Bhakti and the Service of Temple Cleaning|Dr.Sangeetha

Abstract                            
           
         Thirunavukkarasar, who was born in the Vellalar community, incarnated in a small village called Thiruvamur in the present-day Cuddalore district. He lived in this world until the age of 81. Though born into a Saiva family, he embraced Jainism and followed ascetic life for a long time. Out of respect for his sister, bound by affection and love, he returned to the Saiva path nearly 1300 years ago. He demonstrated through his life that liberation (mukti) can be attained not only through devotion but also by engaging in service works such as cleaning temples, regardless of caste, religion, or social differences.  After reverting to Saivism, he accepted various turns of life, endured hardships, and reflected upon the true meaning of human existence through his writings. According to the Periya Puranam, Mahendravarman Pallava, who later abandoned Jainism, inflicted many sufferings upon Appar (Thirunavukkarasar). In every religion, rare individuals emerge who dedicate themselves to society through acts of devotion and noble service. Thirunavukkarasar’s life proves that true bhakti does not end with temple worship alone but extends to service activities such as temple-cleaning and selfless service to people.


“பக்தியிலும் உழவாரப்பணி”

ஆய்வுச் சுருக்கம்          
      வேளாளர் குடியில் தோன்றிய திருநாவுக்கரசர் தென்னார்க்காடு மாவட்டத்தில் திருவாமூரில் ஒரு சிற்றூரில் அவதரித்து, 81 வயது வரை உலக வாழ்க்கையில் வாழ்ந்து சைவ குடியில் பிறந்து, சமணராக மாறி நெடுங்காலம் துறவு பூண்டு சகோதரிக்கு மதிப்பளித்து அன்புக்கு கட்டுப்பட்டு, பாசத்திற்கு உடன்பட்டு, 1300 ஆண்டுகளுக்கு முன்பே பக்தியோடு சேர்ந்து ஜாதி, மத, பேதம் இன்றி உழவாரப்பணிகள் செய்து முக்தியடைய முடியும் என்று வாழ்ந்து காட்டியவர். சைவராக மீண்டும் மாறி வாழ்க்கையில் ஏற்படும் பல திருப்பங்களை ஏற்றும், பல இன்னல்களைக் கடந்தேறி வாழ்க்கைப் பயன் எதுவென உணர்ந்து எழுதியவர் . மகேந்திரவர்ம பல்லவனும் சமண சமயத்தை கைவிட்ட அப்பருக்கு பல இன்னல்கள் புரிந்தான். என்று பெரிய புராண வரலாறு கூறுகின்றது.. ஒவ்வொரு சமயங்களிலும் சில மனிதர்கள் அபூர்வமாக தோன்றுகிறார்கள் பக்தியோடு கூடிய பல நல்ல செயல்களை மக்களுக்குச் செய்து வந்துள்ளார்கள். பக்தி என்பது ஆலய வழிபாடு தாண்டி உழவாரப்பணிகள் செய்வதிலும் மக்களுக்கு தொண்டு செய்வதிலும் அமைந்துள்ளது என்பதை வாழ்ந்து காட்டியுள்ளார்கள்.

முன்னுரை
       
      திருநாவுக்கரசர் வரலாறுகளை ஆராயும் பொழுது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இல்லத்தில் தாய் தந்தை இறந்து விட்டால். பெண் என்பவள் தாயாக மாறி அக்குடும்பத்தை காத்து வருவாள் என்பதை திருநாவுக்கரசர் பதிகங்களைப் படித்ததின் மூலம் அறிய முடிகிறது. சகோதரனுக்காக திருமணம் செய்யாமல் வாழும் தமக்கையார் திலகவதியார் கடவுளுக்கு உழவாரப் பணிகள் செய்து ஒவ்வொரு ஊர்களாக சென்று கொண்டிருந்தாலும் அவரின் செயல்களுக்கு எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காமல் தனது வாழ்நாளை அர்ப்பணித்த திலகவதி அம்மையாரும் மிகச்சிறந்த ஒரு துறவியே! ஆவார். பெண்களுக்கு மிகச்சிறந்த மதிப்பு இருந்தது. அரசன் பல துன்பங்கள் தந்தாலும் தனது சகோதரி சொன்ன வார்த்தைகளைக் கேட்டு மனம் திருந்தி நல்ல ஒரு சகோதரனாக மாறும் செயல் இன்றைய காலகட்டத்தில் அண்ணன் தங்கை உறவுகள் பணத்தாலும் புகழாலும் சொத்துக்களாலும் பிரிவடைந்து வரும் நிலையில் இவர்களது வாழ்க்கை ஒரு மிகச் சிறந்த உதாரணமாக நமக்கு அமைந்துள்ளது.

