நகரத்தின் நடுவே அகதியாய்|கவிதை|முனைவர் கு. நாகம்மாள்

நகரத்தின் நடுவே அகதியாய்-கவிதை-முனைவர் கு. நாகம்மாள்

🍁 பூமித்தாயின் மடியில் உறங்கி


விடியலில் எழுந்து


விழிகளை விரித்தால்


பசுமைகள் கவிபாடி


பூக்கள் கையசைத்து


வானம் குடை பிடித்து


பாதைகள் பாய் விரித்து
 

என்னை அழைக்கும்


பின் அணைக்கும்..!


 

🍁 பஞ்சம் ஒன்றுமில்லை
 

மிஞ்சும் உறவுகள் கெஞ்சும்


நெஞ்சம் நிறைய கொஞ்சும்


அஞ்சும் அறுவதும் ஒன்றும்..!


 

🍁 பசியில் வயிற்றைத் தடவ


பானையில் சோறு கொதிக்க


கொஞ்சம் பொறுவென


கொத்தமல்லி இரசத்தோடு


அத்தை வந்து நிற்பாள்..!


 

🍁 கதறும் சத்தம் கேட்டு


அலறும் அக்கம் பக்கத்து உறவுகள்


ஆறுதலாய்ச் சில வார்த்தை


ஏற்றிவிடும் தோணியாய்


எப்பொழுதும் உண்டு..!


 

🍁 ஒன்றிருக்க


ஒன்றில்லாப் பொழுதில்


ஒத்த காசுமில்லாது


ஓடிவந்து தந்திடும்


உன்னத கரங்கள்


உன்னன்பு போதாதா என்றுரைக்கும்..!


 

🍁 குளிக்க ஆறு கிணறு


உல்லாச ஊஞ்சல்


தள்ளப்படாத தனிமை


கொல்லப்படாத அறங்கள்
 

கோயில் கொண்டிருக்கும்..!


 

🍁 வாய்ப்புகள் தேடி வரும்


வஞ்சங்கள் ஓடி மறையும்


குறையில்லா வாழ்க்கை


கூடிவரும் இறையும்


நாடி அருளைத்தரும்..!


 

🍁 ஏறாத மரங்கள் இல்லை


நடவாத பாதைகள் இல்லை


உறங்காத இரவுகள் இல்லை


உறவற்ற உயிர்கள் இல்லை


உடனிருந்தது எல்லாம்


என் கிராமத்துப் பொன்னேட்டில்..!


 

🍁 அத்தனையும் தொலைத்து


அலறலில் விழித்து


அழுகையை மறைத்து


ஆனந்தத்தை ஒழித்து..!


 

🍁 அவசரப் பயணமும்
 

அன்றாடப் பிழைப்பும்‌


ஆதியான உழைப்பும்


அடுத்தடுத்து துரத்த


தொலைந்தே போனேன்


நகரத்தின் நடுவே அகதியாய்..!


கவிதையின் ஆசிரியர்

முனைவர் கு. நாகம்மாள்,


உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,


எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம்,


இராமாபுரம் வளாகம்,
சென்னை-89.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here