மாடுகளின் சுழியும் நம்பிக்கையும் | சு. கலைச்செல்வன்

மாடுகளின் சுழியும் நம்பிக்கையும்-சு. கலைச்செல்வன்
“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மாற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர்”   குறள் – உழவு: 104
ழவர்களுக்கு முதுகெலும்பாக விளங்குவது மாடுகளே. அதனால்தான் உழவர்கள் மாடுகளை வாங்கும்போதும் அதனை விற்கும்போதும் சுழி பார்த்து வாங்க வேண்டும் என்று நம் முன்னோர்கள் கூறுவர். இது அனைவரிடத்திலும் ஆழமாகப் பதிந்துள்ள ஒன்று. அந்த வகையில் நன்மை மற்றும் தீமை தரும் சுழிகள் மாடுகளில் உள்ளன. மாடுகளை வாங்கி அதனை உழவு தொழிலுக்குப் பயன்படுத்துகின்றனர். உழவுமாடுகள் விவசாயிகளின் செல்வம் ஆகும். மாடு என்றாலே பொதுவாகச் செல்வம் என்பது பொருள். கம்பன் மாட்டின் சிறப்பைச் சொல்லும்போது,

“வானத்தில் மேகங்கள் எழுந்து
குறித்த காலத்தில் மழை பெய்தாலும்
உலகினருக்கு செழிப்பு உண்டாவது மாடுகளினாலேதான்.
வேதம் படித்தவர்களால் வெய்யப்படும் வேள்விகள்
சிறப்புப் பெறுவதுவும் மாடுகளால்தான்.
படைகள் கொண்டு போர் புரியும் மன்னர்களின்
மதங்கொண்ட யானைகள் வலிமைப்
பெறுவதும் மாடுகளால்தான்”     -ஏர் எழுபது
என்று வேளாளர்களின் உழவுமாடுகளைச் சிறப்பிக்கின்றார். நம் நாட்டில் விவசாயிகள் பழங்காலம் தொட்டு இன்றுவரையில் மாடுகளின் பங்கு இன்றியமையாததாக இருந்து வருகின்றன என்பது ஒவ்வொரு விவசாயியும் தம்தேவைக்கு ஏற்றார்போல் மாடுகளை வைத்திருப்பார்கள்.

“ஏர் ஓட்ட, உரம் எடுத்துச் செல்ல,
விதை விதைக்க, பல்லு மரம் ஓட்ட,
கார் மரம் ஓட்ட, பரம்பு ஓட்ட, 
மகசூலை எடுத்துவர”     ஏர் எழுபது
எனப் பலதரப்பட்ட அவசியத்தேவைகளுக்கு கிராமச்சூழலில் மாடுகள் இன்றியமையாதனவையாக இருந்து வருகின்றன.

உழவுமாடுகள் வகைகள்
உழவுமாடுகள் பல வகைகளில் உள்ளன. வளைந்த கொம்புகளை உடைய மாடு குடைக்கொம்பன். சிவந்த நிறத்திட்டுக்களை உடைய மாடு செம்மறையன். குத்திட்டு நிற்கும் குளம்புடைய மாடு குத்துக்குளம்பன். குடை போன்ற காதுகளையுடைய மாடு குடைச்செவியன். கொம்புகளின் இரு முனைகளும் இணைந்த மாடு கூடுகொம்பன். பனங்காய் நிறத்தில் இருக்கும் மாடு மயிலை. கழற்சிக்காய் போன்ற கண்களையுடைய மாடு கழற்சிக்கண்ணன். சிறிய கொம்புகளை உடைய மாடுகள் மட்டைக்கொம்பன். கருப்பு நிற மாடுகளை கறுப்பன், மேலும் மஞ்சள்வாலன், படப்புப்புடுங்கி, கொட்டைப்பாக்கன், கருமறையன், பசுக்காலன், அணிற்காலன், படலைக்கொம்பன், விடர்த்தலை பூ நிறத்தான், வெள்ளைக்காளை, மணப்பாரை, வடக்கத்தியான் மேற்கத்தியான், ஓங்கோல், மற்றும் மல்லம் என‌ நிறைய வகை மாடுகள் இருந்துள்ளன.
இன்னும்கூட இருக்கும், ஆனால் நமக்கு தெரியுமா? முக்கூடற்பள்ளு என்ற நூலில் இருப்பதில் சிலவற்றை தெரிந்து கொள்வோம்.