திருநாவுக்கரசரின் தொண்டு நெறி       
      ‘என் கடன் பணி செய்து கிடப்பதே’ சிவாலயங்களைத் தூய்மை செய்யும் பணியைச் செய்தார். இதனை உழவாரப் பணியென்று சைவர்கள் அழைக்கின்றனர். பல்வேறு சிவாலயங்களில் உழவாரப் பணி செய்து முன்னோடியாக இருந்தமையால், “உழவாரத் தொண்டர்” என அழைக்கப்பட்டார். இன்றும் சைவர்கள் உழவாரப் பணியின் தலைவராக நாவுக்கரசரையே போற்றுவார்கள். திருநாவுக்கரசர் பாடிய பதிகங்கள் 310 தனித்தும் திருஞானசம்பந்தருடன் பல சிவன் கோவிலுக்கு சென்றும் பாடல்களை பாடினார். ஏழை எளியவர், பிணியோர் வறியோர், முதுமையுடையோர் என அனைத்து மக்களும் அவருடைய அன்புக்கு ஆட்பட்டு இருந்தனர். அப்பூதியடிகள் என்ற அந்தணர் ஒருவர் திருநாவுக்கரசரை தம் வழிபாட்டுத் தெய்வமாகவே கொண்டிருந்தார் என்பது திருநாவுக்கரசர் புராணத்திலிருந்து மனிதன் மனதனை  வணங்கலாம் என்ற வரலாறும் இங்குதான் தோன்றியது.யேசு பிரானை, நபிகள் நாயகத்தை மக்கள் கடவுளின் அவதாரமாக வணங்குவது போல் திருநாவுக்கரசரையும் . அனைத்துக் கோவில்களிலும் கடவுளுக்கு அருகில் வைத்து தேவார முதலிகளாக  வழிபாடுகள் செய்வது என்பது தமிழர்கள் மரபாக அன்று தொட்டு இன்று முதல் வந்து கொண்டுள்ளது.

திருநாவுக்கரசருடைய தமிழ்
        அப்பரின் பாடல்கள் தமிழ்ச் சுவையும் பக்திச் சுவையும் தோய்ந்தவை.

“மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நிழலே”:                            
         
        திருநாவுக்கரசரின் தமிழ் உள்ளத்தை தொடக்கூடியது எவ்வுயிரிலும் சிவத்தையும் சக்தியையும் இணைத்துக் காண வேண்டும் என்ற தத்துவம் இவரிடம் விளக்கம் பெற்றுள்ளது. கடவுளை இப்படியன், இந்த நிறத்தன், இவ்வண்ணத்தில் தான் இவன் இறைவன் என்று எழுதி காட்டாது உயர்ந்த தத்துவத்தை இவர் வாக்கில் முதன் முதலில் காண்கின்றோம்.

மருள்நீக்கியாரின் இசைச் சிறப்பு
           
     மருள்நீக்கியார், இசைத்தமிழில் சிறந்த ஞானம் கொண்டவர். நான்காவது திருமுறையில் உள்ள பாடல்களில் திருநாவுக்கரசின் இசைத்திறன் வெளிப்படுகிறது. இவருடைய பாடல்களில் பத்துப் பண்கள் கொல்லி, காந்தாரம், பியந்தைக்காந்தாரம் ,சாதாரி, காந்தார பஞ்சமம், பழந்தக்கராகம், பழம், பஞ்சுரம், இந்தளம், சீகாமரம், குறிஞ்சி.  திருநாவுக்கரசர் உடைய தேவாரத்தில் அகத்துறைப் பாடல்கள் பல உள்ளது. தாண்டகம் என்ற செய்யுலில் இலக்கணத்தை கையாண்டு பாடியுள்ளார். அதனாலே என்னவோ இவருக்கு தாண்டக வேந்தர் என்று பெயர் உண்டு. இசையிலும் சொல் வன்மையிலும், பொருட்செறிவிலும், சிறந்தோங்கி விளங்கியுள்ளார். தொண்டு செய்வதும் மெய்யுணர்வு பாதையில் நடக்க வேண்டும் என்பது இவரது துணிவு.

