Saturday, September 13, 2025
Home Blog Page 12

மெய்வருத்தக் கூலி தரும் | முனைவர் ஈ.யுவராணி

மெய்வருத்தக் கூலி தரும் முனைவர் ஈ.யுவராணி
       அந்த அழகிய கிராமத்திற்கு ஒரு முனிவர் வந்திருந்தார். ஊருக்கு மத்தியில் இருந்த மரத்தடியில் அமர்திருந்தார். யாருமே ஊரில் அவரைக் கண்டுகொள்ளவில்லை.  முனிவர் அல்லவா? கோபத்தில் சாபமிட்டார் அந்த ஊருக்கு “இன்னும் 50வருடங்களுக்கு இந்த ஊரில் மழையே பெய்யாது வானம் பொய்த்துவிடும்”.  இந்த சாபம் பற்றி கேள்விப் பட்ட அனைவரும் என்ன செய்வது என்றே தெரியாமல் கவலையோடு அவரின் காலடியில் அமர்ந்து மன்னிப்பு கேட்டனர். சாபத்திற்கு விமோசனம் கிடையாது என்று கூறிவிட்டார் முனிவர். வேறு வழியின்றி அனைவருமே அவரின் காலடியில் அமர்ந்து இருந்தனர்.
 
     மேலிருந்து இதைக் கவனித்த பரந்தாமன் தனது சங்கினை எடுத்து தலைக்கு வைத்து படுத்துவிட்டான் (பரந்தாமன் சங்கு ஊதினால் மழை வரும் என்பது நம்பிக்கை). இன்னும் 50 வருடங்கள் மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால் இனி சங்குக்கு ஓய்வு என்றே வைத்து விட்டான். 
               
       அந்த ஊரில் ஒரு அதிசயம் நடந்தது, ஒரே ஒரு உழவன் மட்டும் கலப்பையைக் கொண்டு தினமும் வயலுக்குச் சென்று வந்து கொண்டிருந்தான். அவனை அனைவரும் பரிதாபமாகவே பார்த்தனர். மழையே பெய்யாது எனும்போது இவன் வயலுக்கு போய் என்ன செய்யப் போகிறான் என்ற வருத்தம் அவர்களுக்கு. அவனிடம் கேட்டே விட்டனர். நீ செய்வது முட்டாள்தனமாக இல்லையா என்று,  அதற்கு அவனின் பதில்தான் நம்பிக்கையின் உச்சம் “50 வருடங்கள் மழை பெய்யாது என்பது எனக்கும் தெரியும். உங்களைப் போலவே நானும் உழுதிடாமல் இருந்தால் 50 வருடங்கள் கழித்து உழுவது எப்பிடி என்றே எனக்கு மறந்து போயிருக்கும்.
               
      அதனால்தான் தினமும் ஒருமுறை உழுது கொண்டு இருக்கிறேன்” என்றான். இது வானத்தில் இருந்த பரந்தாமனுக்கு கேட்டது. அவரும் யோசிக்க ஆரம்பித்தார். “50 வருசம் சங்கு ஊதமால் இருந்தால் எப்பிடி ஊதுவது என்று மறந்து போயிருமே” என்றே நினைத்து சங்கை எடுத்து ஊதிப் பார்க்க ஆரம்பித்தார். இடி இடித்தது, மழை பெய்ய ஆரம்பித்தது, நம்பிக்கை ஜெயித்து விட்டது.
“தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்”.
வெற்றி நிச்சயம்!
    
கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் ஈ.யுவராணி

உதவிப்பேராசிரியர்

வேல்டெக் ரங்கராஜன் டாக்டர் சகுந்தலா ஆர் & டி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், 

சென்னை.

 

இளந்தளிர்களின் வெற்றி| கவிதை|சு. ராஜஶ்ரீ

இளந்தளிர்களின் வெற்றி - சு. ராஜஶ்ரீ

📍 காலையில் உதித்த சூரியன்


சுட்டெரிக்கும் பகல் பொழுதில்


சிந்திக்க இயலாத நிமிடங்களில்


எத்தனை இனம்புரியாத உறவுகள்


 

📍 அத்தனை உறவையும் தாண்டி


தனக்கென கொடுக்கப்பட்ட வட்டத்திற்குள்


பம்பரமாய் சுழன் றோடினாள்


தன் கனவுகளைப் புதைத்துக் கொண்டு


 

📍 வாழ்க்கை மிகவும் சுகமானது!


அதுவே மீண்டும் சுமையானது!


சுமையும், சுகமும் சேர்ந்து வளமானது!


சுமையை சுகம் போல சிந்தித்தாள்!


 

📍 சக்கரங்களைக் காலில் சுழல விட்டாள்!


சக்கரத்தின் வேகம் அவளைச் சிந்திக்கச் செய்தது!

இன்னும் எத்தனை நாள் ஓடிக் கொண்டிருப்பேன்!


என் ஓட்டத்திற்கான விடுதலை தான் எந்நாளோ?

 

📍 இத்தனை ஓட்டமும், நடையும் தேவைதானோ?


என்று எண்ணியவாறே,  சென்றுக் கொண்டிருந்தாள்!


அவள் செல்ல வேண்டிய இடமும் வந்தது!


அவள் வந்து சேர்ந்த இடம் பள்ளிக்கூடம்…!


 


📍 சின்னஞ்சிறு இளந்தளிர்கள், வணக்கம் என்றுரைக்க!


வணக்கத்தைப் பெற்றுக் கொண்டு புன்னகையைத் தூவினாள்!


தன் மனகனவுகளைப்  புதைத்துக் கொண்டாள்!


அவ் இளந்தளிர்களின் வாழ்வை எண்ணியவாறே…!


 

 

📍 தனக்கு வந்த சோதனைகளைச் சாதனையாக்கினாள்!


அத்தளிர்களின் வெற்றிக்கு வழி வகுத்தாள்!


அவ் வெற்றியைத் தன் வெற்றியாக கொண்டாடினாள்!


தானும் வென்றதாக உணர்ந்தாள்…! வாழ்வும் மலர்ந்தது…!


 

கவிதையின் ஆசிரியர்

சு. ராஜஶ்ரீ, 

முழு நேர முனைவர் பட்ட  ஆய்வாளர்,

பதிவு எண்: 23113154022011,

தெ. தி. இந்துக் கல்லூரி,

நாகர்கோவில்.

 

பெரியாரின் பெண்ணுரிமைப் பணி | மு. ஆயிஷாம்மா

பெரியாரின் பெண்ணுரிமைப் பணி - மு. ஆயிஷாம்மா
குடும்பத்தில் புரட்சி
                   
ஈ. வே. ராமசாமியின் தங்கை பொன்னுத்தாய் என்பவருக்கு ஒரு பெண் இருந்தது.  அப்பெண் அம்மாய் அம்மாளுக்கு ஒன்பது வயதிலேயே திருமணம் செய்துவிட்டார்கள்.  மாப்பிள்ளைக்கு வயது பன்னிரெண்டு.  இத்திருமணம் 1909 ஆம் ஆண்டு நடைபெற்றது.  திருமணமான முப்பதாம் நாள், மாப்பிள்ளையைக் காலரா நோய் தாக்கிற்று.  அதனால் அவர் மாண்டார்.  ஒன்பது வயதுப் பெண் விதவையானாள்.
  அவ்விதவைக் குழந்தை அலறி அழுதது.
       
மாமா, நான் திருமணம் வேண்டுமென்று கேட்டேனா? என்னை ஏன் இக்கதிக்குத் தள்ளிவிட்டீர்கள் என்று புலம்பியது.  ஈ. வே. ராமசாமியின் நெஞ்சை நெகிழ்வித்தது. புரட்சி எண்ணம் மின்னிற்று. வெளியில் யாரிடமும் சொல்லாமல் வைத்திருந்தார்.

        அந்த விதவைக் குழந்தை, பூப்படைந்தது.  அப்பெண்ணைத் திருமணஞ் செய்துகொள்ள, ஓர் இளைஞனை ஏற்பாடு செய்தார்.  யாருக்கும் தெரியாமல், தன் மைத்துனர், அப்பெண், நம்பிக்கையுள்ள ஓர் அம்மையார் ஆகிய மூவரையும் சிதம்பரத்திற்கு அனுப்பிவைத்தார்.  திருமணஞ் செய்துகொள்ள இசைந்த இளைஞனை அச்சகத்திற்குப் பொருள்கள் வாங்கும் சாக்கில், சென்னைக்கு அனுப்பி வைத்தார்.  அவர் சென்னையிலிருந்து சிதம்பரம் போய்ச் சேரவேண்டுமென்பது ஏற்பாடு.  ஈ. வே. ராமசாமியோ, அப்போது, ஈரோட்டிலேயே தங்கிவிட்டார்.  எனவே, யாரும் எவ்வித அய்யமும் கொள்ளவில்லை.
 
       முன்னேற்பாட்டின்படி, சிதம்பரத்தில் இருந்த, ஈ. வே. ராமசாமியின் நண்பர் இல்லத்தில் திருமணம் நடந்தது.  அந்த நண்பர், அங்கு, காவல் துறை ஆய்வாளராக இருந்தார்.  எனவே, பல பெரிய மனிதர்கள், அத்திருமணத்திற்கு வந்தார்கள்.
  மணமக்கள், ஈரோட்டுக்கு வந்தபோது, அவர்களை வரவேற்க ஈ. வே. ராமசாமி, புகைவண்டி நிலையத்திற்குச் சென்றார்.  ஊரில் இச்செய்தி, காட்டுத் தீப்போல் பரவிற்று.
       
ஈ. வே. ராமசாமியின் தந்தை, ‘பெரிய அவமானம்’ வந்துவிட்டதாக எண்ணி, தலையில் கைவைத்து உட்கார்ந்துவிட்டார்.  ஈ. வே. ராவின் தாயார், சின்னத்தாய் அம்மாளோ, தூக்கில் தொங்கவே போய்விட்டார்கள்.  இந்நிலையில் உறவினர்கள் கூடினார்கள். மூன்று வீட்டாரையும், ஆறு ஆண்டுகளுக்குச் சாதியிலிருந்து தள்ளி வைப்பதாக ஒருமனதாக முடிவு எடுத்தார்கள்.  உறவினர்கள் ஈ. வே. ராமசாமியின் குடும்பத்தோடு தொடர்பினை விலக்கிக் கொண்டார்கள்.
       
தொடர்பு மீண்டும் வந்ததா? வந்தது.  எப்போது? ஈ. வே. ராமசாமி, ஈரோடு நகராட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, பேர்தல் முடிவு தெரிந்ததும் பல்வேறு சாதியாரும் ஈ. வே. ராமசாமியார் வீட்டிற்குச் சீர்வரிசைகளோடு வந்து பாராட்டினர்.
       
ஈ. வே. ராமசாமியின் உறவினர் இரண்டொருவர், ‘நம்ம சாதிக்காரர் நகராட்சித் தலைவராக உள்ளார்.  யார் யாரோ பாராட்டி விட்டு வரும்போது, நாம் மட்டும் சும்மாவிருக்கலாமா? ‘என்று எண்ணி, ஈ. வே. ராமசாமியைப் பாராட்ட வந்தார்கள்.  அவர்களுக்கு, ஈ.வே.ரா. வீட்டில் காப்பி கொடுத்தார்கள்.  அதை மறுக்காமல், உறவினர்கள் அருந்தினார்கள்.  அடுத்துப் பல உறவினர்களும் வந்து பாராட்டிவிட்டு, காப்பி அருந்திச் சென்றார்கள்.  இப்படித்தான் உறவினர் விலக்கம் ஒழிந்தது.
 
       பழமைப் பாறையாகிவிட்ட நம் சமுதாயத்தில், இச்சிறு மாற்றத்திற்காக எத்தனை தொல்லைகளைத் தாங்க வேண்டியிருந்தது பாருங்கள்.  அத்தகைய தியாகத்திற்குத் துணியாவிட்டால் சமுதாய மாற்றம் பெயரளவோடு நிற்குமென்பதை இளைஞர்களுக்கு நினைவூட்டல் என் கடமையாகிறது.
 
       விதவைகள் படும் துயரத்தைத் துடைக்கப் பாடுபட்ட பெரியார், தன் உறவினராகிய விதவைப் பெண்ணுக்குத் திருமணஞ்செய்து வைத்ததை மேலே கண்டோம்.  குழந்தை மணத்தை எதிர்த்து, பெரியாரின் தன்மான இயக்கம், தொடக்க காலம் முதல் குரல் எழுப்பியது, குழந்தை மணம் சட்த்தின் மூலம் தடை செய்யப்படும்வரை ஒவ்வொரு மாநாட்டிலும் குழந்தை மணத்தை எதிர்த்துத் தீர்மானம் போடப்பட்டது.

பெண்ணுரிமைக் கோரிக்கை
       
எடுத்துக்காட்டாக, செங்கற்பட்டு, முதல் சுயமரியாதை மாநாட்டில், ‘16 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கே மணம் செய்விக்கப்பட வேண்டுமென்றும் பெண் விதவைகளுக்கு மறுமண உரிமை தேவையென்றும், பெண்களுக்கு மணவிலக்கு உரிமை வேண்டுமென்றும்’ செய்யப்பட்ட முடிவு அக் காலகட்டத்தில் புரட்சிகரமானது ஆகும்.
       
பெண்களுக்கு ஆண்களைப்போலவே சமமாக, சொத்துரிமைகளும் வாரிசு பாத்தியதைகளும் கொடுக்கப்பட வேண்டுமென்றும், பெண்களும் ஆண்களைப்போலவே, எந்தத் தொழிலையும் நடத்திவருவதற்கு அவர்களுக்குச் சம உரிமையும் வாய்ப்பும் கொடுக்கப்படவேண்டுமென்றும், ‘பள்ளிக்கூட ஆசிரியர்கள் வேலையில் பெண்களே அதிகமாக தொடக்கக் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் வேலைக்குப் பெண்களையே நியமிக்க வேண்டுமென்றும்’ முடிவு செய்யப்பட்டது.
   
    10-5-1930 இல் ஈரோடு சுயமரியாதைப் பொது மாநாட்டில் ஆண்களைப் போன்று, பெண்களுக்கும் சொத்து உரிமை, வாரிசு உரிமை ஆகியவைகளில் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் எந்தத் தொழிலிலும் ஈடுபடவும் அதைக் கையாளவும் சம உரிமை இருக்க வேண்டுமென்றும் குறிப்பாகத் தொடக்கக் கல்வி ஆசிரியர்களாக அவர்களை அதிகமாக நியமிக்கவேண்டும்மென்றும் முடிவு செய்யப்பட்டது.
  
       பொது மாநாட்டை ஒட்டி நடந்த மாதர் மாநாட்டிலும், சொத்தில் உரிமைப் பாத்தியம், குழந்தைகளுக்குக் கார்டியன் பாத்தியம், தத்து எடுத்துக்கொள்ளல், இவைகளில் ஆண் பெண் இரு பாலாருக்கும் முழுச் சம உரிமை இருக்கவேண்டுமென்றும் முடிவு எடுத்தார்கள்.
       
ஈரோடு சுயமரியாதை மகாநாட்டிற்குத் தலைமை தாங்கிய திரு. எம். ஆர். ஜெயக்கர் திரு. ஈ. வே. ராமசாமியார் சட்டசபைகளைப்பற்றியோ அரசாங்கத்தைப்பற்றியோ கவலை கொள்ளாதவர்.  அவர் ஏழைகளுக்குத் தொண்டு செய்வதே தம் பிறவியின் பயன் என்று கருதி இருப்பவர். அவர் உங்கள் (சுயமரியாதை) இயக்கத்தில் இருக்கின்றார்.
       
