🍵 அரசமர நிழலில்
ஆறுக்கு ஆறு
அளவமைந்த
கீற்றுக் கொட்டகை..!
🍵 தொண்ணூறுகளின்
பேருந்து நிறுத்த அடையாளம்,
எங்கள் ஊரின் இருட்டுக்கடை அது..!
🍵 கீரைப்பட்டி
பாட்டியின் கைப்பக்குவம் !
பனிக்கால குளிர்,
வெயில் கால அயற்சி,
அனைத்தையும் போக்கும்
தித்திக்கும் தேநீருக்கு
பெயர் போன கடை அது..!
🍵 முதல் பேருந்துக்கு
முந்தி நிற்போருக்கு
பிரம்ம முகூர்த்த தீர்த்தம்..!
🍵 இரவு நேர
இறுதிப் பேருந்தில்
இறங்குவோருக்கு
இனிமையான அமிர்தம்..!
🍵 காலை நேர பணியாரம்,
மாலை நேர சுண்டல்
ஆறிப்போனாலும்
அங்கே பேச்சுக்கள்
சூடாக இருக்கும்..!
🍵 பித்தளையில்
பால் கொதிக்கும் பாத்திரமும்
குவளையில் ஆற்றித் தரும் தேநீரும் !
பாட்டியின்
வெற்றிலைப் போட்ட பற்களும்
வண்ணத்தில் ஒன்றாக வந்து நிற்கும்..!
🍵 பாமரரின்
உள்ளூர் செய்திகளுக்கு
உரமாகும் பாட்டி
அவளின் வாய்..!
படித்தவரின்
வெளியூர் செய்திகளுக்கு
வரமாகும் தாள்களுக்கு
அவள் தாய்..!
🍵 எங்கள் ஊரின்
முதல் வானொலி,
தொலைக்காட்சி,
நூலகம் எல்லாமே
பாட்டிக்கடை தான்!
விலையில்லா அன்பான ஊடகம் அது..!
🍵 மங்கலான இராந்தல் ஒளியும்
மங்கும் நேரம்..
பத்து மணி ஆன பின்னும்
பாட்டியின் கடை
பகலாகத்தான் இருக்கும்..!
🍵 ஆண்டுகள் பல ஓடிய பின்..
அங்கே மின்விளக்குகள்
மின்ன மின்ன பேக்கரிகள் பெருகிவிட்டன..!
🍵 திரும்பிப் பார்த்தால்
விளம்பரமற்ற ஊடகம் !
விலையில்லா ஊடகம் !
என்று எதுவும் இல்லை !
🍵 தொகைக் கொடுத்து
தோண்டிப் பார்த்தாலும்,
இந்தத் தகவல்கள்
அதைப்போல்
சுவாரசியத்தை கொடுக்கவில்லை..!
🍵 எதிர்பார்க்கிறேன்
விலையில்லா ஊடகத்தை..!
கவிதையின் ஆசிரியர்
கவிஞர் ச. குமரேசன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
முத்தாயம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
இராசிபுரம்.