ரோமாபுரி பாதிரியார்
         
        தமிழ் பற்றால் ரோமபுரி பாதிரியார் ராபர்ட்  டி நொபிலி 1577 களில் தமிழகம் வந்து தமிழால் ஈர்க்கப்பட்டு  ஓராண்டிற்குள் தமிழ் பயின்று தமிழில் உள்ள  பாடல்களிலும் கருத்துக்களாலும் ஈர்க்கப்பட்டு ஒரு தமிழர் போலவே தானும்  தலையில் குடிமை வைத்துக் கொண்டும், பூணூல் அணிந்தார். மக்களுக்கு தமிழிலேயே  போதனைகளை செய்து வந்துள்ளார்‌. தமிழ் உரைநடை நூல்களையும் வழங்கி உள்ளார் .தமிழ் மேல் கொண்ட பற்றும் தமிழின் ஈர்ப்பும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பதற்கிணங்க அனைத்து மக்களையும் தன் பால் ஈர்த்து மாற்றக் கூடிய சக்தி தாய் தமிழாம் தமிழ் மொழிக்கு உண்டு என்பதை அறிய முடிகிறது.

நான் எனது தவிர்த்தல்
         
       “ என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று இவர் பாடினார்.  ‘நான்’ ‘எனது’ என்று மனிதன் ஆசைகள் தான் இன்று போர்களும் பூசல்களும் உருவாகிக் கொண்டிருக்கிறது. நான் என்ற அகந்தையில் தான் ஆண், பெண் சமத்துவம் இன்றி பல பெண்களும் ஆண்களும் இன்று நீதிமன்றத்தினை நாடிக் கொண்டிருக்கிறார்கள் நான் என்னும் சிறுகை அறுப்பவர்கள் ஆகின் கடவுளின் திருவருள் தானாக வந்தெய்தும் என்பது சைவ சமயம் மட்டுமல்ல சமணம், பௌத்தம், வைணவம், கிருத்துவம், இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களுமே அதனைத் தான் போதிக்கிறது. மக்கள் முன்பு திடீரென்று திறந்து நின்றது .நுழைவதற்கு நூலுணர்வு வேண்டாம், சொல்வன்மை வேண்டாம். செல்வம் வேண்டாம். காட்டுக்கும் மலைக்கும் ஓட வேண்டாம். இறைவன் மாட்டு இணையறாது வேட்கையும் எப்பொருளையும் அவன் வடிவமாக காணும் காட்சி பெயரும் போதுமானவை. இந்தக் கொள்கைகள் எல்லாம் சான்றோர் வளர்த்து வந்தனர். நாம் பெற்ற பேரின்பத்தை மறையாது வரையாது மற்றவர்களும் மக்களும் பயன்பட வேண்டும் என்று அன்றைய காலத்தில் வாழ்ந்த நம் மூதாதையர்கள் எண்ணினர். வெளி, வழி, தீ, நீர், நிலம் எனும் ஐம்பூதங்களிலும் பேசுகின்ற சொல்லிலும் எண்ணுகின்ற எண்ணங்களிலும், நடக்கின்ற செயல்களிலும்; பண்ணுகின்ற தர்மங்களிலும், கடவுள் கலந்து உள்ளார் என்பதை வலியுறுத்தி, எண்ணம், செயல், ஆகியவற்றில் தூய்மை வேண்டும் என்று மக்களுக்குப் புரிய வைக்க பல ஞானிகள் தோன்றினார்கள். அதில் மிகச்சிறந்தவர் திருநாவுக்கரசர்.
ஆணும் பெண்ணும் சமம்       
        1300 ஆண்டுகளுக்கு முன்பு சைவ சமயத்தில் தாயும் தந்தையும் கண்கண்ட தெய்வங்கள் என்று கடவுளை வைத்து திருநாவுக்கரசரின் தேவாரம் (திருநாவுக்கரசர் சுவாமிகள்) பாடல்களில் “அம்மையும் அப்பனையும்” என குறிப்பாக அப்பன் நீ, அம்மை நீ என்ற வரிகளால் பாடப்பட்ட பாடல்களில் பெற்றோரின் முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது. தேவாரம் – ஆறாம் திருமுறையில் பதிகம் எண் 95இந்த பாடல் தனித் திருத்தாண்டகம் என அறியப்படுகிறது. அதாவது, தீவிரமான மந்திரபா பாணியிலே ஒரு கட்டமாக முழுமையாக பாடப்பட்டுள்ளது பாடலின் சில வரிகள்,

அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ,
அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ,
ஒருகுலமும் சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ,
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்துநீ,  (பா.எண் 96அடிக்(1) தேவாரம் )
         
          இறைவன் நீ – ஏறு ஊர்ந்த செல்வன் நீயே.இந்த வரிகள் “அப்பன் நீ, அம்மை நீ” எனச் சொல்லும் ஓர் அருமையான விரிவான போதனையை கொண்டுள்ளது. பெரும் முக்கியத்துவம் இறைவனை, அனைத்து உறவுகளையும் உள்ளடக்கிய ஒரே உருவாகக் காணும் ஆழ்ந்த பக்தி உணர்வை வெளிப்படுத்துகிறது இதிலே “அப்பன்” (தந்தை) மற்றும் “அம்மை” (மாதை) என இரு உறவுகளும் ஒரே நேரத்தில் ஒருவன் (இறைவன்) என்ற உணர்வை தரும் உருவாக்கமாய் பாடப்படுவது இந்த பாடலின் சிறப்பாகும் மற்ற திருமுறைப் பாடல்களில் “அப்பன் நீ, அம்மை நீ” – திருமுறை 6-95, தனித் திருத்தாண்டகம்: ஒரே பாடலில் இறைவன் அனைத்து உறவுகளாகவும், பொருளாகவும், ஊராகவும், பொன்னாகவும் மணியாகவும் திகழ்கிறார் பாடலில் ஒரு குலம் என்பதில்  ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதையும் உணரமுடிகிறது.
         
         திருநாவுக்கரசர் ஆணும் பெண்ணும் சமம் என்பது போல அவருடைய வாழ்க்கையின் 81 ஆண்டு காலத்தில் பாடிய பாடல்களிலும் ஆங்காங்கே இடம்பெற்று இருப்பது அவர்களுடைய ஆண் பெண் சமநீதிகளையும், சரிநிகர் சமமே அனைவரும் என்ற ஒரு உயர்ந்த தத்துவத்தையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ளது. தாய் தந்தையை இழந்த திருநாவுக்கரசர். தமக்கையால் வளர்க்கப்பட்டதால் தனது சகோதரியின் பேச்சைக் கேட்டு சைவ நெறியை உணர்ந்து மீண்டும் சைவத்திற்கே திரும்பினார் என்பதின் மூலம் 1300 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கு மதிப்பளிக்கும் பண்பாடு பழக்கம் நமது சமுதாயத்தில் வேரூன்றி உள்ளது என்பதை அறிய முடிகிறது. பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் விடும் இக்காலகட்டங்களில் பெற்றோர்களின் முக்கியத்துவத்தை கடவுளின் வழி அம்மையப்பன் என்று உணர்த்தியுள்ளார்.

தொண்டு செய்வதுதான் சிறப்பு      
       மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து கருணை இறக்கம் கொண்ட மனிதர்களாக வாழ்ந்துள்ளார்கள் என்பதை பல்வேறு இலக்கண, இலக்கியங்கள், நமக்கு சான்றுகளாகப் பகர்கின்றன. கல்வெட்டுகளும் ஓலைச்சுவடிகளும் செப்பேடுகளும் கண்முன் காட்சியாக நமக்கு அமைந்துள்ளது. தொண்டு செய்வதும் மெய்யுணர்வின் பாதையில் நடக்க வேண்டும் என்பதும் திருநாவுக்கரசரது ஆழமான துணிவு. என் கடன் பணி செய்து கிடப்பதே என்று இவர் பாடியது மட்டுமல்லாமல் கோயில்களில் புல், பூண்டுகளைச் செதுக்கியும், அலகினால் பெருக்கியும், சாணத்தால் மெழுகையும், தூய்மைப் படுத்தியும் திருப்பணிகளை இவர் செய்து வந்தார். அதற்காக இவர் எப்போதும் தம் கையில் புல் செதுக்கும் உழவாரப்படை யொன்றை தாங்கிக் கொண்டே இருந்தார்.’’ நான்’’ என்னும் முனைப்பை அறவே ஒழித்த மெய்ஞானி இவர் .தம்  வாழ்நாளின் இறுதி வரை  “புண்ணியா உன்னடிக்கே போதுகின்றேன்” எனக் கூறி வாழ்ந்தவர் .சிவானந்த வடிவமாகிய திருப்புகழ் ஊரில் சிவபெருமான் திருவடிக்கு கீழ் அமர்ந்திருந்தார் என்று பெரிய புராணம் நமக்கு கூறியுள்ளது. நபிகள் நாயகம் வரலாற்றிலும் நபிகளோடு அபூபக்கர் என்பவர் பல இடங்களில் உடனிருந்து நபிகளுக்கு ஏற்படும் இன்னல்களை எல்லாம் போக்கினார் என்று குர்ஆனும் மொழிகிறது.

ஆயிரத்தி முன்னூறு ஆண்டுக்கு முன் உழவாரப்பணி
தலம்: விழுப்புரம் (திருவிழுப்புரம்)
உழவாரப்பணி பாடல்
வேதியர் தொழுதேத்தும் விழுப்புரத்து எனையும்
ஆதியவன் அருள்செய்தான் அடியனேன் உழவன்
ஓதியவேதத்தினோடு உணர்ந்திருந்தவனே
சீதமல்கும்இளம்திரு நீலமாமலர்க்கொன்றே.அடிக்(2)தேவார   ( பாடல்70)
         
          வேதியர்கள் வணங்கும் திருவிழுப்புரத்தில் உள்ள இறைவன், என்னைப் பொருளற்றவனாக இருந்த போதும் அருள் செய்தான். நான் அவனுக்கு உழவன். வேதங்களோடு நிலைத்திருப்பவனே, குளிர்ச்சி தரும் அழகிய நீல மலர் கொண்டவனே! ஏழ்மையில் இருந்தாலும் உனக்கு பணி செய்து கிடப்பதே என் பாக்கியம் என்று கூறியுள்ளார்.

ஓதுவார் தொழுதேத்தும் விழுப்புரத்து எனையும்
ஆதியவன் அருள்செய்தான் அடியனேன் உழவன்
பாதியோர் பாகமொன்றும் பங்குடையவனே
நீதியோடு நின்றநெறி நீள்கடல்பொலிந்தானே.(அடிக்.3)
       தேவார
    வேதங்களை ஓதுவோர் வணங்கும் விழுப்புரத்து இறைவன் என்மீது அருள்செய்தான்.அதனால் நான் அவனுக்கான உழவன். அர்த்தநாரீசுவரனே! நீதியுடன் நிலைத்திருப்பவனே, கடலெனப் பரந்தவன்! இப்பொழுதும் நீதியுடன் நமக்கு காட்சி தருபவன் இறைவன். அப்படிப்பட்ட இறைவனுக்கு தொண்டு செய்வது யாம் பெற்ற பாக்கியம் என்றும் கூறியுள்ளார் விழுப்புரத்தான் என்று திருநாவுக்கரசர் அழைப்பதில் இருந்து இப்பொழுது உள்ள விழுப்புரத்தில் அவர் பல காலம் தங்கி இருந்து பல உழவாரப் பணிகளைச் செய்துள்ளார் என்பதை அறிய முடிகிறது.

ஊனினொடு உயிர்அவனைச் சொல்லியுய்ந்தவர்க்கே
ஞானமருளிச் செய்தவனே நானுமுன்னடி சேர்ந்தேன்
ஆனையின்வரையினொடும் அமரர்க்கென்றவனே
தேனமரும்மலர்க்கொன்றே திருவிழுப்புரத்தானே.(அடிக்கு.4. தேவாரம்)
         
      உடலும் உயிரும் அவனைச் சொல்லித் தப்பியவர்க்கு ஞானம் அருள்பவன்! நானும் உன் அடியில் சேர்ந்தேன். இறைவன் மேல் பக்தி மட்டும் போதாது பல தொண்டுகளையும் செய்து இறைவனை அடைய முடியும் என்பதற்கு திருநாவுக்கரசரே மிகச் சிறந்த சான்றவர். தேவர்களுக்கு அருள் புரிவவன்! தேன் மலரும் கொன்றை மலரும் சூடினவன்! ! கொன்றை மலர் என்பது சங்க காலம் முதல் நம் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது..

“கூடி மகிழும் மக்கள், ஓங்கி இசை பாடுவார்”     
        அக்காலத்தில் மக்கள் கூட்டமாகக் கூடி பாடல்கள் பாடி மகிழ்ச்சியாக ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து  வாழ்ந்துள்ளனர்.

முடிவுரை   
      மனிதர்களின் வாழ்க்கை நெறிமுறைகளை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்த நம் முன்னோர்கள் பக்தியின் மூலம் கடவுளை அடைய முடியும் என்றும். மக்களுக்கு சேவைகள் செய்து அதனால் இறைவனின் பாதங்களை அடையலாம்.. பெற்றோர்களுக்கு மதிப்பளித்தல் உடன்பிறப்புகளை பாதுகாத்தல் .ஆண் பெண் சரிநிகர் சமம். ஒவ்வொரு ஊர்களிலும் உள்ள மக்கள் பயன்படுத்தும் குளங்களையும், ஆறுகளையும், நதிகளையும் தூய்மையாக வைத்திருப்பதும்  பக்தி தான் என்றும், மக்களுக்குப் பணி செய்வது இறைவனுக்குச் செய்யும் பணியாகும். பக்தியால் தமிழால் இறைவனோடு ஒன்ற முடியும் என்று பல முன்னோர்கள் நமக்கு வகுத்துள்ளார்கள். ஏழைகளுக்குச் செய்யும் தொண்டு இறைவனுக்குச் செய்யும் தொண்டாகும். உடல் தூய்மை, மனத் தூய்மை, ஊரையும் தூய்மையாக வைத்திருந்தனர். தேவாரப் பாடல்களை வாசிக்கும் பொழுது பக்தி மட்டும் அதில் இடம்பெறவில்லை மனிதனுடைய வாழ்க்கை நெறிகள், மக்கள் வாழ்கின்ற இடங்கள் அவர்களுக்கான தேவைகள், வாழ்க்கை நெறிகள், கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கம், திலகவதியார் தனக்கு மனம் பேசி முடித்து இருந்த மணமகன் இறந்து விட்டதால் , இறுதிவரை திருமணமே செய்யாமல்  வாழ்ந்த திலகவதிஅம்மையும் மிகச் சிறந்த பக்தியில் துறவறம் மேற்கொண்ட பெண் என்பதை அறிய முடிகிறது. மனக்கட்டுப்பாடு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் அவசியம் என்பதை அறிய முடிகிறது. எந்த மதமாக, இனமாக இருந்தாலும், அம்மதத்தில் முன்னோர்கள் பின்பற்றிய வாழ்க்கை நெறிமுறைகளைக் கடைப்பிடித்தாலே நாட்டில் அமைதியும், சிறந்த பண்பாடும் நல்ல சமுதாயமும் உருவாகும்.

துணை நூற்பட்டியல்
1. நல்லாசிரியர் சு குப்புசாமி, திருநாவுக்கரசர் (எ) அப்பர் பெருமான்,நிவேதிதா பதிப்பகம், சென்னை.

2. டாக்டர் ஜெகத்ரட்சன், திருநாவுக்கரசர் தேவாரம், ஆழ்வார் ஆய்வு மையம் வெளியீடு சென்னை.

3.புலவர் வி.சிவஞானம் திருநாவுக்கரசர் தேவாரம் முதல் தொகுதி.விஜயா பதிப்பகம்.

Iniyavaikatral_Article_Publishedஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்
முனைவர் த. சங்கீதா .எம்.ஏ.எம்.எட்.பி.எச்டி.
உதவிப் பேராசிரியர்,
தமிழ்த்துறை,
புனித பீட்டர்ஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 
ஆவடி சென்னை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here