PENNIN PERUNTHAKKA YAVULA|Dr.K.MUTHAMIL SELVI

ABSTRACT           
           Pathinen Kilkanakku , a collection of eighteen Tamil literary works, were written primarily to impart righteousness during the  Sangam period. Values to uplift the society, and ideas related to women were written by writers with unique talents. Thirukurral   depicts that the honour bestowed upon a women is the honour bestowed upon the society. To insist this value he has dedicated a chapter on “Valkai Thunai Nallam” to the world. He has rightly pointed out that the basement for a family life is only love. Thus a husband and wife bonded by love are created for the welfare of the family.  Works written during Sangam period portray women as characters not only engaged in household works but also in education and art. Therefore this paper aims at bringing out the high qualities possessed by women as expressed by Thiruvalluvar in his Thirukurral, written in the form of couplets.

Keywords:Aram, Menmai, Sangam, Iilaram, karbu, Anbu, Panbu


“பெண்ணின் பெருந்தக்க யாவுள”

ஆய்வுச்சுருக்கம்       
          Dr.K.MUTHAMIL SELVI பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் அறத்தை வலியுறுத்துவதற்காகவே படைக்கப்பட்டவை. அவற்றில் சமூகத்தை மேம்படுத்துவதற்காக பெண்மை சார்நத கருத்துக்கள் தனித்துவமான புலவர்களால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளன. திருக்குறள் பெண்மையின் மேன்மையினை சமூகத்தின் மேன்மையாகவே எடுத்துக்காட்டுகிறது. திருவள்ளுவர் அக்கருத்தை வலியுறுத்த “வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டி, இல்லற வாழ்க்கையின் அடித்தளம் அன்பு மட்டுமே என்றும் அவ்வன்பில் வேரூன்றிய கணவனும் மனைவியும் குடும்பத்தின் நன்மைக்காக விதிக்கப்பட்டவர்கள் என்றும் குறிப்பிடுகிறார். சங்ககாலத்தில் பெண்கள் இல்லறவேலைகளில் மட்டுமல்லாது கலை மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற்றவராக விளங்கினர் என்பதை சங்கநூல்கள் குறிப்பிடுகின்றன. அந்த வகையில் பெண்களின் மேன்மையை குறட்பாக்களின் வழியாக உலகத்திற்கு உணர்த்திய திருவள்ளுவரின் கருத்துக்களை அறிவதே இக்கட்டுறையின் நோக்கமாகும்.

குறியீட்டுச் சொற்கள்
: அறம், மேன்மை, சங்கம், இல்லறம், கற்பு, அன்பு, பண்பு.

முன்னுரை
“செறிவும் நிறைவும் செம்மையும் செப்பும்
அறிவும் அருமையும் பெண்பாலன” (தொல். பொருள்.141)
         
       என்னும் தொல்காப்பிய நூற்பா பெண்ணின் திறத்தை உயர்வாகச் சுட்டுகிறது. நிலஉடைமைச்சமுதாயமாக இருந்த திருக்குறள் காலத்தில் சமூக பண்பாட்டுச் சிதைவுகளும், தனிமனித ஒழுக்கச் சீர்கேடுகளும் நாட்டையே கலகத்திற்கு உள்ளாக்கியிருக்கின்றன. அதனாலே அக்காலகட்டத்தில் அறத்தை வலியுறுத்திச் சொல்ல வேண்டியிருந்தது. அவ்வறத்தின் வழியாக ஆணும் பெண்ணும் ஒன்றுகூடி வாழ்கின்ற நெறிகளை புறத்தார்க்குப் புலப்படும் வண்ணம் வள்ளுவர் தம் நூலில் வாழ்க்கைத்துணைநலம் என்னும் ஓர் அதிகாரத்தை எடுத்துக்காட்டியுள்ளார்.

      அறக்கருத்துக்களைப் பரப்புவதற்காகவே எழுதப்பட்ட நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்ற போதும் அவற்றுள் சமுதாயத்தைச் சீர்படுத்தும் செறிவான கருத்துக்களும், பெண்மைக்கருத்தியலும் எடுத்தோதப்பட்டுள்ளன. திருக்குறளும் பெண்மையின் முக்கியத்துவத்தைக் கூறி அவர்களின் மேன்மையே சமுதாயத்தின் மேன்மை என்றும், பென்மையின் தனித்திறமையை போற்றவேண்டும் என்றும் விளம்புகிறது. தவறிழைப்பது என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இயற்கையானது. ஆண் தவறிழைக்கும் போது பெண்ணும் பெண் தவறிழைக்கும் போது ஆணும் உள்ளன்புடன் பிழைகளை தட்டிக்கேட்டு மனதால் உணரவைப்பதே சிறந்த இல்லறமாகும். இல்லறத்தை மேன்மையடையச் செய்யும் இல்லாளைக் குறிப்பிடும் வாழ்க்கைத்துணைநலம் என்னும் அதிகாரத்தில் பெண்மையைப் போற்றும் திருவள்ளுவரின் கருத்துக்களை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைகிறது.

பெண்மையின் திறம்
         
     பெண்களின் அழகையும், நிறத்தையும் மட்டுமே பாடிய புலவர்களுக்கு மத்தியில் பெண்மையின் தனித்திறன்களையும், மனஉணர்வுகளையும் மதிப்பீடு செய்து வெளியிட்ட பெருமை திருவள்ளுவரையேச் சாரும். ஆணைத் தலைமையாகக் கொண்ட பெண்மை சேர்ந்த இல்லறம் சங்ககாலத்தில் வரவேற்கப்பட்டுள்ளது. அதனை திருவள்ளுவரும்,
“மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் 
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை”    (திருக்குறள் – 51)         
    என்று மனையாளிடம் சிறந்த குணங்கள் இருந்து கணவனிடமும் நற்குணங்கள் அமைந்திருந்தால் அந்தக்குடும்பம் என்றும் வளமாக இருக்கும் என்று கூறுவதிலிருந்து உணரமுடிகிறது. அன்பு, தியாகமனப்பான்மை, விட்டுக்கொடுக்கும் திறன் இம்மூன்று பண்புகளும் இல்லறத்தில் ஈடுபடும் ஆண், பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய பண்புகளாம். இவைகுறையும் பொழுது அகம்பாவம் மேலிட்டு ஒற்றுமை குலைந்து இல்லறத்தின் மேன்மை கெடும். இல்லறம் என்னும் நல்லறப் பண்பே இல்லாளிடம் இருக்க வேண்டிய இன்றியமையாப் பண்பு ஆகும். இது குறையும் பொழுது கணவன் மிகப்பெரிய செல்வந்தனாயினும் பயனில்லை என்பதை,

“மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை 
எனைமாட்சித் தாயினும் இல்”       (திருக்குறள் – 52)         
      என்ற கருத்தின் வழி உணர வைக்கிறார் வள்ளுவர். இதே கருத்தை மொ.அ.துரை. அரங்கசாமியும், “அன்பு காரணமாகத் தான் அடைந்த கணவனுக்கு வாழ்க்கைத் துணைவியாய் அவள் சொல்வழி நின்று, அவனைத் தெய்வமாகக் கொண்டொழுகும் ஒருத்தியும், அவ்வாறே அவளைத் துணைவியாகக் கொண்டு அவளுக்கு வழித்துணையாய் மற்றவர்களுக்கெல்லாம் உற்றவிடத்து உறுதுணையர் அறவழி நிற்பான் ஒருவனும் ஒன்றுபட்டு ஒருவரை ஒருவர் விட்டு நீங்காது வாழவேண்டும் என்பதே திருக்குறளின் துணிவாகும்” (மொ.அ.துரை அரங்கசாமி, திருக்குறள் நெறியும் திருவள்ளுவர் நெறியும்) என்று கூறுகிறார். இல்லறத்தின் வாழ்வும் வளமும் சிறக்க வாழ்க்கைத் துணைநலமாகிய இல்லாளின் நற்பண்புகளே அடிப்படையாகும்.

இல்லாளின் மாண்பு
“கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு 
முன்தோன்றி மூத்த குடி”  (புறப்பொருள் வெண்பாமாலை-35)         
      எனத் தமிழ் மறக்குடி போற்றப்பட்டது. அக்குடியில் பிறந்த பெண்கள் கணவனுக்கு மனத்தளவிலும் துன்பம் நினைக்காது, அறவழியில் இல்லறத்தை பேணிக்காப்பர். இல்லறம் நல்லறம் ஆவதற்கு ஆண், பெண் இருவருக்குமே கற்பு இன்றியமையாதது என்று குறிப்பிடும் திருக்குறளார்,

“பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மை உண்டாகப் பெறின்”       (திருக்குறள் – 54)         
       என்று கூறுவதில், கற்பை பெண்ணிற்கு முதன்மைப்படுத்தி அவளை சமுதாயத்தினர் உயர்வாகவே எண்ணுமாறு சிம்மாசனத்தில் உயர்த்திவிடுகின்றார். உயர்ந்த நெறிமுறைகளை உலகத்தார்க்கு புலப்படுத்தவே பெண்களுக்கு கற்பு எனும் பண்பை இறைவனும் வகுத்தனன் போலும்.
      பெண்ணின் உடல் மாறுபாடே பெண்ணினத்துக்கு கற்பு என்னும் வேலி போட்டு அடக்கிவிடுவதற்குக் காரணமாகும். இதனால் தான் பெண்ணைப் போதைப் பொருளாகவும், காமப்பொருளாகவும் உலகத்தார் பார்க்கின்றனர். கற்பிற்கு பல உரையாசிரியர்களும் பல்வேறு உரைகளைத் தந்த போதும், ஒளவையாரின்,

“கற்பெனப்படுவது சொல்திறம்பாவை”  (கொன்றைவேந்தன்-14)
         
       என்பதே பொருத்தமாகும். இல்லறஉறவில் ஈடுபடும் கணவனும், மனைவியும் அவரவர் சொன்ன சொல்லில் தவறிழைக்கக்கூடாது என்பதே சரியானதாகும். கற்பு என்பது ஒவ்வொரு பெண்ணிடமும் அமைந்துள்ள குணம் என்பதைக் குறிப்பிடும் வள்ளுவர்,

“சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும் மகளிர் 
நிறைகாக்கும் காப்பே தலை” (திருக்குறள் – 57)
         
         என்று பெண்களுக்கு மேலும் மேன்மை கொடுத்து, பெண்களுக்கு பெண்களே தலைவி என்றும் உலகத்தார் எவரும் அறிவுரை சொல்லத் தேவையில்லை என்பதையும் பெண்ணின் மனமறிந்து கூறிச்செல்கிறார். நீதிநூல்கள் அனைத்தும் ஒவ்வொரு பெண்டிர்க்கும் கற்பு இன்றியமையாப்பண்பாம் என்று கூறுகின்றன. அதேவேளையில் ஆண்களையும் இல்லாள்விட்டு அகலாதே என்று அறிவுரையும் கூறுகின்றன.

மைவிழியார் மனை அகல்’            (ஆத்திச்சூடி 95)
      என்றும்,

“இருதாரம் ஒருநாளும் வேண்டாம்’ (உலகநீதி 7)
          என்றும் கூறுகின்றனர்.
          மனைவியை விட்டுப் பிரிந்து செல்லும் ஆடவன் பதருக்குச் சமம் என்றும் கூறுகின்றன. ஆண்களுக்கு வீரம் என்பதை உயர்வாகப் பேசும் சமூகத்தில் பெண்களுக்கு கற்பு என்பதையும் உயர்வாகப் பேசும்படி குறிப்பிடுகிறார், வள்ளுவர்.
 ஆண், பெண் இணையும் மண வாழ்க்கையில் இருவருமே கருத்தொருமித்து உள்ளத்தால் ஒன்றுபடவேண்டும். அவர்களின் இல்லற வாழ்க்கையின் அஸ்திவாரமே அன்பு மட்டும்தான். கணவனும், மனைவியும் அன்பால் வேரூன்றி இல்லறம் என்னும் நல்லறத்திற்கு நீர்பாய்ச்சும் பொழுதுதான், வான் பொய்க்காது மழையாகப் பொழியும் என்ற உளக்கருத்தை தன் குறளில் பதிவு செய்துள்ளார் வள்ளுவர்.

“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் 
பெய்யெனப் பெய்யும் மழை” திருக்குறள்-55)         
       என்பதில் தெய்வத்தை தொழாமல் தன் கணவனைத் தொழும் இல்லறத்தாள் சொல்லும் பொழுது பெய்யும் மழை என்று குறிப்பிடுகிறார். இக்குறளுக்கு உரையாசிரியர்கள் அவரவர் உரையைக் கூறினாலும் ஆராய்ந்து நோக்கின் கணவனுக்கும் இல்லாளுக்கும் இடையே உள்ள தூய்மையான அன்பு மட்டுமே தெளிவாகின்றது என்பது நிரூபணமாகின்றது.

இல்லாளின் பெருமைகள்
பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எனும் நாற்குணங்கள் மிக்கவர்களாக இருந்தமையால், இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை எனும் பெருமை மிக்கவர்களாகத் திகழ்ந்தனர். இதனை திருவள்ளுவர்,

“இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் 
இல்லவள் மாணாக் கடை”     (திருக்குறள்-54)         
என்றார். இதனையே இல்லறத்திற்கு இன்றியமையாதவள் மனைவி என்பதை,
“இல்லாளும் இல்லாளே
ஆமாயின் – இல்லாள்
வலிகிடந்த மாற்றம்
உரைக்குமேல் அவ்இல்
புலிகிடந்த தூறாய் விடும்       (மூதுரை 21)         
      என்று கூறுவதிலிருந்து இல்லாளின் குணம் அறமற்றதாக இருந்தால் அந்த இல்லம் புலியின் குகை போலாகிவிடும் என்றும்,

“……………. பாழேமடக்கொடி இல்லா மனை”   (நல்வழி-24)         
     என்றும் ஒளவையார் கூறுவதன் மூலம் பெண்ணுக்கு அக்காலத்தில் உயர்ந்த மாட்சி வழங்கப்பட்டுள்ளது என்பதும், இல்லறத்திற்கு இன்றியமையாதவள் இல்லாள் என்பதும் பெறப்படுகிறது. இல்லாளின் திறமையைப் பார்க்கும் பொழுது ஆணினம் எவ்வளவு கற்றிருந்தாலும் அவன் வாரிசை நல்வழிக்கு கொண்டு செல்லுதல் இயலாது. பொறுமையும் அக்கறையும் கொண்ட பெண்ணினமே வாரிசை நல்நிலமைக்குக் கொண்டு செல்லும் என்ற கருத்தியல் இக்குறட்பாவின் மூலம் பெறப்பட்டதை உணரலாம். இல்லாள் கணவனின் குறிப்பறிந்து ஒழுகுபவளாகலின அறக்கடவுளும் அவளுக்கு வீடுபேறு அளிப்பான் என்பதை,

“பெற்றான் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப் 
புத்தேளிர் வாழும் உலகு”   (திருக்குறள்-58)
         
      என்று திருவள்ளுவர் கூறுவதன் மூலம் கணவனின் நலத்திற்காகவும், அவனது பெருமைக்காகவும் அவனுடன் மனம் ஒருமித்து வாழும் இல்லாளே மிகச் சிறந்தவள் என்னும் கருத்தும் புலப்படுகின்றது. இல்லறத்தையே நல்லறமாக மேற்கொள்ளும் பெண்கள் தங்களையும் கவனிக்கவேண்டும் என்பதை,

“தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற 
சொற்காத்துச் சோர்விலாள் பெண்” (திருக்குறள்-56)         
  என்றும் வள்ளுவர் குறிப்பிடுவதிலிருந்து மகளிர் இயல்பிலேயே உடலால் மென்மையானவர்கள் என்பதையும் மனையுறை மகளிர் தங்கள் கணவனுடன் இணைந்து நன் மக்கட் சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதையும் இல்லறக் கருத்தியலாக பதிவு செய்கிறார். அக்குறள்,

“மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு”     (திருக்குறள்-60)
 
என்று விளம்புகிறது.

தொகுப்புரை
    திருவள்ளுவர் பெண்களை நேரடியாகவே உயர்த்திப் பேசுகிறார்.
திருவள்ளுவர் ஆண்களை மறைமுகமாகச் சாடுகிறார்.

முடிவுரை         
       இல்லறப் பெண்கள் சங்ககாலத்தில் இல்லறத்தை மட்டும் கவனியாது கலைத்துறையிலும், கல்வித் துறையிலும் சாதித்தனர் என்பதை சங்க நூல்கள் வழிகாண முடிகிறது. காப்பிங்களும், பக்தி நூல்களும் பெண்ணினத்தை பெருமையாகவே வைத்திருந்தன. திருவள்ளுவரும் பெண்களுக்கு தம் நூலில் ஏற்றம் கொடுத்து வெளிப்படையாக அவர்களை உயர்த்தியே காட்டியுள்ளார். எனினும் ஆண்மகனுக்குள்ள கடமைகளைச் சொல்லத் தவறவில்லை என்பதும் இக்கட்டுரை வழி அறியலாகிறது.

பார்வை நூல்கள்
1.திருக்குறள் – பரிமேலழகர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை-600014

2.எம்.சிவசுப்ரமணியம் – திருக்குறள் குறளும் விளக்கவுரையும், கமர்சியல் பதிப்பகம், சிவகாசி.

3.மு.வரதராசனார் – திருக்குறள் தெளிவுரை, திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக்கழகம், சென்னை-600018.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் க.முத்தமிழ்ச் செல்வி,
தமிழ் உதவிப்பேராசிரியர்,
சௌராஷ்டிரக் கல்லூரி, மதுரை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here