Ritual Performance and Social Cohesion in the Pankuni Festival of Konnaaiyur Muthumariyamman Temple|S.Vinotha

Abstract
         
        Temple festivals express the distinctive power of the presiding deity while strengthening communal unity. In Tamil rural contexts, festivals dedicated to folk goddesses are closely linked to everyday life, agrarian traditions, and inherited ritual systems. These practices continue to evolve under the influence of earlier historical and cultural experiences. This paper examines the Pankuni festival of the Konnaaiyur Muthumariyamman Temple, focusing on key rituals such as the Kaluvaṉ festival and Naadu Celuttuthal. These ritual performances symbolically affirm the goddess’s protective power and highlight the reciprocal relationship between devotees and deity. The festival thus becomes a shared sacred space where faith, social bonds, and collective identity are reinforced through embodied worship.

Keywords: Folk Deity, Muthumariyamman, Pankuni Festival, Ritual Practice, Human–Deity Relationship, Social Cohesion, Tamil Folk Religion


“கொன்னையூர் முத்துமாரியம்மன் பங்குனி திருவிழா:

சடங்கு நிகழ்த்தலும் சமூக ஒற்றுமையும்”

ஆய்வுச் சுருக்கம்
         
    திருவிழா என்பது கோவிலில் உள்ள தெய்வத்தின் தனித்தன்மையை வெளிப்படுத்துவதாகவும் மக்களை ஒன்றிணைக்கும் நிகழ்வாகவும் அமைகிறது. ஒவ்வொரு கோவிலிலும் குறிப்பிட்ட காலகட்டத்தில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன. நாட்டுப்புற மக்களால் அதிக அளவில் வழிபடக்கூடியப் பெண் தெய்வங்களுக்கு எடுக்கப்படும் திருவிழாக்கள் வாழ்வியலோடு ஒன்றியதாகவும் வளமை மற்றும் பாதுகாப்பின் குறியீடாகவும் அமைகிறது. முன்னைய காலத்தில் ஏற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தினால் பல்வேறு வழிபாட்டு முறைகள் தொடர்ந்து மக்கள் வாழ்வில் தோற்றம் பெறுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவிலில் நடைபெறும் பங்குனி திருவிழாவில் போலச்செய்தல் முறையில் பல்வேறு வழிபாட்டு முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவற்றுள் கழுவன் திருவிழா, நாடு செலுத்துதல் விழா போன்றவற்றின் நோக்கம் மற்றும் தாக்கத்தை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொற்கள்         
    கொன்னையூர் முத்துமாரியம்மன், பங்குனித் திருவிழா, கழுவன் திருவிழா, நாடு வருதல், சேறு பூசுதல், சமூக நல்லிணக்கம், தெய்வ ஆற்றல்

முன்னுரை
         
       கொன்றை மரங்கள் அதிகம் நிறைந்திருந்த காட்டில் தோற்றம் கொண்டதால் இவ்வம்மன் கொன்னையூர் முத்துமாரியம்மன் என்ற பெயரால் அழைக்கப்படுகிறார். தெய்வத்தினுடைய ஆற்றலையும் தனித்தன்மையையும் வெளிப்படுத்தும் வண்ணத்தில் இக்கோவிலில் கொண்டாடப்படும் பங்குனித் திருவிழா அமைகிறது. இருபத்தொரு நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் பல்வேறு நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டாலும் இக்கோவிலுக்கெனத் தனித்துவமாக கழுவன் திருவிழாவும் நாடு செலுத்துதல் திருவிழாவும் அமைகிறது. இவ்விழாக்களை மக்கள் பக்தியோடு விமர்சையாகக் கொண்டாடுகின்றனர். மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தோடும் துன்பங்களிலிருந்து தெய்வம் மக்களைக்;; காக்கும் என்ற நம்பிக்கையை விதைப்பதற்காகவும் திருவிழாக்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற கருதுகோளை அடிப்படையாகக் கொண்டு இவ்வாய்வானது அமைகிறது.
இலக்கியத்தில் திருவிழாக்கள்
         