‘உங்களுடைய இயக்கத்தில் ரோமன் கத்தோலிக்கக் கிறித்துவர்களும், முகமதியர்களும் சேர்ந்திருப்பது சிறப்பாகும், மதத் தலைவர்களும் காங்கிரஸ் தலைவர்களும் செய்ய முடியாத காரியத்தை நீங்கள் செய்திருக்கிறீர்கள்’ என்று பாராட்டினார்.
       விருதுநகர் மாநாட்டிலும் இதே சம உரிமை கோரி, பொது மாநாடு முடிவுசெய்தது.  விருதுநகரிலும் பெண்கள் சுயமரியாதை மாநாடு நடந்தது.  மாதர்களும் பெண்களுக்கு ஆண்களைப்போல் சொத்துரிமையில் சமத்துவமளிக்கவேண்டும் என்று முடிவு செய்தார்கள்.
      
இம்மாதர் மாநாட்டில், ‘வர்ணம் அல்லது சாதி ஆஸ்டல்கள் இருந்து வரும் வழக்கத்தை ஆட்சேபிப்பதுடன் அத்தகையவைகள் உள்ள பள்ளிக்கூடங்களுக்கு கிராண்டு முதலானவைகள் கொடுப்பதை மறுக்க வேண்டுமென்று கல்வி அதிகாரிகளைக் கேட்டுக் கொள்ளுகிறது’ என்று முடிவு செய்ததை நினைவில் கொள்வோமாக.
       ‘ஆண்களும், பெண்களும் சாதி பேதமின்றித் தங்கள் தங்கள் மனைவி கணவர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள முழு உரிமை அளிக்கப்படவேண்டுமென்றும், அதற்கேற்றவாறு திருமணச் சடங்குகள் திருத்தப்பட வேண்டுமென்றும், திருமணச் சடங்குகள் சொற்பப் பணச் செலவில் நடத்தப் பட வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டன.’

தேவதாசி முறை
       
இவற்றோடு நின்றதா பெண்களுக்கு இழைத்த அநீதி? இல்லை.  விலைமாதர், சமதர்ம நாடுகளுக்கு அப்பால் காணும் கொடுமை| நெடுங்காலமாக இருந்து வரும் கொடுமை.  எந்த நாட்டிலும் இக்கொடுமை சமயத்தோடு தொடர்புபடுத்தப் படவில்லை.  எந்த நாட்டுக் கடவுள்களும் தங்களுக்குப் பணிபுரிய என்று, பெண்கள் அணியைத் தேடவில்லை.  இந்தியாவிலும் பிற சமயங்களில் இல்லாத அநீதி, கேவலம், அநாகரீகம், இந்து சமயத்தின்பேரால், இந்து வாழ்க்கை முளையின் இன்றியமையாத பகுதியாக.  இருந்து வந்தது.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே, ஒழுக்கத்தில் நாட்டமுடையவர்கள் காறி உமிழ்ந்து, போராடி ஒழித்திருக்க வேண்டிய இந்து ‘பேடன்ட்’ முறைக்குப் பெயர், பொட்டுக் கட்டுதல்.  அப்படியென்றால்?
       
புத்தி தெரியாப் பருவத்தே, சிறுமி ஒருத்தியை உள்;ர் அல்லது பக்கத்து ஊர்க் கோயிலுக்கு அடியாளாகப், பொட்டுக் கட்டி விடுவது.  சாமிக்குப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட அவள், பின்னர் யாரையும் திருமணஞ் செய்துகொள்ளக்கூடாது.  கோயில் பணிவிடைகளில் ஈடுபடவேண்டும்.  இசை, நாட்டியம் முதலியவைகளைக் கற்று, கோயில் திருவிழாக் காலங்களில் பாடியும் ஆடியும் ஆண்டவன் தொண்டைச் செய்யவேண்டும்.  அதனால் சாமி மகிழ்ந்ததாக, மானுடன் எவனுக்கும் தகவல் இல்லை.
       
ஆனால் ஆசாமிகள் மகிழ்ந்ததாகக் கேள்வி.  பாடியவள் வீட்டுக்கு, ஆடியவள் வீட்டுக்குப் போவதில், பெரும் பண்ணையாருக்கும் சின்னப் பண்ணையாருக்கும் போட்டி மூண்டது தெரியும்.  துணிக் கடைக்காரர்களுக்கும் நகைக் கடைக்காரர்களுக்கும் போட்டி பெருகியதை அறிவோம்.  இப்போட்டிகள், அவர்களுக்குள் தீராத பகையானதோடு நிற்காமல், உள்ளாட்சி அரசியல் சண்டைகளுக்கும் குழப்பங்களுக்கும் கவிழ்ப்புகளுக்கும் காரணமாயிருந்தது ஏராளம்.
      
தேவர்க்கு அடியார்களாகப் பொட்டுக் கட்டிவிடப்பட்ட பரிதாபத்திற்குரியவரிகள் யார்? ஆயிரம் சாதிகள் கொண்ட நம் சமுதாயத்தில், சாதிக்கு ஐந்து பேர்களையோ பத்துக் கன்னிகளையோ, இப்படிக் காணிக்கை ஆக்கிவிட்டார்களா? இல்லை.  இந்த அவமானத்திற்கு, இழிவிற்கு, கொடுமைக்கு, உட்பட வேண்டிய சாதி, தனியாக ஒன்று இருந்தது.  நாட்டிலுள்ள கயவர்களுக்கெல்லாம் போக்கிடமாக வேண்டிய மாதர்கள், தனிச்சாதியைச் சேர்ந்தவர்கள்.  இம்முறைப்படி, ஒவ்வோர் கோயிலுக்கும் சில பல பொட்டுக் கட்டிய, அதாவது, பொது மகளிர் இருந்தார்கள்.  இந்த இழிவைப்பற்றி எந்த ஒழுக்கசீலனும் பொங்கி எழவில்லை.  எந்த மகானும் ‘வேண்டுதல் வேண்டாமை இலாத நிர்மலனோடு இந்த அசிங்கத்தை இணைக்காதே’ என்று அருளுரை வழங்கவில்ல.  போராட்டம் நடத்தவில்லை.  ஏன்? நம் ஆண்கள் யோக்கியதை அவ்வளவு கெட்டுக்கிடந்தது போலும்! இப்போதைக்கில்லாவிட்டால், எப்போதைக்காகிலும் பயன்படாதா என்று எண்ணினார்களோ என்னவோ? சமய முத்திரையோடு புனிதத் தன்மைஎன்னும் வெண்குடையின்கீழ், பட்டிமாட்டு ஆண்களின் கொழுப்பிற்காக நாடு தழுவிய தேவதாசி முறை கொடிகட்டிப் பறந்தது.
       
மேற்கூறிய தேவதாசி முறையை ஒழிப்பதற்காகச் சட்டம் செய்ய வேண்டுமென்ளு, திருமதி. டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் சென்னை மாகாணச் சட்டமன்றத்திற்கு மசோதா ஒன்றை அனுப்பி வைத்தார்.  அம் மசோதாபற்றிக் கருத்துத் தெரிவிக்குமாறு மாகாண அரசு பலரைக் கேட்டது.  ஈ. வே. ராமசாமியையும் கேட்டது.
       
ஈ. வே. ரா. விரிவாகக் கருத்துத் தெரிவித்தார்.  அதில் தேவதாசி முறையை ஒழிப்பதற்கு 1868 ஆம் ஆண்டு முதல் எடுக்கப்பட்ட முயற்சிகளைச் சுட்டிக்காட்டினார்.  1906, 1907 ஆம் ஆண்டுகளில் பல மாகாண அரசுகளும் இக்கொடுமையை ஒழிக்க முடிவெடுத்துக் காட்டியதைக் கோடிட்டுக் காட்டினார்.  1912 ஆம் ஆண்டு இந்திய சட்டமன்றத்தில் உறுப்பினர்கள் மாணிக்ஜி தாதாபாய், முதோல்கர், மேட்கித் ஆகியோர் இத்தகைய மசோதாவைக் கொண்டுவந்ததை நினைவுபடுத்தினார்.  இதைப் பொதுமக்கள் ஆதரித்ததால், இந்திய அரசே 1913 ஆம் ஆண்டு செப்டம்பரில் ஒரு மசோதா கொண்டுவந்ததைக் குறிப்பிட்டுக் காட்டிய ஈ.வே.ரா. அதற்குப் பொதுவாக ஆதரவு இருந்தபோதிலும் சில சில்லறை விஷயங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளால் தடைப்பட்டது என்று நினைவூட்டினார்.  மீண்டும் 1922 ஆம் ஆண்டு டாக்டர் கோர் கொண்டு வந்த மசோதா 1924 ஆம் ஆண்டு சட்டமாக்கப் பட்ட வரலாற்றை நினைவுபடுத்தினார்.
       
தேவதாசி ஒழிப்பு முயற்சியின் வரலாற்றைப் படம் பிடித்துக் காட்டிவிட்டு, ‘இந்த நாள்பட்டகொடிய சமூகக் கொடுமையை ஒழிக்க யாருக்கும் ஆட்சேபமோ எதிர் அபிப்பிராயமோ இருக்க முடியாது.  தேவதாசி என்ற ஒரு வகுப்பு இருப்பது இந்து சமூகத்திற்கே இழிவானதும் அல்லாமல் இந்து மதத்திற்கே பெரும் பழியாகும்.  ஒரு தனிப்பட்ட பெண்ணுக்கு ஏற்படும் இழிவு பெண்ணுலகத்திற்கே ஏற்பட்டதாகுமாகையால், இவ்வழக்கம் பெண்களின் அந்தஸ்தையும் கவுரவத்ததையும் பெரிதும் பாதிக்கக்கூடியதாய் இருக்கின்றது.  அன்றியும் ஒரு குறிப்பிட்ட சாதியையோ சமூகத்தையோ விபசாரத்திற்கு அனுமதி கொடுப்பதும் பின்னர் அவர்களை இழிந்த சமூகமாகக் கருதுவதும் பெரும் சமூகக் கொடுமையாகும்.  சிறு குழந்தைகளில் இருந்து துராச்சார வழிகளில் பயிற்றுவிப்பது ஜன சமூக விதிகளையே மீறியதாகம்’ என்று அழுத்தந்திருத்தமாகக் கருத்தினைத் தெரிவித்து, பொட்டுக் கட்டுவதைத் தடுக்கம் சட்டத்திற்கு நாடறிய ஆதரவு கொடுத்தார்கள்.
       
மேலும், கோயில்களில் கடவுள்கள் பெயரால், பெண்களுக்குப் பொட்டுக் கட்டி அவர்களையே பொது மகளிர்களாக்கி, நாட்டில் விபசாரித்தனத்திற்குச் செல்வாக்கும் மதிப்பும் சமய சமூக முக்கிய ஸ்தாபனங்களில் தாராளமாய் இடமும் அளித்துவரும் ஒரு கெட்ட வழக்கம், நமது நாட்டில் வெகு காலமாய் இருந்து வருகின்றது.  அன்றியும் நாளாவட்டத்தில் இது ஒரு வகுப்பிற்கே உரியது என்பதாகி, இயற்கையுடன் கலந்த ஒரு தள்ளமுடியாத கெடுதியாய் இந்த நாட்டில் நிலைபெற்றும் விட்டது.  ஒரு நாட்டில் நாகரீகமுள்ள அரசாங்கமாவது அல்லது நாட்டின் சுயமரியாதையையோ, குடிமக்களின் ஒழுக்கத்தையோ நலத்தையோ கோரின அரசாங்கமாவது ஒன்றிருந்தால் இந்த இழிவான கெட்ட பழக்கம் கடவுள் பேராலும், மதத்தின் பேராலும், சமூகத்தின் பேராலும், தேசிய வழக்கத்தின் பேராலும் இருந்துவர ஒரு கணநேரமும் விட்டுக்கொண்டு வந்திருக்காது என்றே சொல்வோம்’ என்று சாடினார்.
       
திருமதி டாக்டர் முத்துலெட்சுமி அம்மையார் கொண்டுவந்த மசோதா, வைதிகர்களின் சலசலப்பைப் பொருட்படுத்தாது, சட்டமாக்கப்பட்டது.  அது செயல் முறைக்கும் வந்தது.  அதன் விளைவாக, இந்த அவமானம் ஒழிந்ததோடு, அநீதிக்கு ஆளான அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள்,இழிவிலிருந்து விடுபட்டு, கல்வி கற்று, மற்ற சமூகங்களைப்போன்ற நிலைக்கும் மதிப்பிற்கும் வளர்ந்து வந்துவிட்டார்கள்.

ஆண் பெண் ஏற்றத்தாழ்வு
       
சாதி ஏற்றத்தாழ்வை விட ஆழமாகவும் அகலமாகவும் பரவியிருப்பது ஆண் பெண் ஏற்றத்தாழ்வாகும்.  இருவகை ஏற்றத்தாழ்வும் விரைந்து ஒழிக்கப்படவேண்டும்.  சாதி ஏற்றத்தாழ்வை ஒழிப்பது காட்டாற்றில் எதிர்நீச்சல் போடுவதுபோலாகும்.  ஆண் பெண் சமத்துவத்தை அடைவது, நெருப்பாற்றில் எதிர்நீச்சல் போடுவதற்கு ஒப்பாகும்.  எனவே, இதுபற்றிப் பெரியாரின் கருத்துகளைப் படிப்போம், சிந்திப்போம், கற்றபடி நிற்போமாக.
       
பெரியார், பெண்ணின் பெருமைபற்றி ‘பெண்கள் மனித சமுதாயத்தில் சரி பகுதி எண்ணிக்கைகொண்டவர்கள்.  இரண்டொரு உறுப்பில் மாற்றம் அல்லாமல், மற்றப்படி பெண்கள் மனித சமுதாயத்தில் ஆண்களுக்கு முழு ஒப்பும் உவமையும் கொண்டவர்கள் ஆவார்கள் என்பேன்.  அவர்களால் வீட்டிற்கு, சமுதாயத்திற்குப் பயன் என்ன? எங்கே கெட்டபேர் வந்துவிடுகிறதோ என்பதுதானே? இன்று பெண்கள் வேலை என்ன? ஓர் ஆணுக்கு ஒரு பெண்ணாய் அமைவது.  அது எதற்கு? ஆணின் நலத்திற்குப் பயன்படுவதற்கும், ஆணின் திருப்திக்கும், ஆணின் பெருமைக்கும் பெண் ஓர் உபகருவி என்பதல்லாமல் வேறு என்ன? ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி, ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி, ஓர் ஆணின் குடும்பப் பெயருக்கு ஒரு பிள்ளை விளைவிக்கும் பண்ணை.  ஓர் ஆணின் கண் அழகிற்கும் மனப்புளகாங்கிதத்திற்கும் ஓர் அழகிய அலங்கரிக்கப்பட்ட பொம்மை என்பதல்லாமல், பெண்கள் பெரிதும் எதற்குப் பயன்படுகிறார்கள், பயன்படுத்தப்படுகிறார்கள்?’ என்று கேட்டு, நமது சிந்தனையைத் தூண்டிவிட்டார்.
       
