Contemporary Social Impacts in the Poetry of  Palani Bharathi|V. Jayakumar

Abstract
        Literature has been a mirror of time from the Sangam period to the present. Poetry is the oldest form of literature and also being as universal language. Poetry reflects the problems of all fields of society and seeks to  find its solutions. The poems of the poet Palanibharathi, who deals in his poetic style in a proper way and become an echo of the contemporary social influences. The purpose of this article is to show that not only his simplicity but also the aesthetics of the poems and the sense of social welfare which denotes the uniqueness of his poems. Those poems make the reading enjoyable and make you think through the poetic works of the poet Palanibharathi.

Keywords: Society; Social Impact; Representation; Catastrophe; Religion; Ethnicity; Violence; Godhra; Baghdad; Tsunami; Rain; Marakkanam.


“கவிஞர் பழநிபாரதியின் கவிதைகளில் சமகால சமுதாயத் தாக்கங்கள்”

ஆய்வுச் சுருக்கம்
      படைப்பிலக்கியம் என்பது சங்க கால முதல் இக்காலம் வரையிலும் காலக் கண்ணாடியாகப் பிரதிபலிக்கிறது. படைப்பிலக்கியத்தில் கவிதை  மிகப்  பழமையானது, மொழியைப் போன்று உலகளாவியது. சமுதாயத்தின் அனைத்துவித களங்கள் சார் சிக்கல்களைப் பிரதிபலித்து அதற்குரிய தீர்வு காண முற்படுவதும் கவிதை. இதனை உரிய வகையில் தன் கவிதை நடையில் கையாளும் கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள் சமகாலத்தே நிகழும் சமுதாயத் தாக்கங்களின் எதிரொலியாக அமைகின்றது. பழநிபாரதியின் கவிதைகள் வாசகனின் வாசிப்பினை சுவையாக்குவதற்கும் சிந்திக்க வைப்பதற்கும் கவிதைகளின்  எளிமை, அழகியல் மட்டுமல்ல, கூடுதலாக சமுதாய நலன் சார் உணர்வும் அவர் கவிதைகளின் தனித்துவம் என, பழநிபாரதியின் கவிதை நூல்கள்  வழியாக  எடுத்துக்காட்டுவதாக  இக்கட்டுரையின்  நோக்கம் அமைகின்றது.
 
குறிப்புச் சொல் : சமுதாயம் – தாக்கம் – வெளிப்பாடு – பேரழிவு – மதம் – இனம் – வன்முறை – கோத்ரா – பாக்தாத் –  ஆழிப்பேரலை – மழை – மரக்காணம்.
முன்னுரை
      சங்ககாலத்தில் காதலையும் வீரத்தையும் போராட்ட காலத்தில் விடுதலை வேட்கைகளையும் பிற்காலத்தை நவீனத்துவத்தையும் நகரமயமாதலையும் வெளிக்கொணரும் கருவியாக இருந்து வருகிறது. அவ்வகையில் கவிஞர் பழனி பாரதி சமகாலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை தன் கவிதை வாயிலாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அவரது படைப்புகள் அமைகின்றன. குறிப்பாக கவிஞர் பழனி பாரதியின் கவிதைகளில் இயற்கை பேரழிவும், சமுதாயத்தில் அரங்கேற்றமாகும் சாதிய இனப்படுகொலைகளும், நிறம் சார்பாக சமுதாயத் தாக்கங்களின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. சமுதாயத்தில் அன்றாடம் எதிர்கொள்ளும் இன்னல்கள் இழப்புகள் அவரைப் பெரிதும் பாதித்துள்ளது என்பது அவர் கவிதைகளின் வாயிலாகப் புலப்படுகிறது.