“குடைக்கொம்பன் செம்மறையன் குத்துக் குளம்பன் மேழை
குடைச்செவியன் குற்றாலன் கூடுகொம்பன்
வடர்ப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக் கண்ணன்
மட்டைக்கொம்பன் கறுப்பன் மஞ்சள்வாலன்
படப்புப் பிடுங்கி கொட்டைப் பாக்கன் கருமறையன்
பசுக்காலன் அணிற்காலன் படலைக்கொம்பன்
விடர்த்தலைப் பூநிறத்தான் வெள்ளைக் காளையும் இந்த
விதத்திலுண் டாயிரமே மெய்கா ணாண்டே.”   முக்கூடற்பள்ளு.பா.109
உழவுமாடுகள் மேல் உள்ள‌ சுழிகள்
சுழி என்பது வட்டமான வடிவத்தைக் குறிக்கிறது. மாட்டின் மீது பல இடங்களில் சுழி (அதாவது வளைவு) இருக்கும். சுழிகளின் (வளைவுகளின்) அமைப்பை வைத்து அவை நன்மை தரும் சுழிகள் மற்றும் தீமை தரும் சுழிகள் என்று பிரிக்கின்றனர். சுழியினைச் சுடி என்றும் பேச்சு வழக்கில் சொல்லுவதுண்டு.
மாடு வாங்கும்போது அதுவும் குறிப்பாக நாட்டு மாடுகளை வாங்கும்பொழுது, சுழிகள் நன்றாக அமைந்திருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கை உழவர் பெருமக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துள்ளது.

உழவுத் தொழிலுக்கு அச்சாணியாக இருப்பது எருது மாடுகளே ஆகும். எனவேதான் உழவர் பெருமக்கள் தங்களிடம் உள்ள உழவு எருதுகளில் தீயசுழிகள் இல்லாமல் இருப்பவைகளை மட்டுமே பேணி வளர்ப்பர்.  பால் மாடுகளிலும் சுழி பார்ப்பவர்கள் உண்டு. மாட்டின் சுழிகளுக்கும் அவற்றின் உடல்நலன் மற்றும் உழைக்கும் திறனிற்கும் தொடர்பு இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். கிராமத்தில் தம்தேவைக்கு மாடுகள் வாங்க முயலும்போது, மாடுகளின் சுடிகளை(சுழி) நன்கு அறிந்த ஒரு சிலரின் உதவியால் மட்டுமே மாடுகளை வாங்குவார்கள். அதுபோல் மாடுகளின் வகைகளையும் தத்தம் பகுதிகளுக்கு ஏற்றார்போல் வாங்குவார்கள்.

நன்மை செய்யும் சுழிகள்
1.கோபுரச்சுழி

2.லட்சுமிச் சுழி

3.தாமணி சுழி

4.வரி சுழி

5.இரட்டைக்கவர் சுழி

6.ஏறுபூரான் சுழி

7. விபூதி சுழி

8.கொம்புதானா சுழி

9.ஏறு நாக சுழி

10. பாசிங்சுழி.

நன்மை தரும் சுழிகள்
கோபுர சுழி
திமிலின் மேலும் திமிலின் முன்புறத்தில் அல்லது திமில் மற்றும் முதுகு சேருமிடத்தில் இருப்பது கோபுர சுழியாகும். இதை ராஜசுழி என்றும் கூறுவர். இந்தச் சுழி உள்ள மாட்டை வைத்திருப்போர் மிகுந்த செல்வத்துடன் வாழ்வர் என்பது மக்களின் நம்பிக்கை ஆகும்.