‘கற்பு என்பதைச் சுகாதாரத்தையும் சரீரத்தையும் பொது ஒழுக்கத்தையும் பொறுத்து நான் ஆதரிக்கிறேன்.  என்றாலும் இன்று அந்த முறையில் கற்பு கையாளப்படுவதில்லை.  கற்பு ஆண்களுக்கு வலியுறுத்தப்படுவதில்லை’ என்பதிலிருந்தே இதை உணர்ந்து கொள்ளலாம்.
        ‘பெண்களுக்குத்தான் கற்பு, ஆண்களுக்கு வலியுறுத்தக்கூடாது என்கிற தத்துவமே தனியுடைமைத் தத்துவத்தைப் பொறுத்தது’ என்று சுட்டிக் காட்டினார்.

பெண் விடுதலை
       
பெண் ஆணுடைய சொத்து என்பதுதான் இன்றைய மனைவி என்பவர்களின் நிலை. ஆதலால், ‘ஒரு பிறவிக்கு ஒரு நீதி’ என்கிற கற்புமுறை ஒழிக்கப்படவேண்டும்.  ஆண்கள் திருந்த வேண்டின் இத்தகைய அதிர்ச்சி மருத்துவம் தேவை.
        பெண்கள் விடுதலைபற்றிப் பெரியார் ஒளிவு மறைவின்றிப் பேசியும் எழுதியும் வந்தார்.  ‘பெண்களுக்கு மதிப்பு கொடுப்பதாகவம் பெண்கள் விடுதலைக்காகப் பாடுபடுவதாகவும் ஆண்கள் காட்டிக் கொள்வதெல்லாம் பெண்களை ஏமாற்றுவதற்குச் செய்யும் சூழ்ச்சியே ஒழிய வேறல்ல.  எங்காவது பூனைகளால் எலிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது நரிகளால் ஆடு கோழிகளுக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது முதலாளிகளால் தொழிலாளிக்கு விடுதலை உண்டாகுமா? எங்காவது வெள்ளைக்காரர்களால் இந்தியர்களுக்குச் செல்வம் பெருகுமா? எங்காவது பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாத வர்களுக்குச் சமத்துவம் கிடைக்குமா என்பதை யோசித்தால், இதன் உண்மை விளங்கும்.  அப்படி ஒருகால் ஏதாவது ஒரு சமயம் மேற்படி விஷயங்களில் விடுதலை உண்டாகிவிட்டாலும்கூட, ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது, என்பதை மாத்திரம் உறுதியாய் நம்பலாம்’ என்று பெரியார் முழங்கினார்.  இது கசப்பாயிருப்பினும் உண்மைதானே.  உரிமை, பரிசுப் பொருள் அல்லவே!
       
ஆண்கள் பெண்களை நடத்தும் முறைபற்றி ‘பெண் மக்களை இன்று ஆண்கள் நடத்தும் மாதிரியானது, மேல்சாதிக்காரன் கீழ்ச்சாதிக்காரனை நடத்துவதை விட, பணக்காரன் ஏழையை நடத்துவதைவிட, எசமான் அடிமையை நடத்துவதைவிட மோசமானதாகும்.  ஆண்கள் பெண்களைப் பிறவிமுதல் சாகும்வரை அடிமையாயும் கொடுமையாயும் நடத்துகின்றார்கள்’ என்று பெரியார் படம் பிடித்துக்காட்டி ‘தனி உரிமை உலகில், பெண்கள் உரிமை வேண்டுமென்பவர்கள், பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும்.  தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்கவைக்க வேண்டும்.  வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழில் கற்றுக்கொடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார்.
        மேலும் அவர் கூறுவதாவது: ‘இது என்ன நியாயம்? மனித சமுதாயம் தவிர மற்றப்படி மிருகம், பட்சி, பூச்சி முதலியவைகளில் வேறு எந்த உயிராவது, “ஆண்களுக்காகவே இருக்கிறோம் நாம்” என்ற கருத்துடன், நடத்தையுடன் இருக்கிறதா?
       
இந்த இழிநிலை பெண்களுக்கு அவமானமாய்த் தோன்றவில்லை என்பதற்காகவே, ஆண்கள் பெண்களை இவ்வளவு அட்டூழியமாக நடத்தலாமா என்று கேட்கிறேன்.  ஓர் ஆண் ஒரு பெண்ணைத் தனது சொத்து என்று எண்ணுகிறானே எதனால்? துணியாலும் நகையாலும் தானே!
       
நான் பாமர மக்களை மாத்திரம் சொல்லவில்லை.  நம் அறிஞர், செல்வர், தனக்கென வாழாப் பிறர்க்குரியாளர் ஆனவர்கள் என்று சொல்லப்படும் பெரியார்களின் யோக்கியதைகளையும், அவர்கள் பெண்கள் உலகத்துக்கு ஆற்றும் தொண்டுகளைப் பற்றியுமே சொல்லுகிறேன்.
        திராவிடப் பேரறிஞர்களின் மனைவிகள், தங்கை, தமக்கைகள், பெண்கள் எப்படிப் பிறந்தார்கள்? எப்படி வளர்ந்தார்கள்? எப்படித் தகுதி ஆக்கினார்கள்? எப்படி இருக்கிறார்கள்? நகைக் கடைகள், துணிக்கடைகள், ஆகியவற்றில் விளம்பரத்திற்கு வைத்திருக்கம் அழகிய பொம்மைகள் உருவங்கள் போலல்லாமல் – நாட்டு மனித சமுதாயத்திற்குப் பெண்கள் உலகத்திற்கு இவர்கள் என்ன மாதிரியில் தொண்டாற்ற அல்லது தாங்களாவது ஒரு புகழோ, கீர்த்தியோ பெறத்தக்கபடி வைத்தார்களா? இவர்களே இப்படி இருந்தால் –  மற்றப் பாமர மக்கள், தங்கப்பெட்டியின் உள்ளே, வெல்வெட் மெத்தைபோட்டுப் பூட்டித்தானே வைப்பார்கள்!
       
‘நம் பெண்கள் நகைகள் மாட்டும் ஸ்டாண்டா? இந்தப் பிரபல ஆண்கள் பிறந்த வயிற்றில்தான் இவர்கள் தங்கை தமக்கையர் பிறந்தார்கள்.  இவர்கள் தகப்பன்மார்கள்தான் அவர்களுக்கும் தகப்பன்மார்கள்.  அப்படி இருக்க, இவர்களுக்கு இருக்கும் புத்தி, திறமை அவர்களுக்கு ஏன் இல்லாமல் போகம்? இதைப் பயன்படுத்தாதது நாட்டுக்கு, சமூகத்திற்கு நட்டமா இல்லையா?
  ‘நகைக்கும் துணிக்கும் போடும் பணத்தைப் பாங்கியில் போட்டுக் குறைந்த வட்டியாவது வாங்கி, குழந்தை பிறந்தவுடன் அதை எடுக்க, அந்த வட்டியில் ஓர் ஆளைவைத்தாவது அதைப் பார்த்துக் கொள்ளச் செய்தால், அன்பு குறைந்துவிடுமா? பெற்ற தகப்பன் குழந்தையை ஆட்கள் மூலம் வளர்க்க வேண்டும்.  சமையல் ஆட்கள் மூலம் செய்விக்க வேண்டும்.  பெண்கள் ஆண்களைப் போல் உயர்வேலை பார்க்க வேண்டும்.  பொம்மைகளாக நகை மாட்டும் ஸ்டாண்டுகளாகக் கூடாது என்கிறேன்.
        ‘ஆண்கள் பார்க்கம் எல்லா வேலைகளையும் தொண்டுகளையும் பெண்கள் பார்த்துச் செய்யமுடியம் என்பேன் ஆனால் நகைப்பித்து, துணி அலங்காரப் பித்து, அணிந்துகொண்டு சாயல் நடை நடக்கும் அடிமை, இழிவு, சுயமரியாதை அற்ற தன்மைப் பித்து ஒழியவேண்டும்.’ இப்படிப் பெரியார் பெண்கள் விடுதலைக்கு வழி காட்டினார்.
       
ஒருவருக்கோ ஒரு கூட்டத்துக்கோ விடுதலை கொடுக்கிறோம் என்றால் அவரையோ அக்கூட்டத்தையோ அதற்குத் தகுதியாக்குதல் முதற்கடமையாகிறது.  பாரதிதாசன் கேட்டது போல், ‘கண் திறக்காத போது, விடுதலை வாழ்வின் கதவு திறந்தால் பயன் ஏது?’
        களைய வேண்டியவற்றைச் சுட்டிக்காட்டிய பெரியார், வளர்க்கவேண்டியவற்றைக் கோடிட்டுக்காட்டத் தவறவில்லை.  இதோ பெரியார் உரை:
        
‘ஒன்று, இரண்டு, மூன்று கூட எண்ணத் தெரியாத நிலையில் உள்ள பெண்களைக் கட்டிக்கொண்டு, அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பது என்றால் எப்படி முடியும் என்று யோசித்துப் பாருங்கள்’

முடிவுரை
      
தனி உரிமை உலகில் பெண்களுக்குச் சுதந்திரம் வேண்டுமென்பவர்கள் பெண்களை நன்றாய்ப் படிக்க வைக்கவேண்டும்.  தங்கள் ஆண் பிள்ளைகளை இலட்சியம் செய்யாமல், பெண்களுக்கே செலவு செய்து படிக்க வைக்கவேண்டும்.  வாழ்க்கைக்கு ஏதாவது ஒரு தொழல் கற்றுக்கொடுக்கவேண்டும் தாய் தகப்பன்மார்கள் பார்த்து ஒருவனுக்குப் பிடித்துக்கொடுப்பது என்று இல்லாமல் அதுவாகவே பெண்ணாகவே பார்த்து, தகுந்த வயதும் தொழிலும் ஏற்பட்ட பிறகு – ஒருவனைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி செய்யவேண்டும்.  சுருக்கமாகச் சொன்னால், கன்னிதானம், கலியாணம் – தாரா முகூர்த்தம் என்கிற வார்த்தைகளே மறைந்து அகராதியில் கூட இல்லாமல் ஒழியவேண்டும்.  அன்றுதான் பெண்கள் சுதந்திரம் அனுபவிக்க இலாயக்குள்ளவர்கள் ஆவார்கள்.’ இப்படிப் பெரியார் கூறும்போது பலருக்குக் குமட்டும்| முகம் சுழிக்கும்.  இருப்பினும் சிந்தித்துப் பாருங்கள்.  இவ்வாறு பெரியார் உண்மை தத்துவத்தை சமுதாய மக்களுக்கு எடுத்துரைத்தார்.

சான்றெண் விளக்கம்

1.பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள், ப.சு.கௌதமன் பாரதி புத்தகாலயம்.

2.பெண் விடுதலை,   பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு.

3.தந்தை பெரியாரின் பொதுவுடைமைச் சிந்தனைகள், பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு

4.திராவிடர் கழக வரலாறு, கி. வீரமணி, பெரியார் சுய மரியாதை பிரச்சால நிறுவன வெளியீடு

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மு. ஆயிஷாம்மா
உதவி பேராசிரியர்,
தமிழ்த்துறை
மு.சா.ச. வக்பு வாரியக் கல்லூரி 
மதுரை-20
மின்னஞ்சல்:  maaisamma@gmail.com
 

இரும்புப் பெண்|கவிதை| து. அனிதா

இரும்புப் பெண் - கவிதை - து. அனிதா

தாயின் கருவறையில் வந்துதித்து


மெல்ல தளிர் நடையிட்டு 


பூவுலகை பார்க்க எண்ணி


கல்வி எனும் பூஞ்சோலைக்குள் -புகுந்து


கண்களில் கனவை சுமந்து – கனவை


நனவாக்கி வெற்றி நடைபோடும் நீ


அறிவாயா ! நாளைய தலைமுறை


உன் வழிகாட்டலின் படி என்று !


புது சமூகத்தையே மாற்றும்


வல்லமைபடைத்த நீ   வலிமை கொண்ட       

இரும்புப்பெண்ணே !  


கவிதையின் ஆசிரியர்

து. அனிதா,


பதிவு எண் :23213154022022,


முழு நேரமுனைவர் பட்ட ஆய்வாளர்,


தமிழ் கலை ஆய்வகம்,


தெ.தி இந்து கல்லூரி,


நாகர்கோவில் -2

 

 

மாறிவரும் கொல்லிமலை |ஆய்வுக்கட்டுரை| முனைவர் க.கணியன்பூங்குன்றனார்

மாறிவரும் கொல்லிமலை - கணியன்பூங்குன்றனார்
ஐந்து நில பாகுபாட்டில் முதலாவதாக வைத்துப் போற்றப்படுவது குறிஞ்சித்திணையாகும். இந்நிலத்தலைவன் சேயோன் என தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். நாம் முருகன் என்கின்றோம். முருகு என்பதற்கு அழகு என்ற பொருள்படும். மலையும் அழகுதான் மலைகடவுளாகிய முருகனும் அழகன் தான் என்பதை யாவரும் அறிந்த ஒன்றாகும். இத்தகு அழகு மிகுந்த தமிழக மலைகளில் ஒன்று கொல்லிமலை ஆகும். அக்கொல்லிமலை மனித சமுதாயத்திற்குப் பல வளங்களையும், நலன்களையும் கொடையாக இன்றளவும் கொடுத்துக்கொண்டு வருகிறது. சங்கால புலவர்களால் புகழப்பட்ட வல்வில் ஓரியின் கொல்லிமலையின் தனிதன்மைகளை  எடுத்துரைக்கும் விதமாக இக்கட்டுரை அமைகின்றது.

கொல்லிமலை
தமிழகத்தின் அரணாக மலைகள் விளங்குகின்றன. மேற்குதொடர்ச்சி மலைகள், கிழக்குத்தொடர்ச்சி மலைகள் எனப் பகுக்கப்படுகின்றன. இதில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் வரிசையில் கொல்லிமலை, பச்சைமலை மற்றும் போதமலை போன்ற மலைகள் இடம்பெறுகின்றன. மேலும், சங்க காலத்தில் கொங்கு நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் எல்லையாக இருந்தது கொல்லிமலையாகும். இம்மலையின் சிறப்புப் பற்றி,

“தரை மீ என்னதெலா வளஞ்சொறிக்கொல்லி” 1 
“எனவும், அறப்பள்ளீசுவர சதகத்தில் சதுரகிரி” 2
எனவும் ,கூறப்பட்டுள்ளது. இதனால் கொங்கு நாட்டில் பல மலைகள் இருந்தாலும், அதிக வளம் மிக்க மலை கொல்லிமலையாகும் என்பதை இதன் வழி அறிந்துகொள்ள முடிகின்றது.
               
