்வுகளை அறிதல் பிரத்தியாகாரம் என அழைக்கப்படுகிறது. மனம் போகும் வழியில் மனிதன் செயல்படாமல், ஆராய்ந்து நல்வழியில் செயல்படுவதற்குத் தொகை நிலை எனக் கூறப்படும் பிரத்தியாகாரம் உதவிசெய்கிறது.  ‘கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற் கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம் ’( திருமந்திரம், பா. 578)  என்ற திருமந்திர சூத்திரம், புறத்தே ஓடுகின்ற மனத்தை அகத்தில் நிற்குமாறு செய்திட்டால் மனத்தில் சிறிது சிறிதாக இருள் நீங்கி, ஒளிபெறலாம் எனப் பிரத்தியாகாரம் பயிற்சிமுறையைத் தந்துள்ளது.
                            
மெய்வாய்கண் மூக்குச் செவியெனப் பேர்பெற்ற                         
ஐவாய வேட்கை அவாவினைக் – கைவாய்                       
கலங்காமல் காய்த்துய்க்கும் ஆற்றல் உடையான்                       
விலங்காது வீடு பெறும்                              ( நாலடியார், 59:1-4)
 
         என்ற நாலடியார் பாடல், மெய், வாய், கண், மூக்கு, காது  என்னும் ஐந்து புலன்களின்   அதீத ஆசைகளை அடக்கியும், அளவு மீறி  அவற்றின் வழிச் செல்லாமல் பாதுகாத்து நல்ல வழியில் செல்லுமாறு  வாழும் மனவலிமை உடையவர்கள் உயரிய பேரின்ப  புகழ் வாழ்வைப் பெறுவார்கள் என அறிவுறுத்துகிறது. இது,  புலன்வழி செல்லும் மனத்தினை நல்ல வழியில் செலுத்தவேண்டும் என்ற திருமூலர் கூறும் பிரத்தியாகாரத்தின் வரையறையோடு பொருந்துவதனால், அக்கால மக்களிடையே ஓக பழக்கங்கள் இருந்தன என்பதும் அவற்றை மக்கள் பின்பற்றுவதற்கு அறிவுறுத்தப்பட்டதும் தெரியவருகிறது.

தாரணை – பொறைநிலை
         
            ஓக நிலைகளில் ஆறாவது  நிலை, பிரத்தியாகாரத்தின் மூலம் புலன்வழி செல்லாமல், உள்ளே திருப்பிய மனத்தை அலைபாயவிடாமல் அகத்தே நிலைபெறச்செய்தல் பொறைநிலையாகியத் தாரணையாகும். ( திருமந்திரம், பா. 578) 
      
நிலையாமை நோய்மூப்புச் சாக்காடென் றெண்ணித்                       
தலையாயார் தங்கருமம் செய்வார்.               ( நாலடியார், 52:1-2)
       என்ற பாடல், நோய் மூப்பு சாக்காடு  இவை மூன்றும்  நிலையற்றவை என்பதை உணர்ந்த மேலோர், தன்  உயிர் உய்யும் வகையான கடமைகளைச்  செய்வர் என்று பாடியுள்ளது. நிலையற்றவற்றை நீக்கி நிலைபேற்றைப் பெறுவதற்கான தவமுயற்சிகளாகிய தன்கடமைய செய்வார்கள்  என்பது நாலடியார் சிந்தனை. இச்சிந்தனை தேவையற்றதில் மனதைச் செலுத்தாமல் தன் கடமையில் மனதை நிறுத்தல் என்ற பொறைநிலையை உணர்த்துவதாகவுள்ளது.

தியானம் – நினைதல்         
         தாரணையில் குறிப்பிட்டவாறு பொறி புலன்கள் நீங்கி மனம் ஒடுங்கி இறை நினைவில் இருப்பது தியானம். இதனை இரு நிலைகளாகக் கூறுகிறார் திருமூலர், அதாவது, உச்சியில் ஒளி வடிவாக இறைவனைத் தியானிப்பின், அது சக்தி  தியானமாகும்; இறைவனை உச்சியில் அருவமாகத் தியானித்தல் சிவத் தியானமாகும். இதனைப் பின்வரும் திருமந்திரச் சூத்திரம் சுட்டுகிறது. 
                  
வருமாதி யீரெட்டுள் வந்த தியானம்               
பொருவாத புந்தி புலன்போக மேவல்               
உருவாய சத்தி பரத்தியான முன்னுங்               
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே.        (திருமந்திரம், பா. 598 )
        ‘உள்ளத்தான் உள்ளி’ (நாலடியார், பா. 64:3) என மனத்தால் நினைத்தலைப் பற்றிக் கூறும் நாலடியார், தியானம் செய்வது ஒருவரின் வாழ்க்கைச் செயல்பாடுகளில் தலையாய கடமையாக இருக்கவேண்டும்  என்பதை,  ‘தலையே தவமுயன்று வாழ்தல் ஒருவர்க்கு’ (நாலடியார், 365:1) என்று  அறிவுறுத்துவதைப் பார்க்கமுடிகிறது.

சமாதி – நொசிப்பு         
சமாதி என்னும் முடிவுநிலை, இயமம் முதலிய ஏழு ஓக நிலைகளிலும் வழுவாது கடைப்பிடிப்பதால் அடையும் நிலையாகும். இதனை,  ‘சமாதி யமாதியில் தான் செல்லக் கூடும்’ (திருமந்திரம், பா. 618) என்ற திருமந்திர சூத்திரம், இயமம் முதல் தியானம் வரை  பழகியபின் இறையோடு ஒன்றி நிற்கும் நிலையேச் சமாதி என்று வரையறுக்கிறது. 
          எனவே, ஓகப் பயிற்சிகளைத் தொடர்ந்து பழகவேண்டியத் தேவையைப் பின்வரும் நாலடியார் பாடல் இயம்புகிறது. 
                              
விளக்குப் புகஇருள் மாய்ந்தாங் கொருவன்
                            
தவத்தின்முன் நில்லாதாம் பாவம் – விளக்குநெய்
                            
தேய்விடத்துச் சென்றிருள் பாய்ந்தாங்கு நல்வினை
                            
தீர்விடத்து நிற்குமாம் தீது.                                 (நாலடியார், 51:1-4)

          என்ற பாடல், இருள் சூழ்ந்திருக்கும் இடத்தில் ஒரு விளக்கு ஏற்றப்பட்டால், அங்கு இருள் மறைந்து விடுவது போல,  ஒருவர் செய்கின்ற தவம் அவர் முன்பு செய்த பாவங்களை நீக்கும். எந்த விளக்கினால் இருள் மறைந்ததோ, அந்த விளக்கின் நெய் குறைந்து வற்றிவிட்டால், அங்கு இருள் மீண்டும் பரவும். அது போன்று நல்வினைத் தீருமானால், வாழ்வில் தீயவை வந்து நிற்கும் என்று அறிவுறுத்துவதின் மூலம், அத்தீயவற்றைப் போக்கத் தவம் என்பது தொடர்ந்து செய்யக்கூடியது என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.

முடிவுரை
         
    உடற்பயிற்சி மட்டுமே ஓகமல்ல, உள்ளத்தை ஒருமைப்படுத்துவதே ஓகத்தின்  இன்றியமையாத இலக்காகும்.  மனிதன் இவ்விலக்கை அடைவதற்கு   உள்ளமும் உடலும் தூய்மையோடு வைத்திருக்க வேண்டியுள்ளது. மனத்தில் எந்தவிதமான அகத்தடையும் புறத்தடையும்  உண்டாகாமல் இருக்க, இயம நியமங்களை ஓகவாழ்வியலின் தொடக்க நிலைகளாகப் பின்பற்றினர். இவற்றை  ஒழுக்க நெறிகளாக, தம் வாழ்க்கை முறையின் செல்நெறியாகப் பழந்தமிழர் கொண்டிருந்தனர் என்பதை  மேற்கண்ட  நாலடியார்  செய்திகள் வழி அறிந்துகொள்ளமுடிகிறது.
          அதேபோல், மூச்சுக் காற்றின் இயக்கமும்  உடலின் அசையா நிலையும் உள்ளத்தினை ஒருமைப்படுத்த உதவும். இதற்காகத்தான், பிராணாயாமம் முதல் தியானம் வரை பயிற்சிகளாகப் பழகி சமாதி என்ற ஒன்றுதலை எய்தினர். அவற்றை நாலடியார் பயிற்சிமுறைகளாகக் கூறாவிடினும் அவை சான்றோர்களால்  கடைப்பிடிக்கப்பட்டும் மக்களுக்குக்  கடமையாக வலியுறுத்தப்பட்டும் வந்தன என்பதையும் அறியமுடிகிறது. மனிதன் ஆரோக்கியத்துடனும்  ஆனந்தமாகவும் வாழ்வதற்கு உடலும் மனதும் ஒன்றிணைந்து இயங்குவது தேவையாகிறது. அவ்வொருங்கிணைப்பை ஓகப் பயிற்சிகள்  உண்டாக்குகின்றன. மேலும் அவை, நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையாக இருந்தன என்பதையும் உணர்ந்து, நம்மிடமுள்ள தீதகற்றி, நன்றாற்றி உடலையும் மனத்தையும் வலிமையோடும் தூய்மையோடும் பேணிக்காக்கச் சிறந்த வழியாக ஓகப் பயிற்சிகள்   உள்ளன என்பதையும் அறிந்துகொள்ளமுடிகிறது.
துணை நூற்பட்டியல்
1.ஆறுமுகத் தமிழன், கரு. “உயிர்வளர்க்கும் திருமந்திரம் 36”, இந்து தமிழ்திசை, 20.ஜூன்    2018). https://www.hindutamil.in/news/spirituals/130125-36.html. 29.11.2023 அன்று       அனுகப்பட்டது.

2.சண்முகம் பிள்ளை (தொகு), தமிழ் – தமிழ் அகரமுதலி அகராதி. உலகத் தமிழாராய்ச்சி       நிறுவனம், தரமணி, சென்னை, மீள்பதிப்பு- 2015.

3.சிங்காரவேலு முதலியார் ஆ. அபிதான சிந்தாமணி அகராதி. சீதை பதிப்பகம், சென்னை.16  ஆம் பதிப்பு – 2018.

4.சிவராஜன், க. திருமூலரின் அஷ்டாங்க யோகம். அழகு பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு – 2007.

5. ஞானானந்தா. திருமந்திரக் கருத்து.  சிவஞான சுவாமிகள் பேரவை, விக்கிரமசிங்கபுரம்,      மறுபதிப்பு – 29 ஏப்ரல் 2004.

6. பாலசுந்தரம் பிள்ளை, தி.சு. (உரை) . நாலடியார், கழக வெளியீடு, சென்னை – 2007.

7. புலவேறு அரிமதிதென்னகன். நாலடியார் நயவுரை. வசந்தா பிரசுரம், சென்னை – டிசம்பர்   2002.

8. ஸ்ரீசந்திரன், ஜெ. (உரை). நாலடியார், வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை – 2000.

9. ஸ்ரீநிவாசன், தே. ஆ. திருமந்திரக் கட்டுரை மூன்றாம் தந்திரம், திருவாவடுதுறை ஆதீனம்,           திருவாவடுதுறை. முற்பகுதி – தை 1963.

10. ஜம்புநாதன்‌ எம்‌. ஆர்‌. யோகாசனங்கள், ஜம்புநாதன் புஸ்தக சாலை, சென்னை, இரண்டாம் பதிப்பு- 1928.

References
1.Arumugathamizhan, karu. “Uyir Vllarkum Thirumanthiram 36”, Hindu Tamilthisai,20.June 2018.           https://www.hindutamil.in/news/spirituals/130125-36.html. Accessed on 28.11.2023.

2.Shanmugampillai (edt), Tamil – Tamil Agaramudali Dictionary. International Institute of Tamil Studies,   Chennai, Revised edition – 2015.

3.Singaravellu mudaliyar, A. Abithana Chinthamani dictionary.  Seethai Publication, Chennai, 16th edition   – 2018.

4.Sivarajan, K. Thirumularin Ashttanga yogam. Azhagu Publication, Chennai, First edition – 2007.

5.Gnanandha.Thirumanthira karuthu. Sivagnana Swamigal Peravai,  Vikramasinkapuram, Reprint – 29    April 2004.

6.Balasundaram Pillai, T.S. Nalladiyar,  Kazhaga Publication, Chennai – 2007.

