🧚♀️அப்பா
உன் ஆசை மகள்
எழுதுகிறேன்..!
🧚♀️ வர்ணனையில் கூட
உனக்குப் பிடிக்காத
வார்த்தைகளைக் கூற மாட்டேன்..!
🧚♀️ என்னை தேவதை என்று
மற்றவர் கூறும்போது
மார்தட்டி கூறுவாய்!
அவள் தேவதை இல்லை
என் செல்ல ராட்சசியென்று,
அர்த்தம் புரியவில்லை அன்று..!
🧚♀️ புராண இதிகாச கதைகள் கூறும்
பாட்டியிடம் இருந்து விடுவித்து
ஆறு வயதிலேயே
அண்ணாவின் ஆரிய மாயைக்கு
அர்த்தம் சொன்னவர் தாங்கள்..!
🧚♀️பட்டுப் பாவாடை அணியவிடாமல்
கால் சட்டையும் பனியனும்
அழகு என்பாய்..!
🧚♀️ வாடா போடா என்று
உரையாடும் உன்னிடம்
ஆண்மகன் இல்லை என்ற
ஆதங்கத்தை
ஒருபோதும் கண்டதில்லை..!
🧚♀️ அப்பா உன்
மூச்சுக் காற்றுக்கு
முகவரி தொலைந்ததால்
உன்னால் அடைக்கப்பட்ட
நாக்குகள் எல்லாம்
விலங்குடைத்து வீறுகொண்டன..!
🧚♀️ பெண்மை இடுகாட்டிற்குச் செல்வது
பெரும் குற்றமென கங்கணம் கட்டும்
சமூகத்தின் மத்தியில்
நான் ஆண்மகனின்
அடையாளத்தை தேடினேன்..!
🧚♀️ நீ இல்லை என்று
நிலைகுலைந்து நிற்கும் என்னிடம்
எங்கிருந்து வந்தது
அந்த ஆண்மை!
முந்திக்கொண்ட தீக்கிரையாக்க
அந்த ஒரு நொடி
நான் ராட்சசியானேன்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் த. மகேஸ்வரி
உதவிப்பேராசிரியர்,
தமிழாய்வுத்துறை,
தந்தை ஹேன்ஸ் ரோவர் கல்லூரி,
பெரம்பலூர்