கொல்லிமலையின் இயற்கை அழகு, ரசிக்கின்ற மன எண்ணம் கொண்டவர்களுக்கு விருந்தாகும். இவ்வகையில் கொல்லிமலை ஏறத்தாழ நான்காயிரம் அடி உயரமுடையது. இந்த மலை நாட்டிற்கு 1961-62 -ஆம் ஆண்டிலேயே சுமார் 29 லட்சம் ரூபாய் செலவில், 70 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. பாதையின் நீளம் 22.4 கிலோ மீட்டர் ஆகும். இம்மலையின் இயற்கை அழகினை காண, இந்தக் கொண்டை ஊசி வளைவுகளில் நாம் பயணிக்க தொடங்கும் முன், கொல்லியை ஆட்சி செய்த வல்வில் ஓரியின் வீரத்தை பற்றி

“வில்லோர் வாழ்க்கை விழித்தொடை மறவர்”3
               
என்று அம்மூவனார் பாடியுள்ள திறத்தால் அறிய முடிகிறது. சிமெண்ட்டில் அவருக்காக வைக்கப்பட்டுள்ள சிலையின் அழகு காட்சியையும், இயற்கையோடு இயைந்து வாழ்ந்த அன்றைய மனிதனின் மன எண்ணங்களையும், எண்ணிப் பார்த்துக் கொண்டை ஊசி வளைவுகளில் பயணிக்கும் போது உண்டாகும் மன உணர்வு மகிழ்ச்சி அளிக்கிறது.
மேலும், மலைவாழ் விலங்கினங்களான யானை, புலி, கரடி, பன்றி, உடும்பு மற்றும் குரங்கு இனங்கள் வாழ்ந்த அழகு காட்சிகளைச் சங்கப் புலவர்களின் பாடல்கள் வழியே காண முடிகிறது.  அந்த அழகினை,

” அந்தக் குமிழின் கொடுமூக்கு விளைகனிஎறிமடமாற்கு வல்சியாகும்”
“களிறு சோர்வு மிருஞ்சென்னியமைந்து மலிந்த மழகளிறு”
“வேழம் வீழ்த்த விழுத்தொடைப் ப கழி”6
உருவக் குருவின் நாள் மேல் ஆரும்மாரி எண்களின் மலைச்சுர நீள் இடை”7

என்ற வரிகளோடு நினைவில் நிற்க, இன்றைய சூழ்நிலையில் குரங்கினங்கள் மட்டும் மகிழ்ச்சியுடன் உலாவுகின்ற சூழல் உருவாகி உள்ளதைக் காணமுடிகிறது.

விலை பொருட்கள்
கொல்லிமலையின் விலை பொருட்களாக இருந்த பலா, தேன், மலை வாழை, அன்னாசி, கொய்யா முதலிய பல வகைகளும், கிழங்கு வகைகளும் இருந்தன. ஆனால் தற்போது, இவை மட்டுமின்றி மிளகு, சோம்பு, கடுகு, காபி மற்றும் நெல் வகைகளும் விளைவிக்கப்படுகின்றன. இவை மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு நன்மை தருவனவாகும். ஆனால் சங்கப் புலவர்களால் பாடப்பெற்ற சிறப்புகளில் கொல்லிமலையின் பலாப்பழம் பற்றி, 

“சாரல் பலாவின் கொழுந்துனர் நறும்பும் 
இருங்கல் விட ரனை வீழ்ந்தெனை வெற்பில்
பொருந்தேன் இறாஅல் கீறும் நாடன்”8
               
என்ற கபிலரின் பாடல் வழியே உணரலாம். இச்சிறப்பினைப் பெற்ற பலா, அன்னாசி போன்ற பழம் பெருமை பெற்ற பொருட்களெல்லாம், தற்போது மலைவாழ் மக்களின் மன மாற்றம் காரணமாக, பணப்பயிர்களின் மோகம் அதிகரித்து, கொல்லிமலையின் பழம் சிறப்பானது மாறிவரும் சூழல் உருவாகி இருப்பதை அறியலாம்.

சோலைகளில் அழகு
கொல்லிமலைச் சாரலானது குறிஞ்சி நிலத்திற்குரிய முழு அழகையும் பெற்றிருந்தது என்பதனை,

“குருதி வேட்கை உருகிழு வயமான்
மரம் பயில் சோலை மலியப் பூழியர்”9
 
எனும் நற்றிணை பாடல் சிறப்பிக்கிறது. ஆனால் இன்றைய சூழலில் பணப்பயிர்களுக்காக சோலைகள் உருமாற்றம் பெற்று, மனிதன் தன் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக நிலத்தின் வடிவத்தையே மாற்றியிருப்பதைக் காணமுடிகிறது.

மலர்களின் அழகும் நறுமணங்களும்
இனிய மணம் கமழுகின்ற 99- வகையான மலர்களைப் பற்றி, குறிஞ்சிப்பாட்டில் கபிலர் பட்டியலிட்டு உள்ளமை நாம் அறிந்ததே.  அவ்வகையில் கொல்லிமலையில் நடந்து செல்லும் இடமெல்லாம் வகை வகையான பூக்களும், திசை தோறும் திரும்புகையில் பல்வகை நறுமணங்களும் வீசுவதை அவ்விடம் சென்றவரே உணர்வர் .இம்மலையின் மலர் வளம் பற்றி, 
“உரைசால் உயர்வ ரைக்கொல்லிக் குடவயின
அகல்இலைக் காந்தள் அலங்குலைப்பாய்ந்து ” 10
“பைஞ்சுனைக் குவளைத் தன் தழை”11
———————— வந்தே ஓரி
பல்பழப் பலவின் பயங்கெழு கொல்லிக் 
கார் மலர் கடுப்ப நாறும் “12
               
எனும் சங்கப் புலவர்கள் பாடியுள்ளமையால் இன்றளவும் அறிய முடிகிறது மலைவாழ் மக்களின் இன்றைய வளர் நிலையில் இயற்கையாக மலரும் மலர்கள் மட்டுமல்லாது, பல் வகை உயிரினங்களும், மலர்களும் வாசனை இல்லாத அழகு மலர்களும் காட்சிக்காக இடம் பெற்றுள்ளன, என்பதையும் அறியலாம்.

மூங்கில் அழகு
கொல்லிமலைச் சாரலில் கூட்டம் கூட்டமாக மூங்கில் செழுமையுடன் வளர்ந்தோங்கி நிற்கும் காட்சி அழகு நிறைந்ததாகும். அதனுடைய இன்றியமையா பயன்பாட்டைக் கொண்டே மலை மக்களின் வாழ்க்கை முறையும் செழுமையுற்று இருந்தது. வீடுகளுக்கானக் கட்டுமான பொருட்களுக்கும், மாட்டுத் தொழுவம், ஆட்டுப்பட்டி ஆகிய இடங்களில் புழங்கு பொருட்களுக்கும் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்காலத்தில் சிமெண்ட் மற்றும் கம்பிகளால் ஆன கான்கிரீட் வீடுகள் கட்டப்படுகின்றன. மேலும் புழங்கு பொருட்களுக்கு நெகிழி பயன்படுத்தப்படுகிறது. இந்த மூங்கில்களைப் பற்றிய குறிப்புகள் சங்கப் பாடல்களில் நிரம்ப கிடைக்கின்றன என்பதை,
“கழை விரிந் தெழுந்தெரு மழை தவழ்  நெடுங்கோட்டுக்
கொல்லிப் பொருந கொடித் தேர்ப் பொறைய “13
என்று பாடல் குறிப்பிடுகிறது. கொண்டை ஊசி வளைவுகளில் இறங்கி வரும் நேரத்தில் இயற்கை அழகோடு மூங்கில் மரங்களின் காட்சியும், கண்ணிற்கு இனிய விருந்தாக அமைகிறது. இக்காட்சிகளை சங்ககாலப் புலவர் பெருமக்கள் தம் பாடல்களில் உவமை கொண்டு ஒப்புவித்த பாங்கு வியக்க வைக்கிறது.

மூலிகை வளம்
கொல்லிமலை மூலிகைகள் நிரம்பி இருக்கும் மலையாகும். சித்தர்கள் வாழும் மலை. பலவகையான நோய்களை நீக்கும் மலை. எல்லா வளமும் நிரம்பி இருக்கும் வரை இம்மலையை நாடிவரும் இரவலர்களும், இம்மலையிலேயே வசிப்பவர்களும் இங்கே நிறைந்திருக்கும் செவேர் பலாவின் தீஞ்சுளைகளைத் தேனில் தொட்டு உண்பர். வள்ளல் வல்வில் ஓரியின் உள்ளம் போல் இயற்கை அழகுடன் மூலிகை வளமும் உடல் நலமும் காக்கின்ற குளிர்ந்த சோலைகளும், நீர் வளமும், நில வளமும் மிக்கதாகவே இம்மலை உள்ளது. இச்சிறப்பினைப் பற்றி,

“கொல்லிமலைத் தேன் சொரியும் கொற்றவா நீ 
முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்”14 
               
எனும் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் வரிகளால் நினைவு கூற முடிகிறது. அந்த அளவிற்கு மூலிகையின் சிறப்பைக் கொல்லிமலை  இன்றளவும் கொடுத்துக்கொண்டு இருக்கின்றதை அறிந்துகொள்ள முடிகின்றது.

இயற்கைப்பாவை, கொல்லிப்பாவை எனும் எட்டுக்கை அம்மன்
                கொல்லிமலையின் இயற்கை அழகு எவ்வகையில் வியக்கத்தக்கதோ, அதுபோல் அங்கே அமைந்திருக்கின்ற தெய்வங்களில் ஒன்றான கொல்லிப் பாவை பற்றிய செய்திகளும், அறிஞர்கள் இடையே பல கருத்து வேறுபாடுகளுடன் நிலவுகிறது.
 
1.இயற்கையாகவே கொல்லிமலையில்அமைந்திருக்கிறது.
2. தெய்வத்தால் உண்டாக்கப்பட்டது.
3.கொல்லிப்பாவை இயங்கும் தன்மை உடையது. 
4. கொல்லிப்பாவையைப் பற்றிய புராணக் கதை ஒன்று உண்டு.
5. சமகால மக்கள் கொல்லிமலையில் இருக்கின்ற காளி சிலையாகிய எட்டுக்கை அம்மனை கொல்லிப்பாவை என்கின்றனர். 
6. அருவிக்கு அருகில் கொல்லிப் பாவை இருக்கலாம்.
               
இவ்வாறான பல்வேறு கருத்துக்கள் பொது மக்களிடையேயும் நிலவி வருகின்றன. இன்றைய சூழலில் எட்டுக்கை அம்மனே கொல்லிப்பாவை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இருப்பினும் குறுந்தொகையில் கபிலர்,
 
“வல்வில் ஓரி கொல்லிக் குடவரைப் 
பாவையின் மடவந்தனளே”15
               
என்ற அடிகள் இடம் பெற்று இருப்பதாலும், சங்க இலக்கியப் புலவர் பலரின் பாடல்களில் பாவை பற்றிய செய்திகள் இருப்பதாலும், அவை உண்மையானவை என்பதாலும், சங்க இலக்கியப் பாடல்கள் பொய் கலவாதன எனும் கூற்றாலும்  இச்செய்தியை நம்ப முடிகிறது.
 
கொல்லிமலையை பற்றி பல செய்திகள், பல தலைப்புகளால் ஆராயப்பட்டாலும் சங்க இலக்கியப் பாடல்கள் வழி அக்கால சூழலையும், இயற்கை அழகினையும் உணர முடிகிறது. அதுபோலவே இன்றைய சூழலில் கொல்லிமலைக்கு நேரில் சென்றால் அங்குச் சுட்டிக்காட்டப்பட்ட விலங்கினங்களில் குரங்கினங்கள் மட்டுமே பெரிதும் உள்ளன. அவை மகிழ்ந்தும் காண்போரை மகிழ்வித்தும் அழகியகாட்சியுடன் இயற்கை அழகை மெருகேற்றுகின்றன. கொல்லிமலையானது வரலாறு போற்றும் பெருமையுடனும், இயற்கை வளத்துடனும், உடல் நலம் காக்கும் மூலிகைகளுடனும், இயற்கைச் சூழலோடு அறிவியலும் இணைந்து முன்னேற்றத்தை முதன்மையாகக் கொண்டு அங்கு வாழும் மக்கள் வளம் குறையாமலும், நாகரீகத்துடன் வளர்கின்ற சூழலும், மாறிவரும் மாற்றங்களும் மாண்புடையதாக காணப்படுகிறது. இம்மலையானது வள்ளல் வல்வில் ஓரியின் கொடை கொடுத்தல் பண்பு போலவே இன்றளவும் செல்வோருக்கெல்லாம் கொடையாக அமைகிறது.

சான்றெண் விளக்கம்
1. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் – எஸ்.என் பி.குருக்கள்

2. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர்-.இ.செல்வராசு .மா.ஆ.
 
3. அகம்-பா.35 ‌-அம்மூவனார் 

4. நற்றிணை –பா.6- பரணர்

5. புறம்-பா.22- குறுங் கோழியூர்க்கிழார்

6. புறம் –பா. 152 வன்பரணர்

7. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

8. ஐங்குறுநூறு –பா.214- கபிலர்.

9. நற்றிணை –பா.192- பெயர் தெரியவில்லை.

10. நற்றிணை –பா.185- பெயர் தெரியவில்லை.

11. குறுந்தொகை –பா.342- சுந்தரத்தனார்.

12. அகநானூறு –பா.208- பரணர்.

13. பதிற்றுப்பத்து –பா.73- அரிசில் கிழார் .

14. வல்வில் ஓரி இலக்கிய விழா மலர்- கட்டுரையாளர் வே.குருசாமி

15. குறுந்தொகை –பா.100- கபிலர்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.கணியன்பூங்குன்றனார்
தமிழ்த்துறைத்தலைவர்

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)

இராசிபுரம்.

 

அம்மா மரம்|கவிதை|ச. குமரேசன்

அம்மா மரம் கவிதை ச. குமரேசன்
🎯 நாட்டு நடப்புகள்
 
நல்லவை கெட்டவை

அன்றாட அழுத்தங்கள்
 
அரைகுறை தூக்கம்
 
அனைத்தையும் பகிர்ந்திட
 
அன்பை அள்ளித்தர
 
அம்மா ஒருவர் தான் அனைவருக்கும்..!

 
🎯 அம்மாவின் குரல் கேட்டால்

அழுத்தமான மனது

அரை சதமாய் குறையுமென்ற
 
ஆராய்ச்சியாளர் அறிவிப்பு ஒன்றை

அறிய முடிந்தது..!

 
🎯 அரக்கப் பறக்க ஓடி

அலுவலகப் பணிகள்

அயராது செய்து முடிப்போம்..!
 
 
🎯 வாரத்தில் ஒரு நாள்

வாகாய் ஓய்வெடுக்க
 
வந்தமரும் இடம் எது?
 
 
🎯 அம்மாவுக்காக மனது

அழுது ஏங்கும்!
 
அப்போது
 
அவர் நட்ட செடி ஒன்று
 
ஆகாயமளவு மரமாய் வளர்ந்து

மனதை ஆற்றும்..!

 
🎯 அதில்,

பகலெல்லாம்

பறவை இனங்கள்

பல பல வந்து

இன்னிசை பாடி

இதமாய் இளைப்பாறும்..!
 
 
🎯 அம்மாவின்

ஒரு குரல் கேட்க

ஏங்கிய எனக்கு

அவர் பல குரலால்

பாடல் இசைத்துப்

பாரத்தைப் பாதியாய்

குறைக்கிறார் இன்றளவும்..!

கவிதையின் ஆசிரியர்
ச. குமரேசன்,

உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

இராசிபுரம்.

 

கடவுளின் தேசம்!  கல்லறையின் வசம்! |கவிதை|ப.பிரபாகரன்

கடவுளின் தேசம்! கல்லறையின் வசம்! கவிதை ப பிரபாகரன்
🎯 பொழுது விடியும் முன்னே

விழித்தெழுவோம் என்றே

உறங்கினோம் !

 
🎯 விடிந்தும் எழவில்லை

விழித்தெழும் நிலையிலும்

நாங்கள் இல்லை!

 
🎯 நிலச்சரிவே!

நும்பசிக்கு உணவாகாது

தப்பினோம் பலமுறை!