7.Pulaveru Arimadithennakan. Nalladiyar Nayavurai. Vasantha Publication, Chennai – 2002.

8.SriChanthiran, J. Nalladiyar, Varthamanan Publication, Chennai – 2000.

9.Srinivasan, T.A. Thirumanthira Katturai 3rd Thanthiram, Thiruvavaduthurai aadiinam,    Thiruvavaduthurai. First part –  1963.

10.Jambunadan M.R. Yogasanangal, Jambunathan bookstore, Chennai, Second edition – 1928.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச. மாலதி,
Iniyavaikatral_Article_Publishedமுனைவர் பட்ட ஆய்வாளர்: பதிவு எண்  2819,

நெறியாளார். முனைவர் ஆ. மணவழகன்,
இணைப் பேராசிரியர்,

சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம்,
         உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.







Sanga Ilakiyathil Neer Melanmai|Dr.S.Dhandapani

சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை - முனைவர் சீனு. தண்டபாணி
Abstract           
       The single line of “not waterless” will include all that emphasizes the need for water management. There is a lot of evidence in the Sangam literature that the ancient Tamil creatures have been praised and protected by water.  This article has taken some of them.

சங்க இலக்கியத்தில் நீர் மேலாண்மை

முன்னுரை
           
         “நீரின்றி அமையாது உலகு” என்ற ஒற்றை வரியில் நீர் மேலாண்மையின் அவசியத்தை வலியுறுத்தும் அத்தனையும் அடங்கிவிடும். பழந்தமிழர் உயிரினும் மேலாக நீர் வளத்தைப் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர் என்பதற்கு ஏராளமான சான்றுகள் சங்க இலக்கியத்தில் உள்ளன.  அவற்றில் சிலவற்றை இக்கட்டுரை  எடுத்தாண்டுள்ளது.
நீர் நிலைகள்         
       ‘நீர்நிலை’ என்ற சொல் சமுத்திரங்கள், கடல்கள், ஆறுகள், நீரோடைகள் சுனைகள், மடுக்கள் போன்ற இயற்கையான நீர் நிலைகளையும் ஏரிகள், குளங்கள், கிணறுகள், அணைகள் போன்ற செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர் நிலைகளையும் குறிக்கும்.  பொதுவாக பண்டைத் தமிழர்கள் அகழி, அருவி, ஆழிக்கிணறு, ஆறு, இலஞ்சி உறைக்கிணறு ஊறுணி, ஊற்று, ஏரி, கட்டுக்கிணறு, கடல், கண்மாய், குட்டம், கயம்,  கூவல், கேணி, சிறை, புணற்குளம்  என்று பலவகையான நீர் நிலைகளைப் பயன்படுத்தி உள்ளனர்.

அகழி – கோட்டையின் புறத்தே அகழ்ந்து அமைக்கப்பட்ட நீர் அரன்
அருவி – மலை முகட்டு தேங்கிய நீர் கொட்டுவதுநீர்நிலைச் சேகரிப்பும் பாதுகாப்பும்
ஆழிக்கிணறு – கடல் அருகே தோண்டப்பட்ட கிணறு
ஆறு – பெருகி ஓடும் நதி
இலஞ்சி – நீர் நிறைந்த ஆழமான பள்ளம்
உறைக்கிணறு – மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வளையம் இட்டது
ஊருணி – மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை
ஊற்று – அடியிலிருந்து ஊரும் நீர்
ஏரி – வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம்
கட்டுக்கிணறு – சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய     கிணறு
கண்மாய் – பாண்டி மண்டலத்தில் வழங்கப்படும் ஏரியின் பெயர்
குட்டம் –  ஆழமான நீர்நிலை
கயம் –  குளம்
கூவல்-  உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
கேணி – அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு
சிறை – தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
புணர்குளம் – நீர் வரத்து மடையின்றி மழைநீரை கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை
சங்க இலக்கியத்தில் நீர் நிலைகள்
         
       சங்க இலக்கியத்தில் பல வகையான இயற்கை மற்றும் செயற்கை நீர்நிலைகள் சூட்டப்பட்டுள்ளன சான்றாக அயிரி (அகம் 177:11) ஆன்பொருநை (புறம் 36:4) காவிரி (அகம் 123:11) குமரி (புறம் 6:2) என்ற நிலைகளில் இயற்கை நீர் நிலைகளையும் குளம், கிணறு, கிடங்கு போன்ற செயற்கை நீர் நிலைகளையும் உருவாக்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
“நெடுங் கிணற்று வல்லுற்று உவரிதோண்டி” (பெரும் 97– 98) 
“திரைப்படக் குழிந்த கல்கழ்  கிடங்கு” ( மலை 90-19)    
நீர்நிலைச் சேகரிப்பும் பாதுகாப்பும்
           
         பண்டைத் தமிழர் நீர் நிலைகளை உருவாக்கும் போது தகுந்த இடம் உணர்ந்து செய்ததற்கான குறிப்புகளும் உள்ளன. நீர்ப்பாசனம், குளித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காகப் பெரிய அளவில் குளங்கள் வெட்டப்பட்டிருந்தன.
 
“குளம் தொட்டு வளம் பெருக்கி” பட்டி- 284
         
        சங்ககால மக்கள் கேணி எனப்படும் சிறுகுளம் போன்ற கிணற்றை ஊருக்குப் பொதுவான இடத்தில் வெட்டி அந்நீரைப் பருகியுள்ளனர்.
 
“ஊர்உண் கேணி உண்துறைத் தொக்க” (குறுந்: 399-1) 
“ஊர்உன் கேணி பகட்டு இலைப்பாசி” (அகம்:392-3) 
“மூதூதர் வாயில் பணிக்கயம் மண்ணி “ (புறம்-9:1)
           
    என்று புறநானூறு குறிப்பிட்டுள்ளது. மேலும் இவை மழை நீரை தேக்கிக் கொள்ளும் நீர் தேக்கிக்கிகளாகப் பயன்பட்டுள்ளன.
 
“பூவற் படுவில் கூவல் தோண்டிய செங்கட் சின்னீர்” (புறம் 319: 1.2 ) 
“கனிச்சியில் குழித்த கூவல் நண்ணி 
ஆன்வழிப்படுநர் தோண்டிய பத்தல்” (நற்றிணை 240: 6-8 )           
      நீரூற்றுகள் இருக்கக்கூடிய இடமறிந்து நீர் நிலைகளை உருவாக்கியுள்ளனர்.
 இயற்கையாகக் கிடைக்கும் நீரைப் பயன்படுத்தியும் எதிர்கால தலைமுறைக்கும்  விட்டுச் செல்ல வேண்டும் என்பதற்காகவும் பண்டைத் தமிழர் மடை, கால்வாய், குளம், கேணி உள்ளிட்டவை மூலம் நீரினைச் சேமித்து வைத்துள்ளனர்.
 
“வையை உடைந்த மடையடைத்த கண்ணும் 
பின்னும் மலிரும் பிசிர் போல வின்னும்” (பரி: 6) 
“ஊர்க்காள் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்” (கலி: 35-5)  
“ஆறுகுளம் நிறைகுற போல அல்குலும்” (அகம்: 11)
அணை அமைத்தல்

          கற்களைக் கொண்டு தடுப்பணைக் கட்டி, ஆற்றில் பெருக்கெடுத்து வரும் வெள்ளத்தைத் தடுத்து பயன்படுத்தி உள்ளனர்.
 
“வருவிசை புனல் கற்சிறை போல் ஒருவன்

தாங்கிய பெருமை யாலும்”  (தொல்:பொருள்.65 : 725-726)
         
      மழையினால் கிடைக்கும் நீரினையும் அருவிகளிலிருந்து கிடைக்கும் நீரினையும் சுனையில் சேமித்துப் பின் அகன்ற வாய்க்கால் மூலம் நீர்ப்பாய்ச்சி பயன்படுத்தி உள்ளதை நற்றிணை குறிப்பிட்டுள்ளது.
 
அகழ்வாய் பஞ்சுனை பயிர் கால் யாப்ப (நற்.5:2)
“ஊர்க்காள் நிவந்த பொதும்பருள் நீர்க்கால்” (கலி. 35:5)
நீர்நிலைகளைப்  பாதுகாத்தல்
         
           நீர்நிலைகளின் கரைகள் அழியாமல் இருக்க கரைகளுக்கு வலுவை தருகின்ற வேழக்கரும்பு என்றும் கொளுக்கச்சி அல்லது கொறுக்கந்தட்டு என்று கூறப்படும் புல்லினை வளர்த்துள்ளனர். இதன் தண்டில் துளை இருந்தமையால் உழவர் மகளிர் அஞ்சனம் இட்டு வைப்பர். மூங்கிலைப் போல் இவை வீடு கட்டி வரிச்சற் பிடித்ததற்குப் பயன்படும். நீராடுபவர்க்கு இது புணையாய் அமைக்கப்படுவது உண்டு என்பதை ஐங்குறுநூற்றில் காணமுடிகிறது.

“பரியுடை நன்மான் பொங்குவளை அன்ன 
வடகரை வேழம்” (ஐங்குறு: 13 :1-2 )
   குலத்தின் கரைகளைப் பாதுகாக்க குளக்கரைகளில் மரங்களை வளர்த்துள்ளனர்.
“நாள்இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து 
இடிகரைப் பெருமரம் போல” (குறும் : 368:6-7 )
“கடும்புனல் அடைகரை நெடுங்கயத்து”  (குறுந்- 171: 2 )
        நீர்ப்பெருக்கு கரையோர மண்ணை அரித்துக் கரையை உடைப்பதை தவிர்க்கத் தென்கரை அமைத்தனர். இதனால் கரையோர மரங்களின் வீழ்ச்சியும் தடுக்கப்பட்டது.
“நாளிடைப் படாஅ நளிநீர் நீத்தம் 
திண்கரைப் பெருமரம் போல” (குறுந் -368:.7-8 )
நீர்த்தேக்கப்  பராமரிப்பு முறை         
       நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்து ஒழுங்குபடுத்தும் பணிகளில் காவலர்கள் இருந்தனர் என்பதைச் சங்கப்பாடல்கள் தெளிவுபடுத்தியுள்ளன.  நீர் வரத்து அதிகமானாலோ அல்லது கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக காவலர்கள் அதனை ஊர் மக்களுக்குத் தெரியப்படுத்திச் சரிப்படுத்தும் விதமாக ஊர் மக்களோடு இணைந்து மணல் பைகளைக் கொண்டு கரையின் உயரத்தை உயர்த்தி நீரைச் சேமித்து வைத்துள்ளனர்.

“திரைச்சிறை உடைத்தன்று கரைச்சிறை அறைக எனும் 
உரைச்சிறை பறை எழெளஉர் ஒலித்தன்று” (பரி:6- 22-25 ) 
“பெருங்குளக் காவலன் போல” (அகம்: 252) 
நீர் சுழற்சி பற்றிய புரிதல்         
        மேகம் கடல் நீரை முகர்ந்து மழையாகப் பொழிகிறது. மலையில்  விழும் மழை நீர் ஆறாகப் பயணித்துக் கடலைச் சேர்கிறது. நிலப்பரப்பில் விழும் மழைநீர் நிலத்தடி நீராகிறது. நீர்நிலைகளில் விழும் மழைநீர் மீண்டும் ஆவியாகி மழையாகிறது என்று நீர் சுழற்சி பற்றிய புரிதலைப் பட்டினப்பாலை தெளிவுபடுத்திய விதம் சிறப்பிற்குரியது.

“வான்முகுந்த நீர் மழைபொழியவும் 
மலைப்பொழிந்த நீர் கடற்பரப்பவும்  
மாரி பெய்யும் பருவம் போல  
நீரினின்று நிலத்து ஏற்றவும்  
நிலத்தினின்று நீர் பரப்பவும் (பட்டி :126 130)
         நீர்நிலைகள் மழை நீர் போக்கு ஆகியவற்றை உள்ளடக்கிய நீர் நிலைகளில் நீர் சுழற்சி ஏற்படுகிறது.

நீரின் பயன்பாடுகள்
           
      குளங்கள் குடிநீருக்காக மட்டுமன்றி மகளிர் நீராடுவதற்கும் பயன்பட்டுள்ளன. தண்ணீரைப் போதுமான அளவு திறந்து விட்டு பாசனத் தொழில் செய்யும் நுட்பங்களுடன் குளங்களை அமைத்து பயன்படுத்தியுள்ளனர். மழைக் காலங்களில் வரும் வெள்ள நீரை குளங்களில் சென்று சேரும்படி கால்வாய்கள் அமைத்துள்ளதை பொருநராற்றுப்படையில் காணப்படுகிறது.