கோத்ரா
பேரழிவுகள் இருவகைகளில் நிகழ்கிறது. இயற்கை சீற்றம் மற்றொன்று இன மத பிரிவினைகளால் நிகழ்த்தப்படுகின்றது. மத வெறியின் எதிரொலியாக,

“ஓலம்
நடு எழுத்து வெட்டப்பட்டு
குஜராத்தில்
ஓங்கி ஒலிக்கிறது
ஓம் என்று.   
பழம் கொறிப்பதை மறந்து
பிணம் கொறிக்கத் தொடங்கிவிட்ட
இராமர் அணில்களுக்காக 
ரயில் பெட்டிகள்
சவப்பெட்டிகளாகி
சுமந்து வருகின்றன
மனிதர்களை”   (புறாக்கள் மறைந்த இரவு பக்21-22)
      27 பிப்ரவரி 2002 அன்று காலை கோத்ரா ரயில் எரிப்பு நிகழ்ந்தது அயோத்தியில் இருந்து திரும்பிய இந்து யாத்திரிகர்கள் மற்றும் கர சேவகர்கள் குஜராத்தில் உள்ள கோத்ரா ரயில் நிலையத்திற்கு அருகில் சபர்மதி எக்ஸ்பிரஸில் ஏற்பட்ட தீ விபத்தில் மனிதர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு கவிஞரை பெரிதும் பாதித்துள்ளது எனலாம். கோத்ரா ரயிலில் மூட்டப்பட்ட மதத்தீயில் குறி வைத்து சாம்பலாக்கப்பட்ட போது தானும் சாம்பலானதாக கவிஞர் தன் கவிதையில் குறிப்பிடுகிறார்.

பாக்தாத்
     ஒவ்வொரு காலத்திலும் நடைபெற்ற ஒவ்வொரு போரும், அதிகாரத்தை அடைய வேண்டும் என்ற நிலைப்பாட்டையும் பயிற்சி பெற, ஆதிக்கம் செலுத்த முயலும் சுயநலத்தினையும் வெளிப்படுத்துகிறது. அதனால் ஏற்படும் இழப்புகள் சமூக நீதிக்கு எதிரானதாகவே அமைகிறது. அவ்வகையில்,

“அண்ணாந்த குழந்தைகளின்
சூரியனைத் துண்டாடுகிறது
வானூர்திகளின்
சீரும் இருட்டு
ஏந்தும் கைகளில்
வந்து விடுகின்றன
அவர்களின்
கடைசிச் சாப்பாடு”   (புறாக்கள் மறைந்த இரவு ப-23)
      ஈராக்கின் மீது அமெரிக்கா தொடுத்த போரில் ஆயிரக்கணக்கானப் பொதுமக்களை கொன்றதும், சித்திரவதை செய்ததும் முற்றிலும் நீதிக்கு எதிரானதாகும். மனித வரலாற்றில் இது போன்ற இனப்படுகொலைகளும் கொடூரமும் இதற்கு முன்பு நிகழ்ந்ததில்லை. இந்த அநீதியின் பிரதிபலிப்பாக இக்கவிதை இடம் பெற்றுள்ளது. எல்லாவற்றையும் இழந்த மனித இனத்தின் குரலாகவும் ஒரே போரில் அகதிகளான மக்களின் இன்னல்களையும் கவிஞர் பழனி பாரதியின் வரிகள் சுட்டிக் காட்டுகின்றன. வன்முறைகளுக்கு எதிராக வினா எழுப்பும் கடமை எழுத்தாளர்களுக்கும் உண்டு. சமகாலத் தாக்கங்களுக்கு குரல் கொடுக்கும் நிலைப்பாட்டினை கவிஞர் கொண்டிருப்பது இக்கவிதை வாயிலாக அறியப்படுகிறது.

