தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகள், எண்ணற்ற வரலாற்றுப் புதையல்களைத் தன்னுள் மறைத்து வைத்திருக்கின்றன. அதன் ஒரு பகுதியான கொடைக்கானல் அருகே, தாண்டிக்குடி மலைப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பிரம்மாண்டமான பெருங்கற்கால நினைவுச் சின்னம், அக்காலத் தமிழர்களின் வாழ்வியல், தொழில்நுட்பம் மற்றும் சமூக அமைப்பு குறித்த நமது புரிதலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறது. 50 அடி விட்டமுள்ள வட்ட வடிவக் கல் கோட்டைக்குள், 13 பெரிய கல்திட்டைகள் (Dolmens) அடங்கிய இந்த அமைப்பு, இதுவரை தமிழகத்தில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலச் சின்னங்களிலேயே தனித்துவமானதும், மிக முக்கியமானதாகவும் விளங்குகிறது.
இந்த நினைவுச் சின்னத்தின் கட்டுமானம், எந்தவித நவீன உபகரணங்களும் இல்லாத ஒரு காலத்தில், மனித உழைப்பையும் அறிவையும் மட்டுமே கொண்டு எப்படி சாத்தியமானது என்பது முதல் ஆச்சரியம். இதுகுறித்து தேனி மாவட்டம் கடமலைக்குண்டு, அரசு மேல்நிலைப் பள்ளி முதுகலைத் தமிழாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான மூ.செல்வம் இது குறித்துக் கூறுகையில், திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம், தாண்டிக்குடி அருகே கவியக்காடு பேத்திரி மலைப் பகுதியில் பேராசிரியர் மாணிக்கராஜ், ஆசிரியர் கருப்பசாமி ஆகியோருடன் இணைந்து கலாய்வு செய்ததில், இந்தப் பிரம்மாண்டமான பெருங்கற்கால நினைவுச் சின்னத்தை கண்டறிய முடிந்தது.
சுமார் 50 அடி விட்டத்தில், எட்டு அடி உயரத்திற்கு வட்ட வடிவில் கற்களைக் கொண்டு ஒரு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இது ஒரு சாதாரண கல் வட்டம் அல்ல; மாறாக, ஒன்றன் மீது ஒன்றாக கற்களை நேர்த்தியாக அடுக்கி உருவாக்கப்பட்ட ஒரு கோட்டை போன்ற அமைப்பு. சிமெண்ட் அல்லது காரை போன்ற பிணைப்புப் பொருட்கள் இல்லாமல், கற்களின் எடை மற்றும் ஒன்றோடொன்று பொருந்தும் தன்மையைக் கொண்டு மட்டுமே இந்த உயரமான சுவரைக் கட்டியுள்ளனர். இது அவர்களின் புவியீர்ப்பு மற்றும் கட்டமைப்பு பற்றிய ஆழமான அறிவைக் காட்டுகிறது.
வட்டத்திற்குள் 13 கல்திட்டைகள் உள்ளன. ஒவ்வொரு கல்திட்டையும் சராசரியாக 12 அடி நீளம், 4 அடி அகலம், 5.5 அடி உயரம் கொண்டவை. இதற்காகப் பயன்படுத்தப்பட்ட கற்பாறைகள் பல டன் எடை கொண்டவை. பல டன் எடை கொண்ட இந்தப் பாறைகளை மலை உச்சிக்குக் கொண்டு வர, மர உருளைகள், கயிறுகள் மற்றும் இதற்கு நூற்றுக்கணக்கான மக்களின் ஒருங்கிணைந்த உழைப்பு தேவைப்பட்டிருக்கும். இவையனைத்தும் திட்டமிடப்பட்ட, நுட்பமான பொறியியல் அறிவின் சான்றுகளாகும். சாதாரண புதைகுழிகளிலிருந்து இந்த அமைப்பு முற்றிலும் வேறுபடுகிறது. இதன் பிரம்மாண்டத்திற்குப் பின்னால் ஆழமான சமூக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் உள்ளன.
இவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான ஒரு அமைப்பை உருவாக்க, ஒரு சமூகம் முழுவதையும் வழிநடத்தும் அதிகாரம் கொண்ட ஒரு தலைவன் இருந்திருக்க வேண்டும். இது ஒரு குலத்தின் தலைவனுக்கோ, அரசனுக்கோ அல்லது ஒரு முக்கிய வீரர்களின் கூட்டத்திற்கோ எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களின் தொகுப்பாக இருக்கலாம். மலை உச்சியில், தொலைவிலிருந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் அதிகாரத்தின் வெளிப்பாடு, அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை மற்ற குழுக்களுக்கு அறிவிக்கும் ஒரு ஆதிக்க அல்லது எல்லைக்குரிய அடையாளமாகவும் இருந்திருக்கலாம்.
இத்தகைய பெரிய கட்டுமானப் பணியை மேற்கொள்வது, அந்த சமூகத்தின் மக்களை ஒன்றுபடுத்தி, அவர்களின் கூட்டு சக்தியையும், நம்பிக்கையையும், தலைவன் மீதான விசுவாசத்தையும் வலுப்படுத்த உதவியிருக்கும். மலை உச்சியில் அமைந்திருப்பதாலும், வட்ட வடிவத்தில் இருப்பதாலும், இதற்கு வானியல் முக்கியத்துவம் இருக்கலாம். குறிப்பிட்ட நட்சத்திரங்கள், சூரிய உதயம் அல்லது மறைவு போன்றவற்றைக் குறிக்கும் வகையில் இதன் வாசல்களோ அல்லது கல்திட்டைகளோ அமைக்கப்பட்டிருக்கலாம். இது நுணுக்கமான ஆய்வுக்குரியது.
மறுபிறவி அல்லது மரணத்திற்குப் பின்னான வாழ்வில் நம்பிக்கை: இறந்தவர்களுக்காக இவ்வளவு பெரிய, நிரந்தரமான ‘கல் வீடுகளை’ அமைத்திருப்பது, அவர்கள் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததைக் காட்டுகிறது. இறந்தவர்களின் ஆன்மா தொடர்ந்து வாழ்வதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் அவர்கள் நம்பியிருக்கலாம்.
இந்த 13 கல்திட்டைகளும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தின் அல்லது கோத்திரத்தின் பல தலைமுறையினருக்கானதாக இருக்கலாம். இது அவர்களின் மூதாதையர் வழிபாட்டு மரபின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த இடத்தை ஒரு புனிதமான இடமாகக் கருதி, குறிப்பிட்ட காலங்களில் சடங்குகள் செய்யவும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
உணவு தேடுவதற்கே முழு நேரத்தையும் செலவிடும் ஒரு நாடோடி சமூகத்தால் இத்தகைய அமைப்பை உருவாக்க முடியாது. நிலையான வேளாண்மை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றின் மூலம் போதுமான உணவு உற்பத்தியும், உபரி நேரமும், வளங்களும் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
தமிழகத்தில் செங்கல்பட்டு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கேரளாவின் மறையூர், கர்நாடகாவின் ஹிரே பெனக்கல் போன்ற இடங்களிலும் பெரிய பெருங்கற்கால தளங்கள் உள்ளன. இருப்பினும், தாண்டிக்குடி கவிக்காடு பேத்திரி மலையில் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த அமைப்பு பல காரணங்களால் தனித்துவமானது. தனித்தனியாக சிதறிக் கிடக்கும் கல்திட்டைகளைப் போலல்லாமல், ஒரு பெரிய வட்ட வடிவக் கோட்டைக்குள் 13 கல்திட்டைகள் ஒருங்கே அமைந்திருப்பது மிகவும் அபூர்வமானதாகும். 8 அடி உயர சுற்றுச்சுவருடன் கூடிய அமைப்பு இதுவரை முழுமையாக ஆவணப்படுத்தப்படவில்லை. கல்திட்டைகளின் உள் அளவும் (12 அடி நீளம்) சராசரியை விடப் பெரியது.
சமவெளிகளை விட, இவ்வளவு உயரமான மலை உச்சியில் இத்தகைய பிரம்மாண்டமான தளம் அமைந்திருப்பது அதன் முக்கியத்துவத்தை மேலும் அதிகரிக்கிறது. இது, தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான பெருங்கற்காலத் தளங்களில் ஒன்றாக இருக்க அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ளது. இந்த தாண்டிக்குடி பெருங்கற்காலத் தளம், வெறும் கற்களின் குவியல் அல்ல. அது ஒரு நாகரிகத்தின் உச்சம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன், இந்த மண்ணில் வாழ்ந்த நம் மூதாதையரின் அறிவுக்கும், ஆற்றலுக்கும், நம்பிக்கைக்கும் கட்டப்பட்ட ஒரு காலப் பெட்டகம். இதன் முழுமையான மர்மங்களை அவிழ்ப்பது, தமிழகத்தின் தொன்மை வரலாற்றின் அறியப்படாத பல பக்கங்களைப் புரட்டிப் போடும்.
இந்தக் கண்டுபிடிப்பைப் பாதுகாத்து, அதன் முழுமையான வரலாற்றை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் துறை (ASI) ஆகியவை, இந்த இடத்தை, உடனடியாக கவனம் செலுத்தி, பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
மூ.செல்வம்
முதுகலை ஆசிரியர்,
தொல்லியல் ஆய்வாளர்,
அரசு மேல்நிலைப் பள்ளி,
கடமலைக்குண்டு, தேனி.




இவ்வளவு பெரிய மற்றும் சிக்கலான ஒரு அமைப்பை உருவாக்க, ஒரு சமூகம் முழுவதையும் வழிநடத்தும் அதிகாரம் கொண்ட ஒரு தலைவன் இருந்திருக்க வேண்டும். இது ஒரு குலத்தின் தலைவனுக்கோ, அரசனுக்கோ அல்லது ஒரு முக்கிய வீரர்களின் கூட்டத்திற்கோ எழுப்பப்பட்ட நினைவுச் சின்னங்களின் தொகுப்பாக இருக்கலாம். மலை உச்சியில், தொலைவிலிருந்து பார்க்கும் வண்ணம் அமைக்கப்பட்ட இந்த நினைவுச் சின்னம் அதிகாரத்தின் வெளிப்பாடு, அந்தப் பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை மற்ற குழுக்களுக்கு அறிவிக்கும் ஒரு ஆதிக்க அல்லது எல்லைக்குரிய அடையாளமாகவும் இருந்திருக்கலாம்.
மறுபிறவி அல்லது மரணத்திற்குப் பின்னான வாழ்வில் நம்பிக்கை: இறந்தவர்களுக்காக இவ்வளவு பெரிய, நிரந்தரமான ‘கல் வீடுகளை’ அமைத்திருப்பது, அவர்கள் மரணத்திற்குப் பின்னான வாழ்க்கையில் ஆழமான நம்பிக்கை கொண்டிருந்ததைக் காட்டுகிறது. இறந்தவர்களின் ஆன்மா தொடர்ந்து வாழ்வதாகவும், அவர்களுக்குப் பாதுகாப்பு தேவை என்றும் அவர்கள் நம்பியிருக்கலாம்.
இந்த 13 கல்திட்டைகளும் ஒரு குறிப்பிட்ட வம்சத்தின் அல்லது கோத்திரத்தின் பல தலைமுறையினருக்கானதாக இருக்கலாம். இது அவர்களின் மூதாதையர் வழிபாட்டு மரபின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. இந்த இடத்தை ஒரு புனிதமான இடமாகக் கருதி, குறிப்பிட்ட காலங்களில் சடங்குகள் செய்யவும் அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
உணவு தேடுவதற்கே முழு நேரத்தையும் செலவிடும் ஒரு நாடோடி சமூகத்தால் இத்தகைய அமைப்பை உருவாக்க முடியாது. நிலையான வேளாண்மை, கால்நடை வளர்ப்பு போன்றவற்றின் மூலம் போதுமான உணவு உற்பத்தியும், உபரி நேரமும், வளங்களும் கொண்ட ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட சமூகமாக அவர்கள் இருந்திருக்க வேண்டும்.
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்



Dr. M.Saranya of ASI has done here Ph.D on the Archaeology of Kodaikanal Region where she documented this site along with 100’s sites in this region. Articles in this regard are published in Man and Environment journals