“துறைதோறும் பொறை உயிர்த்து ஒழுகி 
நிரைத்தலைக் குரைப்புனல் வரைப்பு அகம்புகு தொறும்” (பொரு: 238-239)

          ஆழமான நீரை உடைய குட்டத்தில் கரையிலிருந்து குதித்து குளித்துள்ளனர்.
 கரையவர் மருள திரையகம் பிதிர
 
நெடுநீர்க் குட்டத்து துடுமெனப் பாய்ந்து” (புறம் 243: 8-9 ) 
“கூம்பு நிலை அன்னமுகைய ஆம்பற்
தூங்கு நீர்க்குட்டத்து துடுமென வீழும்” ( நற்றிணை- 280:2-3)
           
உழவர்கள் நெற்பயிரை உடைய தமது வயல்களில் காஞ்சி மரத்தின் சிறு சிறு துண்டுகளை நட்டுக் கருப்பங்கழிகளை குறுக்கு நெடுக்காக வைத்து அடைத்து அணையாக ஆக்கி அப்பளங்களில் நீரைத் தேக்கி வயலுக்குப் பாய்ச்சிய செய்தியை அகநானூறு குறிப்பிட்டுள்ளது.

“….கலிமகி உழவர் 
காஞ்சிஅம் குநற்தறி குத்தி தீம்சுவை
மீது அழி கடுநீர் நோக்கி” (அகம்- 346: 5-10 )
நீரைத் தெரிவித்த முறை
         
      கலங்கிய நீரைத் தெளிவிக்கத் தேற்றாங்கொட்டை விதையைப்  பயன்படுத்திய செய்தியைக் கலித்தொகையில் காணமுடிகிறது.

“கலம் சிதை இல்லத்துக் காழ்கொண்டு தேற்றக்
கலங்கிய நீர் போல் தெளிந்து நலம் பெற்றாள்” (கலித்தொகை- 142: 64-65 )
         
      தேற்றா மரத்தின் நசுக்கப்பட்ட விதை கலங்கிய நீரில் காணப்படும் அழுக்குகளைச் சுத்தப்படுத்தி அழுக்குகள் கீழே தங்கி விடுகின்ற நிலையில் மேலே நீர் சுத்தமாகவும் தெளிவாகவும் இருக்கும் என்று சிந்தித்து நீரைச் சுத்தப்படுத்திப் பயன்படுத்திய சங்கத் தமிழரின் நீர் மேலாண்மைத் திறன் அறிவியல் சிந்தனைக்கும் அப்பாற்பட்டது. பண்டைத் தமிழர் குடிநீரைச் சேமித்து  வைக்க கன்னல், செப்பு போன்ற கலன்களைப் பயன்படுத்தி உள்ளனர்.
 
“அறசிர வெய்ய வெப்பத் தண்ணீர்
சேமச் செப்பிற் பெறீஇயரோ” (குறுந்தொகை:277 )
சேமச்செப்பு என்பதற்கு நீரை சேமித்து வைக்கும் பாத்திரம் என்று பொருள்.

முடிவுரை
         
         மேற்காணும் சங்க இலக்கியப் பாடல்களின்  வழியாக சங்கக் காலத்து தமிழரின் நீர் மேலாண்மைத் திறத்தை எண்ணுகையில்  அறிவியலுக்கும் அப்பாற்பட்ட நுட்பத் திறனை சங்ககாலத் தமிழர்கள் பெற்றிருந்திருந்தார்கள் என்பது கண்கூடு.

பார்வை நூல்கள்:
   சங்க இலக்கியம் மூலமும் உரையும்
வர்த்தமானன் பதிப்பகம் சென்னை -17
முதற்பதிப்பு : ஏப்ரல் 2002
உரையாசிரியர்: முனைவர் தமிழண்ணல், பதிப்பாசிரியர்கள்:
முனைவர் தமிழண்ணல்,
முனைவர் சுப. அண்ணாமலை

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் சீனு. தண்டபாணி,
இணைப்பேராசிரியர் &  தமிழ்த்துறைத் தலைவர்,

சாரதா கங்காதரன் கல்லூரி,
வேல்ராம்பட்டு, புதுச்சேரி.

 

The Artistic Elegance and Creative Technique of PAVENDAR BHARATHIDASAN’s works in POR  MARAVAN|Dr.S.Shanmugadevi

பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக் கலை நயமும் படைப்பாக்க உத்தியும்
Abstract
           The origins of Tamil literature are deeply rooted in various social, economic, cultural, and political contexts. Ancient Tamil literary works were crafted strictly within the framework of traditional grammar and conventions. In contrast, contemporary literary creations often break away from these established norms, aiming instead to narrow the gap between the writer and the reader. In this context, the modern epic Por Maravan (The Warrior of War), composed by the renowned poet Paavendhar (Bharathidasan), serves as the primary focus of this study. This paper examines how Por Maravan reflects a shift from classical literary traditions to a more accessible, reader-centric narrative style, while still engaging with themes relevant to the Tamil cultural and political milieu.

Key words
           
           Pavendar in pormaravan – Literary Tradition- Reader Engagement – Socio political context- Cultural context – Phychological Emotions- Modern Tamil Epic.


பாவேந்தர் பாரதிதாசனின் படைப்புக் கலை நயமும் படைப்பாக்க உத்தியும்

(போர் மறவனை முன்னிறுத்தி)


கட்டுரைச் சுருக்கம்         
தமிழ் இலக்கியத்தின் தோற்றம் என்பது பல்வேறு சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சூழல்களில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பண்டைய தமிழ் இலக்கிய படைப்புகள் யாவும் மரபு இலக்கணக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இம்மரபமைப்பிலிருந்து விலகி இதற்கு நேர்மாறாக  சமகால   இலக்கியப் படைப்புகள் எழுத்தாளருக்கும் வாசகருக்குமான இடைவெளியைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளன. அவ்வகையில் பாவேந்தர் பாரதிதாசன் அவர்களால் இயற்றப்பட்ட போர் மறவன் இவ்வாய்வுக் கட்டுரையின் களமாக அமைந்துள்ளது.

திறவுச் சொற்கள்
         
இலக்கிய மரபு- வாசகர் தொடர்பு- சமூக அரசியல் சூழ்நிலை- பண்பாட்டுச் சூழல் -மன உணர்வுகள் -நவீன தமிழ்க் காவியம்.
தோற்றுவாய்
              தமிழ் இலக்கிய மரபின் முக்கிய திருப்புமுனையை உருவாக்கும் நவீன தமிழ்க் காவியமாக போர் மறவன் உள்ளது.இச்சிறுகாவியம் தமிழ் கலாச்சார மற்றும் அரசியல் சூழலுடன் தொடர்புடைய கருப்பொருள்களால் படைக்கப்பட்டுள்ளது. பாரம்பரிய இலக்கிய மரபுகளிலிருந்து மிகவும் அணுகக் கூடிய வாசகர்களை மையமாகக் கொண்ட கதைப் பாணிக்கு எவ்வாறு மாறுகிறது என்பதை இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

பாவேந்தரின் போர் மறவன்       
          கவிதை அல்லது பாடல் வடிவில் உள்ள நாடகப் பங்கில் அமைந்த 54 பாடல் வரிகள் கொண்ட சிறு காப்பியம் போர் மறவன். இது பாரதிதாசனின் கதைப் பாடல்கள் தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. காப்பியக் கதையைத் தொடங்குவதற்கு  முன் திராவிட நாட்டுப் பண் 32 வரிகளில் பாடப்பட்டுள்ளது. பாண்டிமா நாடு குறித்தும் பாண்டிமா நாட்டு போர் மறவன் போருக்கு செல்வதையும், போர் மறவனை பிரிந்த தலைவி அவன் வருகைக்காகக் காத்திருப்பதையும் கதைக்களமாக அமைத்து கவிதையியலோடு படைத்திருக்கின்றார்.

படைப்புப் பொருண்மை       
         இலக்கியப் படைப்பாக்கம் என்பது உளவியல் தொடர்புடையதாகும். படைப்பின் உளவியலுக்கும் படைப்பாக்க உளவியலுக்கும் பொருத்தப்பாடு இருக்கின்றது. ஒரு படைப்பினைப் படைப்பதற்குப் படைப்பாளிக்கு ஏற்படும் உந்துசக்தி, படைப்புக் குறித்த பொருண்மை ஆழ்மன வெளியில் உருவாகி பின்பு படைப்பாக வெளிவருகின்றது. போர் மறவனின் படைப்புப்  பொருண்மையாகத்  திராவிட இனப்பற்று அமைகின்றது. திராவிட இனப்பற்றின் ஊடாக போர் மறவனின் கடமையையும் அவனின் வாழ்வியலையும் பாடுவதே படைப்பின் நோக்கமாகும். அதே நேரத்தில் தமிழ் இலக்கிய மரபின் மையமான அகம் சார்ந்த செய்திகளை இக்காப்பிய இன்பத்திற்காகக் கட்டமைத்திருக்கின்றார்.

திராவிட நாடு என்ற கருத்தாக்கம்
         
    திராவிடம் என்ற சொல்லுக்கு 150 ஆண்டுகால வரலாறு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1944-1955 ஆம் ஆண்டுகளில் “திராவிட நாடு திராவிடருக்கே” என்ற கோரிக்கை வலுத்திருந்தது. இந்தக் காலகட்டத்தில் தான் பாரதிதாசனின் கவிதை தொகுதி 2 வெளிவருகின்றது. திராவிட நாடு கோரிக்கைக்கு அடிப்படையான காரணங்களாகத்  தமிழ் ,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு என்ற மொழிகள் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருப்பதும் , ஏனைய இந்திய மொழிகளில் இருந்து வேறுபட்டு இருப்பதும் ஆய்வுகள் மூலம் அறியப்பட்டது. இவை அனைத்தும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை. மொழி, கலாச்சாரம் , பண்பாட்டில் தென்னிந்திய மாநிலங்களிடையே பெரிய அளவில் ஒற்றுமை இருந்தது. தொடக்க காலத்தில் தமிழகத்திலிருந்து மட்டும்தான் தனி திராவிட நாடு கோரிக்கை எழுந்தது. ‘திராவிட ‘என்னும்  சொல் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழியொன்றைத் தாய் மொழியாகக் கொண்ட மக்களைக் குறிக்கும்.
          திராவிடர்கள் செறிந்து வாழும் பகுதி தென்னிந்தியாவில் விந்திய மலைக்கு தெற்கே உள்ள பகுதியாகும். இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளும் திராவிடர்களின் தாயகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. தமிழ் இலக்கியங்களில் குறிப்பிடப்படும் ‘குமரிக்கண்டம்’ என்னும் பகுதி திராவிடர் தோன்றிய இடமாகக் கருதப்படுகின்றது. இதனைத் திராவிட நாட்டுப் பண் பகுதியில் பாவேந்தர் குறிப்பிடுகின்றார்.

“சூழும் தென்கடல் ஆடும் குமரி
தொடரும் வடபால் அடல்சேர் வங்கம்
ஆளும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறலும் செறிந்த நாடு
பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு
துளு மலையாளம் கண்டை நிகர் கன்னடமெனும் மொழிகள்
கழகக் கலைகள் சிறந்த நாடு”
         
என்ற வரிகளில் பாவேந்தரின் திராவிட இனப்பற்று புலனாகிறது.