ஆழிப்பேரலை
        மழை இயற்கையின்  அடையாளம். இயற்கை இரு வகைகளில் பிரதிபலிக்கக் கூடியது. ஒன்று அழகு மற்றொன்று அழிவு. அதற்கு உதாரணமாக,

ஒதுங்கும்
மனிதர்கள் பார்த்து
ஓலை குடிசைக்குள்
விம்மி விம்மி
அழுதது மழை… (புறாக்கள் மறைந்த இரவு ப-26)
     ஆழிப் பேரலை என்பது கடலுக்கு அடியில் ஏற்படுகின்ற நிலநடுக்கம். நிலச்சரிவு போன்ற காரணங்களால் ஏற்படும் ஒரு பெரிய கடல் அலை என்று அறிவியல் கூறுகின்றது. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியில் சுமார் 14 நாடுகளுக்கு மேல் பாதிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். குறிப்பாக தமிழக கடலோர மாவட்டங்கள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டன. தமிழகத்தில் மட்டும் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயிரிழந்தனர். ஆழிப்பேரலையின் நீரிலும் நிலத்திலும் பாதிப்பாதியாகப் புதைக்கப்பட்ட உடலைப் பார்த்து கடலோர குடிசைகள் அழுவதாக கவிஞர் அழுகையை பதிவு செய்கிறார்.  அகதிகளின் வாழ்க்கையை ஆழிப்பேரலை ஏராளமான மக்களுக்கு கொடுத்துச் சென்றது என்ற கருத்து ஒரு கவிஞராக மட்டுமல்ல சாமானிய மனிதனாக அவரின் மனவேதனையை சுட்டிக் காட்டுகிறது.

மழை 2005
         
     மழையை வர்ணிக்காத கவிஞர்கள் இல்லை. அதே மழையின் சீற்றம் மனிதர்களுக்கு பெரும் இழப்பினை ஏற்படுத்தக் கூடியது. அழகுக்கு உவமையாகும் மழை பல மக்களின் அழுகைக்கு காரணமான சூழலைக் கவிஞர்

போரில்
அனாதைகளான பெண்களின் கண்ணீரை போல்
கொட்டி தீர்த்தது மழை              (புறாக்கள் மறைந்த இரவு ப-27)
       2005 ஆம் ஆண்டு ஏற்பட்ட மழையில் ஆயிரக்கணாக்கான மக்கள் உயிரிழந்தனர். அந்த மழையின் பொழிவு போரில் உறவுகளை இழந்து தவிக்கும் பெண்களின் கண்ணீர் கொட்டித் தீர்ப்பது போல் பெய்ததாக கவிஞர் உவமை கூறுகிறார். உடமைகளையும் உறவுகளையும் இழந்து தவித்த மக்களின் துன்ப நிலையை கவிஞர் தன் கவிதையில் வெளிப்படுத்துகிறார்.

மரக்காணம்
     
“வன்முறை” மனிதம் தன் சுயத்தை மறந்து வேறு ஒன்றை சுயமாக நிரூபிக்க கையில் எடுக்கின்ற தவறான முறைமை எனலாம். அதன் நிரூபணமாக
சித்ராப் பௌர்ணமி
நிலவில் தெறித்தது
யாருடைய ரத்தம்  (வனரஞ்ஜனி ப – 103 )
      என்ற கவிதையானது தமிழகத்தையே உலுக்கிய 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடந்த வன்முறையைக் குறிக்கிறது. இந்த வன்முறையில் பல குடியிருப்புகள், தலித் மக்களின் கடைகள், அரசு பேருந்துகள் உட்பட சில வாகனங்கள் தீக்கு  இரையாக்கப்பட்டும், பல மரங்களும் வெட்டி வீழ்த்தப்பட்டன. ஒரு குறிப்பிட்ட சாதிய மக்களின்   குடியிருப்புகள் மட்டும் எரிக்கப்பட்டிருப்பதும், சாதிய அடக்குமுறையையும் பறை சாற்றுகிறது. இனம் சார் பிரிவினையும், சாதியமும் ஏற்றத்தாழ்வுகளும் சமூகத்தில் இன்னும் அரங்கேற்றமாகிக் கொண்டு தான் உள்ளது. அந்த வகையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதை ஏற்க முடியாத ஓர் சக மனிதராக கவிஞர் கேள்வி எழுப்பும் தன்மையில் சாமானியர்கள் குரலாக இந்தக் கவிதை அமைகிறது.

