Saturday, June 27, 2026

Iniyavaikatral International Tamil Studies E - Journal

Three Times a Year : April - August - December

Home ஆய்வுக்கட்டுரைகள் தன்னம்பிக்கை கட்டுரை – வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

தன்னம்பிக்கை கட்டுரை – வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

வாய்ப்புகளைப்-பயன்படுத்துங்கள்

          மனிதப்பிறவியும் உயிர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்புதான். பல உயிர்களுக்கு நன்மை செய்யும் வாய்ப்பு மனித பிறப்பிற்கு மட்டுமே கிடைக்கும். எனவே உலகில் கிடைக்கும் ஒவ்வொரு தருணமும் சிறந்த வாய்ப்புதான். சிலருக்கு வாய்ப்புகள் கிடைக்கும். பலருக்கு வாய்ப்புகளைத் தேடிப்போக வேண்டும். அதாவது வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை கட்டுரை : வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்

       படிக்கின்ற மாணவனுக்கு தன்திறனை வெளிப்படுத்த பருவத்தேர்வு ஒரு வாய்ப்பு. ஆனால் அதில் தேர்ச்சி பெறவில்லை என்றால் அவர்கள் தனக்கு கிடைத்த ஒரு வாய்ப்பை நழுவ விட்டார் என்பதை உணரவேண்டும்.

வாய்ப்புகளை உருவாக்குங்கள்

             படித்த காப்பியக்கதை ஒன்று. வணிகனின் மகள் ஒருத்தி பத்தரை என்பவள். திருமணப்பருவத்தில் இருந்தாள். அப்போது இரவு நேரத்தில் இரத்தினங்களைத் திருடிச்செல்ல ஒரு கள்வன் வந்தான். வணிகன் வீட்டுக்குள் நுழைந்த அவனைப் பார்த்ததும் அவன் மீது காதல் வயப்பட்டாள். சில மாதங்கள் கடந்ததும் தன் தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார். ஆனாலும் அவள் அவனைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று விடாப்பிடியாக இருந்து தந்தையின் சம்மதத்துடனே திருமணமும் செய்து கொண்டாள். ஆண்டுகள் சில கடந்தன. ஒருநாள் ஏதோ காரணம் பற்றிப் பத்தரைக்கும் அவள் கணவனுக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் உச்ச கட்டத்தில் அவள், “நீ ஒரு கள்வன் தானே என்று கூறிவிடுகிறாள். இதனை மனதில் வைத்துகொண்ட அவன் இவளை பழிவாங்குவதற்காக எதிர்பார்த்திருந்தான். ஒருநாள் பத்தரையிடம் குலதெய்வக்கோவில் ஒன்று மலைமீது உள்ளது. அங்கு சென்று வணங்கிவிட்டு வரலாம்” என்று கூறினான். உடனே அவளும் மகிழ்ந்து தன்னை அணிகளால் அலங்காரம் செய்துகொண்டு புறப்பட்டாள். இருவரும் மலை உச்சிக்கு செல்கின்றனர். அங்கு ஒரு கோவில் உள்ளது. இது நமது குலதெய்வம் வணங்கு என்று கூறுகிறான். இவளுக்கு காரணம் புரிந்துவிட்டது. இவன் தம்மை கொலை செய்வதற்கு இங்கு அழைத்து வந்துள்ளான் என்று மனதிற்குள் தெளிந்து கொண்டு அவள் “தெய்வத்தை வணங்குவதற்கு முன்பு தங்களையும் மூன்று முறை வலம் வந்து வணங்கிக் கொள்கிறேன்” என்றாள். அவனும் சரி என்று தலையசைத்தான். உடனே கைகளைக் கூப்பி அவனை ஒன்று இரண்டு என்று வலம் வந்து மூன்றாவது முறையாக அவனைப் பின்னால் இருந்து தள்ளிவிட்டாள். அவன் மலையின் உச்சியிலிருந்து அதலபாதாளத்தில் விழுந்தான். இங்கு நீங்கள் கவனிக்க வேண்டும். அவளை அவன் கொன்றுவிடுவான் என்பதை அறிந்து, அவளே ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறாள்.  தன்உயிர் பிழைக்கும் வாய்ப்பு. இவ்வாறான நிலையில் வேறுவழியில்லை. தற்கொல்லியை முற்கொல்லல் என்பதை இங்கு காணமுடிகிறது.

சொல்லிக்கொண்டு வருவதில்லை வாய்ப்பு

            வாய்ப்பு என்பது எப்போதும் கதவைத்தட்டாது. வாய்ப்பு வருவதை நீங்கள்தான் புரிந்து கொள்ள வேண்டும். வாய்ப்புகளைப் பயன்படுத்தும் திறனை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு படிப்பை முடித்துவிட்டு பள்ளி ஒன்றுக்கு வேலை தேடி செல்கிறீர்கள் அங்கு தலைமையில் இருப்பவர் எங்கே வகுப்பில் பாடம் நடத்துங்கள் பார்க்கலாம்” என்று கூறினால் உடனே மாணவர்களுக்கு புரியும்படி பாடம் நடத்த வேண்டும். அதற்கு முன்கூட்டியே பயிற்சி எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் அவ்வாய்ப்பை நழுவ விடாமல் பயன்படுத்தி கொள்ளமுடியும். எனவே உங்களைத்தேடி வருவதை பிடித்துக் கொள்ள நீங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

           ஒரு கோயிலில் பூஜை செய்யும் குருக்கள் ஒருவர் எப்போதுமே இறைவனின் சிந்தனையில் இருப்பார். இறைவனின் நாமத்தை முணுமுணுத்துக் கொண்டே இருப்பார். ஒருநாள் அவ்வூரில் அதிக மழை பெய்தது. ஏரி நிரம்பியது. மாலை நேரமும் வந்துவிட்டது. ஒரு சிறுவன் ஓடி வந்து ஐயா மழை நீர் ஏரியில் சேர்ந்ததால் ஏரியின் கரை விரிசல் விட்டுள்ளது. அதனால் ஊர் மக்கள் எல்லோரும் மேடான பகுதியை நோக்கி செல்கின்றனர். நீங்களும் வாருங்கள் சென்று விடலாம்” என்றான். அவர் “என்னை காப்பாற்ற என் இறைவன் வருவார் நீ போ” என்று சொல்லி அனுப்பிவைத்தார். சிறிது நேரம் சென்றதும் சிறுவன் கூறியவாறே ஏரியின் சுவர் உடைந்து ஊருக்குள் நீர் வந்துவிட்டது. அப்போது மற்ற மக்கள் அனைவரும் ஆடு மாடுகளைப் பிடித்துக்கொண்டு மேட்டுப்பகுதிக்குச் சென்றனர். அவர்கள் இவரையும் அழைத்தனர் ஆனால் “நான் வணங்கும் இறைவன் என்னை காப்பாற்ற வருவார் நீங்கள் செல்லுங்கள்” என்று மறுத்துவிட்டார். சிறிது நேரம் சென்றது. நீர் நிறைய வந்து ஊரே நிரம்பிக்கொண்டு இருந்தது. அப்போது நீரில் யாராவது மாட்டிக்கொண்டு உள்ளனரா என்று பார்த்துக்கொண்டு இருவர் பரிசலில் வந்து வீட்டுக் கூறையின்மீது நின்றிருந்த இவரை அழைத்தனர். “இறைவன் நேரில் வந்து என்னை அழைத்தால் மட்டுமே வருவேன். உங்களுடன் நான் வரப்போவதில்லை. நீங்கள் செல்லுங்கள்” என்று கூற அவர்களும் சென்றுவிட்டனர். நீர் மட்டம் அதிகமாகி குருக்களை நீர் மூழ்கடித்தது. அவரும் இறந்து விட்டார். சொர்க்கத்திற்குச் செல்கிறார், அங்கு சண்டையிட இறைவனை அழைக்கிறார். அங்கிருந்த தேவர் ஒருவர் ஏனய்யா? என்று வினவ நடந்தவற்றை கூறிய குருக்கள் “இறைவன் என்னை காப்பாற்ற ஏன் வரவில்லை” என்று கூறி முடித்தார். அதற்கு அந்தத் தேவர் “ஐயா இறைவன் எப்போதும் நேரில் வரமாட்டார் மற்றவர் மூலம் நல்ல வாய்ப்புகளை நல்குவார். உமக்கு மூன்று முறை பிழைத்துக்கொள்ள வாய்ப்பளித்தார். அதுபுரியாமல் இத்தனைக்காலம் இறைவனை வணங்கி என்ன பயன்? இறைவனின் இந்தச் செயலைக்கூட அறியவில்லை” என்றார் தேவர். எனவே வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும்போது அதை உணர்ந்து கொண்டு நழுவாமல் பிடித்துவிடுங்கள்.

        வாழ்க்கையைச் சிறப்பாக அமைத்துக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று வாய்ப்பை பயன்படுத்துவது. இன்னொன்று வாய்ப்பை உருவாக்குவது.

எதுவும் நடக்கலாம்

           மனித சமுதாயத்தில் அவர்களின் வாழ்க்கை சூழ்நிலை எவ்வாறு வேண்டுமானாலும் மாறலாம். நாளை என்பது இல்லாமலே போகலாம். அவ்வாறு நிலையற்ற வாழ்க்கை வாழும் இந்தச் சமுதாயத்தில் கிடைக்கும் வாய்ப்புகளை இரும்பை கவரும் காந்தம் போல் இழுத்துக் கொள்ள வேண்டும். ஒருவர் முன்னேறுவதற்காகப் பத்துப்பேரை கூட கீழே தள்ளிவிட்டு மேலேறும் மனிதர்கள் வாழும் சமூகம் இது. எல்லாம் தனக்கே கிடைக்க வேண்டும். தானே பெரிய பதவி வகிக்க வேண்டும். இதில் யாரேனும் குறுக்கிட்டால் அவரை முகவரி இல்லாமல் செய்வது என்று சிலர் முனைப்புடன் இருக்கும் இன்றையச்சூழலில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

         படித்த மகாபாரதக்கதை ஒன்று. அழகான புறாக்கள் இரண்டு வானில் பறந்து கொண்டு காதல் செய்தன. பின்னர் அடர்த்தியான மரத்தில் அமர்ந்து கொண்டன. சிறிது நேரத்தில் அங்கு வந்த வேடன் ஒருவன் இரண்டு புறாக்களையும் ஒரே அம்பு கொண்டு வீழ்த்த குறிபார்த்தான். அதை கவனித்த பெண்புறா அச்சம் கொண்டு ஆண் புறாவிடம் “நாம் இந்த இடம் விட்டு பறந்து விடலாம் வாருங்கள் கீழே கவனியுங்கள் வேடன் நம்மை குறி பார்க்கிறான்” என்றது. ஆண் புறா”அவசரப்படாதே அவ்வாறெல்லாம் பறக்க முடியாது. மேலே வானத்தில் பார். நாம் பறந்தால் பருந்துக்கு இரையாவோம்” என்றது. பெண் புறா பயத்தில் நடுங்கியது” மேலே பருந்து சுற்றுகிறது. கீழே வேடன் குறிபார்க்கிறான். இங்கு அமர்ந்தாலும் தவறு. மேலே பறந்தாலும் தவறு. இன்று நாம் இறப்பது உறுதி”என்றது. “இல்லை அவ்வாறெல்லாம் அச்சம் கொள்ளாதே எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம். என்றது ஆண்புறா. அதே நேரத்தில் வேடன் அம்பை குறிபார்த்து விட்டான். விடும்போது அவனுடைய பாதம் எதன் மீதோ வைக்கப்பட்டது. அவன் பாதத்தில் ஏதோ ஒன்று சுருக்கென்று கடிக்க அவன் வில்லின் குறிதவறி மேலே வட்டமிட்ட பருந்தின் மேல் சென்று அம்பு தைத்தது. அப் பருந்து கீழே தரையில் வீழ்ந்தது. அந்த வேடனும் பாதத்தில் பாம்பு கடித்ததால் வலியால் துன்பப்பட்டான். இப்போது இரண்டு எதிரிகளும் முடிந்து விட்டனர். எமனுடைய மேல் கீழ் பற்களுக்கு இடையே அகப்பட்டாலும் தப்பிப்பிழைக்கும் வாய்ப்பும் உண்டு. பின்னர் அந்தப் புறாக்கள் ஆனந்தமாக மேலே பறந்து சென்றன.

சோம்பலுடன் நட்பு வேண்டாம்

          சிலர் படித்துவிட்டு தகுந்த வேலை கிடைக்கவில்லை என்று வீட்டிலேயே முடங்கி கிடப்பார்கள். சிலர் அதிக சம்பளம் கிடைத்தால் மட்டுமே வேலைக்கு செல்ல வேண்டும் என்று எண்ணி காலத்தைக் கழிப்பார்கள். இந்த இருவகையினருமே வாழும் வாய்ப்புகளை நழுவ விடுபவர்கள். இவ்வாறான மனிதர்களிடம் நட்பு கொண்டால் மற்றவரையும் அவர்களைப்போல சோம்பேறிகளாக மாற்றிவிடுவர்.

       சாதிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் படிப்பு முடிந்ததும் வேலைக்குச் சென்று அதற்குத் தன்னை தகுதியாக்கிக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ அவற்றை சிறிது சிறிதாகச் செய்து தன்நிலையை உயர்த்திக் கொள்வர். இந்த மனித சமுதாயத்தில் நீங்கள் கற்றுக்கொள்பவை ஒவ்வொரு மனிதனிடமும் ஒவ்வொரு பண்பு இருக்கிறது. இந்த மனித சமுதாயத்தில் நீங்கள் தோல்வி அடைந்தவரிடமும் வெற்றி பெற்றவரிடமும் எவற்றை செய்ய வேண்டும்? எவற்றை செய்யக்கூடாது? என்ற அனுபங்களைக் கற்றுக்கொள்ளலாம். எனவே கற்றுக்கொள்ள வாய்ப்புகள் எவர் மூலமாகவும் கிடைக்கலாம். எவரையும் சாதாரணமாக எண்ணிவிடலாகாது. பலவற்றைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் கிடைத்தால் மட்டுமே கற்றுக்கொள்ள முடியும். இல்லை என்றால் நீங்களே பலருக்கு உதவுமாறு வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள்.

     வாய்ப்புகளை ஏற்படுத்தும் திறன் சரிவரப்பெற்ற நீங்கள் எதிர்காலத்தில் மெய்யாகவே பெரிய நிர்வாகத்திற்கு எஜமானர்தான்.

கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் நா.சாரதாமணி

ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்லூரி,

நல்லம்பள்ளி, தர்மபுரி.

1.ஆக்கச் சிந்தனைகள் | Creative Thoughts

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

இனியவை கற்றல் பன்னாட்டுத் தமிழியல் மின்னிதழ் (E- ISSN : 3048 - 5495) அன்புடன் வரவேற்கிறது

தொடர்புக்கு : முதன்மை ஆசிரியர், இனியவை கற்றல் மின்னிதழ், +91 70102 70575


This will close in 20 seconds

Translate »