தமிழகப் போர் மறவர்கள்         
          நாட்டின் பாதுகாப்பிற்குப் போர்ப் படைபலம் இன்றியமையாததாகும். அஞ்சாமை என்பது போர்ப் படைகளின் முதற்குணம். வீரமும் மானமும் வழி வழியாக வந்த போரிடும் திறனும் படைகளுக்குரிய பண்புகள் ஆகும். தமிழகப் போர் மறவர்கள் என்பவர்கள் ஆங்கிலேயர்களைக் கடுமையாக எதிர்த்து போர் புரிந்தவர்கள். அவர்கள் தங்கள் ஆட்சி செய்த பகுதிகளை இழந்து நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்தவர்கள். போர்‌ மறவர்கள் அதிகமாக வாழ்ந்த பாண்டிமா நாடு என்பது இன்றைய தமிழக மாவட்டங்களான மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி பகுதிகளாகும். இதனை,

“அள்ளும் சுவைசேர் பாட்டும் கூத்தும்       
அறிவின் விளைவும்
ஆர்த்திடு நாடு வெள்ளப் புனலும் ஊழித் தீயும்
வேகச் சீறும் மறவர்கள் நாடு
இங்கு திராவிடர் வாழ்க மிகவே
இன்பம் சூழ்ந்தது எங்கள் நாடு”
         
என்று, போர் வந்தால் உயிரின் பொருட்டு அஞ்சாமல் போர் செய்யத் துணியும் வீரர்கள் போர் மறவர்கள் என்பதை “வேகச் சீரும் மறவர்கள் நாடு” எனக் குறிப்பிடுகின்றார். போர் மறவர்கள் பகைவர் மேல் போர் புரிய விருப்பம்  உடையவர்கள் என்பதைப்,

புறநானூறு – “போரெனிற் புகழும்    புனைகழன் மறவர் “
திருக்குறள் -“உறின் உயிர் அஞ்சா மறவர்”
என்றும் சிறப்பிக்கின்றன.

படைப்பாக்கக் கலை நயம்       
               இலக்கியத்தின் வடிவமும் பொருளும் சமுதாயத்தின் தேவைக்கேற்ப மாறுபட்டு அமைகின்றன. கவிதை என்பது அழகியல் உணர்ச்சி உடைய ஓசை சந்துத்துடன் அல்லது ஒத்திசை பண்பு சொற்களால் சேர்க்கப்பட்ட இலக்கிய கலை வடிவமாகும். மேலும் மொழியில் உள்ள ஒலியின் அழகியல் ஒலிக் குறியீடுகள் ஆகியவற்றுடன் இடம், இயல்பான பொருள் போன்றவற்றை வெளிப்படையாகக் காட்டுவதாக உள்ளது. உணர்ச்சி, கற்பனை, கருத்துக்களை வெளிப்படுத்தவும் தூண்டவும் கவிதை உதவுகின்றது. போர் மறவனில்  தலைவன் போர் செய்திக் கேட்டு உறுதியாகப் போரிட சென்று விடுவான் என்ற நினைத்த தலைவி, தலைவனைப் பிரிய மனமில்லாமல் தவிக்கின்றாள். தலைவனுடன் பிரியாது இருக்கும் காலத்தில் அவளுக்கு இன்பத்தைத் தந்த நிலா, நீர்வீழ்ச்சி, தென்றல், கிளிப்பேச்சு இவை எல்லாம் தலைவனைப் பிரிகையில் அவளுக்கு வருத்தத்தைத் தருவதாக அமைகின்றன. தலைவியின் மனநிலையை,

“என்றன் மலருடன் இறுக அணைக்கும்அக்
குன்று நேர் தோலையும், கொடுத்த இன்பத்தையும்
உளம் மறக்காதே ஒரு நொடியேனும் !
எனை அவன் பிரிந்ததை எவ்வாறு பொறுப்பேன் !
வான நிலவும், வன்புனல்,தென்றலும் ஊனையும் உயிரையும் உருக்கின.
இந்தக் கிளிப்பேச்சு எனில் கிழித்தது காதையே !
புளித்தது பாலும் ! பூ நெடி நாற்றம்.
         
             என்று தலைவியின் மன வலியும், பிரிவின் வேதனையும் ,காதலின் தேக்கமும் நயமான உவமை உருவங்களுடன் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. தலைவியின் மன உணர்வுகள் -“மலருடல் இறுக அணைத்தல் “;”குன்று நேர் தோல்” “கிழித்தது காதை”; “புளித்தது பாலும்”, “பூ நெடி நாற்றம்” என்ற உவமை, உருவகங்கள் மூலம் உணர்வுகளின் உடலியலானது படைப்பின் கலை நயத்துடன் உச்சநிலையைத் தொடுகின்றன. படைப்பாளனின் உணர்ச்சி அனுபவமும் வாசகனின் உணர்ச்சி அனுபவமும் கிட்டத்தட்ட ஒன்றாகுமாறு செய்யவல்லதே சிறந்த கவிதையாகும்.
 கவிஞரின் உணர்ச்சி சொற்களாகவும், சொற்பொருளாகவும், ஒலி நயமாகவும் வடிவம் பெறுகின்றது.  உரையாடல் பாங்குடைய கவிதைகள் படிப்போரை எளிதில் சென்றடையும் ஆற்றல் உடையவை .அந்த வகையில் தலைவனைப் பிரிய மனமில்லாமல் தலைவியானவள் கண்ணீர்த் துளிகளோடு “வாழையடி வாழையென வந்த என் மாண்பு வாழிய” என வாழ்த்தி தலைவனைப் போருக்குச் செல்ல விடை தருகின்றாள். ஒலிநயம், சொல்லாட்சி எதுகை மோனைகளுடன் சந்தங்களை பெற்றுள்ள போர் மறவன்  கருத்துக்கும் உணர்வுக்கும் ஏற்றவாறு வரியமைப்பைப் பெற்றுள்ளது. கவிதையின் உணர்ச்சிக் கூர்மை, வடித்துக் காய்ச்சிய சிக்கனச் சொற்கள் வண்ணக் கலவையாக மிளிர்கின்றன.

படைப்பாக்க உத்தி
         சமகால கவிதைகளில் உவமை, உருவகம், படிமம், குறியீடு, அங்கதம், முரண், சிலேடை, இருண்மை ஆகிய உத்தி முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. படைப்பிற்குத் தலைப்பிடுதல் என்பது மிக முக்கியமான உத்தி முறைகள் ஒன்று. ஒரு படைப்பு வெற்றி பெற வேண்டுமாயின் அதன் தலைப்புத் தெளிவாகவும் சுவைபடவும் பொருள்படவும் அமைந்திருத்தல் வேண்டும்.  பாவேந்தரின் போர் மறவனின் தலைப்பும் அவ்வாறாகவே அமைந்துள்ளது.
பண்டைய இலக்கிய கவிதை மரபில் அகத்தில் புறக்கூறும் புறத்தில் அகக்கூறும் இயைந்து படைக்கும் நெறி உள்ளது. அந்த வகையிலேயே போர் மறவனையும் பாவேந்தர் படைத்திருக்கின்றார் பாண்டிமா நாட்டின் வளம். மொழி, கலை ,பண்பாடு ,தலைவனைப் பிரிந்த தலைவியின் மனநிலை, போர் மறவனின் கடமை ,போர்க்களத்தில் போர் மறவனின் மனநிலை போன்றவற்றை எடுத்து இயம்பி பழமை புதுமை என்ற இருவகை கவிதையியல் மரபுகளும் கொண்டு போர் மறவனைக் கட்டமைத்துள்ளார்.

இலக்கிய உத்திகள்       
           அக உணர்வுகளை மறைமுகமாக, குறிப்பாக உணர்த்த சங்கப் பாடல்களில் உள்ளுறை உவமை, இறைச்சி என்னும் இலக்கிய உத்திகளைப் புலவர்கள் கையாண்டுள்ளனர். போர் மறவனின் தலைவன் பகைவரின் வாள் மார்பில் பட்டு போர்க்களத்தில் சாய்ந்த போதும் கூட, அவன் வேதனையை ஒரு பொருட்டாகக் கருதாமல் தலைவியின் நிலையைக் கண்டு வருந்துகிறான். என்னை நினைத்து, என் வருகையை எதிர்பார்த்து உணவருந்தாமல், உறக்கமில்லாமல் கண்ணீரோடு தனிமையில் காத்திருப்பாளே! அவளிடம் என் நிலையை யார் போய் கூறுவார் என்று வேதனை கொள்கிறான். இந்த இடத்தில் பறவையை ஒரு உத்தியாகக் கவிதை அமைப்பிற்குப் பாவேந்தர் கையாண்டிருக்கின்றார்.

“பறவையே ஒன்றுகேள்! பறவையே ஒன்று கேள்!
நீ போம் பாங்கில் நேரிழை என் மனை, மாபெரும் வீட்டு மணி
ஒளி மாடியில் உலவாது மேன், உரையாது செவ்வாய்
இனிமையாது வேற்க்கண் என்மேல் கருத்தாய்
இருப்பாள் அவள்பால் இனிது  கூறுக;
பெருமை உன்றன் அருமை மணாளன் அடைந்தான். அவன்
தன் அன்னை நாட்டுக் குயிரைப் படைத்தான் உடலை
படைத்தான் என்று கூறி ஏகுக மறைந்திடேல்!
பாண்டி மாநாடே !பாவையே !வேண்டினேன் உன்பால் மீளா விடையே”         
            என்ற வரிகளில் பறவையை ஒர் ஊடகமாக மாற்றும் உத்தியும், வலியை பெருமையாக கொள்ளும் உத்தி முறையும் உரையாடல் வடிவமைப்பில் எழுத்தின் ஒலியியல் இசை நயமும் என்று படைப்பாக்க உத்திகளாகக் கையாண்டுள்ளார்.”பறவையே ஒன்று கேள்”என்ற வரி பிரகடன உத்தியாக அமைந்துள்ளது.தலைவன் தனக்குள்ளாகவே பேசுகின்ற உரைநடை பாங்கு நாடகத் தோற்றத்தை வடிவமைத்திருக்கின்றது. போர் மறவனின் கவிதை அமைப்பானது எளிமை, தெளிவு, பேச்சுத்தன்மை, நேரடித் தன்மை ஆகியவற்றை எடுத்துக்கொண்டு உரைநடையின் வாக்கிய அமைப்பில் செறிவு செய்து கட்டமைக்கப்பட்டுள்ளது.
நிறைவாக
       ‌           பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் போர் மறவனில் திராவிட நாடு, பாண்டிமா நாட்டு வளம், அங்கு வாழும் மக்கள் பற்றி முதலில் குறிப்பிட்டு பிறகு தலைவியின் மனநிலையை எடுத்துக் கூறி அதனை இடையிலேயே நிறுத்திவிட்டு ,போர் மறவனின் கடமையையும் குடி சிறப்பையும் உரைத்து இறுதியில் தனிமனிதனின் உயிர்த்தியாகத்தை மனித காப்பியமாக நிறைவு செய்கின்றார். இம்முறை இலக்கியத்தின் பொருண்மை, வடிவம் ,உத்தி என்ற கட்டமைப்பிற்குத் தக்க சான்றாக அமைந்திருக்கின்றது.

பார்வை நூல்கள்
1.பாரதிதாசன் கவிதைகள்- இரண்டாம் தொகுதி, பாரதிதாசன் பதிப்பகம், புதுச்சேரி.
2.புறநானூறு -நியூ செஞ்சுரி பதிப்பகம், சென்னை.

3.தமிழ் கவிதையியல் -இரா. சம்பத், சாகித்திம அகாடமி வெளியீடு.
4.தமிழ் அழகியல் -தி.சு நடராஜன், காலச்சுவடு பதிப்பகம், சென்னை.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் செ.சண்முகதேவி
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
செயிண்ட் பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்,
ஆவடி, சென்னை.

 

ஒரு காகிதம் நூலாகிறது!|கவிதை|ச. கார்த்திக்

ஒரு காகிதம் நூலாகிறது! கவிதை ச. கார்த்திக்

உயிரில்லாத புத்தகம்


உயிர் பெறுகிறது


வாசகனிடம்..!


 

புத்தகம் எல்லாம்


மௌனமாக,


பேசுகிறது..!

 

காகிதத்திற்கு எல்லாம்


அழகு சேர்கிறது,


சொற்கள்..!

 

வெட்டுபவனுக்கு


நிழல் தருகிறது,


மரம்..!

 

அம்மாவின்

நகைகள் எல்லாம்


அடகு கடையில்,


படித்துக் கொண்டு இருக்கிறது..!


 

ஐந்து நாளும் பள்ளி பாடம்

இரண்டு நாளும் விடுமுறையோ,


அதிலும்
விட்டுப்பாடம்..!


 

வயதான மரத்திற்கு


இளமை தருகிறது,


இலைகள்..!


 

மழை முடிந்த பிறகு


மரத்தின் இலைகள் எல்லாம்,


கண்ணீர் விடுகிறது..!


 

பட்டுப்போன மரத்திற்கு


உயிர் தருகிறது


ஏதோ ஒரு பறவை..!


 

சுடுகாட்டிற்கு

உயிர்
தருகிறது,


ஏதோவொரு பிணம்..!