கல்பர்கி
         
      படைப்புகளின் வழியாக ஒர் எழுத்தாளர் சக எழுத்தாளரின் குரலாக ஒலிப்பது சாத்தியமாகிறது. ஒருமித்த  கருத்துக்களை ஏற்றுக்கொண்டு, பிரதிபலிப்பது போல அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பது படைப்பாளனின் கருத்துரிமையை பறைசாற்றுகிறது. அவ்வகையில் கவிஞர்

அவன் எழுத்தை
அழிக்க நினைக்கிறீர்கள்
சாகாத அவனது எழுத்து
முன்னிலும் வேகமாய்
மறுவாசிப்புக்குள்ளாகும்
உங்கள் மனைவியின் மூலமாக
உங்கள் மகனுக்கு   ( வனரஞ்ஜனி ப – 96 )
         
      என்ற கவிதையில், கர்நாடக மாநில மூத்த எழுத்தாளரான கல்பர்கி 30 ஆகஸ்ட் 2015 படுகொலை செய்யப்பட்டதன் எதிரொலியாக வினா எழுப்புகிறார். சக எழுத்தாளருக்கு நிகழ்ந்த வன்முறை கவிஞரை பெரிதும் பாதித்துள்ளது. கல்பர்கியின் எழுத்துக்கள் அவரின் கொலைக்கு காரணமான வன்முறையாளர்களை, அவரது படைப்புகள்  விரைவாக   மறுவாசிப்புக்குள்ளாகும் என்கிறார் கவிஞர் பழநிபாரதி. சக எழுத்தாளனுக்கு ஏற்பட்ட அநீதிக்கு  பதில் கேட்கும் கவிஞரின் இக்கவிதை, எழுத்தாளர்களுக்கு துணை நிற்கும் உளப்பாங்கினை வெளிப்படுத்துகிறது.

விஷ்ணுப்பிரியா ஐ.பி.எஸ்.
         
       தனி மனிதனுக்கு சமூகம் கொடுக்கும்  அழுத்தங்கள் நிறைந்த சூழல், அவனது சுயத்தினை மாற்றுகிறது அல்லது காணாமல் போகச் செய்கிறது.  அழுத்தங்களில் காணாமல் போன உண்மைக்காக,

உண்மை
கண்ணாடியின் முன்
தன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது
கண்கள்
டைந்த சில்லுகளில்
உண்மையின் ஒரு முகம்
பத்து
நூறு
ஆயிரம்
லட்சமென
விரியத் தொடங்கின ( வனரஞ்ஜனி ப – 74 )
       என்ற கவிதை வரிகள் இடம்பெறுகின்றன. உண்மையாக இருப்பவருக்கு சமுதாயத்தில்  பல்வேறு கோணங்களில் அழுத்தம் கொடுக்கப்படுகிறது. அவ்வகையில்  காவல் துணைக்கண்காணிப்பாளர் விஷ்ணுப்பிரியா ஐ.பி.எஸ் அவர்களின் தற்கொலை கவிஞரை பெரிதும் பாதித்துள்ளது. விலை பேச முடியாத ஓர் காவல்துறை அதிகாரியின் இழப்பு மக்களிடையே பெரிதும் பரபரப்பை ஏற்படுத்தியது. உண்மைக்காகக் குரல் கொடுக்கும் சமுதாய உறவுகளில் ஒருவராகக் கவிஞரின் இக்கவிதை அமைகிறது.

வைக்கம் விஜயலட்சுமி
         
       இசை யாவரையும் மகிழ்விக்கின்றது. குரல் வெறும் ஒலி மட்டுமல்ல. அது உயிரின் ஊற்றாக அமைகின்ற ஒன்று என்பதைக் கவிஞர்

உன் குரலில் பெருகுகிறது
ஒரு ஜீவநதி
நீ பார்க்கவே இல்லை
பாடிக்கொண்டே இருக்கிறாய்
சூரிய ஒளியில் மின்னியபடி
காற்றில் விரியும்
ஒரு கலாபத்தில்
விரிந்து சுழல்கின்றன
உன் நீல விழிகள்          ( வனரஞ்ஜனி ப – 60 )
       என்ற கவிதை வரிகளில் சுட்டுகிறார்.பார்வைப் புலமிழ்ந்த பாடகி வைக்கம் விஜயலட்சுமி அவர்களின் குரலுக்குப் பரிசாக இக்கவிதை அமைகின்றது. கலைத்துறையில் திறன் மூலமாக உயர முடியும் என்பதற்கு உதாரணமாக அமையும் அவரின் உழைப்பை ஊக்குவிக்கும்  கவிஞர் உளப்பாங்கு இக்கவிதையில் புலப்படுகிறது.

அய்லான்
         
     அகதிகளின் வாழ்க்கை வலிகளால் நிரம்பப்பெற்றது. அவர்களின் வாழ்க்கை சமநிலை இழந்த வாழ்க்கைக்கு உதாரணமாகிறது.

நீ கடவுளைப்
படம்பிடித்திருக்கிறாய்
டெமிர்
அவன்
இந்த உலகைப் பார்க்கப் பிடிக்காமல்
தலை கவிழ்ந்துபடுத்துக்கிடக்கிறான்     ( வனரஞ்ஜனி ப – 31 )
         2015 ல் துருக்கியில் போட்ரம் கடற்கறையில் உயிரிழந்த அகதிச் சிறுவன் அலன் குர்தி     (அய்லான்)  உடலைப் புகைப்படக் கலைஞர் நிலுபர் டெமிர் எடுத்த புகைப்படம் அகதிகளின் நெருக்கடியை உலகிற்கு உணர்த்தி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. (Time Magazine time. com/ 4162306 / alan-kurdi-syria-drowned-boy-refugee-crisis/) இச்செய்தியை உலகிற்க்கு காட்டிய புகைப்படக் கலைஞரின் செயலைக் கண்டு நெகிழும் கவிஞரின் படைப்பாக இக்கவிதை அமைகிறது.

முடிவுரை
🎯 கவிதைகள் படைப்பாளரின் படைப்புத் தன்மைகளில் வேறுபடுகின்றது. 

🎯 அவ்வகையில் கவிஞர் பழநிபாரதியின்  கவிதைகள்  சமகால தாக்கங்களின் வெளிப்பாடாகவே அமைகின்றன.

🎯 சமகாலக் கவிஞர்களின்  கவிதைகளில் கவிஞர் பழநிபாரதியின் கவிதைகள்  வேறுபட்ட பார்வை கொண்டதாகவும்,  சமூக நலன் கருதும் தனித்த சொல்லாட்சித் தன்மையோடும், இருப்பது அவரின் தனித்தன்மையை  பதிவு செய்கின்றது.

Bibliography

1.Palani Bharathi. Puraakkal Maraindha Iravu (The Night When the Doves  Disappeared).Chennai: Kumaran Publications, 2014.
2.Palani Bharathi. Vanaranjani. Chennai: Kumaran Publications, 2016.
துணைநூற் பட்டியல்
1.புறாக்கள் மறைந்த இரவு, கவிஞர் பழனிபாரதி,2014. குமரன் பதிப்பகம் – 19 கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை–17.
2.வனரஞ்சனி, கவிஞர் பழனிபாரதி,2016. குமரன் பதிப்பகம் – 19 கண்ணதாசன் சாலை, தியாகராயநகர், சென்னை–17.
வலைதளங்கள்
1.Time Magazine time.com/4162306/alan-kurdi-syria-drowned-boy-refugee-crisis/..
2.விக்கிப்பீடியா
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
Iniyavaikatral_Article_Publishedவ.ஜெயக்குமார்,
பகுதி நேர முனைவர் பட்ட  ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்-28.
ஆய்வு நெறியாளர்
முனைவர் மூ.சிந்து,
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
டாக்டர்.என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்-48.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here