 
🎯 காட்டாற்று வெள்ளமே!

கருணையில்லையோ நுமக்கு!

அபாயம் அறியும் முன்னே

ஏப்பமிட்டுச் சென்றாயே!

 
🎯இறந்தபின் புதைக்கும் வழக்கம்

எங்குமுண்டே! இதுபோல்..

உயிரோடு புதைக்கப்படுவோமென

ஒருபோதும் நினைத்ததில்லையே!
 
🎯நேற்று நாங்கள் உறங்கியது

எங்கள் வீட்டு மெத்தையில்தான்!

இன்று புதைந்து கிடந்ததோ

பன்னிரண்டு கிலோமீட்டருக்கு

அப்பால்!

 
🎯அட கடவுளின் தேசமே

இனி கல்லறையின் வசமா?
 
🎯நாயைக் கொண்டு கண்டுபிடித்தீர்

இறுதிக்கடன் செய்ய உதவினீர்
நன்றிகள் நாயகர்களே!!

 
ப.பிரபாகரன்

த/பெ பி.பன்னீர் செல்வம்,

எண்: 3-92, தெற்குத் தெரு,
பல்லபுரம்,
 இலால்குடி தாலுக்கா,
திருச்சி மாவட்டம்.

அஞ்சலக எண்  – 621712;

கைபேசி – 9843912987

email: karpraba@gmail.com

 

தமிழ்  இலக்கியத்தில் மருத நில மக்களின் வாழ்வியல் |முனைவர் சி.ராஜலெட்சுமி

மருதநில மக்களின் வாழ்வியல் சி.ராஜலெட்சுமி
         சங்ககாலத்தில்    வாழ்ந்த   மக்கள்   நிலத்தினை     ஐந்தாகப்     பிரித்து      மலையும்  மலை  சார்ந்த  பகுதியை     குறிஞ்சி   எனவும், காடும்   காடு  சார்ந்த  பகுதியை   முல்லை  எனவும் ,வயலும் வயல் சார்ந்த பகுதியை    மருதம்  எனவும் ,கடலும்  கடல் சார்ந்த பகுதியை  நெய்தல்  எனவும் , பருவ காலங்களில் மழை பெய்யாமல்    வறட்சி  ஏற்பட்டு  நிலம்  பசுமை  இல்லாமல்  வறண்டு  போகும் பகுதியை  பாலை  எனவும்  பகுத்து  அம்மக்கள்  நிலத்தின்  தன்மைக்கேற்ப வாழ்வியலை  அமைத்து  மகிழ்ச்சியோடு  வாழ்ந்துள்ளனர்.
          
மருத   நில    மக்கள்    பிற    திணை      மக்களை    விட       நாகரிகத்தில் மேம்பட்டவர்களாக  இருந்தமை காண முடிகிறது . பழங்காலத்தில் இருந்தே தமிழர்கள்   எல்லாவற்றிலும்  சிறப்புற்றிருந்தனர்.    மன்னரின்     வெற்றியையும் ,   உழவரின் கலப்பையையும் நம்பியிருந்ததை

பொருபடை  தரூஉம்  கொற்றமும்  உழுபடை
ஊன்று  சால்  மருங்கின்  ஈன்றதன் பயனே;    (புறம். 35: 25-26)
என்ற புறநானூற்று வரிகளால் அறியலாம்.

மருத நில மக்களின் ஒழுக்கம்             
மருதத்தினை  மக்களின்  ஒழுக்கங்களான  பரத்தமை  ஒழுக்கம் ,வாயில் மறுத்தல்,  புதுப்புனல் ஆடல்,   ஊடல்   தணித்தல்,    பிள்ளை   தாலி   அணிதல்    ஆகியவற்றை  பற்றியும்    மருதத்தினை   பாடல்களில் காணப்படும்   இலக்கிய   நயங்களான    கற்பனை   சொல்லாட்சி   உவமை   உள்ளுறை   பற்றியும்   சங்க இலக்கியங்களில்  அறியலாம்.

மருத நிலத்தின் பொழுதுகள்           
கார்,   கூதிர்,  முன்பனி,   பின்பனி,  இளவேனில்,   முதுவேனில்   என்னும்  பெரும்   பொழுதுகளும் வைகறை,  விடியல்   என்னும்    சிறுபொழுதுகளும்     மருத    நிலத்திற்குரிய     பொழுதுகள்     ஆகும்.

மருத நில மக்கள்
               
மருத   நிலத்தின்    தலைவன்    பெயர்    மகிழ்நன்,   ஊரன்    எனவும்,தலைவியின் பெயர் மனைவி எனவும்,  அந்நில    மக்களின்    பெயர்    களமர்,   உழவர்,   கடையர், கடைச்சியர்,  உழத்தியர் எனவும்  இலக்கியங்களில்  வழங்குகின்றனர்.     
   இவர்களுக்குத்   தெய்வம்    இந்திரன்   வேந்தன்  மேய  தீம்புனல்    உலகம் என்பர் தொல்காப்பியர். (கலைக்களஞ்சியம்  தொகுதி 8 ,1962, பக்கம்.143 ) 
மருத நிலத்தின் கருப்பொருள்கள்
               
மருத நிலத்தின் தெய்வமாக இந்திரன், வேந்தன் இருந்துள்ளதை சங்க இலக்கியங்கள் வழி  அறிய முடிகிறது.      மருத      நிலத்தில்    வாழக்கூடிய   மக்கள் மள்ளர்,   மள்ளத்தியர்,   உழவர்,    உழத்தியர் கடையர்,  கடைசியர்    என்ற பெயரால்  அழைக்கப்பட்டுள்ளனர்.  அந்நிலத்தின் பறவைகளாக நாரை, குருகு,  அன்றில்,  கொக்கு,   வாத்து,போன்றவையும் விலங்குகளாக எருமை, நீர்நாய்,பசு,காளை, ஆடும் மலர்களாக   தாமரை,  கழுநீர்,  குவளை,  அல்லியும்  காணப்படுகின்றன.
                
மருத நிலத்தில் காணக்கூடிய    மரங்கள்  காஞ்சியும்   மருதமும் உணவாக செந்நெல், அரிசியும் உள்ளன.  அக்கால மக்களின்  பண்  மருத பண்ணாகவும்  யாழ் மருத  யாழாகவும்   பறை  நெல்லரியாகவும்  இருந்துள்ளன. மருத நில   மக்களின் தொழில்    களைகட்டுதல்,   களைபரித்தல்,   நெல்லறிதல்,    நாற்று நடுதல், கடாவிடல்,    ஏறுதழுவுதல்,   நெல்லரிதல்  போன்றவை  அவர்களின்     தொழில்கள்.  அம்மக்கள் பயன்படுத்திய  நீர்நிலை, பொய்கை, ஆறு, ஏரி, குளம் போன்றவைகள்.
மருதத்திணை உரிப்பொருள்
               
மருதத்திணையின்     உரிப்பொருள்    ஊடலும்     ஊடல்     தொடர்பான நிகழ்வுகளும்   ஆகும்.  பரத்தையை    நாடி   தலைவன்   செல்வதே   தலைவி தலைவனிடம் கொள்ளும் ஊடலுக்குக் காரணமாக அமைகிறது.

மருதத் திணையைப் பாடிய புலவர்கள்
               
மருத  நிலத்தினை  பற்றி  பல  புலவர்கள்   பாடியுள்ளனர்.  நற்றிணை, குறுந்தொகை,  அகநானூறு, ஐங்குறுநூறு,கலித்தொகை ஆகிய நூல்களில் பல பாடல்கள் மருத நிலம் பற்றி பாடப்பெற்றுள்ளன. மருதம் இளநாகனார்,  ஓரம் போகியார்,  ஆகிய  இரு  புலவர்களும்  மருதம்  பாடுவதில்  வல்லவர்கள். ஐங்குறுநூற்றில்   நூறுபாடல்கள்,  கலித்தொகையில் முப்பத்தைந்து பாடல்கள், அகநானூற்றில் நாற்பது பாடல்கள் மருதத் திணையைப் பற்றிய பாடல்களாகும்.

மருத நிலத்தில் கேட்ட ஓசைகள்
                 
மருத நிலத்தில்       பலவிதமான  ஓசைகள்  மக்கள் கேட்டது    கரும்பின் வெள்ளைக்கட்டியை  ஏற்றிச் சென்று  சேற்றில்   மாட்டிக்கொண்ட    வண்டி சக்கரத்தை  தூக்கி விட்டுக்கொண்டு    உழவர்  காளைகளை   அதட்டி    ஓட்டும் ஓசை   கேட்டது. மாலைக்குப்    பயன்படும் பகன்றை    வயல்வெளியில் தழைத்திருந்தது     அதனை     தொழிலாளர்    அரிக்கும்    போது    முழக்கும்    பறையின்   ஒலி    கேட்டது.   
         
மழை பொழியும்   மகிழ்ச்சியால்    மக்கள்     செய்த     ஆரவார    ஒலி    கேட்டது பகன்றை    மாலை  சூடிக்கொண்டு  மக்கள் கைகோர்த்து   ஆடும்   குரவை   தோல் தழுவியாடும்   துணங்கை ஆகியவற்றின்  பாட்டோசை  கேட்டது. இந்த   ஓசைகள்  வானளாவ      முழங்கியதால்      எங்கும்      இனிய   ஓசையை  எதிரொலித்தது.   மீன் தேடும்     குருகுகள்     நீர்     பரப்புகளுக்குச்    செல்லாமல்    மீன்   சீவும்   வீட்டு முற்றத்தில்   இருந்து   மரத்தில்  அமர்ந்து இரை தேட ஆரம்பித்தது  என்றுமதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

அள்ளல் தங்கிய பகடுஉரு விழுமம்கள் ஆர்
களமர் பெயர்க்கும் ஆர்ப்பே,
ஒலிந்த பகன்றை  விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை, இன்குரல்
தளிமழை பொழியும் தண் பரங்குன்றில
கலி கொள் சும்மை ஒலிகொள் ஆயம்
தழைந்த கோதை  தாரொடு  பொலியப் 
புணர்ந்து உடன் ஆடும் இசையே:அனைத்தும்,
அகல் இரு வானத்து இமிழ்ந்து  இனிது இசைப்ப
குருகு நரல ,மனை மரத்தான் 
மீன் சீவும் பாண்சேரியொடு
மருதம் சான்ற தன்பணை சுற்றி ,ஒருசார்   (மதுரைக். 259-270 )                    
மருத நிலத்தின் சிறப்பு           
பெண்ணை   வேண்டி   வரும்   வேந்தன்   செந்நெல்லை   உண்ட   மயில்   மகளிர் ஓட்டுதலால்    பறந்து    சென்று     நீர்த்துறையின்   அருகில்   இருக்கும்   மருத மரத்தில்  வீற்றிருக்கும்  வளம்  பொருந்திய  ஊரோடு  நிறைந்த      பொருளைத் தருவான்.    அவ்வாறு   தர   வில்லையெனில்     அப்பெண்ணின்    தந்தையால் வெகுண்டு   போர்   தொடுக்கப்பட்டு     தன்     நாடு      ஏரியில்     மூழ்க  ஆண்மையை   இழக்க   நேரும் இவ்விரண்டினுள்    ஒன்று   உறுதியாக  நடக்கும் என கண்டோர் உரைப்பதாக புறநானூறு குறிப்பிடுகிறது.
செந்நெல் உண்ட பைந்தோட்டு மஞ்ஞை,
செறிவளை மகளிர் ஓப்பலின், பறந்து எழுந்து,
துறைநணி   மருதத்து   இறுக்கும்   ஊரோடு
நிறைசால் விழுப்பொருள் தருதல் ஒன்றோ
இரண்டினுள்  ஒன்று ஆகாமையோ அரிதே, 
காஞ்சிப்   பனிமுறி    ஆரங்கண்ணி …
கணி    மேவந்தவள் அல்குல் அவ்வரியே.    (புறம் :344)
மருத நிலத்தின் வளம்
                 
மருத நிலத்தில்   வாழ்ந்த மக்கள்  ஆறுகளில்  உண்டான  வெள்ள   நீர் பெருக்கையும் மழைக்காலங்களில்   கிடைக்கும்   நீர்   பெருக்கினையும்    கண்டு    முதலில்    துன்புற்றனர்   பின்னர்  ஆறுகளில்   பெருகி  வந்த  வெள்ள நீரைக் கட்டுப்படுத்தியும் பள்ளமான இடங்களில் ஏரி  குளங்களை  அமைத்து  நீரை பாதுகாத்தும்  கிணறுகளை  அமைத்து   நிலத்தடி     நீரைப்   பயன்படுத்தியும் உழவுத்தொழிலை மேற்கொண்டு தங்கள் முயற்சியினாலும்      உழைப்பினாலும் உயர்வு   பெற்றனர்.   நீர்வளம்    நிறைந்த     இடங்கள்     சதுப்பு  நிலங்களாகவும் காடுகளாகவும்   இருந்தன.  இவற்றின் நன்னிலங்களாக   மாற்றுவதற்கு  காடு கொன்று   நாடாக்கியும் ,   குளந்தொட்டு    வளம்    பெருக்கியும்    மருத    நில நாகரீகத்தை   வளர்த்தனர்.   காடும்    மேடுமாய்  செடியும்   புதருமாய்    இருந்த பகுதியை வயலாக்கி   இங்கு   வாழ்ந்த    மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.   பசுமை நிறைந்த   வயல்வெளிகளைக்  கொண்ட    பகுதி   மருத நிலம்    ஆகும்.
               
நீர்  வற்றாது  வரும்  வையையின்  மிகுந்த  மணல்  பொருந்திய  அகன்ற துறையைச் சார்ந்த அழகிய மருதமரம்  ஓங்கிய  சோலை,    கடற்கரையினைக்    கரைத்திடும்    காவிரியாறு     தீப்போலும் தாமரைப் பூக்களையுடைய   நீர் மிகுந்த வயல்   ஆழ்ந்த  நீரை   உடைய   பொய்கையில்   ஆண்  சங்கானது   பெண் சங்கினொடு மணம்புணரும்  நீர்  நிறைந்த  அகன்ற  வயல் ,  அழகிய    உள் துளைகளையுடைய உடைய வள்ளைக்கொடி வண்டுகள்   உள்ளிருந்து    ஊதும்  தாமரையின்   குளிர்ந்த மலர்  பளிங்கு   மணியினைக்  கண்டாற்  போலும் தெளிந்த  குளம்  வயல்வெளியெங்கும்   பூத்துக்குலுங்கும்  ஆம்பல்,  குவளை மலர்கள் என மருத நிலம் வளம்  நிறைந்ததாய் உள்ளது.