இலட்சுமி சுழி
கழுத்தின் ஒரு பக்கத்தில் கொஞ்சம் தள்ளி இருப்பது லட்சுமி சுழியாகும். இந்தச் சுழி உள்ள மாடு மிகவும் அதிர்ஷ்டம் கொடுக்க கூடியது. ஆனால் இந்தச் சுழி உள்ள மாடு கிடைப்பது அரிது. இவ்வகையான மாட்டினை வைத்து இருப்பவர் லட்சுமி செல்வாக்குடன் வாழ்வர் என்பது நம்பிக்கை.

தாமணி சுழி
மாட்டை பிணைக்கும் கயிறு அல்லது தாமணி எனப்படும் நடு முதுகுத் தண்டில் நீளமாக ஒரு கோடும் கோட்டின் இருபுறமும் இரு சுழிகள் இருந்தால் தாமணி சுழி எனப்படும். மேலும், முன்னங்கால்களுக்கும் கழுத்துக்கும் இடையில் அவை தாடியின் இருபுறங்களிலும் இருக்கலாம். இந்தr சுழி உள்ள மாட்டை வாங்குபவர்கள் மேலும் ஏராளமான மாடுகளை வாங்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.

விரி சுழி
முதுகுத்தண்டின் இடது பக்கத்தில் மட்டும் இருக்கும் சுழி விரிசுழி. இந்தச் சுழி உள்ள மாட்டை வாங்குபவர் நன்மைகளை அடைவர் என்பது நம்பிக்கை.

இரட்டைக் கவர் சுழி
முன்னங்கால் முட்டியின் இருபக்கத்திலும் இரண்டு பிளவு போல் இருப்பது இரட்டை கவர் சுழியாகும்.  இந்தச் சுழி உள்ள மாட்டை வாங்குபவர்களுக்கு மிகுந்த நன்மை உண்டாகும். இரண்டு பிளவு இல்லாமல் ஒரு பக்கத்தில் மட்டும் பிளவு இருந்தால் வீட்டில் இருக்கும் எல்லா மாடுகளுக்கும் இது தீமையாக அமையும் என்பது நம்பிக்கை.

பாசிங் சுழி
 
இரு கண்களுக்கு மேல் நெற்றியில் இருக்கும் சுழி இரட்டையாய் இருந்தால் அது பாசிங் சுழி, ஜோடி சுழி எனப்படுகிறது. இந்த சுழி உள்ள மாடு உள்ளவருக்கு கல்யாணம் விரைவில் நடைபெறும், மனைவியை இழந்தவருக்கு மருமணமாக நடக்கவும் வாய்ப்புகள் அமையும் என்பது நம்பிக்கை.

ஏறுபூரான் சுழி
மாட்டின் முதுகின் மத்தியில் பூரான் போன்று முடி பிளவு இருக்கும். அந்தச் சுழி முன்பக்கமாக வந்து முடிந்திருந்தால் அது ஏறுபூரான் சுழி எனப்படும். இச்சுழி உள்ள மாடு வளர்த்தால் சகல செல்வமும், நல்ல அதிர்ஷ்டமும் ஏறும் என்பது நம்பிக்கை.

விபூதி சுழி
மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் இரண்டு சுழிகள் இரு புருவக்கோடுகளுக்கு கீழிருக்கும். இந்தச் சுழி உள்ள மாடுகளை வைத்திருப்பவருக்கு பணம், வீடு, தோட்டம், பொன் என அனைத்து நன்மைகளும் உண்டாகும்.

கொம்புதானா சுழி
இந்த சுழி கொம்புகளின் கீழ்ப்பக்கத்தில் இருக்கும். இந்த சுழி உள்ள மாடு இருந்தால், மந்தையில் உள்ள அனைத்து மாடுகளுக்கும் நோய் இல்லமால் ஆரோக்கியமாக இருக்கும் மற்றும் மாடுகளின் எண்ணிக்கை அதிகமாகும் என்று நம்பப்படுகிறது.

ஏறுநாக சுழி
மாட்டின் வாலின் மேல்பக்கம் முதுகு நோக்கி தொடர்ந்து சுழித்துச் செல்லும் சுழி ஏறுநாகச்சுழி என்று கூறப்படுகிறது. இந்தச் சுழி உள்ள மட்டை வாங்குபவர்களுக்கு நன்மை பயக்கும் அல்லது மங்களம் உண்டாகும் என்று நம்பப்படுகிறது.

நீர் சுழி
மாட்டின் மூத்திர துவாரத்திற்கு பக்கத்தில் காளை மாடுகளுக்கு இருக்கும் சுழி நீர் சுழி. இதை நல்ல சுழி என்றும் இதை கெட்ட சுழி என்றும் சொல்லமுடியாது.

மும்மூர்த்தி சுழி
முமம்மூர்த்தி சுழி என்பது மாட்டின் நெற்றியில் மூன்று சுழிகள் இருக்கும். இது முக்கோணம் வடிவத்தில் இருக்கும். இந்தச் சுழிகள் உள்ள மாட்டை வைத்திருப்பவர் மூவேந்தர் போல வாழ்வர் என்பதும் அவர்களிடம் பொன்னும் பொருளும் அதிகமாகச் சேரும் எனவும் நமபப்படுகிறது.

கூக்கை வாழ் சுழி
                 
கூக்கை வாழ் உள்ள மாடு வீட்டில் பிரச்சனை உள்ள குடும்பத்தைச் சேர்த்து வைக்கும் என்பது நம்பிக்கை.

மாட்டின் தீமை தரும் சுழிகள்
முக்கண் சுழி / அக்கினி சுழி

மாட்டின் இரு கண்களுக்கும் நடுவில் முக்கோண வடிவில் காணப்படும். இந்தச் சுழி முக்கண் சுழி எனப்படும். இந்தச் சுழி உள்ள மாடு குடும்பத்தில் பல இடையூறுகளை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.

குடைமேல் குடை | இடி மேல் இடி
மாட்டின் நெற்றியில் மேலும், கீழும் சுழி இருக்கும், இதை குடைமேல் குடை (அ) இடி மேல் இடி சுழி என்று கூறுவர். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர் மிகுந்த துன்பத்திற்கு ஆளவார். சிலநேரம் பொருள் அனைத்தையும் இழக்கவும் நேரலாம்.

விலங்கு சுழி
மாட்டின் முன்னங்கால் அல்லது பின்னங்கால், பின்புறமோ அல்லது கணுக்காலிலோ சுழித்து இருந்தால் விலங்கு சுழி என்று கூறுவர். இந்தச் சுழி உள்ள மாட்டை வாங்குபவர், விலங்கிடப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்பது நம்பிக்கை.

பாடை சுழி
மாடுகளின் முதுகின் பின்பகுதியில், வாலின் முன்பக்கம் அல்லது பின்பக்கமாகக் காணப்படுவது பாடை சுழி ஆகும். இந்தச் சுழி மிகவும் ஆபத்தாகக் கருதப்படுகிறது, இது குடும்பத்தில் உள்ளவரின் உயிருக்கு அபயம் ஏற்படும்.

பெண்டிழந்தான் சுழி
 
மாட்டின் வாலின் உட்பக்கம் மலத்துவாரத்திற்கு நடுவில் ஒன்று அல்லது இரண்டு சுழிகள் இருக்கும். இதற்கு பெண்டிழந்தான் சுழி என்று பெயர். இந்தச் சுழி உள்ள மாட்டை வைத்து இருப்பவருக்கு, ஆபத்துகள் உண்டாகும் என்பது நம்பிக்கை. குறிப்பாகக் குடும்ப பெண்களுக்கு துன்பம் ஏற்படும்.

நாகப்பட சுழி
மாட்டின் தொடைகளின் பின் வளைவுகளில் பாம்பு படம் எடுப்பது போன்று சுழி இருந்தால் நாகப்பட சுழி எனப்படும்.

தட்டுச் சுழி
மாட்டின் இடுப்பு சேருமிடத்தில், முதுகில் காணப்படும். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர்கள் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படும்.

துடைப்பை சுழி
மாட்டின் வால் ஆரம்பிக்கும் இடத்தில் உள்பக்கம் இச்சுழி இருக்கும். வீட்டில் உள்ள செல்வத்தைச் சுத்தமாகத் துடைத்து விடும் என்பது நம்பிக்கை.

புட்டாணிச் சுழி
மாட்டின் இடுப்புக்கும் வால் ஆரம்பிக்கும் இடத்திற்கும் மத்தியில் இருக்கும். மாட்டில் இச்சுழி இருந்தால் மாட்டின் உரிமையாளருக்கு தீமை ஏற்படும்.
படைக்கட்டு சுழி
               
மாட்டின் உதட்டில் இச்சுழி இருக்கும். இச்சுழியினால் பண்ணையில் உள்ள மற்ற மாட்டை ஒழித்து விடும் உரிமையாளருக்கும் தீங்கு ஏற்படும்.

எச்சுப்புள்ளி
மாட்டின் மலத்தூவாரத்திற்கும் வால் ஆரம்பமாகும் இடத்திற்கும் இடையில் வெண் புள்ளிகள் போன்று காணப்படும். இச்சுழி உள்ள மாட்டின் சொந்தக்காரருக்கு வியாதிகள் ஏற்படும்.

வால் முடங்கிச் சுழி
மாட்டு வாலின் கீழ்ப்புறம் உட்பக்கமாக அமையப்பெற்ற ஒற்றைச் சுழியானது வால் முடங்கி சுழியாகும். இச்சுழியினால் பண்ணையில் உள்ள மற்ற விலங்கிற்கு தீங்கு ஏற்படும்.

இறங்கு நாக சுழி
இச்சுழி வாலின் மேல் காணப்படும். மாட்டின் கீழ்ப்பக்கமாகத் தரை நோக்கி காணப்படும். இச்சுழி உள்ள மாட்டை வைத்திருப்பவர் செல்வம் இழந்து ஏழ்மை நிலை அடைவார்.

கருநாக சுழி
கழுத்தைச் சுற்றி மணிக்கயிற்றை அழகாக கட்டியது போன்று மாட்டில் இருக்கும். மாட்டில் இச்சுழி காணப்பட்டால் இம்மாட்டை வைத்திருப்பவர் துன்பம் அடைவார்.

மென்னிப்பிடி சுழி
               
மாட்டில் கழுத்தின் கீழ்பக்கத்தின் இரண்டு மயிர்ப்பிளவுகள் மென்னியைப் பிடிப்பது போல் இருக்கும். இம்மாட்டை வைத்திருப்பவருக்கு கஷ்டங்கள் அதிகமாக இருக்கும்.

இறங்கு பூரான் சுழி
மாட்டில் பூரான் போன்ற மயிர் பிளவு முதுகின் மத்தியில் ஆரம்பித்து வால் பக்கம் தொடர்ந்து முடியும்.
முடிவுரை           
மாடுகள் மனிதனுக்கு நன்மை மற்றும் தீமை இரண்டையும் வழங்கக்கூடியதாக உள்ளது. எனவே, மாடுகள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான மனிதனோடு ஒன்றி இருப்பதாக உள்ளது. ஆகவே மனிதனின் இன்றியாமையத் தேவையான மாடுகள் பிறந்தது முதல் ஒரே வீட்டில் இருந்தால் தீமைத்தரும் சுழிகள் பற்றிய நம்பிக்கைக்குறைவு. ஆனால் பிறந்தது முதல் ஒரே வீட்டில் இருந்தால் நன்மைத்தரும் சுழிகள் பற்றிய நம்பிக்கை அதிகமாக இருக்கும்.

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

சு. கலைச்செல்வன்,
முனைவர் பட்ட ஆய்வாளர் மற்றும் உதவிப்பேராசிரியர்,

தமிழாய்வுத்துறை,

எம்.ஜி.ஆர். கல்லூரி,

ஓசூர் – 635 130.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here