     கழகத் தமிழ் அகராதி, “விழா என்பதற்கு மங்களச் சடங்கு என்பது பொருள்” என்று குறிப்பிடுகிறது.(கழகத் தமிழகராதி,ப.858)

“பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளரும் சுரக்க என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கென்”(மணிமேகலை, விழாவுறைக் காதை,70-72)
         
     என்று பசிப்பிணி பகை நீங்க வேண்டும் என்றும் மழையும் வளமும் பெருக வேண்டும் என்றும் முரசு கொட்டி விழாவினை அறிவித்தனர் என்று மணிமேகலை காப்பியம் குறிப்பிடுகின்றது. “பண்டைத் தமிழ் இலக்கியங்கள் விழாவினை விழவு, விழா, சாறு என்ற சொற்களால் சுட்டிச் சென்றுள்ளன. இவற்றில் விழவு என்ற சொல் மிகுதியாகவும் சாறு என்ற சொல் அடுத்த நிலையிலும் விழா என்ற சொல் அருகியும் பயின்று வந்துள்ளன”. (காந்தி,க.,பக்52-53)“சாறு கொள் ஊர்” (குறுந்.41:1-2) என்று ஊரில் கொண்டாடிய விழா பற்றி குறுந்தொகை கூறுகின்றது. “விழவுடை வியல் நகர்” (அகம்.206) என்று அகநானூறு குறிப்பிடுகின்றது.
திருவிழாக்கள் என்பவை பண்டைய காலம் தொட்டு மக்களால் கடைபிடிக்கப்பட்டமை வெளிப்படுகிறது. திருவிழாக்கள் கொண்டாடப்படுவதற்குரிய நோக்கத்தையும் அறிந்து கொள்ள முடிகிறது. திருவிழாவினால் மக்களின் துன்பங்கள் நீங்குவதோடு தெய்வ அருள் பெற முடியும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே காணப்படுகிறது.

கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பங்குனித் திருவிழா
        கொன்றை மரங்கள் நிறைந்த வனப் பகுதியில் கண்டு எடுக்கப்பட்ட அம்மன் என்பதால் கொன்னையூர் முத்துமாரியம்மன் என பெயர் பெற்று விளங்குகிறது. கோவிலில் பங்குனி மாதம் 21 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு நாட்களில் பல்வேறு விழாக்களும் நேர்த்திக் கடன்களும் மக்களால் செலுத்தப்படுகிறது. ஒவ்வொரு நாள் திருவிழாவிற்கு பின்னரும் மக்களினுடைய நம்பிக்கைகள் வேரூன்றியிருப்பதை ஆய்வின் வழி அறிய முடிகிறது. காப்பு கட்டுதல் பூச்சொரிதலோடு தொடங்கப்படுகின்ற திருவிழா பொங்கல் விடுதலோடு நிறைவடைகிறது.
வருடம் தோறும் மக்களினுடைய துன்பங்களைத் தீர்த்துவைத்து நன்மைகளை அளித்த தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விதமாக அமைவதை திருவிழாவினுடைய நடைமுறையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. பூச்சொரிதல் என்பது அம்மனை குளிர்விக்கும் பொருட்டு மக்கள் தங்களால் இயன்ற அளவுக்கு மலர்களைக் கொண்டு அர்ச்சிப்பதாகும். இவ்வாறு நன்றி செலுத்துதல் தன்மையின் வெவ்வேறு வடிவங்களாக வெவ்வேறு நாட்களில் அலகிடுதல், காவடி எடுத்தல், தீவடம் பிடித்தல் போன்றவற்றை மேற்கொள்ளுகின்றனர். திருவிழாவில் இறுதியாக பொங்கல் இடுவதற்கு முன்னர் நாடு செலுத்துதல் நிகழ்வும் கழுவன் திருவிழாவும் நடைபெறுகிறது. கொன்னையூர் முத்துமாரியம்மனின் தனிச்சிறப்பாக இவ்விழாக்கள் கருதப்படுகின்றன.

கழுவன் திருவிழா
     பங்குனி பெருந்திருவிழாவின் ஒரு பகுதியாக கழுவன் திருவிழா நாடு செலுத்துதல் திருவிழாவிற்கு முந்தைய நாள் நடைபெறுகிறது. கழுவன் என்ற சொல்லுக்குப் ‘பெரும் துன்பத்தை விளைவிப்பவன்’, ‘துரோகி’ என்று அகராதிகள் பொருள் விளக்கம் தருகின்றன. பெரும் துன்பத்திலிருந்து மக்களைக் காத்த தெய்வத்திற்கு நன்றி செலுத்தும் விழாவாக கழுவன் திருவிழா அமைகிறது. கழுவன் திருவிழாவானது நாடக முறையில் போலச் செய்தது போல் நடைபெறுகிறது. பெரும் துன்பம் ஒன்றில் இருந்து குழந்தைகளை அம்மன் காத்ததற்காக கிடாய் வெட்டி நன்றி செலுத்துவதாக இவ்விழாவானது அமைகிறது. வைக்கோல் புனையப்பட்ட உருவம் ஒன்றினை கழுவன் என்று கருதுகின்றனர். கழுவனின் காரணமாக உயிர் அற்றவர்களாக குழந்தைகள் நிலத்தில் பாவனை செய்வர். கோவிலிலிருந்து தீர்த்தத்துடன் வருகின்ற அம்மன் அவர்களை உயிர்த்தெழச் செய்கின்றது. கழுவனைக் கொல்வதைப் போன்று கிடாய் ஒன்றிணை வெட்டி தூக்கி எறியக்கூடிய நிகழ்வு நடைபெறுகிறது.
இவ்வாறான கழுவன் திருவிழா சிவகங்கை மாவட்டத்தில் பரவலாக பல இடங்களில் பல்வேறு நடைமுறைகளில் நடைபெறுகிறது. குறிப்பிட்டு காலத்தில் ஏற்பட்ட நோயின் தாக்கத்தின் காரணமாகவோ அல்லது பகைவர்களின் குறியீடாகவும் கழுவன் தென்படலாம் என்று அறிய முடிகிறது. அதிலிருந்து மக்களைக் காக்கக்கூடிய தெய்வ ஆற்றலைப் பிரதிபலிப்பதாகவே கழுவன் திருவிழா அமைகிறது. மக்களினுடைய வரலாற்றை மீண்டும் நினைவுகூறுதல் பொருட்டும், கடவுளின் ஆற்றலை வெளிப்படுத்தும் பொருட்டும் இத்திருவிழாவானது நடைபெற்று வருகிறது என்பதை ஆய்வின் வழி அறிய முடிகிறது.
கிடாய் என்ற பலியீடு முறையினைத் தீய சக்தியைத் தெய்வம் வெற்றி கொள்வதாகவும் அல்லது தீய சக்திகளுடைய ஆற்றலை வேறு இடத்தில் திசை திருப்புவதாகவும் காணலாம். கழுவன் திருவிழாவினை மற்றொரு வடிவமாகவே நல்லதங்காள் கதையையொட்டி அமைகின்ற படுகள நிகழ்வினைக் காணலாம். மனிதனைத் துன்பத்திலிருந்து காக்கும் ஆற்றல் ஒன்றிணை மீண்டும் மீண்டும் மக்கள் நினைவுகூர்வதாகவே இத்தகைய வழிபாட்டுமுறைகளைக் காணமுடிகிறது. இவ்வாறு கழுவன் திருவிழா நிறைவடைந்த பின்னரே நாடு செலுத்துதல் நிகழ்வு தொடங்குகிறது.

நாடு செலுத்துதல் திருவிழா
      கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் அமைந்துள்ளது. நாடு செலுத்துதல் திருவிழா என்பது ஒவ்வொரு நாட்டில் இருந்தும் மக்கள் புடை சூழ அம்மனுக்கு நன்றி கடன் செலுத்தும் நிகழ்வாகும். இதனை நாடு வருதல் என்ற பெயராலும் அழைக்கின்றனர். பொன்னமராவதி, செவலூர், ஆலவயல், செம்பூதி ஆகிய நாடுகளைச் சேர்ந்த மக்கள் குறிப்பிட்ட நேரங்களில் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் மேள தாளத்துடன் வருகை தருவர். அவ்வாறு வருகை தருகின்ற ஒவ்வொரு நாட்டு மக்களும் தங்களுக்கு உரிய நேர்த்திக் கடன்களைத் தொடர்ந்து நிறைவேற்றும் வண்ணமாக இந்நிகழ்வானது அமைகிறது. ஒவ்வொரு நாடும் தங்களுக்கென தனித்த அடையாளத்தையும் நேர்த்திக்கடனையும் கொண்டிருப்பது தனிச்சிறப்பாகும்.
நாடு வருதல் திருவிழாவின் பொழுது பொன்னமராவதி நாடு முதன்மை நாடாக வருகிறது. பொன்னமராவதி நாட்டிற்குச் சிறப்பு செய்த பின்னரே பிற நாடுகளுக்கு சிறப்பு செய்யப்படுகிறது. பொன்னமராவதி நாட்டில் இருந்து வருகின்ற மக்கள் ராட்சச ஈட்டியை கொண்டு வருகின்றனர். இதனை ராசாமணி ஈட்டி எனவும் சிலம்ப ஈட்டி எனவும் குறிப்பிடுகின்றனர். முதலில் குதிரையில் வரக்கூடிய ராஜாவினுடைய பிரதிநிதி கொண்டுவரக்கூடிய ஈட்டிக்கு சிறப்பு செய்த பின்னரே பிற ஈட்டிகளுக்குச் சிறப்பு செய்யப்படுகிறது. ஈட்டியை மக்கள் பெரியநாச்சி அம்மன் கோவிலில் பாதுகாத்து வைத்துள்ளனர். ஒரு காலத்தில் போர்கள் அதிகம் நிறைந்திருந்த காலகட்டத்தில் மக்கள் பயன்படுத்திய ஆயுதமாகவே ஈட்டியையும் வாளையும் சுருளையும் காணமுடிகிறது. போரில் வென்ற அரசர் முத்துமாரி அம்மனுக்கு நன்றி செய்யும் பொருட்டாக இப்பழக்கமானது தொடங்கப்பட்டு இருக்கலாம் என்று அறிய முடிகிறது. பின்னர் அரசருடைய வாரிசுகளும் அவ்வூர் மக்களும் இப்பழக்கத்தைத்  தொடர்ந்து கடைபிடித்து வருடா வருடம் அம்மனுக்கு ராட்சச ஈட்டி தாங்கி வருகின்றனர். வேண்டியது நடந்து விட்டால் ராட்சச ஈட்டி தாங்கி வருவதாக வேண்டிக் கொள்ளக்கூடிய பக்தர்களையும் காண முடிகிறது. பொன்னமராவதி நாட்டைத் தொடர்ந்து ஒவ்வொரு நாட்டைச் சேர்ந்த 18 ஊர்களில் உள்ள மக்களும் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்று கூடி தங்களுடைய நேர்த்திக்கடன்களைச் செலுத்துவதற்காக தொடர்ந்து வருகின்றனர்.

சேறு பூசுதல் திருவிழா
         
     நாடு வருதல் திருவிழாவின் பொழுது மக்கள் சேறு பூசி ஆண்கள் குறவன் வேடமிட்டு கோவிலுக்கு ஊர்வலமாக வருவர். சிலர் கைகளில் வேப்பிலை ஏந்தியும் வருவர். ஆலவயல் நாட்டு மக்களே அதிக அளவில் இந்நேர்த்திக்கடனைச் செலுத்துகிறார்கள். முன்னொரு காலத்தில் பெயர் தெரியாத நோயின் காரணமாக அதிகப்படியான மக்கள் இறந்ததால் அம்மன் தோன்றி கரம்பை பூசினால் நோய் தீரும் என்று வாக்களித்தமையால் அதனைத் தொடர்ந்து மக்கள் இன்று வரைக்கும் சேறு பூசி அம்மனை வழிபடுகிறார்கள். நோய்களிலிருந்து தங்களை காக்கும் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக மக்கள் சேறினைப் பூசி வலம் வருவதாக அறிய முடிகிறது. உடம்பிற்கு குளிர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய சேறினைப் பூசி வருவதன் மூலம் வரவிருக்கக்கூடிய வெப்ப கால நோய்களிலிருந்து மக்கள் தங்களை காத்துக் கொள்வதற்கும் வழிவகையாக அமைகிறது. மக்கள் நம்பிக்கையோடு அறிவியல் தன்மையும் இணைந்தே இருப்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. முன்னர் ஆலவயல் நாட்டு மக்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வந்த வழிபாடானது பின்னாளில் அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

முடிவுரை
         
       புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி வட்டத்தில் அமைந்துள்ள அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோவிலில் நடைபெறக்கூடிய பங்குனி திருவிழா பெரும் சிறப்பு பெற்றதாக அமைகிறது. இத்திருவிழாவானது பூச்சொரிதல் தொடங்கி அக்னி காவடி எடுத்தல் தீவட்டி பிடித்தல் பொங்கல் வைத்தல் என பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டு அமைந்தாலும் இறுதி நாளில் நடைபெறக்கூடிய நாடு வருதல் என்ற நிகழ்வு சிறப்பு கூறியதாக அமைகிறது. இந்நிகழ்வானது மக்களிடையே ஒற்றுமையை வலுப்படுத்துவதாக அமைகிறது. மக்கள் வழிபாட்டிற்குக் கொண்டு வரக்கூடிய பொருட்களைக் கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது போரில் வெற்றி பெற்ற அரசன் அம்மனுக்கு செய்யக்கூடிய நன்றி கடனாகவே இதனை அடையாளப்படுத்த முடிகிறது. முத்துமாரியம்மன் உடைய ஆற்றலை வெளிப்படுத்தும் விதமாக முற்காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை அடிப்படையாகக் கொண்டு போலச்செய்தல் அடிப்படையில் சேறு பூசி வருதல் கழுவன் திருவிழா போன்றவை மேற்கொள்வதை ஆய்வு வெளிப்படுத்துகிறது. இயற்கையோடு இணைந்த மக்களினுடைய வாழ்வில் தெய்வ வழிபாட்டின்போது அறிவியல் சார்ந்த கருத்தாக்கங்கள் நிலை பெற்றிருப்பதையும் இவ்வழிபாட்டு முறைகளின் மூலம் அறியலாம். மக்களினுடைய நலன் அடிப்படையில் காலத்தின் தேவை கருதியும் வழிபாடு முறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அதனுடைய உள்ளார்ந்த கருத்தானது தெய்வத்தினுடைய ஆற்றலை வெளிப்படுத்துவதோடு மக்களை நல்வழிப்படுத்துவதாகவும் அமைவதை ஆய்வு வெளிப்படுத்துகிறது.

தகவலாளர் பட்டியல்
1.வீரபாண்டி பண்டாரம்> 60> BA

2.மாயாண்டி பண்டாரம்>68>ITI

3.கல்பனா> 46> MCA

துணைநூற்பட்டியல்
1.காந்தி., தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1980

2.சண்முகம் பிள்ளை,மு., சங்கத் தமிழரின் வழிபாடும் சடங்குகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை,1996

3.சாமிநாதையர்.,உ.வே.சா., குறுந்தொகை மூலமும் உரையும், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல்நிலையம்,2018

4.செல்லப்பா.சி.சு.,மணிமேகலை மூலமும் தெளிவுரையும், பாரதி பதிப்பகம், சென்னை,1998

5.வேங்கடசாமி நாட்டார்,ந.மு., அகநானூறு மூலமும் உரையும், சாரதா பதிப்பகம்,2019

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
செ.வினோதா,
Iniyavaikatral_Article_Publishedமுனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,

கோயம்புத்தூர்

முனைவர் ப. ஜெயபால்,
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here