வரு புனல் வையை வார்மணல் அகன் துறை,
திரு மருது ஓங்கிய விரி மலர்க்  காவில்,   (அகம்.36 :9-10)
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
அறல்வார் நெடுங்கயத்துன் அருநிலை கலங்க, ( அகம்.126:5-6)
நாயுடை முதுநீர்க்  கழித்த   தாமரைத்
தாதின்    அல்லி    இதழ்    புரையும்  (அகம்.16:1-2)             
வயல்களில் நன்கு முற்றிய  செந்நெல் கதிர்களைத் தின்ற வயிற்றினையுடைய  எருமையின் முதல்கன்று நெற்கூடுகளின்  நிழலில் படுத்து உறங்கும்.கரும்பு,தென்னை ,வாழை, பாக்கு மரங்கள், மஞ்சள், மாமரங்கள், பனைமரங்கள். இஞ்சி ஆகியவற்றின் விளையுள் நீங்காத வயல்களைக் காணலாம் என்று பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
 
கோல்  தெங்கின் ,குலை  வாழை, 
காய்க்  கமுகின்  கமழ்   மஞ்சள்,
இனமாவின்,   இணர்ப்    பெண்ணை,
முதற்   சேம்பின்,   முளை    இஞ்சி
அகல்  நகர்  வியன்  முற்றத்து, ( பட்டினப்.15-20) 
மருத   நிலத்தின்  அழகு
         
மருத நிலம்   இயற்கையோடு   கூடிய   அழகு    உடையது.   பசுமையான   புதர்களுக்கு    இடையே  ஓங்கி வளர்ந்த  வேழத்தின்   வெண்மலர்கள்  காற்றால் அசைந்து  வானவெளியில் பறக்கும் கொக்கு போல தோற்றமளிக்கும்   என்பதனை   ஐங்குறுநூறு   குறிப்பிடுகிறது.
 
புதல் மிசை நுடங்கும் வேழ வெண் பூ       
விசும்பு ஆடு குருகின் தோன்றும் ஊரன்   (ஐங்.17:1-2)
  
 பெண்யானையின்   காது   போல்   விரிந்து    இருக்கும் பச்சை   நிற   இலைகளையும் குளத்தில்  கூட்டமாக அமர்ந்திருக்கும் கொக்கு  போல்  கூம்பி  நிற்கும் மொட்டுகளையும்  பருத்த காம்புகளையும்  கொண்டிருக்கும்  ஆம்பல்    மலர்    அமிழ்தம் போல்    மணம்    வீசிக்கொண்டு இருக்கும் குளிர்ந்த மலர்    கிழக்கில் தோன்றும் வெள்ளியை      போல    இருள் கெட்டு விடியும் வேளையில்  விரிவதும், கயல்மீன்கள்   பிறழ்வதுமான  பொய்கையை   உடையது     மருத நிலம் .   இதனை

 முயப்  பிடிச் செவியின் அன்ன பாசடை
கயக் கணக் கொக்கின் அன்ன கூம்பு முகை 
கணைக் கால் ,ஆம்பல் அமிழ்து நாறு தண் போது, 
குணக்குத் தோன்றும் வெள்ளியின் ,இருள் கெட விரியும்  
கயற்கணம் கலித்த பொய்கை ஊர!   (நற்றிணை.230:1-5)

நற்றிணை    மூலமும்    அறிய முடிகிறது.
          நீலமணி   போன்ற   நீரினையும், மலர்களையும் உடைய பொய்கையில் சேவலோடு விளையாடும் அன்னப்பெடை  தனது  அழகுமிக்க சேவலன்னத்தை   அகன்ற  தாமரை இலை மறைத்ததாக அதனைக் காணாது  விரையக்   கலங்கியது  அறியாமையுடைய  அப்பெடை முழுமதியின்   நிழலை நீருட் கண்டது அதனை  சேவல்  என்று  கருதி  உவந்து  ஓடிச் சென்றது. அந்நிலையில்  தன்னைச்  சேருவதற்கு எதிரே வருகின்ற சேவலைக்கண்டு  மிகவும்  நாணி பல  மலர்கள்  சேர்ந்து  இருக்கும்  இடத்தில் போய் ஒளிந்து கொண்டது. இத்தகைய  அழகு  உடையது  மருத  நிலம்  என்று கலித்தொகையில்  காண முடிகிறது.
 
மணி நிற மலர்ப்பொய்கை , மகிழ்ந்து ஆடும் அன்னம் தன் 
அணி மிகு சேவலை அகல் அடை மறைத்தென   
கதுமென  காணாது  கலங்கி, அம்மடப் பெடை 
மதி நிழல் நீருள் கண்டு அது என உவந்து ஓடி,  
துன்னத்  தன்  எதிர்  வரூவும்  துணை  கண்டு  மிக  நாணி 
 பல் மலரிடை புகூஉம்   பழனம்   சேர்   ஊர!   கேள்: ( கலி.70:1-6)           
அரக்கினைப்  போல சிவந்த  நிறமுடைய செங்குமுத மலர்களும், தாமரை மலர்களும் செங்கழுநீர் மலர்களும், அல்லி மலர்களும் இவையெல்லாம் ஒன்றுடன் ஒன்று கூடி இணைந்து குத்திக்கொள்ளும்  தன்மையுடைய வளமான வயல்கள் சூழ்ந்த  அழகிய  மருத நிலம் என்று  பின்வருமாறு  கைந்நிலை குறிப்பிடுகிறது.

 அரக்கு    ஆம்பல், தாமரை,   அம்   செங்கழுநீர் 
ஒருக்கு   ஆர்ந்த  வல்லி, ஒலித்து ஆரக் குத்தும் 
செருக்கு   ஆர்  வள   வயல்  ஊரன்   பொய்  பாண!  ( கைந்நிலை 47:1-3)
மருத நில பாகுபாடு
         
சங்ககால     புலவர்கள்    மருத நிலத்தை    ஆறு வகையாக    பிரித்து  காட்டுவர்.  பண்படுத்தப்பட்ட விளைநிலமாக    அமையும்    கழனி     வயல்    என்றும்,   வயல் புலத்தை     அடுத்தமையும்    நீர்    தேங்கிய பழனம்    என்றும்,    ஓடும்    புனலைக் காட்டும்  யாறு  என்றும், புனல் தங்கும் பொய்கை என்றினைய நீர் நிலைகள் என்றும் , மரம் ,  செடி,  கொடிகள்   அடர்ந்த   பொழில்   என்றும் ,   மக்கள் உறைத்தற்குரிதாகப்   பொருந்தும்  ஊர்  என்பன.  இவற்றுடன் நெடுங்கொடி நுடங்கும்  கடிநகர்,  பரத்தை  உறையும்  சேரி என்ற பிரிவுகளையும்    சேர்த்துக்    காண  வேண்டி  உள்ளது.   மருத நிலத்திற்கே    முதன்மையாய்     அமைவது வயல்    இதனையே  கழனி  என்பர்.

மருதநில மக்களின் உணவு
     
மருத  நிலத்தில்  செந்நெல்லும், வெண்ணில்லும்   மிகுதியாக  விளைந்தன.  அவற்றால் ஆன சோற்றை மிதவை என்றும் அழைத்தனர்.  உளுந்து, அவரை  முதலிய   பருப்பு   வகைகளுடன்   நெய்யையும்  கலந்து  விருந்து  படைக்கும்  முறைமையை   மருத  நிலப்  பாடல்கள்  வழி  அறிகிறோம் .  புலி  சோற்றில் பசுவின்  வெண்ணெயை    உருக்கி    இட்டு    உண்டனர்       என்பதையும்     அறிகிறோம்.

உழுந்து தலைப்பெய்த கொழுங்  களி மிதவை 
பெருஞ்  சோற்று அமலை  நிற்ப, நிரை கால்  (அகம்.86:1-2) 
ஆம்பல்    அகல்இலை,   அமலை  வெண்சோறு 
தீம்புளிப் பரம்பின் திறள்கனி  பெய்து, 
விடியல்    வைகறை   இடூஉம் ஊர!   (அகம்.196 :5-7)
               
என   வரும்   தொடர்களால்    பண்டைய   தமிழரின்   உணவுப் பழக்கத்தை அறிய முடிகிறது.
மருத நில விழாக்கள்           
மருத    நில     மக்கள்     மழையை   நம்பி வாழ்க்கையை    நடத்துபவர்கள்    மலைவளம்     வேண்டி   வானோர்  தலைவனான    இந்திரனுக்குரிய     விழாவை    நடத்தினர்   இச்செய்தியை

இந்திர விழாவிற் பூவின் அன்ன         ( ஐங்.62:1)
பரத்தையர் ஆடும் துணங்கை விழா பற்றி  குறுந்தொகை குறிப்பிடுகிறது.
வணங்குஇறைப்    பணைத்தோள்    எல்வளை    மகளிர்
துணங்கை    நாளும்    வந்தன:   அல்வரைக்   ( குறுந்.364:5-6)  
மருத நிலத்தின் விளையாட்டுகள்
               
ஆறுகளில்    பெருக்கெடுத்து   ஓடும்     புதுப்புனலில்     பாய்ந்து     நீந்தி     விளையாடுவதைப்   புனல்    விளையாட்டு    என்பர்.  
                        
கோடுற நிவந்த நீடுஇரும் பரப்பின்                        
அந்திப் பராஅய புதுப்புனல் ,நெருநை   (அகம். 266 :1-2)  
               
நிலங்களைப்     பாகுபடுத்திய    கழனி,    பழனம்,     ஆறு ,    பொய்கை,       பொழில் என்று     வளம் மிக்கதான    மருத நிலத்தில்       ஊர் , நகர், சேரி   முதலிய  வாழிடங்களை  அமைத்துக் கொண்டு  களமர் ,  உழவர் , கடையர் , கடைசியர் , உழத்தியர்   முதலான   குல   மக்களும்  ஊரன் ,நாடன், மகிழ்நன் முதலான தலைமக்களும்  தனது வாழ்வை மேற்கொண்டிருந்தனர்.   மருதநில   மக்கள்  செந்நெல்,      வெண்ணல்    அரிசியிலான      சோற்றையும் ,    உழுந்து ,    அவரை ,  பருப்பு     வகைகள்  ஆகியவற்றால் செய்யப்பட்ட     உணவினையும்     உணவாகக் உட்கொண்டனர்  . விழாக்கள்   மற்றும்   விளையாட்டுகள்     மூலமாகவும்    மகிழ்ச்சியான    வாழ்வினை      வாழ்ந்துள்ளனர்.  இயற்கையோடு    கூடிய     அழகோடும்,  பசுமை   வளம்    கொண்ட     நிலமாகவும்  இருந்துள்ளது என்பதையும்  தமிழ் இலக்கியங்கள்வழி   காணமுடிகிறது.  

துணைநின்ற நூல்கள்
1.அகநானூறு -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

2.ஐங்குறுநூறு நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் சென்னை.பதிப்பு-  2004

3. கலைக்களஞ்சியம்  தொகுதி 8 ,1962, பக்கம்-143

4. பத்துப்பாட்டு -நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர் சென்னை.பதிப்பு-  2004

5.புறநானூறு மூலமும் உரையும்,  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

6.கலித்தொகை  – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2017

7.குறுந்தொகை  – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2014

8.தமிழ் இலக்கிய வரலாறு பேரா. மது.ச.விமலானந்தம் ,முல்லை நிலையம்,பாரதி நகர்
         சென்னை-600017.

9.நற்றிணை- நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,அம்பத்தூர் ,சென்னை.பதிப்பு-2004

10.பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும்  தெளிவுரையும் ச.வே.சுப்பிரமணியன், மணிவாசகர்   பதிப்பகம், சென்னை 600108, பதிப்பு-2017

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் சி.ராஜலெட்சுமி,
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி (தன்னாட்சி),
பெரம்பலூர்.
  

புரிதல்|சிறுகதை|கு.ஜெயா பிரின்ஸி

புரிதல் - கு.ஜெயா பிரின்ஸி
      இருளின் கரம் முழுவதும் விலகாத அதிகாலை வேளை அது. மெல்லிய குளிர்ந்த காற்று அந்த இடம் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. கவிதா போர்வையை உடம்பு முழுவதும் இழுத்து மூடி கொண்டாள். தூக்கம் வரவில்லை நெஞ்சம் படபடவென அடித்துக் கொண்டது. அவள் சோர்ந்து போயிருந்தாள்.தலை வீக்கம் போட்டிருந்தது.

ம்……ம்…..என்ற முனங்கல் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டிருந்தது. என்னாச்சும்மா கவிதா ?கொஞ்சம் வெந்நீர் கொண்டு வரட்டுமா ?என அன்போடு அவளின் தலையை நீவினான் கணவன் முத்து. 

முத்து வண்ணம் பூசுவதில் கெட்டிக்காரன். கலை இழந்து போன கட்டிடத்தின் சுவரும் முத்துவின் கைவிரல் பட்டால் ஒளி வீசத் தொடங்கிவிடும் . அதை விட மன வைராக்கியம் கொண்டவன். கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளில் தவறு யார் பெயரில் இருந்தாலும் மனைவியே தன்னிடம் வந்து சமாதானமாக வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடியவன்.

சில சமயங்களில் பேசி நாட்கணக்குப்போய் வாரக்கணக்காகும் அளவிற்கு அதன் வீரியம் அதிகம்.

அன்று இரவு நெடுநேரமாகியும்  கவிதா வீட்டிற்கு வரவில்லை .அவனது சட்டை பாக்கெட்டில் இருந்த அலைபேசி ட்ரிங்…..டிரிங்…… என ஒலி எழுப்பவே கவிதாவாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவாறே போனை எடுத்துப் பார்த்தான். 
               
எத்தனை தடவை இவளிடம் சொல்ல வேண்டும் நம்முடைய சொல்பேச்சைக் கேட்கவே கூடாது என்று மனதில் தீர்மானமே எடுத்துவிட்டாள் போல. தான் எம்.ஏ பட்டம் பெற்றவள் என்ற திமிர் அவளுக்கு இன்றைக்கு போடுற போடுல இந்த பழக்கத்தையே அவள் மறக்க வேண்டும் என நினைத்தவாறே, பச்சைப்பொத்தானை அழுத்தி ஹலோ என்றான்.  மறுமுனையில் பதில் ஒன்றும் இல்லை. போனை எடுத்தாலும் பேச மாட்டாயா என மறுபடியும் சிடுசிடுத்த ‌படி ஹலோ என்றான் .மறுமுனையில் கவிதா ஓ….. என்று அலறினாள். அதனை சற்றும் எதிர்பாராத முத்துவும்‌ ஒரு கணம் பயந்து தான் போனான். மறுகணம் தன்னை ஆசுவாசப்படுத்தியவாறு அழாதே விவரத்தைச் சொல்லு என்றான். அவள் என் அண்ணன் வீட்டிற்கு வாங்க என்று மட்டும் சொல்லிவிட்டு போனை அணைத்து விட்டாள்.
               
கவிதா எம்.ஏ பட்டதாரி.மாநிற இளம்பெண் .குடும்பத் தலைவி தேனீக்களை விடவும் சுறுசுறுப்பாக இயங்குபவள்.தன்னால் முடிந்த அளவிற்கு 
எல்லாரிடமும் உண்மையாக பழகுபவள். தன் இரண்டு பிள்ளைகளையும் எப்படியாவது உயர்ந்த சிகரத்தில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என கனவு காண்பவள். ஏன் அதற்காக தான் உயிரை கையில் பிடித்தவாறு  ஓடிக் கொண்டிருப்பவள். மற்றபடி கணவனிடம் அவ்வளவாக பிடிப்பு இல்லை. 
         
அவளின் உடைந்து போன குரலை கேட்டவுடன் ஒரு நிமிடம் நடுக்கமே வந்துவிட்டது முத்துவிற்கு; ஏன் அவளுக்கு என்ன ஆச்சு ? ஏன் போனை கட் செய்தாள் என பல்வேறு கேள்விகள் மனதை குடைய மோட்டார் சைக்கிளை  எடுத்துக்கொண்டு விருட்டன்று கிளம்பினான்.

நிலா தன்னுடைய  வட்ட முகத்தை அழகாக காட்டிச் சிரித்துக் கொண்டிருந்தது. அந்த மென்மையான பால் நிற ஒளியில் மோட்டார் சைக்கிள் காற்றைத் கிழித்தவாறே பறந்தது. இப்போது அதன் மஞ்சள் நிற ஒளியில் அவளின் முகத்தை நன்றாகவே பார்க்க முடிந்தது. ஏங்கி அழுது சிவந்து கண்களோடும் ,வீங்கிய கன்னங்களோடும் கவிதா நின்றிருந்தாள். அவனைக் கண்டதும் என்னங்க…… என்று  சத்தமிட்டு கூப்பிட்டாள்  மற்றபடி இருவரும் ஒன்றுமே பேசிக் கொள்ளவில்லை. அவன் மோட்டார் சைக்கிளை எடுக்க அவள் பின்புறம் ஏறிக்கொண்டாள். முகத்தில் விழுந்த  கூந்தலையும் சரி செய்யதிணறியவளாய் மரம்போல உட்கார்ந்திருந்தாள். பிறகு மெதுவாக கூறினாள் மனிதர்கள் ஏங்க இப்படி மாறிட்டாங்க?

ம்..க்கும்…எனத் தொண்டையைச் செருமியவாறே  நீ எந்த மனிதர்களைப் பற்றிக் கேட்கிறாய் ?உன் அண்ணன் வீட்டிற்கு போகக்கூடாது என்று நான் எத்தனை தடவை சொன்னேன். படிச்ச திமிரு உனக்கு.நான் தான் நகையை கொடுக்கும் போதே சொன்னேன்ல.. இனி நகையை திருப்பி தர மாட்டேன்னு  சொல்லிட்டானா? சரி எதுக்கு இப்படி அழுது வடிந்து நிற்கிற. ஒண்ணா  ரெண்டா அஞ்சு பவுன் இந்த விலை போற போக்கில் இனி நினைச்சு பார்க்க முடியுமா? பதில சொல்லு என்ன கத்தினான்.

இருட்டில் ஓரிருவர் வேகமாக அவர்களை திரும்பிப் பார்த்துவிட்டு பின் சென்றனர் . அவள் சிலையென பதில் ஏதும் கூறாமல் உட்கார்ந்திருந்தாள். அவளால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை.

மணி இரவு ஏழரை இருக்கும். தமையன் இன்னும் வீட்டுக்கு வரவில்லை .போன் செய்தால் போனும் எடுக்கவில்லை ஒரு வழியாக இரவு எட்டு மணிக்கு அவன் வந்ததும் அதுவரை சும்மா இருந்த தமையனின் மனைவி நாடகம் போட ஆரம்பித்தாள். எல்லாவற்றையும் நீதான் உன் வீட்டிற்கு கொண்டு சென்று விட்டாய் . நீ உன் தங்கச்சியோடு இரு நான் சாகப் போறேன் என்றவரே அடுக்களையிலிருந்து ஒரு வெட்டருவாளை எடுத்து வந்தாள்.
               
நீ சாகப் போறேன்னா போ.முதலில் என்னோட நகையை எடுத்து வைத்துவிட்டு போ என்றவாறு வெட்டருவாளை பிடித்து இழுத்தாள் கவிதா. அப்போது தமையனின் மனைவி கையில் சிறு காயம் ஏற்படவே கோபத்தின் உச்சிக்கே போனான்.

அவளின் தலைமுடியைப் பிடித்து இழுத்து; கல்யாணம் ஆனவள் அடுத்தவனின் மனைவி என்றும் பாராமல் பளார் பளார் என்று அறைந்தான். போதாத குறைக்கு அண்ணனின் மனைவி ஒரு கம்பு ஒன்றை எடுத்துக் கொண்டு அடிக்க பாய்ந்தாள். அடித்தும் விட்டாள்.இது எங்கேயாவது நடக்குமா?

வெளியே சொன்னால் அவமானம் . அவள் உருண்டு திரண்டு இருக்கிறாள். அவள் அடிப்பதை என்னால் தடுக்க கூட முடியவில்லை. பாவி விளங்குவாளா? என மனதிற்குள் விம்மினாள்.

அன்றிரவே காய்ச்சல் கண்டது கவிதாளுக்கு. குறை ஒன்றும் சொல்ல முடியாது தான் நினைத்தபடி இல்லை . மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்று நன்றாகவே கவனித்துக் கொண்டான் முத்து. நடந்ததை சொன்னால் மிருகமாகி விடுவான் என மனதிற்குள் எல்லாவற்றையும்  புதைத்துக் கொண்டாள்.

செல்வம், செல்வோம் செல்வோம் என்று சென்று விடும். காலம் தானே எல்லாவற்றிற்கும் மருந்து .காலத்தை வென்றவர் யார்? இனி ஒருபோதும் என்னவனிடம் சண்டை போடக்கூடாது. நான்தான் தவறாக புரிந்து கொண்டேன். அவரின் மனதைப்படிக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே அது போதும் எனப் பெருமூச்செறிந்தாள் . உடல் வலிமை குன்றி இருந்தாலும் மன வலிமையால்  மெல்ல மெல்ல எழுந்து கோலமிட தயாரானாள். கதிரவன் உதித்தது. அவளின் வாழ்க்கையும் தான்.

சிறுகதையின் ஆசிரியர்
கு.ஜெயா பிரின்ஸி

பதிவு எண்:23213154022018,

முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்க்கலை ஆய்வகம்,

தெ.தி இந்துக் கல்லூரி,
நாகர்கோவில்.

திருக்குறளில் வாழ்வியல்|ஆய்வுக்கட்டுரை | ச.குமார்

திருக்குறளில் வாழ்வியல் ஆய்வுக்கட்டுரை ச.குமார்
 முன்னுரை
                 
திருக்குறள் என்பது வாழ்வியல் நூலாகும் அந்நூலுள் மனிதன் நல்வாழ்வு வாழ தேவையான அறிவுரைகள் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் வடிவமைக்கப்பெற்றுள்ளது .திருக்குறளில் வாழ்க்கை பற்றி பல கோணங்கள் விவரிக்கப்பெற்றிருந்தாலும் திருவள்ளுவர்  கூறும் வாழ்வியல் நெறிகளை திருக்குறள் வாயிலாக .உற்றுநோக்குவதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

திருக்குறளில் வாழ்க்கை
               
மாந்தர் தாம் வாழும் முறையை வாழ்க்கை என்றனர். வாழ்க்கை என்ற சொல்லைப் பயன்படுத்தி அதன்வழி வாழ்க்கையை வாழவேண்டியதற்கான நெறிமுறைகளை திருவள்ளுவர் அழகாக வகுத்துக் காட்டியுள்ளார்.  வள்ளுவர் காட்டும் வாழ்க்கை  நல் வாழ்க்கை, தீயவாழ்க்கை என்று இருவகைகளாக காணமுடிகின்றது. நல் வாழ்க்கை என்பது அறம் சார்ந்த வாழ்க்கையாகும். தீய வாழ்க்கை என்பது மறம் சார்ந்த வாழ்க்கை முறையாகும். அறம் சார்ந்த வாழ்க்கை முறைக்கு அறமே குறிக்கோள். மறம் சார்ந்த வாழ்க்கை முறை என்பது அறத்தின் மறுதலையானது ஆகும். அறத்தோடு முரண்பாடு உடையது ஆகும். அறத்து முரணான தீய வாழ்க்கை முறையைத் தவிர்க்க வள்ளுவர் பல்வேறு வழிகளை நமக்கு காட்டுகிறார். வாழ்க்கை என்ற சொல்லைத் தன் குறள்களில் நேரடியாகப் பயன்படுத்தி அக்குறள்வழி வாழ்க்கையின் அடிப்படைகளை உணர்த்த திருவள்ளுவர் முயல்கிறார்.

நல்வாழ்க்கை
               
நல்வாழ்க்கைஎன்பது அறத்தின் வழியில் வாழ்ந்து, பொருளை ஈட்டி, அப்பொருளை தனக்கும்  மற்றவர்களுக்கும் வழங்கி வாழும் சிறந்தவாழ்க்கையே நல்வாழ்க்கை ஆம்.. இந்த ஒரு நற்பண்பினைப் நாம்பெற்றுவி;ட்டால் நலம்பயக்கும் மாந்தர் நல்ல மாந்தராக வாழ்ந்துவிடலாம் .. நன்னெறியை தவறிய மனிதர்கள் எக்காலத்தும் நல்ல மனிதர்களாக ஒருபோதும் வாழ்ந்திட இயலாது.
 
“பழிஅஞ்சிப் பாத்து ஊணுடைத்தாயின் வாழ்க்கை
வழியஞ்சல் எஞ்ஞான்றும் இல்” (குறள்-44)
 
திருவள்ளுவர். பழிக்கு அஞ்சி வாழ்தலே சிறந்த வாழ்க்கையாகும். பிறர் பழிக்கா வண்ணம் தன்னுடைய வாழ்க்கை அறம் சார்ந்து பொருள் ஈட்டும் வாழ்க்கையாக அமைந்தால் அதுவே சிறந்த வாழ்க்கையாகும். ஒருவன் தாம் சேர்த்த பொருளை மற்றவர்களுக்கு பகுத்து உண்ணும் அளவிற்கு அளித்து உண்ணும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். இவ்வாறு வாழ்பவன் வழி உலகம் நிற்கும் என்கிறார்
                பழியோடு வரும் செல்வம் என்றுமே நிலைக்காது. அவ்வாறு அச்செல்வம் சேர்த்தாலும் அதனை பகுத்து உண்ணா நிலையில் அது பயன்படாமல் சென்றுவிடும். இவ்வாறு வாழ்தல் எந்நாளும் சிறந்த வாழ்க்கையாகாது. ஆகவே மனித வாழ்வில் அறம் சார்ந்து வாழ்வது பிறருக்கு தன்செல்வத்தை, உணவைப் பகிர்ந்தளிப்பது  சிறந்த வாழ்க்கை முறையாகும். இவ்வாழ்க்கை வாழ்பவரை உலகம் வழிகாட்டியாக கொண்டுப் பின்பற்றி செயல்படும்.

வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று (குறள்-83)
               
என்ற குறட்பா உணர்த்துவது யாதெனில் நாள்தோறும் விருந்தோடு உண்ணும் உணவு முறையானது, செல்வத்தை; மிகுவிக்கும் சிறந்த வாழ்க்கை முறையுமாகும்.

தீய வாழ்க்கை
               
நாணயம் போன்று இருகூறு உடையது. நல்ல வழியை ஒரு சாரார் பின்பற்றியது போன்றே தீய வழியை சிலரும் பின்பற்றி வந்துள்ளனர்.
 வள்ளுவர் தீய வழியில் செல்வோரை தடுக்க  திருக்குறளை எழுதி இருக்கவேண்டும்.  
உயிருடன் உடம்பு நீக்கியார் என்ப செயிர்
உடம்பின்செல்லாத் தீவாழ்க்கை யவர். (குறள்-330)
               
எவ்வுயிர்களையும் கொல்லாமல் வாழும் வாழ்க்கை சிறந்த வாழ்க்கையாகும். இவ்வகையில் உயிர்க்கொலை தவிர்ந்த வாழ்க்கை உடையவர்கள் உலகில் சிறந்த வாழ்வைப் பெற்றவர்கள் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். உலக மாந்தர் அனைவரும் தனக்கு எதனால் கேடு ஏற்படும் என்று தெரிந்தே வாழ்கின்றனர்.  தீமை வரும் என்று தெரிந்த நிலையில்  தன்னிடம் தீமை வந்து சேராமல் காத்துக் கொள்ள முன்னேற்பாடு செய்து கொள்ளும் வாழ்க்கை இனிதாக அமைகிறது.. அவ்வாறு எதிர் வருவதை அறியாமல் வாழ்பவனின் வாழ்க்கை நெருப்பின் முன்னர் வைத்த எரி பொருளை ஒத்ததாக அமையும். இதனை திருவள்ளுவர்

வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும் (குறள்-435)

என்று எடுத்துரைக்கிறார் . தம் வாழ்வின் எல்லை அறிந்து இவ்வளவே தன் எல்லை என அறிந்து அதற்கேற்ப  வாழும் வாழ்க்கை உடையவன் சிறந்த வாழ்க்கை வாழ்பவன் ஆவான்.

அளவு அறிந்து வாழாதான் வாழ்க்கை
உளபோலஇல்லாகி.தோன்றக் கெடும் (குறள்-479)
என்ற குறட்பா இதனை .வலியுறுத்தும். வாழ்க்கை என்பது இனிதானது. இனிதானவர்களுடன் பழகி இனிதே செய்வதே வாழ்வின் இனிமையாகும். ஆனால் சிலர் மாறுபட்டு வாழ்வதே வாழ்க்கை என்று வாழ்ந்துவருகிறார்கள்.

இகலின் மிகல் இனிது என்பவன் வாழ்க்கை
தவலும் கெடலும் நணித்து (குறள்-856)
இக்குறள் காட்டும் வழி சமுதாயத்துடன் இணங்கி வாழும் வாழ்க்கையே சிறந்த வாழ்க்கை என்பதைச் சுட்டுகிறது.
தன்னோடு உடன்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கை சிறப்பானதாகும். முரண்பட்டு வாழ்வோருடன் வாழும் வாழ்க்கையானது கொடுமையானது ஆகும்.
பாம்புடன் ஒரே குடிலுள் ஒரு மனிதன் வாழும் வாழ்க்கை போன்றது உடன்பாடு இல்லாதவருடன் வாழும் வாழ்க்கை என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். இல்வாழ்க்கையிலும் இதே நிலைதான். பொதுவாழ்க்கையிலும் இதே நிலைதான்..
உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள்
பாம்போடு உடனுறைந் தற்று (குறள்-890)
              
  என்ற குறள் காட்டும் வாழ்க்கை நெறியானது உலக வாழ்க்கையின் தன்மையை அழகாக விவரிக்கிறது
மானம் காப்பது
ஒருவன் மானத்துடன் வாழும்வாழ்க்கையே சிறந்த வாழ்க்கையாகும். மானத்தை விடுத்து வெறும் உடம்பை வளர்த்து வாழும் வாழ்க்கை . வாழ்க்கையாகாது. ஒருவனுடைய பெருந்தன்மையால் அவனுக்கு வந்த புகழ் அழியும்நிலையில் வெறும் உடம்பை மட்டுமே பேணி வாழும் வாழ்க்கையில் ஒருபோதும் பயன் இருக்காது. மானம் காத்து வாழும் வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து ஆகும்
.
மருந்தோ மற்று ஊன்ஓம்பும் வாழ்க்கை
பெருந்தகைமைபீடழிய வந்தவிடத்து (குறள்-968)
               
என்ற குறளில் வள்ளவர் யாதெனில் மானத்துடன் வாழும் பெருந்தன்மை வாழ்க்கையே சாவாமைக்கு மருந்து என்று குறிப்பிடுகிறது.
 
இல்வாழ்க்கை
               
வாழ்க்கைத் துணையோடு அறநெறிகளில் இருந்து பிழையாமல் இல்வாழ்க்கை நடத்துபவரே இல்வாழ்க்கையால் வரும் பயனை அடையக் கூடியவர்கள். இல்வாழ்க்கை வாழ்கின்றவன். தன்னலம் கருதாது பிறர்நலம் பேணி வாழ்கின்றவன்; தன்னுடைய மனைவி. பிள்ளைகள் பெற்றோர். சுற்றத்தார். வறியவர்கள். மூதாதையர். என சமுதாயத்தில் ஆதரவற்றவர்கள். துறவு மேற்கொண்டவர்கள் அனைவருக்கும் உதவி செய்து வாழ்பவன்.
 இல்லற வாழ்க்கை வாழ்பவனுக்கு இத்தகைய மூவகையாரையும் காத்தல் கடமையாகிறது.இதனை வள்ளுவர்
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் 
நல்லாற்றின் நின்ற துணை”          (குறள்41)
“துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும் 
இல்வாழ்வான் என்பான் துணை”     (குறள்42)
 
மேலும். இல்லறத்தாரின் கடமையாவது குடியில் தோன்றி மறைந்த முன்னோரை நினைவுகூர்வதும் இறைவனைப் போற்றுவதும் விருந்தினரைப் பாதுகாப்பதும் இல்லறத்தின் கடமை. விருந்தோம்பல் நமது தலையாய பண்பாகும். விருந்து என்பது புதுமை என்பதைக் குறிக்கும். விருந்தினர் (புதியவர்) வீடு தேடி வந்துவிட்டால் அவர்களை இன்முகம் காட்டி வரவேற்பதுடன் இனிமையாகப் பேசி உணவு கொடுத்து மகிழ்விப்பதே விருந்தோம்பல். அத்தகைய விருந்தோம்பலை இல்லறத்தார் கடமையாகக் கொண்டு செய்தல் வேண்டும்.

முடிவுரை           
திருக்குறளில் வாழ்க்கைக்கு  தேவையான அனைத்து வாழ்வியல் நெறிகளும் பரவலாக காணக் கிடைக்கிறது.திருவள்ளுவர் அறத்தின் வழியே பொருளை சம்பாதித்து நற்செயல்களில் ஈடுபாடு கொண்டு இன்பம் துய்த்தலையே முப்பாலின் வழி நிறுவுகிறார். உலகப் பொதுமறையான வள்ளுவம் காட்டிய வழி நல்வழி.தீய வழி. இல்லற வழி. துறவற வழி என பலவாறு வாழ்வியல் நன்னெறிகளை எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில் குறட்பாக்களை படைத்து வழிகாட்டி சென்றிருக்கிறார். நாமும் திருக்குறள் காட்டும் வாழ்வியல் மறைகளை பின்பற்றி நடப்போமாக!. வள்ளுவம் வாழ்வாங்கு வாழட்டும்..

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
ச.குமார்

தமிழ்த்துறை

உதவிப்பேராசிரியர்
இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி

இராஜபாளையம்

 

விடுதலையில் வீரமங்கை|கவிதை|ச. குமரேசன்

விடுதலையில் வீரமங்கை - ச. குமரேசன்

✒️ பாரதத்தின் பண்பாடு


தமிழினத்தின் தழல் வீரம்


சுட்டெரிக்கும் சுடர்விழி


வெள்ளையர்களை


வேர் அறுத்த வீரமங்கை..!


 

✒️ சிலு சிலுக்கும் காற்றோடும்
       

சேறு நிறைந்த வயலோடும்
 

சிவந்த பூமியாம்


சிவகங்கைச் சீமையிலே


சீறியெழுந்த சிங்கப்பெண்..!


 

✒️ முரட்டுக்காளையாய்


முந்தியுள்ள வீரமும்


முண்டாசுடன்


முறுக்கி நிற்கும் தீரமும்
 

பகை நடுங்கும் பகலவனுமான


முத்து வடுகநாதரின்


முத்தான மனைவி..!


 

✒️ மக்கள் நலனையே


மனதில் நிறுத்தி
               

குதித்தெழும் குதிரையைக்


குறிப்பாய் செலுத்தி


வாளெடுத்து போர் தொடுத்து
               

வாழ வைக்க வந்த மங்கை..!


 

✒️ கணவனை இழந்தும்
               

கலங்காத நெஞ்சோடு
 

கனன்றெழும் வீரத்தோடு
               

கணை பல தொடுத்து


கர்சித்த காக்கும் தெய்வம்..!


 

✒️ வெள்ளையர்களை வேலெடுத்து


வெளுத்து வாங்கிய


வெம்புலியான வேலுநாச்சி..!


 

✒️ இந்திய திருநாட்டின்
 

சுதந்திர நன்னாளில்
 

வீர மங்கையின் தீரம் போற்றுவோம்..!
                               

 

✒️ வந்தே மாதரம்!


 

கவிதையின் ஆசிரியர்

ச. குமரேசன்,
 

உதவிப் பேராசிரியர்
 

தமிழ்த்துறை,
 

முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,


இராசிபுரம்.

 

நூல் மதிப்புரை| வீரயுக நாயகன் வேள்பாரி |சு.வெங்கடேசன்

நூல் மதிப்புரை - வேள்பாரி - சு.வெங்கடேசன்

நூலின் பெயர் :வேள்பாரி வீரயுக நாயகன் வேள்பாரி


ஆசிரியர்           : திரு சு.வெங்கடேசன்


சிறப்பு                 : 6000 பிரதிகளைத் தாணடி விற்பனையில் உள்ளது.


பதிப்பகம்         : விகடன் பிரசுரம்


 
முன்னுரை
               
     வீரயுக நாயகன் வேள்பாரி நூலானது  வரலாற்றுச் சிறப்பு மிக்க நாவல் ஆகும். தமிழர்கள் மட்டுதமில்லாது அனைத்து மொழியினரும் ஒருமுறையாவது இந்த நாவலை கட்டாயம் வாசிக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. ஒரு தமிழன் இந்நூலினை வாசித்தால் தன்இனத்தின் பழமையையும் இயற்கையோடு இயைந்து எவ்வாறு தமிழ் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதையும் புரிந்து கொள்வான். பிற மொழிக்காரர்கள் படித்தால் தமிழினம் எவ்வளவு பண்புநலன், கலாச்சார ஒருங்கிணைப்போடு தங்களுடைய வாழ்வினை கொண்டிருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்வார்கள். திரு. சு.வெங்கடேசன் அவர்களால் விகடன் இதழில் தொடர் கதையாக எழுதப்பட்டு, பின்னர் அவை முழுமையாகத் தொகுக்கப்பட்டு இரண்டு பாகங்களாக விகடன் பிரசுரம் வெளியிட்டுள்ளது. இத்தனை சிறப்புடைய வீரயுக நாயகன் வேள்பாரி என்னும் நூலின் மதிப்புரையை இங்கு காணலாம்.

கதையின் ஓட்டம்
                               
su venkatesan
 
         திரு சு.வெங்கடேசன் அவர்கள் ஒரு பேட்டியில் கூறுகையில், “இன்றைய சூழலில் ஒரு இளைஞனைப் பத்து வரிகளுக்குமேல் அமர வைப்பது கடினம். அதை சாத்தியமாக்க வேண்டுமெனில் நூலினுள்ள வரிகள் அனைத்தும் விறுவிறுப்பாக மையக்கதையை நோக்கி செல்ல வேண்டும். அவ்வாறு இல்லையெனில் வாசகர்களுக்குத் தெரியாத புதுமையான விஷயத்தைக் கூற வேண்டும்” என்று கூறியுள்ளார்.   அதனை அப்படியே தன்னுடைய நாவலான வீரயுக நாயகன் வேள்பாரியில் முதல் பக்கம் முதல் கடைசிப் பக்கம் வரை கையாண்டுள்ளார் என்பது இந்நாவலை படித்தவர்களுக்குப் புரியும்.
 
 
வார்த்தை விளையாட்டு           
      ஏழிலைப் பாலை, காக்கா விரிச்சி, பால் கொறண்டி, தனைமயக்கி மூலிகை, இராவெரி மரம், பறக்கும் சிறகு நாவற்பழம், தேவவாக்கு விலங்கு, சுண்டாப் பூனை, ஆட்கொள்ளி மரம் போன்ற இதுவரை தமிழ்மக்கள் அறிந்திராத பல விஷயங்களை நம் முன்னோர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதை ஆச்சர்யம் பொங்கும் வகையில் தமது வார்த்தைகளிலே வடித்து தந்திருப்பார் ஆசிரியர்.
                நாவலின் வரிகள் எந்தச் சூழலை விளக்கிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்தில் -அந்தக்கணம் நாம் வாழ்ந்து கொண்டிருப்போம் என்று சொன்னால் மிகையாகாது. அந்த அளவிற்குக் கதைக்குள்ளே முற்றிலும் மூழ்கிப்போயிருப்போம் நாம்.
               
திரு.சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்துக்கள் நம்மை பறம்பு மலையிலேயே இருக்கச் செய்து விடுகிறது. இந்த நாவலின் வாசகர் ஒவ்வொருவரும் பறம்பு மலையில் நாம் பிறந்திருக்க கூடாதா? ஒருமுறையேனும் பறம்பு மலையைப் பாரத்து விடமாட்டோமோ? என்று ஏங்கச் செய்துவிடுகிறது.

வீரயுக நாயகன் வேள்பாரியின் கதைக்களம்           
           இந்நாவலின்கதாநாயக் வேள்பாரி. அவனுடைய குலம் – வாழ்ந்த பகுதி பறம்பு மலை – மலைப்பகுதி ஆதலால் குறிஞ்சி நிலத்தின் வாழ்க்கை முறைகளை அடிப்படையாகக் கொண்டது இக்கதைக்களம்.
 “முல்லைக்குத் தேர்க்கொடுத்தான் பாரி” இதை  தவிர பாரியைப் பற்றி பெரும்பாலோனோருக்கு பெரியதாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  இந்த வாசகமானது எவ்வளவு வலிமை மிக்கது என்பது நாவல் படித்தோர்க்குப் புரியும்.
               
     தமிழ்க்கடவுள் முருகனை வீரப்போர் புரிந்து அசுரர்களை வென்ற நாயகனாக நமக்குத் தெரியும். ஆனால், நாம் யாரும் கண்டிராத காதல் நாயகனாக மீண்டும் நம் உள்ளங்களில் நிறைய வைக்கின்றார் ஆசிரியர் திரு வெங்கடேசன் அவர்கள்.  முருகன் வள்ளியின் காதல் வசனங்களும் அதற்குரிய காட்சிப்படுத்தலும் நம்மை புல்லரிக்கச் செய்து விடுகிறது.
               
       பாரி – ஆதினியின் உன்னதமான காதல், நீலன் – மயிலா காதல் காட்சிகள் மட்டுமில்லாது தங்களின் காதல் இணையர்க்குக் கொடுக்கும் ஆச்சர்ய பரிசுகள் எல்லாம் நம்மை வியப்பின் ஆழத்திற்கு கொண்டு செல்வது மட்டுமில்லாமல் நம்மையும் காதல் செய்யத் தூண்டும் ஒரு காவியப்படைப்பாக வீரயுக நாயகன் வேள்பாரி  என்னும் நாவல் விளங்குகிறது.
               
         குறுநில மன்னனாகிய வேள்பாரியின் கதை ஒருபுறம் இருக்க, பறம்புமலையை அடைய துடிக்கும்  மூவேந்தர்களின் சூழ்ச்சியை முறியடிக்கும் காட்சிகளும் போர்க்காட்சிகளும் நம்மை மறக்கச் செய்து மனமானது நூலில் உள்ளேயே பறம்பு மலைக்குச் சென்று நேரடியாகப் பார்ப்பது போன்று புல்லரிக்கச் செய்து விடுகிறது. பாரியின் பொறுமையும் புத்தி சாதுர்யமும் நம்மை பாரி ஒரு சிறந்த தலைவன் என்று ஒப்புக்கொள்ள வைத்துவிடுகிறது.
               
         இந்த நாவலில் வரும்  தேக்கன், பழையன், நீலன், உதிரன், திசைவேழர், வாரிக்கையன், கபிலர், பொற்சுவை போன்ற அனைத்துக் கதாப்பாத்திரங்களும் நம் மனதில் ஆழப்பதிய வைத்துள்ளார் ஆசிரியர்.

ஆசிரியரின் சொல் வளமைக்குச் சில சான்றுகள்
“காதல் தேடலில் தொடங்கி தொலைவதில் முடிவடையும்”su venkatesan 1
“பூவோ, மதுவோ எல்லாம் நினைவை உதிரச்செய்யும்
மயக்கங்களைத்தான் உருவாக்கும்,
காதல் மட்டுந்தான் மயங்க மயங்க நினை வைச் செழிக்கச் செய்யும்”
பொற்சுவை என்ற கதாபாத்திரத்தின் அழகை அவளது கண்களில் கொண்டு வந்து நிறுத்தி நம்மை மயங்கச் செய்திருப்பார் ஆசிரியர், இங்கே அப்பெண்ணைப் பற்றி…

“அவளது புருவங்கள் இசைவாய் வளைந்து கீழிறங்குவதும்
இமையோரத்து மயிர்க்கால்கள் அதை எவ்விப் பிடிக்க முயல்வதும்
யாராலும் வரைய முடியாத ஓவியம்போல் இருந்தன” என்கின்றார் ஆசிரியர்.

உண்மையையும் மனதையும் இணைத்து ஒரு உளவியல் செய்தியைக் கீழ்க்கண்டவாறு  போகிற போக்கில் சொல்லி செல்கிறார் ஆசிரியர்.

“மனம் உண்மையோடு கரைகிறபோது
சொல் தன்னியல்பில் முளைத்து மேலெழுகிறது”
“நீ சொல்வது உன்னளவில் மட்டுமே உண்மை.
அதுவே முழு உண்மையாகிவிடாது.
எல்லோரும் ஓரிடத்தில் நிற்கப்போவதில்லை..
எனவே, எல்லோருக்குமான பொது உண்மை இருக்கப்போவதேயில்லை”
       இவ்வாறு நாவல் முழுக்க உளவியல் கருத்துகளை ஆழ விதைத்துள்ளார் ஆசிரியர். மூவேந்தர்களிடமிருந்து பல்வேறு குடிகளைத் தன் குடிகள்போல் ஆதரித்துக் காத்துவரும் வேள்பாரி பறம்புமலையை எவ்வாறு காப்பாற்றினான் என்பதே கதை.

முடிவுரை           
           இவ்வளவு  அதிஅற்புதமான பிரமாண்ட காவியத்தை நாம் வாசிப்பதற்கு விருந்தளித்த  ஆசிரியர் வேள்பாரியின் இறுதி அத்தியாயத்தை எழுதாமல் விட்டுச்சென்றுள்ளார். மூவேந்தர்களின் சூழ்ச்சி தெரிந்தும் பறம்பு மலையைவிட்டுக் கொடுத்த வள்ளல் வேள்பாரியின் மரணம், தன் மகள்களின் கண்முன்னே நடந்தேறிய கொடூர நிகழ்வைப் பதியாமல் முடித்து விட்டார் ஆசிரியர். ஒரு வரலாற்றுக் கதாப்பாத்திரத்தின் தொடக்கத்தைக் கூறியவர் முடிவையும் கூறியிருந்தால் மிக நன்றாக இருந்திருக்கும் என்பது என்னுடைய தாழ்மையான கருத்து. காதலையும் வீரத்தையும் மிகப்பிரம்மாண்டமாக வரலாற்றோடு இணைத்துக் காட்சிப்படுத்தி ஒரு பெரும் தமிழ்விருந்து படைத்த ஆசிரியர் திரு சு.வெங்கடேசன் அவர்களுக்கு என் சிரம் பணிந்த நன்றிகளும் வாழ்த்துகளும்!!

ஆசிரியர்
ம.தமிழரசு
ஓசூர்-635 109.

 

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »