ா 📜 மண்மகள் உறங்கும்
கண்ணயர்வில் எங்கும்
பச்சைப் புல்வெளி
போர்த்திய போர்வை
பசும்புல்வெளியில்
பைந்நுனிகளிலே
பனித்துளியின் பரவசம்..!
📜 கொட்டும் அருவிகளில்
திக்கெட்டும் ஆளும்
இறைவனின் எல்லையில்லா
ஆனந்தத் தாண்டவம்..!
📜 ஆர்ப்பரிக்கும் கடல்களில்
இயற்கையின் இதயத்துடிப்பு
பொழியும் மழைத்துளிகளில்
இயற்கையின் சுவாசம்..!
📜 பறந்து விரிந்த
வெண்குடையாய் உலாவும்
வான் பரப்பில் வைரத்
துண்டுகளாய் நட்சத்திரங்கள்..!
📜 மஞ்சள் வெயிலாய்
மக்கள் வாழ்வில்
இருள்நீக்கும் சிவப்பு
கம்பள விரிப்புகள் ..!
📜 வானில் சிறகடித்து
பறந்து இரைதேடி
சுற்றித்திரியும் பறவைகள்
இயற்கையின்
சாகசப்பிறவிகள்..!
📜 பறவைகளின் இருப்பிடமாய்
பூக்களின் கூடாரமாய்
மணத்தைப் பரப்பி
அடிமனதை வருடிடும்..!
📜 வண்ண மலர்கள்
இயற்கையின் கொடைகள்
காடுகளைப் பிரசவிக்கும்
கருவறைகளாய் மரங்கள்
இயற்கை மகளின்
இறவா வரங்கள்..!
📜 எட்டா உயரமாய்
ஏற்றத்தைப் போதிக்கும் – மலைகள்
பூமிப்பந்தின் கர்வ கிரீடங்கள்..!
கவிதையின் ஆசிரியர்
முனைவர் நா.சுபலட்சுமி,
தமிழ்த்துறை,
உதவிப் பேராசிரியர்,
டிரினிடி மகளிர் கல்லூரி,
நாமக்கல் மாவட்டம்.