 

அப்போது தீட்டு


இப்போது நீட்டு


எப்போது விடியும்..!


 

மீன்கள் எல்லாம் விற்றாலும்


அவன்(ள்) மேல்,


மீன் நாட்றம் போகவில்லை..!


 

மனிதனாகப் பிறந்திருப்பதை விட


ஒரு மழை நீராக பிறந்திருக்காலம்..!

 

பட்டாம்பூச்சிகள் போர் புரிகின்றன


இந்த
மழைக் காலத்தில் தான்..!


 

மழை துளிகள் எல்லாம்


மண்ணின்

மகத்துவம் அறிந்து
பேசுகிறது..!

 

எங்கள் ஊர் தார்ச்சாலைகள்


கண்ணீர் விடுகிறது


இந்த மழைக் காலத்தில் தான்..!


 

என்றோ ஒரு நாள்


நீயும் நானும்


சந்திப்போம்..!


 

காகிதமும் பேனா முனையும்


பேசிக்கொள்கிறது,


எழுத்தாளருக்கு தெரியமால்..!


 

கோடியில் வாழ்கிறான்


தெருக் கோடியை சுரண்டுகிறன்..!


 

பகலெல்லாம் வேலை


இரவெல்லாம் உறக்கம்


உன் வாழ்க்கை எப்போது..?


 

சிலந்திகள் எல்லாம் வருந்துகிறது


என்னுடைய நூல் வாங்குவதற்கு


இங்கு யாரும்(மே) இல்லையே..!


 

பல வார்த்தைகள் பேசி


அதில்
ஒரு வார்த்தையும்

பயனில்லை.


 

மின்விசிறி எல்லாம் அழுகிறது


குழந்தை எல்லாம்

நன்றாக
உறங்குகிறது.


 

நிலத்தை உழுது

உன்னவன்
இன்று


அதனை விற்று உண்கின்றன


இந்த விவசாயி..!

 

இறைய தேடுகிற

மீன்கள் எல்லாம்


மற்றவர்களுக்கு


இறைச்சியாக மாறுகிறது..!


 

போர்க்களத்தில்

சென்று பார்த்தால்


ஈக்களும் எறும்புகளும்

சண்டைப்
போடுகிறது


இறந்துபோன விலங்குகளிடம்..!


 

ஒரு மனிதன்

அவன் வாழ்க்கையை
வாழவில்லை


மற்றவர் தன்னை எவ்வாறு
நினைக்கிறார்கள்


என்று நினைத்துக்கொண்டு வாழ்கிறான்..!

சேற்றில் முளைத்தாலும்


தாமரை பற்றி பேசுவதற்கு


இன்று குழந்தைகள் வட்டாரம் உண்டு..!


 

பணத்திற்கு இருக்கும் மதிப்பு


இன்று
மனிதர்களுக்கு இல்லை..!


 

அவள் என்னிடம்


சண்டை போட்டுச் சென்றால்


என்ன காரணம் என்று நினைத்தேன்


அவளைப் புரிந்துக் கொண்டு


அவளை அழைத்து வரலாம் – என

புறப்படும்போது
இந்த மழையும் என்னைப்

புரிந்து
கொள்ளாமல் பொழிகிறது..!

நான் வைகறையில் காத்திருந்தேன்


அவள் தென்கரையில் காத்திருந்தாள்


எங்கள் இருவரும் பற்றி யோசிக்காமல்


ஆற்றில் நீர் ஓடிக்கொண்டே இருக்கிறது..!


 

பார்க்கதான் முடிந்தது


பேசதான் முடியவில்லை


கடிதம் எழுதினேன்


கவிதை எழுதினேன்


ஓவியம் வரைந்தேன்


இவை அனைத்தும்


கனவுகள் தான்..!


 

மழை வருவதற்கே


இயற்கை படைக்கப்பட்டன


ஏரிகள் உருவாகுவதற்கே


மழைநீர் படைக்கப்பட்டன


பெரும் வௌ்ளம் உருவாகுவதற்கே


நதிகள் படைக்கப்பட்டன


நதிகள் உருவாகுவதற்கே


கடல்கள் படைக்கப்பட்டன


வெயில் உருவாகுவதற்கே


மனிதன் படைக்கப்பட்டான்..!


 

பழைய வீடு


பழைய நட்பு


தாத்தவின் நினைவு


என் பாட்டியின் புகைப்படம்


அந்த ஆலமரம்


நான் வாங்கிய பழைய புத்தகம்


இன்று படிக்கும் போது


புதிய நினைவுகள் கொடுக்கிறது..!                                                    

கவிதையின் ஆசிரியர்


ச. கார்த்திக்


முதுகலைத் தமிழ் இரண்டாமாண்டு


தூய நெஞ்சக் கல்லூரி (தன்னாட்சி), திருப்பத்தூர்.

 

PILLAY PERUMALAIYANKAR PASURANGALIL IYARKKAI|Dr. DIVAHAR M

பிள்ளைப்பெருமாளையாங்கார் பாசுரங்களில் இயற்கை - ம.திவாகர்
Abstract
               
          Nature itself manifests many wonders within. We live a life deeply connected with such nature. This study’s summary is to understand the way Pillay Perumal Iyangar has employed the description of nature in his work, Ashtaprabandham.

Key Words
               
Nature – Scene – Imagination – Metaphysics – Devotion – Hymn – Devotional Verse – Sea – Spiritual Enthusiasm – Religious fervor – Dragonfly


பிள்ளைப்பெருமாளையாங்கார் பாசுரங்களில் இயற்கை

சுருக்கம்
    இயற்கையானது பல அதிசயங்களை தன்னகத்தே கொண்டு திகழ்கிறது. அத்தகு இயற்கையோடு பின்னிப்பிணைந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்து வருகிறோம். அவ்வகையிலே பிள்ளைப்பெருமாளையங்கார் தன் படைப்பான அஷ்டப்பிரபந்தத்தில் இயற்கை வருணனையை கையாண்டுள்ள விதத்தை அறிவது இவ்ஆய்வின் சுருக்கம் ஆகும்.

கலைச்சொற்கள்
        இயற்கை – காட்சி – கற்பனை – மெய்ப்பொருளியல் – பக்தி – பாசுரம் – கடற்கானல் – மதப்பெருக்கு – வேழம் – பிடி – முகில் – அரவு – தும்பி.

முன்னுரை
         
        இயற்கை பல அரிய அதிசயங்களை தன்னகம் கொண்டு திகழ்கிறது. இயற்கையோடு இயைந்து பாடும் கவிஞர்கள் அதில் பல காட்சிகளைக் கற்பனையில் காணுகின்றனர். கவிஞர்கள் தாம் பெற்ற மெய்யுணர்வு அனுவத்தை ஒரு விருந்தாக படைக்கிறான்.
அந்த வகையில் பிள்ளைப்பெருமாளையங்காரும் திருமால் குடி கொண்டு இருக்கும் திருத்தலங்களின் இயற்கையெழிலில் மனதினை செலுத்தி பக்தி உணர்வுடன் சொற்கவியை இயற்றியுள்ளார்.

சங்க இலக்கியங்களில் இயற்கை
         
         சங்க காலம், இயற்கையில் இறைவனைக் கண்டு  இன்புற்ற காலம். அக்காலத்து வாழ்ந்த மெய்பொருளியல் புலவர்களான நக்கீரர், கபிலர், பரணர் போன்றோர் இயற்கையைக் கொண்டு இறைவனின் பெரும் புகழை எடுத்தியம்பினர்.
அந்த பாடல்கள் எவற்றிலும் சுட்டி ஒருவர் பெயர் கூறப் பெறாததால் இன்னார் என்று உணரமுடியாத தலைவன் தலைவி காதல் பாடல்கள் தோன்றி, பிறகு தெய்வத்தின் மீது கொண்ட காதலாக மாறி பாசுரங்களாக வளர்ந்து செழித்தன.
மன்னர்களின் வீரச் செயல்களை பாடும் நிலைமாறி, இறைவனின் அறிபுதச் செயல்களைப் பாடும் நிலை வளர்ந்தது. வள்ளல்களின் வள்ளல் தன்மையை பாடும் பாடல்களுக்கு ஈடாக இறைவனின் அற்புதச் செயல்களைப் பாடும் பாசுரங்கள் தோன்றின.

             கற்பனைக் காதலுக்குப் பின்னணனியாக அந்தந்த ஊர்களின் இயற்கைச் சூழல் வருணிக்கப் பெற்றிருந்தது மாறி இறைவனிடம் செலுத்தும் பக்தி மாண்புக்கு பின்னணியாக அந்தந்த திருக்கோயில் தலங்களைச் சூழ்ந்த இயற்கை எழில்களைப் பற்றிய வருணனைகள் அமைந்தன.
இயற்கைக் காட்சிகளோடு இறைவனை, இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தைக் காட்டுவதால் மக்களின் மனதைக் கொள்ளை கொள்ளும்படி இறைவன் மீது பாடப்பட்ட பாசுரங்கள் அமைகின்றன. சங்க காலத்தில் இருந்தே இறைவனை இயற்கையோடு இணைத்து பாடி வந்துள்ளனர்.
         
      கலித்தொகையில் சூரியன் மேற்குத் திசையில் மலையில் சென்று மறைய இருள் வந்த காட்சியினை விளக்குமிடத்தில் “போரில் வல்ல சக்கரப் படையினையுடைய திருமாலின் நிறம் போல எம்மருங்கும் இருள் சூழ்ந்தது” (சக்திதாசன் சுப்பிரமணியன், 1958) என்று அவனது கரிய நிறத்தின் தன்மை தோன்ற இயற்கைக் காட்சியில் வர்ணிக்கப்படுகிறான்.பரிபாடல் திருமாலின் திருமேனியழகைக் காட்டுமிடத்தில் இயற்கைக் காட்சியோடு இணைத்துக் கூறுகின்றது.

       “நீண்ட மேகம், காயாம்பூ, கடல், இருள், நீலமணி என்னும் ஐந்து பொருள்களையும் ஒக்கும் அழகு விளங்கு திருமேனியை உடையாய்” (பரிமேலழகர்,1956) என்று போற்றப்படுகிறான்.
நெய்தற்கலியில் வண்டொலி முழங்கும் கடற்கானலின் இயற்கைக் காட்சியைச் சிறப்பிக்குமிடத்து, “பெருங்கடலும் துயில்வது போல ஒலி வந்து கிடக்கின்ற காட்சி, அரும்பொருள்கள் முறையோடு இசைந்து வருகின்ற பாடலோடு, கலந்து கேட்கும் யாழிசையை அனுபவித்தவாறே, திருமால் பாற்கடலின் மீது கிடந்து உறங்குவது போன்று இருந்தது” என்று கூறுமிடத்தில் பாம்பணையில் கிடந்த தோற்றத்தில் திருமால் காட்சி தரும் நிலை காட்டப்படுகிறது.
         
       கண்ணபிரான் இயல்பாகவே வலிமையுடையவன் என்ற பெருமை தோன்ற  “மாயோன் பற்றார் களிற்றின் முகத்தெறிந்த சக்கரம் போல் ஞாயிறு குடமாலையைச் சேரன் பலராமன் நிறம் போல மதி தோன்றியது” (சக்திதாசன் சுப்பிரமணியன், 1958) முல்லைத் திணையின் முதல் தெய்வமாக மாயவன் போற்றப்படுவதால் அவன் நிறமும், ஆற்றலும் ஒருங்கே தோன்றப் போற்றப்படுவதைக் காண்கிறோம்.  
         
         மாந்தர் கண்களால் காணமாட்டாத கடவுளை அவனது படைப்புப் பொருள்களின் வாயிலாகக் காண்டல் கூடும் என்பது இளங்கோவடிகள் கருத்து. இறைவனுடைய பண்புகளில் அருட்பண்பே தலைசிறந்தது.
ஆதலால், அப்பண்பு திங்களிடத்திலும், அவனுடைய முத்தொழில்களை முகிலிடத்திலும் காணப்படுவதால் இவற்றில் இக்கடவுட்பண்பையே அடிகளார் கண்டு வழிபடுகின்றார் எனலாம்.
உயிரில்லாப் பொருளாகிய இவற்றிலும் உயிர்களிடத்தே கடவுட் பண்பு, இறைத்தன்மையாக வெளிப்படுவதால் இவற்றிற்கு உவமையாகக் காவிரி நாடன் குடை முதலியவற்றை எடுத்தோதி வணங்குகிறார்.  இது அவருடைய கடவுட் கொள்கையை ஒருவாரு அறிவுறுத்திக் காட்டுகின்றது. 
இவ்வாறு  எப்பொருளிலும் கடவுளைக் காணும் இயல்பு சமயக் கணக்கர் மதி வழிச் செல்லாது உயரிய உணர்ச்சி வாயிலாக கடவுளைக் கண்டு வழிபடுகின்ற உண்மை நெறி எனலாம்.

ஆழ்வார் பாசுரங்களில் இயற்கை
         
         மதப்பெருக்கால் செருக்கித் திரிகின்ற ஆண் யானை ஒன்று, அது தன் பெண் யானையைக் காண்கிறது. அதற்கு இனிய உணவு கொடுத்து அதன் மனம் நிறைவிக்க விரும்புகிறது. அந்த ஆண் யானை அருகிலிருந்த மூங்கில் குருத்தைப் பிடுங்கி மலையிலுள்ள ஒரு தேனடையில் தோய்த்து அப்பெண் யானைக்கு ஊட்டுவதை,
         
பெருகு மதவேழம் மாப்பிடிக்கு முன்நின்று       
இருகண் இளமூங்கில் வாங்கி – அருகிருந்த       
தேன்கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்    (ஜெகத்ரட்சகன், 1993)
என்று இரண்டாம் திருவந்தாதி பாடும். இதே கருத்தினை,
         
……. ……. …….. அலைமடு தேன் தோய்த்துப்       
பிரச வாரிதன் இளம்பிடிக் கருள்செய்யும்   (ஜெகத்ரட்சகன், 1993)
என்று பெரியதிருவந்தாதி பேசும்.
         
முருகு நூறுசெந் தோளினை முழைநின்றும் வாங்கி       
பெருகு சூழ்இளம் பிடிக்கு ஒருபிறை மருப்பியானை  (இராஜம். எஸ், 1958)
என்று கம்பரும் இக்காட்சியை வருணிப்பது நினையத்தக்கதாகும்.
         
பண்டெல்லாம் வேங்கடம் பாற்கடல் வைகுந்தம்       
கொண்டங் குறைவதற்குக் கோவில் போல் – வண்டு       
வளங்கிளரும் நீள்சோலை வண்பூங் கடிகை       
இளங்குமரன் றன்விண் ணகர்(ஜெகத்ரட்சகன், 1993)
         என்பது பாசுரம்.
பண்டு திருவேங்கடம், திருப்பாற்கடல், திருவைகுண்டம் போன்றவற்றைத் தன் இருப்பிடமாகக் கொண்டு உறைந்தவர்க்குத் தற்பொழுது வண்டுகள் திரளாக இருக்கின்ற மலர்மிகுந்த சோலைகளை உடைய அழகிய திருக்கடிகைக்குன்றையே ஆதாரமாகக் கொண்டுள்ளான் என்று பொருள் கொள்ள இப்பாசுரம் இடமளிக்கின்றது. எங்கெல்லாம் அழகுள்ளதோ அங்கெல்லாம் இறைவன் இருப்பதாகக் கொள்வது சமயக் கொள்கை. இக்கொள்கையை ஒட்டியே பக்தர்களும் இயற்கையில் தோய்ந்து இறைவனை அனுபவிக்கின்றனர். எல்லா இடங்களிலும் காணும் இயற்கை அழகில் எம்பெருமானின் அழகுக்கூறுகளில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இயற்கை அழகினை தம் உள்ளத்து அழகுடன் குழைத்துத் தம்மனம் விரும்பும் கடவுள் வடிவத்தின் தெய்வீக அழகாகக் கொள்கின்றனர். இதனை பிள்ளைப்பெருமாளையங்கார் தன்னுடைய படைப்பான அஷ்டப்பிரபந்தத்தில் இணைத்துப் பாடியுள்ளார்.

செவிலி இரங்கல்         
       தலைமகளின் நிலையைக் கண்டு செவிலித்தாய் மிக்க துயர் கொள்கிறாள். அப்பொழுது திருவரங்கத்தில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை நோக்கிப் பேசுகின்றாள். இக்காட்சியை ஐயங்கார், இயற்கையோடு செவிலித்தாய் சேர்த்து திருமாலைப் பேசுவதாகக் காட்டுகிறார். “திரு அரங்கநாதனே!  தாமரை போன்ற இரு கண்கள் வாடவும், கண்களிலிருந்து பெருகி வருகின்ற கண்ணீரானது மலையருவி போல் வழிந்தோடவும், மன்மதனின் மலரம்புகள் உள்ளே ஊடுருவிச் செல்லவும், வாடைக் காற்று இடையே நுழைந்து செல்லவும், அன்றில் பறவை எழுப்பும் குரல் ஒலியானது காதினைக் குடையவும், வளமான துளசிமாலையின் ஆசையுடனே, எங்கள் பேதைப் பெண்ணாகிய இவள் உயிர் நீங்கப் பெறுதல் உமக்கு அறமாகுமா? ஆகாதே!” என்று செவிலித்தாயின் நிலையில் இருந்து தலைமகளாகத் தன்னை நினைத்துக் கொண்டு திருமால் அருள் கிடைக்காததால் தான் வருந்தும் துயரை செவிலித்தாய் எடுத்துக் கூறுவது போலத் திருமாலிடம் தன் உள்ளத் துன்பத்தை எடுத்துரைக்கிறார். இதனை,
         
வாடி ஓட வசைம் அன்ன இருகண் வெள்ளம் அருவிபோல்       
மருவி ஓட, மதனன் வாளி உருவி ஓட, வாடை ஊடு       
ஆடி ஓட, அன்றில் ஓசை செவியில் ஓட, வண் தூழாய்       
ஆசையோடு எங்கள் பேதை ஆவி ஓடல் நீதியோ?       
திரு அரங்க ராசரே!     (வை. மு. கோ.)
என வரும் பாசுரவடிகளால் அறியலாம்.

தலைவி இரங்கல்
         
     தலைமனின் பிரிவைத் தாங்க மாட்டாமல்  ஆறாத் துயரில் இருக்கின்ற தலைவி நிலையில் இருந்து பாடுகின்ற நிலையில் இயற்கைக் காட்சிகளை அமைத்து “திருமாலை அழைத்து வந்து என்னிடம் சேருங்கள் என்று பாடுகிறார் பிள்ளைப்பெருமாளையங்கார். அரிய பெரிய புன்னை மரச் சோலையே! ஆசை என் மனதில் அடங்குவதில்லை. தாமரை மலரில் பொருந்திய வண்டே! அழுகின்ற விழிநீர் ஒழுக கண் உறங்குகின்றேன் இல்லை. பரந்த கடலில் ஊர்கின்ற மரக்கலமே! பாவிக்கு அலர்தூற்றும் ஊராரின் நாவும் வாயும் பகையாம். கரைமேல் பெரிய சுறாவே! வருந்துகின்ற எனக்குக் குற்றமுள்ள உறவினரும் அயலாராவார். தாழை மலர்கள் சிந்தும் மணற்குன்றே! இரவுப் பொழுது பல ஊழிக் காலமாக நீளும். பனையே! கரும்புவில் காமனை அழைக்கும் நாரைகளே! சங்கு உலவும் அழகியே கரையே! என அரங்கநாதனை என்னிடம் அழைத்து வாருங்கள்” என்று பாடுகின்றார் ஐயங்கார். இச்செய்தியை,
         
அரும் புன்னாகத் தடங்காவே! அவா என் ஆகத்து அடங்காவே       
அம்போருகக்கண் பொரும் தேனே! அழுநீர் உகக் கண் பொருந்தேனே       
……………. ………………. ………………. …………..       
குருகீர்! நந்து அமர் அம் கரையே! கொணரீர், நம்தம் அரங்கரையே!   (வை. மு. கோ.)
என வரும் பாசுர அடிகளால் அறியலாம்.

திருமாலின் சிறப்பு
         
        திருமாலின் சிறப்பினை எடுத்துக் கூறும்போது, “வானகத்தில் திரளாகத் தோன்றுபவை விண்மீன் கூட்டங்களோ, உன்னைத் தொழும் தேவர்கள் அன்பொடு சொரிகின்ற மலர்களோ? ஒளிப்பிளம்பாகத் தோன்றும் பதினாறு  கலைகளும் நிரம்பிய வெண்மதியோ, உன்னைத் தேவமாதர்கள் மங்களார்த்தமாக ஆலத்தி எடுத்த கற்பூரத் தட்டோ? நாங்கள் அறிய முடியவில்லை. இப்பொழுது நீண்ட திருக்கண்கள் அறிதுயில் கொள்ளுதற்கு இடமான திருப்பாற்கடலிலிருந்து எழுந்தருளி வந்த எம்பெருமாளே! என்று பாடுகின்றார். இதனை,
         
உடுத் திரளோ, வானவர்கள் சொரிந்த பூவோ,               
உதித்து எழுந்த கலை மதியோ, உம்பர் மாதர்       
எடுத்திடு கர்ப்பூர ஆரத்திதானோ,               
யாம் தெளியோம் இன்று, நீள் திருக்கண் சாத்திப்       
படுத்த திருப்பாற்கடலுள் நின்று போந்து(வை. மு. கோ.)
      என வரும் பாசுர அடிகளால் அறியலாம். இங்கு திருமாலின் சிறப்பினை எடுத்து ஊதினால் உலகங்கள் அனைத்தும் செழித்து வளர்கின்றன என்று காட்டி இயற்கையின் செயல்கள் அனைத்தும் திருமாலின் கீழ் நடக்கின்றன என்று காட்டுகின்றார் ஐயங்கார்.

திருமால் வடிவம்
         
          திருமாலது வடிவத்தை ஐயங்கார் பாடியுள்ளார். “கருங்குழல் காளமேகத்தையும், நெற்றி இளம்பிறையையும், புருவம் வில்லையும், விழிகள் வேலையும், காது வள்ளை இலையையும், மூக்கு எள்ளுப் பூவையும், இதழ்கள் இலவம் பூவையும், பற்கள் முல்லை மலரையும், முகம் முழு நிலவையும், கழுத்து சங்கையும், தோள் இளமூங்கிலையும், முன்னங்கை வீணையையும், உள்ளங்கை தாமரை மலரையும், கைவிரல் கெளிற்று மீனையும், கை நகம் கிளியலகையும், கொங்கை குடத்தையும், முலைக்கண் நீலமணியையும், வயிறு ஆலிலையையும், இடை உடுக்கையையும், கொப்பூழ் நீர்ச்சுழியையும், அல்குல் பாம்பின் படத்தையும், தொடை வாழையையும், முழங்கால் நண்டையும், கணைக்கால் விரால் மீனையும், புறங்கால் பந்தையும், கால் விரல்கள் பவளத்தையும், கால் நகம் முத்தையும், பாதங்கள் மலர்த் தாமரையையும் ஒத்திருந்தன” என்று திருமாலின் திரு அவயங்களை ஒப்புமை செய்து வடித்துள்ளார் பிள்ளைப்பெருமாளையங்கார். இதனை,
         
மழை பிறை சிலை வேல் வள்ளை எள் இலவின்               
மலர் முல்லை மதி வளை கழை யாழ்       
வாரிசம் கெளிறு தந்தை வாய் கலசம்               
மணி வடபத்திரம் எறும்பு ஊர்       
அழகு நீர்த் தரங்கம் துடி சுழி அரவம்               
அரம்பை ஞெண்டு இளவாரல் ஆமை       
அணி தராக இணை கந்துகம் துகிர் தரளம்               
அம்புயம் அரங்க நாடு அனையார்       
குழல் நுதல் புருவம் விலோசனம் காது               
நாசி வாய் நகை முகம் கண்டம்       
குலவு தோள் முன்கை அங்கை மெல்விரல்கள்               
கூர் உகிர் கொங்கை கண் வயிறு       
விழைதரும் உரோமம் வரை இடை உந்தி               
விரும்பும் அல்குல் தொடை முழந்தாள்       
மிளிர் கணைக் கால்கள்  புறவடி பரடு               
மென் குறி விரல் நகம் தானே(வை. மு. கோ.)
என்ற பாசுரத்தால் அறியலாம். என்று ஆசிரியர் திருமாலின் வடிவழகைப் பாடுகிறார்.

திருமாலிருஞ்சோலையின் சிறப்பு
         
   திருமால் அருளி நிற்கின்ற நூற்றெட்டுப்பதிகளில் ஒன்றாக விளங்குகின்ற திருமாலிருஞ்சோலை என்ற தலம் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை இயற்கையோடு காட்டியுள்ளார் ஐயங்கார். ‘மனமே தீவினையை உடையவனான எனக்கும், தூயவனான பிரம்மனுக்கும், தலைவரும், அன்புள்ள அடியவர்களது உள்ளத் தாமரையில் எழுந்தருளியிருப்பவனுமான எம்பெருமானது, நீர்ப்பூக்களில் மொய்த்தற்கு வருகின்ற இன்னிசை கொண்ட தடாகங்களின் நீர், அம்மலர்களின் நறுமணம் கமழுகின்ற திருமாலிருஞ்சோலையைக் கண்ணால் கண்டவுடன் நமது தீவினைகள் தீரும். ஆதலால் அங்குச் செல்வதற்கு தலைப்படுவாய்’ என்று தனது மனதை நோக்கிக் கூறுகிறார் ஐயங்கார். இவ்வழியாக, திருமாலிருஞ்சோலையின் சிறப்பை இயற்கையோடு பின்னிப் பாடியுள்ளதை அறியமுடிகிறது.
இதனை,
         
பாவிக்கு அமல விரிஞ்சற்கு இறையவர் பத்தர் தங்கள் ஆவிக்       
கமலத்து வீற்றிருப்பார் அளிப்பாடல் கொண்ட       
வாலிக் கமல மணம் நாறும் சோலை மலையைக் கண்ணால்       
சேவிக்க மலம் ஆறும் – மனமே! எழு செல்லுதற்கே(வை. மு. கோ.)
என்று வரும் பாசுர அடிகளில் விவரிக்கிறார்.

திருவரங்கத்தின் இயற்கை சிறப்பு
         
        உலகங்களைக் காத்து வருகின்ற திருமால் பள்ளி கொண்டிருக்கும் தலம் திருவரங்கம் என்று கூறும்போது ஐயங்கார் இப்பதியின் சிறப்பினை இயற்கையோடு பிணைத்து பாடுகிறார். ‘மண்ணகத்தையும், விண்ணகத்தையும், நின்ற இமயமலையையும், அதனைச் சூழ்ந்து நின்ற மலைகளையும், கடல்களையும், இவற்றைக் கொண்ட புடவியையும், அதனின் விரிவான எல்லையையும், ஊழிக்காலத்தில் உண்டு வந்த எம்பெருமான் பள்ளி கொண்டுள்ள திருப்பதி எதுவெனில், முகில்கள் முழங்கி மேற்கு மலையிலிருந்து பெருகிப் பெருக்கெடுத்து அகிற்கட்டைகளை வாரி வருகின்ற காவேரி அலைகள் முத்துக்களையும், பொன்னையும் சிந்துகின்ற தென் திருவரங்கம் ஆகும்’ என்று கூறுகின்றார் பிள்ளைப்பெருமாளையங்கார். இச்செய்தியினை,
         
கொண்டல் குமுறும் குடகு கிழிந்து மதகு உந்தி அகில்               
கொண்டு நுரை மண்டி வரு நீர்       
தென் திரைதோறும் தரளமும் ககைமும் சிதறு               
தென் திரு அரங்க நகரே    (வை. மு. கோ.)
என வரும் பாசுரத்தால் உணரலாம்.
  மேலும்,
         
ஆழம் உடைய கருங் கடலின்
அகடு கிழியர் கழித்து ஓடி       
அலைக்கும் குட காவிரி நாப்பண்
ஐவாய் அரவில் துயில் அழுதை(வை. மு. கோ.)
என்று இயற்கையோடு இணைத்து திருவரங்கத்தின் புகழைப்பாடுகிறார் ஆசிரியர்.

திருவேங்கடத்தின் சிறப்பு
         
        திருமாலின் நூற்றெட்டுப்பதிகளில் மற்றொன்று திருமலை எனப்படும் திருவேங்கடம் என்னும் பதி ஆகும். இயற்கையை தன் போர்வையாக போர்த்திய ஊர் ஆகும். இந்த இயற்கை அழகை பிள்ளைப்பெருமாளையங்கார் அஷ்டப்பிரபந்தத்தில் வர்ணித்து உள்ளார்.
 கொம்பில் கட்டிய தேங்கூட்டை எடுத்தற்கு நீட்டிய யானையின் துதிக்கை நிலவினை கவ்வும் இராகு என்னும் பாம்பு போல் தோன்றும் வேங்கடமே, வண்டுகள் நெருங்கி மொய்த்த குளிர்ந்த மலர்மாலை தரித்த வஞ்சமகள் மூக்கையும், காதையும் அறுத்த எளிதின் எய்தப்படானின் திருமலை ஆகும் என்று விளக்குகிறார்.
   இதனை,
கொம்பின் இறால் வாங்க நிமிர் குஞ்சரக் கை அம்புலிமேல்       
வெம்பி எழும் கோள் அரவுஆம் வேங்கடமே – தும்பி பல       
போர் காதும் ஈர்ந்தார் புனை அரக்கி மூக்கினொடு       
வார் காதும் ஈர்ந்தார் வரை (வை. மு. கோ.)
என்னும் பாசுரத்தில் விளம்புகிறார்.
 திருவேங்கடத்து அந்தாதியில், வேங்கட மலையின் சிறப்பாக ஐயங்கார் காட்டுகிறார்.
         
ஏறு கடாவுவர் அன்னம் கடாவுவர் ஈர்இரு கோட்டு       
ஊறு கடா மழை ஓங்கல் கடாவுவர் ஓடு அருவி       
ஆறு கடாத அமுது எனப் பாய அரி கமுகம்       
தாறுகள் தாவும் வட வேங்கடவரைத் தாழ்ந்தவரே(வை. மு. கோ.)
      என்னும் பாசுரத்தில் திருவேங்கடத்தின் சிறப்பினையும், அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனது சிறப்பினையும் பாடுகிறார் ஐயங்கார்.

முடிவுரை
         
              இயற்கையோடு இயைந்து பாசுரங்களையும், பாடல்களையும் பாடிய ஆழ்வார்களையும், சான்றோர்களையும் இவ் ஆய்வில் அறியமுடிந்தது. இயற்கையை அவர்கள் காட்டுமிடத்து அவர்கள் தங்களது கற்பனைத்திறன் வெளிப்படும் அளவில் சிறப்பாகப் படைத்துள்ளனர். பாசுரங்கள் அனைத்தும் இயற்கை ததும்பும் அமிர்தமாக படைக்கப்பட்டுள்ளன. பிள்ளைப் பெருமாளையங்கார் திருவரங்கம் மற்றும் திருவேங்கட மலைகளின் இயற்கை சிறப்பினை மிகவும் அழகாக படம் பிடித்துக் காட்டியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.

பார்வை நூல்கள்
1.இராஜம். எஸ் – கம்பராமாயணம்: மூலமும் உரையும் – மர்ரே அண்டு கம்பெனி  – மு.ப.958

2.சக்திதாசன் சுப்பிரமணியன் –கலித்தொகை –அன்பு வெளியீடு, புதுச்சேரி – மு.ப.958

3.சாமிநாதையர், உ. வே. – பரிபாடல் மூலமும் பரிமேலழகர் உரையும் – சென்னை – நா.ப.956

4.வை. மு. கோ. – அஷ்டபிரபந்தம்: மூலமும் உரையும் – உமா பதிப்பகம், சென்னை

5.ஜெகத்ரட்சகன், முனைவர் – நாலாயிர திவ்யப் பிரபந்தம் – ஆழ்வார்கள் ஆய்வு மையம், சென்னை- மு.ப.993

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ம. திவாகர்,
உதவிப்பேராசிரியர் (தமிழ்),

அறிவியல் மற்றும் மானுடவியல் புலம்,

எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பவியல் நிறுவனம்,

சென்னை, இராமாபுரம் – 89

மாரியம்மன்|கவிதை|கவிஞர் மா.நந்தினி

மாரியம்மன்-கவிஞர் மா.நந்தினி

ψ மாரியம்மன்


மனம் இறங்கி வந்து – எங்கள்


மனக்குறைகளைத் தீர்ப்பவளே..!


 

ψ ஆடி மாதத்தில்


அம்மனுக்கு கம்பம் நடுதல்


அம்மன் மனம் குளிர்ந்து


மகிழ்ச்சியாக இருக்கும் 


சக்தியானவள்..!


 

ψ பூச்சாட்டுதல் முடிந்தவுடன்


அம்மன் அலங்காரத்தில் ஜொலிப்பாள்!


மாரி  மழையாகப்
பொழிக!

திருவிழா


பதினெந்து நாள்


அம்மா சிங்க வாகனத்தில்


அழகான பட்டு வண்ண உடுத்தி


பக்தர்களைக் காண


பவனி வருகிறாள்..!


 

ψ நம் வாழ்வில்


தெரிந்தும் தெரியாமல் செய்த


பாவங்களை போக்குபவள்!


ஆடி மாதத்தில்


அம்மனுக்கு    கூழ் காய்ச்சுதல்


ஆலயத்திற்கு வரும்


பக்தர்களுக்குப் போற்றும் போது 


அம்மன் வடிவில் 


பக்தர்கள்  கூழ் குடிப்பது ஐதீகம்..!


 

ψ புது பொலிவுடன்


அம்மன் நாளும் ஜொலிக்கிறாள்..!


அம்மனை வேண்டிக்கொண்டு


தீ மிதிக்கும் போது


வாழ்வில் இன்னல்கள் நீங்கும்..!


 

ψ சக்தியின் வடிவில்


மன சஞ்சலங்களைப்


போக்கி விடுவாள்


அம்மனுக்கு


மஞ்சள் நீராட்டு விழாவில்


மனம் இறங்கி வந்து


நினைத்ததை நடத்தி கொடுப்பவள்..!


 

ψ மாரியம்மனை


மனதார வேண்டிக் கொண்டால்


திருமணத்தடை நீங்கும்!


மகப்பேறு வழங்குவதால்


தீபாராதனையில்


ஜோதியின் சக்தியாக திகழ்வாள்!


ஆதிபராசக்தியே


அகிலங்களை


ஆளும் மகாபராசக்தியே..!


 

கவிஞர் மா.நந்தினி 


சேலம்.

 

Pazhadhtamillarkalin Uzhavutholil Muraigalin Sirapiyalpugal|Dr.S.Ilavarasi

Pazhadhtamillarkalin Uzhavutholil Muraikalin Sirapiyalpugal
Abstract           
        Man was involved in the agricultural industry, one of the industrial systems of the ancient Tamil. Essential for their livelihood is the man who created a plowing industry through food farming. In the Sangam literature, the eating habits of the Tamils are found about the food industry. He created a food production capacity for the food. Agriculture is the most important industry during the Sangam period. The way of literature can be highlighted by the spy system.
         The study is complicated in that there is no intention of the tillage industry that produces the food that is important for us to eat. This review is explained in the analysis set. The literature of the time they lived in certifies the biological elements of the ancient Tamil. Food, clothing, and location are the needs of man. Once the people found fire, he was focused on eating. He started the first step. The characteristics of the food industry can be found in the literature.

பழந்தமிழரின் உழவுத்தொழில் முறைகளின் சிறப்பியல்புகள்

முன்னுரை
            இயற்கையோடு இணைந்த பழந்தமிழரின் தொழில் முறைகளின் ஒன்றான வேளாண்மைத் தொழிலில் மனிதன் தன்னை ஈடுபடுத்திக் கொண்டன. தங்களுடைய வாழ்வாதார வாழ்க்கைக்கு இன்றியமையாதது உணவு விவசாயத்தின் மூலமாக உழவுத் தொழிலை மனிதன் உருவாக்கினான். சங்க இலக்கியத்தில் பைந்தமிழர்களின் உணவு பழக்கவழக்கங்கள் உணவுத்தொழில் பற்றி காணப்படுகின்றன. உணவிற்காக பயிரிடும் தொழிலை தன் நிலைக்கேற்ப உணவு உற்பத்தித் திறனை உருவாக்கினான். சங்க காலத்தில் விவசாயம் மிக முக்கிய தொழிலாக் காணப்பெறுகின்றன.
     இலக்கியத்தின் வழி உளவத் தொழில் முறைகளை சிறப்புகளை எடுத்துரைக்கலாம்.
சங்க கால உணவு முறைகளின் பயன்பாட்டுகளை அறிவதற்கு துணை புரிகின்றன.நாம் உண்பதற்கு முக்கியமாகத் திகழக்கூடிய உணவுப் பொருளை தயாரிக்கும் உழவுத் தொழில் சிறப்பு இயல்புகளை உணர்த்துவதை தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பதை ஆய்வு சிக்கலாக எடுத்துரைக்கின்றன. பகுப்பாய்வு தொகுப்பு முறையில் இவ்வாய்வியல் விளக்கப்பட்டுள்ளது.
பழந்தமிழரின் வாழ்வியல் கூறுகளை அறிய அவர்கள் வாழ்ந்த காலத்து இலக்கியங்கள் சான்றளிக்கின்றன. உணவு, உடை, இருப்பிடம் மூன்றும் மனிதனின் தேவையாகும். இவற்றுள் மக்கள் நெருப்பை கண்டறிந்தவுடன் அவன் கவனம் உணவு அருந்தும் முறையில் இருந்தது. அதன் முதல்படி விவாசயத்தைத் தொடங்கினான். இலக்கியங்களின்வழி உணவுத்தொழிலின் சிறப்பியல்புகளை அறியலாம்.

தொழில்கள் வரையறை
        பண்டைய தமிழகத்தின் வழக்கில் இருந்த தொழில்களை குறித்து செய்திகளை அறியலாம். தொழில் என்பதற்கு ஒரு வரையறை காண்போம். உழைப்பு என்பது பெயர்ச்சொல்லாக ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும். உழைத்தல் என்பது வினைச்சொல்லாகத் தொழில்செய்தலைக் குறிக்கும். உழைப்பவர் இனம் என்பது பொதுவாக தொழிலாளர்களைக்குறிக்கும். இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும்நிலைகள்ஆகும்.

வாழ்வியல் தொழில்கள்
       மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழிலாகக் கருதப்படுகின்றது. அவற்றுள் கைத்தொழில், நிலஞ் சார் தொழில், கைவினைத் தொழில், பிற தொழில், அறிவு சார் தொழில் ஆகிய நிலைகளில் வகைப்படுத்தி உள்ளனர். அவற்றுள் கைத்தொழில்களில் பயிர்த்தொழில் மிகவும் முக்கியதாக க் கருதப்படுகிறது.

பயிர்த்தொழில்
       மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு ஒருவர் சிறந்த பண்பினைப் பெற அடிப்படையாய் இருக்க வேண்டியது வறுமையின்மை. உணவே இல்லை இன்றேல் பண்பாடு இல்லை,பழம் பெருமையும் இல்லை ஆதலால் உணவுப்பொருளின் இன்றியமையினை உணர்ந்து அவற்றைப் பெருக்கினர். உணவுத் தொழில் தலைமைத் தொழிலாக உயிர்த் தொழிலாகப்போற்றப்பட்டது. பண்டைய தமிழர் இயற்கையோடு ஒன்று வாழ்ந்தனர் என்பதற்குச் சான்றாக பயிர்த்தொழில் பன்னெடுங்காலமாகத் தமிழரது தொழிலாக அமைந்தது எனினும் இதற்கான முதல் சான்றினை தருவது தொல்காப்பியமாகும்.

“வேளாண் மாந்தர்க் குழுதூண் அல்லது
இல்லென மொழிபிறவகை நிகழ்ச்சி “1
      என்ற நூற்பா மூலம் விளக்குகின்றது. சங்க இலக்கியங்களில் ‘வேளாண்’ என்ற சொல் இரண்டு இடங்களிலும்’ வேளாண்மை’ என்ற சொல் ஓரிடத்திலும் இடம்பெற்றுள்ளது. ‘வேளாளர்’ என்ற சொல்

“தொடர்ந் தேம்எருது தொழில் செய்யாதோட
விடுங்கடன் வேளாளர்க் கின்று”2
       என்று பரிபாடல் அடிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக தொல்காப்பியர் காலம் தொடங்கி சங்ககாலம், சங்கம் மருவிய காலம் முடிய வேளாண்மை என்னும் சொல் பெரும்பான்மை உதவி என்ற பொருளியிலும் சிறுபான்மை உழவுத் தொழில் என்று பொருளிலும் ஆளப்பட்டுள்ளது. இலக்கண நூலார் வேளாண் என்னும் சொல்லைவேள்+ஆள் எனப் பிரிப்பர். வேள் என்னும் வேர் சொல்லுக்கு மண் என்று ஒரு பொருள் உண்டு. வேளாண்மை மண்ணை ஆளுதல் என்ற பொருளைத் தரும். மண்ணைப் பயன்படுத்தி ஆள்பவன் வேளாண் என பட்டான்.

உழவுத் தொழில் முறைகள்
       உழவுத் தொழில் என்பது நிலத்தைத் தயார்ப்படுத்தி விதைகளை விதைத்து பயிர்களை விளைவித்து அறுவடை செய்யும் முறையாகும். ஒருவர் உண்ணும் உணவில் ஒவ்வொருவரின் உழைப்பு இருக்கின்றது. உழவர் இல்லை என்றால் இவ்வுலகம் இல்லை. எவ்வித விளம்பரமும் இல்லாமல் இருக்கின்ற ஒரே தொழில் முறை உழவுத் தொழிலாகும்.

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம்
தொழுதுண்டு பின் செல்பவர்”3
       என்ற வரிகள் வள்ளுவர் உழவுத் தொழிலின் சிறப்பினை விளக்குகின்றார். உழவுத் தொழில் என்பது உழுதல், உரமிடுதல், நீர்ப்பாய்ச்சுதல், விளைத்தல், களை கட்டல், காத்தல், அறுவடை, பதப்படுத்துதல் எனப் பல கூறுகளை விளக்கலாம்.

உழுதல்
           நிலத்தை பண்படுத்துதல் நிலையே உழுதல் ஆகும். நீர்வளம் நிறைந்த வயல் பகுதிகளில் நாற்று நடுவதற்கு முன் நிலத்தைப் பலமுறை உழுவார்கள் அதனை பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலில் ஆசிரியர் உத்திர கண்ணனார் சிறு சிறு அடைமொழிகளின் மூலம் உழும் வகையை குறிப்பிடுகிறார்.

“குடிநிறை வல்சிச் செஞ்சால் உழவர்
நடைநவில் பெரும்பகடு புதவிற் பூட்டிப்
பிடிவாயன் னமடிவாய் நாஞ்சில்
உடுப்புமுக முகக்கொழு மூழ்க ஊன்றித்
தொடுப்பெறிந்து உழுததுளர் படுதுடவை”4
        என்ற வரிகள் மூலம் உழுதல் நிலையை விளக்குகின்றனர். பண்டைய தமிழர் நிலத்தை உழுவதற்கு எருதுகள் இன்றி எருமைகளையும் பயன்படுத்தினர்.சான்றாக

“மலைகண்டன் னநிலை புணர் நிவப்பின்
பெருநெற் பல்கூட்டு எருமை உழவு”5
          என்ற வரிகள் நெற்களையுடைய பல பெரிய சேர்களைக் கட்டி வைத்திருக்கின்ற எருமைகளைப் பூட்டி விழுகின்ற உழவனே என்பதை விளக்குகின்றன. மண்ணை செழுமைப்படுத்தும்  உழுதல் விதைகளின் விதைப்பதற்கும் நீர் பாய்ச்சலுக்கும்தயார்படுத்தும் நிலையே  உழுதலாகும்.

பல்வேறு பயிர்கள் பயிரிடல்
     நிலத்தை  உழுதல் முறைகளில் விதை விதைத்து அறுவடை செய்து அதனை பயன்படுத்தினர். நிலத்தின்தன்மைக்கு ஏற்றவாறு அதன் பயிரிடும் முறைகளும் வேறுபடுகிறது. பின்னர் மீண்டும் அந்நிலத்தில்வேறு பயிரிடும் முறைகளை  அறிவோம்.திணைப்புனங்களில்  திணையொடு கலந்த பருத்தியையும் விதைப்பர். அதன்பிறகு தினை, அவரை விதைப்பர். இந்த அவரை வளர்ந்து சிறுதினை மறுகாலில் படர்ந்து காய்க்கும்.

“பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால்
கொழுங்கொடி அவரை பூக்கும்.”6
     என்று குறுந்தொகைப் பாடல் வரிகள் விளக்குகின்றது. புன்செய் விளைச்சலில் ஒரு நிலப்பகுதியில் ஒருவகை பயிரை மட்டும் விளைவிக்காமல் பல்வேறு விளைவித்தனர். ஒரு பகுதியில் தினை மற்றொரு பகுதியில் எள் பிறிதொரு பகுதியில் வரகு எனவும் விளைவித்தனர் என்பதை,

“சிறுதினைகொய்யக்கவ்வைகறுப்பக்
கருங்கால்வரகின்இருங்குரல்புலர.”7
       என்ற பாடலடிகளால் உணரலாம். பயிரிடும் முறைகளை இலக்கியங்களின்வழி சான்று அளிக்கின்றன.இன்றையச் சூழலில் உணவு பயிரிடும் முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பருவகாலநிலைக்கேற்ப இல்லாமல் நவீனமுறையில் பயிரிடும் முறை அமைந்துள்ளது. இதனால் உணவின் சுவை, ஆரோக்கியம் பாதிக்கின்றது. பருவநிலைக்குஏற்ப நிலத்தின் தன்மையை பொருத்தும் உளவுத்தொழிலை உருவக்குவதே இவ்வாய்வின் நோக்கம் ஆகும்.

முடிவுரை
     பழந்தமிழர்களின் உணவு பயிரிடும் முறைகளை சங்க இலக்கியங்களின் வழி அறியலாம். காலங்களின் வளர்ச்சிக்கு ஏற்ப உணவு முறைகளில் மாற்றங்கள் ஏற்படலாம். ஆனால் நிலத்தில் விதை விதைத்து அறுவடை செய்யும் விவசாயம் முறை என்றும் மாறாது. ஆயினும் சுற்றுச்சூழலின் நிலத்தைப் பராமரிக்கும் முறையினைநாம் ஒவ்வொருவரும் கடமையாகக் கருத வேண்டும். நிலத்தை பாதுகாக்கவும் ஆரோக்கியமான உணவைப் பெறுவோம்.

சான்றெண்விளக்கம்
1.தொல்காப்பியம்பொருள், மரபு -81 நூற்பா

2.மேலது – 20:63-64

3.திருக்குறள் – 1033

4.பெரும்பாணாற்றுப்படை196 – 200

5.நற்றினைபாடல் – 60 – 2

6.குறுந்தொகை – 82

7.மதுரைக்காஞ்சி 271-2

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சு.இளவரசி
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
ஜமால் முகமது கல்லூரி, திருச்சி.

 

நானாக நான்|கவிதை|மெ.அபிரக்ஷா

நானாக நான்-கவிதை-மெ.அபிரக்ஷா

இந்தச் சமூகம்


என்னை ஏற்றுக்கொள்வதற்காக
 

நான் விருப்பமில்லாமல்


நாள்தோறும் – அணியும்


முகத்திரை


உன்னைக் கண்டவுடன்


மட்டும் ஏனோ


தானாகவே மறைந்து போகிறது..!


 

நான் யாரென்ற


ரகசியத்தைப்


பல நேரத்தில்


நான் மறந்து போனாலும்


அந்த உண்மையை


உரக்கச் செல்ல


சிறிதளவும் – நீ


தவறுவதில்லை..!


 

உன் முன் –  நான்
மெ.அபிரக்ஷா

இருக்கையில்


என் மெய் நகலாக


மாறிப் போன நீ!


பல நேரம் என்னுடன்


செலவிடுபவர்களாலும்


கணிக்க முடியா


என் உணர்வுகளை


உன்முன் நான் நிற்கும்


அந்தக் கண நேரத்திலேயே


கண்டுபிடித்து வெளிப்படுத்தி விடுகிறாய்..!


 

இறுதியில் நான் நானாக


இருக்க இடமளித்து – என்னை


அவ்வாறே ஏற்றுக்கொள்ளும்


விந்தை நிறைந்த


நீதான் நான் !


தினமும் பார்த்து


ரசிக்கும் கண்ணாடி..!


 

கவிதையின் ஆசிரியர்


மெ.அபிரக்ஷா


B.A.Sociology


வி.இ.டி.கலை மற்றும் அறிவியல் (இருபாலர்) கல்லூரி, 


திண்டல், ஈரோடு.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »