Thinai Theory in Tamilselvi’s Alam|S.Nithya

திணைக் கோட்பாடு அடிப்படையில் தமிழ்ச்செல்வி புதினங்கள்
Abstract
         
       The concept of thinai stands as a testament to the ecological wisdom of the ancient Tamils. By closely observing and understanding the diverse features of the land they inhabited, Tamil communities structured their way of life in harmony with nature. This ecological classification, prominently reflected throughout ancient Tamil literature, continues to influence modern literary works. The foundational elements identified by Tolkappiyar—muthalporul (primary elements such as land and time), karupporul (background elements), and uripporul (human emotions and actions)—are still employed to portray the life and culture of people in contemporary narratives. Despite the passage of centuries, culture remains deeply rooted in the landscape that shapes it. Through the novels of Tamilselvi, it becomes evident that land continues to function as the basis of social identity and cultural expression. In particular, the novel Alam reflects the principles of the thinai theory by vividly portraying landscape, time, and environment as integral components of human experience. This article, therefore, seeks to examine the thinai framework as manifested in Tamilselvi’s Alam, analyzing how land, temporal context, and ecological surroundings contribute to the representation of lived reality and cultural continuity.
Keywords: Tholkappiyam, Tinai Theory, Alam, Su. Tamilselvi


“திணைக் கோட்பாடு அடிப்படையில் தமிழ்ச்செல்வி புதினங்கள்”

ஆய்வுச்சுருக்கம்
         
       தமிழரின் இயற்கை அறிவுக்குச் சான்றாக அமைவது திணைக்கோட்பாடு. தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலத்தின் பல்வேறு கூறுகளை ஆய்ந்தறிந்து வாழ்க்கை முறையினை அமைத்துக் கொண்டனர். பழந்தமிழ் இலக்கியங்கள் தோறும் இத்திணைக்கோட்பாடு காணப்படுகிறது. இக்கால இலக்கியங்களிலும் மக்களின் வாழ்வியலையும் பண்பாட்டையும் வெளிப்படுத்துவதற்கு தொல்காப்பியர் குறிப்பிடும் முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றைப் பயன்படுத்துகின்றனர். நூற்றாண்டுகள் கடந்தாலும் மக்களின் பண்பாடு நிலத்தை அடிப்படையாகவே கொண்டு அமைகின்றன என்பதை தமிழ்ச்செல்வியின் புதினங்களின்வழி அறியலாம். தமிழ்ச்செல்வியின் அளம் புதினம் வெளிப்படுத்தும் நிலம், பொழுது, சூழல் ஆகியன அடங்கியத் திணைக்கோட்பாட்டினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திறவுச்சொற்கள்: திணைக்கோட்பாடு, நெய்தல் திணை, அளம் புதினம், சு.தமிழ்ச்செல்வி, திணை இலக்கியம்

முன்னுரை
   சங்க கால மக்களின் வாழ்வியலானது திணைக் கோட்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. தனிமனிதனாகவும் சமூகமாகவும் திணையினால் ஏற்படக்கூடிய தகவமைப்பினை நன்கு உணர்ந்ததாலேயே மக்கள் திணைவாழ்வியலை முதன்மைப்படுத்தியுள்ளனர். இக்கால இலக்கியங்களில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் திணை வாழ்வியல் கதைப் போக்கினுடே அமைந்துவிடுகிறது. தமிழ்ச்செல்வியின் புதினங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட நிலங்களின் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டு இருக்கின்றன. அளம் புதினம் கணவனற்றப் பெண்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நிலமும் பொழுதும் மக்களின் வாழ்வில் ஏற்படுத்தக்கூடியத் தாக்கங்களை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

திணை இலக்கியம்
         
     சங்கத்தமிழர் இயற்கை குறித்தான அறிவினை பெரிதும் பெற்று இருந்தனர். இதன் வெளிப்பாடாகவே முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள் ஆகியவற்றை உருவாக்கி அகம் புறம் ஆகிய வாழ்வியல் கருத்துக்களோடு ஒன்றிணைத்து பாடல் புனைந்தனர். “திணை பாடல்கள் புலவர்களின் இயற்கை மீதான நுண் அறிவையும் அவர்களது மானுட வாழ்க்கையும் உண்மை அனுபவத்தை உளவியலைச் சரியாகப் புரிந்து கொண்ட தனித்திறனையும் காட்டுவன. சுருங்க உரைப்பதனின் கூர்ந்த நோக்கு தெளிந்த கருத்து புலப்பாடு ஆகியன திணைச்செய்யுளின் உயிர் எனலாம்.” (தமிழண்ணல், சங்க மரபு, ப.12-13) என்பார் தமிழண்ணல். முற்காலத்தே உருவாக்கப்பட்ட திணை அடிப்படையில் ஆன இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டு இக்காலத்தே எழுகின்ற இலக்கியங்களும் திணையை விளக்குவதிலும் கையாளுவதிலும் கவனம் பெறுகின்றன. காலத்திற்குத் தகுந்தார் போன்ற திணையியல் மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதையும் இக்கால இலக்கியங்களில் காண முடிகிறது.
நிலமும் பொழுதும்
இவ்வுலகத்தில் வாழக்கூடிய உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் காரணமாக அமைவது நிலமும் பொழுதும் ஆகும். எனவே இதனை தொல்காப்பியம்,

“முதலெனப் படுவது நிலம்பொழு திரண்டி
இயல்பென மொழி இயல் புணர்ந் தோரே”  (தொல்.பொருள்.4)
         
       என்று குறிப்பிடுகிறது. மக்களினுடைய பிற வாழ்க்கை முறைகள் முதற் பொருளை அடிப்படையாகக் கொண்டே அமைகின்றன. மக்களின் வாழ்வாதாரத்தை முதன்மையாகக் கொள்ளும் தொழிலானது நிலத்தையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டே இயங்குகிறது. மக்களினுடைய வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதனாலேயே இதனை தொல்காப்பியர் முதற்பொருள் என குறிப்பிடுகிறார். முதற்பொருள் என்பது உலகத்தின் இயக்கத்திற்கு மட்டுமின்றி மக்களின் வாழ்வியல் கூறுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பது இதன் மூலம் பெறப்படுகிறது.

அளம் புதினத்தில் நிலம்
         
        தொல்காப்பியர் நெய்தல் நிலத்தினைக் கடலும் கடல் சார்ந்த பகுதியும் ஆக குறிப்பிடுகிறார்.

“வருணன் மேய பெருமணல் உலகமும்”       (தொல்.பொருள்.5)
         
     கடலையும் கடலை ஒட்டிய மணல் பகுதியை மட்டுமே நெய்தல் திணை என கற்பிக்கப்பட கூடிய வழக்கம் நெடுங்காலமாக சமூகத்தில் விளங்கி வருகிறது. “நெய்தல் என்பதை அலையடிக்கும் கடற்கரையைக் குறிப்பதன்று. இத்தமிழ்நாட்டின் கடற்கரையோரமாகச் சென்றால் கடற்கரையிலிருந்து 50-60 அடி தூரம் பெரும்பாலும் உப்பங்கழியாக இருக்கும்”(சிவத்தம்பி கா., சங்க இலக்கியக் கவிதையும் கருத்தும், ப.41) என்ற கருத்தின் அடிப்படையில் நெய்தல் நிலம் என்பது கடற்கரையோரம் மட்டுமன்றி அதனை ஒட்டி உள்ள பரப்பளவையும் சேர்த்து குறிக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது. அவ்வகையில் அளம் புதினமானது நெய்தல் நில மக்களினுடைய வாழ்வியலை வெளிப்படுத்துவதாக அமைகிறது. அளம் புதினத்தின் நிலமானது கடற்கரை ஒட்டி அமைந்துள்ள உப்பங்கழியை அடுத்த நிலப்பரப்பைக் குறிக்கிறது. மருத நிலத்தைப் போன்று உழவுத் தொழிலையும் முல்லை நிலத்தைப் போன்ற ஆநிரை மேய்த்தலையும் இம்மக்கள் மேற்கொண்டாலும் நெய்தல் நிலத்திற்குரிய பண்பாட்டுப் புனைவுகளையும் கொண்ட வாழ்க்கையாகவே அளம் புதினத்தில் வரக்கூடிய கதை மாந்தர்களின் வாழ்வானது அமைந்திருக்கிறது என்பதை ஆய்வின் மூலம் அறிய முடிகிறது. இதனால் அளம் புதினமானது நெய்தல் நிலத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்திருக்கிறது என்பது உறுதிபடுகிறது.

பெரும்பொழுதும் சிறுபொழுதும்
         
      அகப்பொருள் நிகழ்வுக்குரிய பொழுதினையே பெரும் பொழுது, சிறு பொழுது என இருவகையாக பிரிப்பர். ஓராண்டின் ஆறு பகுப்பினைப் பெரும்பொழுது என்றும் ஒரு நாளின் ஆறு பகுப்பினைச் சிறுபொழுது என்றும் வரையறுப்பர். “நிலம் என்ற முதற்பொருள் பருவச் சூழலில் பயனளிக்குவது பருவம் வாய்க்கின்ற போது தான் அது தாவரங்களின் வளர்ச்சிக்கு ஆதாரமாக அமைந்த உணவு என்னும் கருப்பொருள் உருவாக காரணமாவது ‘உணவெனப்படுவது நிலத்துடன் நீரே’ என் புறநானூற்றுப் பாடல் குறிப்பிடுவதைப் போன்று நிலமும் நீரும் இணைவதற்கு பருவ காலமே ஏற்றதாகிறது. முதல் எனப்பட்ட நிலத்துடன் ஆன பருவ மாற்றங்களில் இணைவு அதன் வளர்ச்சிக்கும் செழுமைக்கும் ஆதாரமாக அமைந்து மனித வளர்ச்சிக்கும் அடிப்படையாகின்றது. வாழ்க்கைக்கான இருப்பிற்கான இடமும் காலமும் மனித வாழ்வு எல்லா நிகழ்வுகளுக்கும் ஆதாரமாக அமைவதால் இவை இரண்டும் முதற்பொருள்கள் என பெற்றுள்ளன.” (மாதையன் பெ., அகத்திணைக் கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும் ப.26)  நெய்தல் நிலமானது ஆறு பெரும் பொழுதுகளையும் பெற்றிருக்கிறது. சிறு பொழுதை பற்றி குறிப்பிடும் பொழுது,

“நெய்தல் எற்பாடாதல் மெய்பெறத் தோன்றும்”  (தொல்.பொருள்.10)
         
       கதிரவன் எழக்கூடிய காலை பொழுதினை நெய்தலினுடைய சிறுபொழுதாக தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். பொழுதானது மக்களினுடைய வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடியது. இதனை அளம் புதினம் தோறும் காண இயலுகிறது. அளம் புதினத்தில் வயல் வேலை, உப்பள வேலை என பல்வேறு தொழில்களுக்குக் கிளம்பக் கூடிய மக்கள் பின் இரவிலும் சூரியன் தோன்றுவதற்கு முன்னறான எற்பாடு காலத்தில் புறப்படுகின்றனர். கடற்கரைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கின்ற காரணத்தினால் சூரியன் பிரகாசிக்க தொடங்கும் முன்னரே தங்களுடைய வேலைகளை முடித்துவிட எண்ணி எற்பாடு காலத்தைத் தங்களுடைய வேலை காலமாக மக்கள் வைத்திருப்பது பொருத்தம் உடையதாக காணப்படுகிறது.
அளம் புதினத்தில் மக்களினுடைய வாழ்வினை திசை மாற்றியமைக்க கூடியதாக பெரும்பொழுதுகள் அமைகின்றன. ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்களில் பெய்யக்கூடிய அடை மழையானது புயல் எனவும் வெள்ளமெனவும் மக்களினுடைய வாழ்வாதாரத்தை நிலைகுலையச் செய்கிறது.

‘நந்தனா வருட புயலுக்கு பிறகு ஜனங்கள் பெரும்பாலும் உப்பு கம்பெனிகளை
நம்பி வாழ தொடங்கினார்கள்.’ (அளம்,ப.125)
‘ஐப்பசியில் ஆரம்பித்த மழை விட்ட பாடாய் தெரியவில்லை கார்த்திகையிலும்
அடை மழை தொடர்ந்த.’ (அளம்,ப.151)
‘மன்மத வருடத்துப் புயல் வெள்ளத்துக்குப் பிறகு கடும் பஞ்சம் ஏற்பட்டது’ (அளம்,ப.166)
‘துர்முகி வருடம் வறட்சியாகவே பிறந்தது.’ (அளம்,ப.166)
         
    கால மாற்றங்கள் மனிதர்களுடைய வாழ்வில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்ளையும் தொழில் மாற்றங்களையும் அளம் புதினம் அடையாளப்படுத்துகிறது. இதனால் பல்வேறு மக்கள் தங்களது உடைமைகளை இழப்பதோடு புலம்பெயர்வதற்கும் ஆளாகின்றனர் என்பதை தமிழ்ச்செல்வி வெளிப்படுத்தி இருப்பது ஆய்வின்வழி வெளிக்கொணரப்படுகிறது.

உரிப்பொருள் – இரங்கல்
         
      மக்களினுடைய அக வாழ்வினை சுட்டிக்காட்டுவதாக அமைவது உரிப்பொருள் ஆகும். தொல்காப்பியர் ஐந்நிலத்திற்குரிய உரிப்பொருளை,

“புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின் நிமித்தம் என்றவை
தேருங்காலை திணைக்குரிப் பொருளே”          (தொல்.பொருள்.16)
         
       இன்று குறிப்பிடுகிறார். நெய்தல் நிலத்திற்குரிய உரிப்பொருளாக இரங்கலும் இரங்கல் நிமித்தமும் அமைவதை இறையனார் அகப்பொருள் சுட்டிக்காட்டுகிறது. வினைமேற் சென்ற தலைவனுடைய வருகைக்காக காத்திருக்கக் கூடிய செயல்பாடு நெய்தல் திணைக்குரிய உரிப்பொருள் ஆகும். அளம் புதினத்தின் சுந்தராம்பாள் கதாபாத்திரம் தன்னுடைய கணவனுடைய வருகைக்காக வாழ்நாள் முழுவதும் ஏங்கி காத்திருப்பது நெய்தல் நிலத்தில் உரிப்பொருளோடு பொருந்தி வருகிறது.

“தூரத்துக் கண்ணாடி
துலுக்கங்கையிலாந் தருதாங்
துருப்புடிச்சி மங்காம – நா
தொயரம் வச்சி மங்குறனே” (அளம்,ப.134)
         
     வாழ்வின் பெரும்பகுதியில் தான் கணவன் திரும்பி வந்து விடுவான் என்ற நம்பிக்கையிலும் வராமல் போய்விட்டானே என்ற துயரத்திலுமாக சுந்தராம்பாளினுடைய வாழ்வானது கழிகிறது.
“நீ என்ன சொன்னாலும் நாங் கேட்க மாட்டங். நாளக்கே ஒங்கப்பா வந்து என்னயில்லாம யாங்கொல்லய எப்புடி வித்தேன்னு கேட்டாக்க நான் என்ன பதிலு சொல்லுற” (அளம், ப.224)
    என்று நிலத்தை விற்பதற்கு முன்வராமல் தன்னுடைய கணவன் என்றேனும் ஒரு நாள் வந்து விடுவான் என்ற நம்பிக்கையோடு சுந்தராம்பாள் காத்திருப்பது வெளிப்படுகிறது. வேலைக்காக கடல் கடந்து சென்ற கணவன் மீண்டு வராததை எண்ணி இரங்கி காத்திருக்கக்கூடிய சுந்தராம்பாளின் நிலையே நெய்தல் நிலத்தினுடைய உரிப்பொருள் வெளிப்பாடாக அமைகிறது.

முடிவுரை
         
        நெய்தல் நிலத்தினை அடிப்படையாகக் கொண்டு அமைந்திருக்கக் கூடிய அளம் புதினமானது அந்நிலத்திற்கே உரிய முதற்பொருள் மற்றும் உரிப்பொருளை வெளிப்படுத்தி அமைகிறது. கடற்கரை ஓரத்தை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய உப்பங்கழியை அடுத்து இருக்கக்கூடிய நிலப்பகுதியே அளம் புதினத்தின் கதைக்களம் ஆகும். ஆறு பெரும் பொழுதுகளையும் ஏற்பாடு என்ற சிறு பொழுதையும் சரிவர அமைத்திருக்கிறார் புதினத்தின் ஆசிரியர் தமிழ்ச்செல்வி. காலம் மனிதனுடைய வாழ்வில் ஏற்படுத்தக் கூடிய மாற்றத்தையும் காலத்திற்கு தகுந்தார் போல் மனிதன் தன்னுடைய தொழிலையும் வாழ்க்கையும் தகவமைத்துக் கொள்ளக்கூடிய அறிவு திறத்தனையும் வெளிப்படுத்தும் வண்ணம் புதினமானது அமைக்கப்பட்டிருக்கிறது. மக்களினுடைய அகவாழ்வை வெளிப்படுத்தக்கூடிய உரிப்பொருள் சுந்தராம்பாளினுடைய வாழ்வில் சரிவர அமைந்துள்ளது. கப்பலுக்குச் சென்ற கணவன் திரும்பி வராத காரணத்தினால் பல்வேறு சூழல்களில் சுந்தராம்பாள் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். தன் பிள்ளைகளிடமும் ஊராரிடமும் இரங்கி தன்னுடைய கணவனுடைய வருகைக்காக காத்திருக்க கூடிய சுந்தராம்பாளினுடைய அகவாழ்வு நெய்தல் நிலத்தினுடைய உரிப்பொருளை வெளிப்படுத்துவதாக அமைகிறது. பன்னெடுங்காலத்திற்கு முன்னர் வகுக்கப்பட்ட திணைக் கோட்பாட்டு வாழ்வானது தற்காலத்தில் சாத்தியமில்லை என்றாலும் கூட அதனுடைய கூறுகள் இன்றளவும் மக்களுடைய வாழ்வில் நிலைத்து நிற்கின்றன. தொல்காப்பியர் வகுத்திருக்கக்கூடிய நெய்தல் திணை வாழ்வியல் முறையானது அளம் புதினத்தில் வாழ்வியல் முறையோடு பொருந்தி வருவது இதற்குச் சான்றாக அமைகிறது.

துணைநூற் பட்டியல்
1.இளம்பூரணர் (உ.ஆ), தொல்காப்பியம் பொருளதிகாரம், சாரதா பதிப்பகம், சென்னை,2018

2.சிவத்தம்பி கா., சங்க இலக்கியக் கவிதையும் கருத்தும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,சென்னை,2009

3.தமிழண்ணல், சங்க மரபு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை,2012

4.தமிழ்ச்செல்வி,சு., அளம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை,2014

5.நக்கீரர் (உ.ஆ.), இறையனார் களவியல் உரை, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி,1964

6.மாதையன் பெ., அகத்திணை கோட்பாடும் சங்க அகக்கவிதை மரபும், பாவை பப்ளிக்கே]ன்ஸ்,சென்னை,2009

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
சீ. நித்யா,
Iniyavaikatral_Article_Publishedமுனைவர் பட்ட ஆய்வாளர்,

தமிழ்த்துறை,

ஸ்ரீ
 ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்

நெறியாளர்
முனைவர் ப. ஜெயபால்,
உதவிப்பேராசிரியர்,

தமிழ்த்துறை,
ஸ்ரீ
 ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
கோயம்புத்தூர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here