தமிழ் இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள்|ஓசூர் மணிமேகலை

தமிழ் இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள் - மணிமேகலை
       லக்கியம் என்பது ஒரு இலக்கு. ஒரு இலக்கை மையமாக வைத்துப் பாடுவது, எழுதுவது இலக்கியம் ஆகும். இலக்கியம் காலம் காட்டும் கண்ணாடி. ‘நல்லதன் நலமும் தீயதன் தீமையும் இவை என இனம் காட்டி எண்ணத்தை விரிவு படுத்துவது இலக்கியம்’  இப்படிப்பட்ட சிறப்புமிக்க இலக்கியத்தில் குறிப்பாகத் தமிழ் இலக்கியத்தில் பெண்பாற் புலவர்களின் பங்கு அளப்பரியதாகும். எக்காலத்தை எடுத்துக் கொண்டாலும் பெண் கவியின் படைப்புகள் சிறப்பு வாய்ந்ததாகவும், உணர்வுப்பூர்வமானதாவும், நிதர்சனத்தை அனுபவித்துக் கூறும் ஆற்றல் உடையதாகவும் விளங்குகின்றன.

சங்க இலக்கியம்
          
       சங்க இலக்கியத்தை நாம் காண்போமாகில் சங்க இலக்கியம் ஒரு பண்பாட்டுப் பெட்டகமாய் விளங்குகிறது. ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கல்வி கற்று உள்ளத்து உணர்வுகளைக் கவிதைகளாகப் படைத்துள்ளனர் பெண்பாற்புலவர்கள். வடவேங்கடம் முதல் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகின் உயரிய ஆளுமை உடைய பெண்பாற் புலவர்களின் கருத்தியல் புதிய போக்கிற்கு நம்மை இட்டுச் செல்கிறது. அறம், மறம், காதல், இன்பம், இயற்கை இவற்றோடு இணைந்து வாழ்ந்த சங்க காலப் பெண்டிர் கல்வியறிவும் பெற்றிருந்ததால் படைப்பாளிகளாகத் திகழ்ந்து பெண்டிர் வாழ்க்கையைப் பதிவு செய்தனர். தமிழ் இலக்கியத்தின் பொற்காலம் எனப் போற்றப்படும் சங்க காலத்தில் ஆண்பாற்புலவர்களுக்கு சளைக்காமல் பெண்பாற் புலவர்களும் இலக்கிய ஆளுமை பெற்றிருந்தனர்.

          ஓசூர் மணிமேகலைஅவ்வையார், அஞ்சில் அஞ்சியார், அஞ்சியத்தை மகள் நாகையார், அல்லூர் நன்முல்லையார், அணிலாடும் முன்றிலார் ஆதிமந்தி, ஒக்கூர் மாசாத்தியார் , பாரி மகளிர், வெண்ணிக் குயத்தியார், காக்கைபாடினியார், பொன்முடியார் போன்ற இன்னும் பல பெண்பாற் புலவர்கள் ஆற்றிய அரும்பங்கு அளவிடற்கரியது. சில பெண்பாற் புலவர்களின் இயற்பெயர் தனிப்பாடல்களிலோ அத்தொகுப்புகளிலோ குறிப்பிடப்படவில்லை. அவர்கள் பயன்படுத்திய சொற்களிலிருந்து பெயர் வைக்கப்பட்டது. எடுத்துக்காட்டாக, செம்புலம்பற்றி ஒருவர் பாடுகிறார். அக்கவித்திறம் கண்டு செம்புலப் பெயனீரார் என்று பெயர் சூட்டினர்.
’ஈன்று புறந்தருதல் முதற்கடமை’ என்ற பொன்முடியாரின் வரி சமூகத்தில் பெண்ணின் நிலையை அடையாளப்படுத்துகிறது. சமுதாய நலனுக்காகவும், வீரத்துடன் செயல்படவும் ஆண் குழந்தைகளைப் பெற்று தருவதும், அவர்கள் போரில் கொல்லப்படும் போது பெருமிதம் அடைவதும்தான் சிறப்பு என சங்க இலக்கியம் புனைந்துரைக்கின்றன.
‘ஈன்று புறந்தருதல் என் தலைக் கடனே
சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லர்க்குக் கடனே
நன்நடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முறுக்கிக்
களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே ‘
         
          குடும்பத்தை விட மன்னனுக்கு, நாட்டிற்குச் செய்கின்ற போர் முதன்மையானது என்ற கருத்து பொன்முடியாரின் பாடலில் வெளிப்படுகிறது. அரசகுல பெண்டிர் முதல் குறமகள் வரை பல்வேறு தொழில் செய்தோறும் பாடியுள்ளனர். பெண்கள் மீது திணிக்கப்பட்ட ஆணாதிக்கச் சிந்தனைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தம் கவிதைகள் மூலம் உடைத்து எறிந்தனர்.
’செல்வோம் செல்வோம்’  என்று சென்று கொண்டே இருக்கும் தன்மையைப் பெற்ற செல்வத்தைத் தேடி காதலியரை விட்டுப் போக வேண்டாம் என்ற உண்மையை காமக்காணி பசலையார் உணர்த்துகிறார். கைமைத்துயரை தாயங் கண்ணியார் கலங்க வைக்கும்படி பாடியுள்ளார். ‘கூந்தல் கொய்து குறுந்தொடி நீக்கி அல்லி உணவின் மனைவியோடு இனி புல்லென்றனையாள்  வளம் கெழு திருநகர்’ என்று பாடுகிறார் இப்படித் தம் சொந்த முயற்சியால் கவிபாடும் திறனை வளர்த்து சாதித்த பெண்டிர் எத்தனையோ பேர் உள்ளனர்.
         நிறை கர்ப்பமடைந்த பெண் ஆமை மணல்மேட்டில் மறைந்து நின்று புலால் நாறும் முட்டையை இட்டு மறைத்து வைக்கும் பிளவுடைய வாயைப் பெற்ற ஆண் ஆமை, குஞ்சு வெளிப்படும் வரை முட்டையைப் பாதுகாக்கும் என்ற அரிய அறிவியல், விலங்கியல் செய்தியை நப்பசலையார் பதிவு செய்த நுட்பம் வியப்பிற்குரியது.

“நடுங்கின்று அளித்து என்நிறைஇல் நெஞ்சம்
அரும்புகொடி சிதைய வாங்கி கொடுங்கழிக்
குப்பை பெண் மணற் பக்கம் சேர்த்து
நிறைசூல் யாமை மறைத்து ஈன்று புதைக்
கோட்டு வட்டு உருவின் புலவு நாறு முட்டை”
 
         எப்படிப்பட்ட அறிவியல் செய்தி பாருங்கள். ‘ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை சான்றோன் எனக்கேட்ட தாய்’ என்று வள்ளுவர் தாயின் மகிழ்வு எப்போது அதிகம் என்று கூறுகிறார்.  பூங்கண் உத்திரையார் என்ற பெண்பாற்புலவர் அதற்கும் மேலாக ‘ஈன்ற பொழுதின் அவன் இறந்த செய்தி மகிழ்ச்சி என்கிறார். படிக்கும் போது ஒரு நொடி நம் இதயம் துடிப்பதை நிறுத்திவிடும். கொக்கின் மெல்லிய இறகுபோன்ற நரைத்த கூந்தலை உடைய வயதான தாயின் இளைய மகன் போரில் எதிர்த்து வந்த யானையை கொன்றுவிட்டு அவனும் இறந்துவிட்டான். இச்செய்தி கேட்டு ஈன்ற பொழுதினும் அகம் மகிழ்ந்தாள் என பூங்கண் உத்தரையார் என்ற பெண்பாற்புலவர் பாடுகின்றார்.

நாட்டுப்பற்றுடைய வீரத்தாய் அவள்.
‘மீன்உண்ணக் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவர்
களிறு எறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே’
         
       என்று புறநானூறு கூறுகிறது. பிற்கால இலக்கியங்களில் இந்த அளவு முன்னுரிமை பெண்களுக்கு வழங்கப்படவில்லை. சங்க காலப் பெண்டிர் நிலை பல கூறுகளில் சிறந்து விளங்கினாலும் சமூக அமைப்பில் மேட்டுக்குடிப் பெண்கள், சிறுகுடிப் பெண்கள் என்ற நிலை பிரித்துப் பார்க்கச் சங்க இலக்கியம் களம் அமைத்து தருகிறது. அப்படிச் சிறுகுடிப் பெண்களாகவும் கலைஞர்களாகவும் அடையாளப்படுத்தப்படும் விரலியர் அகம் புறமென்னும் இரு நிலைகளிலும் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட பெண் ஆளுமைகள் விறலியராக நேரடிப் பதிவு செய்துள்ளனரா என்ற ஆராய்வோமானால் ஔவையார், ஆதிமந்தி ஆகிய இருவர் பாடல்களிலும் விறலியராகத் தங்களைப் பதிவு செய்துள்ளனர். ஔவையார் அதியமானின் புகழ் பாடும் பாட்டு ஒன்றில் தன்னை விறலியாக இனம் காட்டிக் கொள்கிறார். ஆதிமந்தியின் பாடலில் தன்னை ஆடு மகள் என்று கூறுவதால் விறலி என்று தெரிகிறது. ஔவை தன்னை விறலியாக எண்ணி மகிழும் சூழலில் ஆதிமந்தி அதை எண்ணி துயரப்படுகிறார். ஆதிமந்தி அரசியாக வாழ்ந்தவள் ஆட்டனத்தியை மணந்து கொண்ட காரணத்தால் ஆடு மகளாக வேண்டிய நிலை எண்ணி வருந்துகிறாள். எனினும் இலக்கியபடைப்பில் எவ்வித தொய்வுமில்லை. ஔவையாரைப் பற்றி அதிகம் கூற வேண்டியதில்லை.  பெண்பாற் புலவர்களுக்கு பெருமையான எடுத்துக்காட்டாய், வழிகாட்டியாய் விளங்கியவர். ஔவையாருக்குப் பின் வந்த பல பெண்பாற் புலவர்கள் ஔவையார் என்ற பெயரிலேயே தம்மையும் அழைத்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.

வேதகாலம்
             
       வேதகாலத்திலும் பெண்பாற் புலவர்கள் பெருமைக்குரியவர்களாக போற்றப்பட்டனர். அகஸ்திய பகிநீ, அபாலா ஆத்ரேயி, இந்திராணி போன்ற பலர் வேதம், ஞானம் பற்றி பல பாடல்கள் இயற்றியுள்ளனர்.

பக்தி இலக்கியம்
         
       பக்தி இலக்கிய காலத்தில் சைவ சமயத்தினை வளர்க்க காரைக்கால் அம்மையார் அந்தாதி என்னும் இலக்கண முறையை அறிமுகம் செய்தார். இசைத் தமிழால் இறைவனைப் பற்றி முதன் முதலில் பாடியவர் இவர். அற்புதத் திருவந்தாதி போன்ற பதிகங்கள் பிற்கால தேவாரப் பதிகங்களுக்கு முன்னோடியாக திகழ்கின்றன. ஆண்டாளின் திருப்பாவை பக்தி மட்டுமல்ல இயற்கையின் அழகை இனிய தமிழில் வர்ணிக்கும் அழகுப் பாக்கள். அதன்பின் அதன்பின் பெண்களின் பங்கு அந்த அளவிற்குப் பேசப்படவில்லை.
  கவிக்குயில் சரோஜினி அம்மையார் காலத்தில் தமிழ்ப் பெண்கள் யாரும் பெரிய அளவில் கவிதை எழுதியதாகச் செய்திகள் இல்லை. 1986 இல் ஈழப் பெண் கவிஞர்களின் தொகுப்பு ‘சொல்லாத சேதிகள்’ மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதன் பின் 2001 இல் தமிழ் பெண் கவிஞர்களின் கவிதை தொகுப்பு ‘பறத்தல் அதன் சுதந்திரம்’ வெளியானது பெண்ணியம், வன்கொடுமை இவற்றை முன்னிறுத்தி பல பெண் கவிஞர்கள் உருவாகினர்.

தற்காலம்         
       தற்காலப் பெண்கவிஞர்கள் பத்திரிகைகளிலும், திரைப்படங்களிலும், முகநூல், இணைய தளங்களிலும் எண்ணற்ற கவிதைகளை படைத்துக் கொண்டுள்ளனர். லீனா மணிமேகலை, தாமரை, கனிமொழி, குட்டி ரேவதி, சல்மா, மாலதி மைத்திரி, வெண்ணிலா என்று இன்னும் பல பெயர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். எண்ணற்ற பெண்கள்  உலக அளவில் எழுச்சிமிக்கக் கவிதைகள் படைத்து, சமுதாய அவலங்களின் முகத்திரையைக் கிழித்து ஏற்றமிகு சமுதாயம் உருவாக எழுத்தெனும் கூராயுதத்தை எடுத்து இருக்கின்றனர்.
       
         ‘கவிதைதான் எங்கள் ஆதி இலக்கிய வடிவம்’ என்ற முழக்கம் கவி வரிகளுக்கு மேலும் உரமூட்டுகிறது. சிறுகதை, கட்டுரை, புதினம் போன்ற பல தளத்தில் தங்கள் திறமைகளை நிரூபித்தாலும் கவிதை வரிகளின் வீச்சு, சாடல் இச்சமுதாயத்தை விழிப்படைய வைக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. அரசியல், வரலாறு, பொருளாதாரம், சமூகம், உலகமயமாதல் என்ற தளத்தில் மரபு, புதுக்கவிதை, நவீன கவிதை, தன்முனைக் கவிதை, ஹைக்கூ என்று பல வடிவங்களில் பயணித்து தமிழ்க் கவிதையையே உலகமயமாக்கிக் கொண்டிருக்கிறார்கள் நம் சமகாலப் பெண் கவிஞர்கள். உடல், மனம் சார்ந்த பிரச்சினைகளை அச்சமின்றி தங்கள் படைப்பில் வெளிப்படுத்துகின்றனர். வாழ்வின் அனுபவங்களை செயற்கைத் தனமின்றி வெளிப்படுத்தும் திறன் இன்றைய பெண் கவிஞர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது. பெண்ணியத்தை மதிக்காத சமூகத்தை கேள்விக் கணைகளால், வலிமை வரிகளால் கேட்கத் துவங்கி விட்டாள் பெண். ‘யார் அடிப்பது மனசின் ஒட்டடை..’ என்பது கவிஞர் தாமரையின் வரி. உழைக்கும் பெண்ணின் வலியை இதைவிட வலிமையாகச் சொல்ல முடியுமா!
             
        அண்மையில் தமிழ்ச் சூழலில் பெண்ணிய நோக்கு, பெண்ணிய விமர்சனம், பெண்ணிய எழுத்துகள், பெண்ணிய அரசியல் வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகின்றன. பெண் ஆளுமைகள் தங்கள் கருத்தை சமூகத்தில் அறையும் படி சொல்லும் திறத்தைக் கண்கூடாகக் காண்கின்றோம். பாலியல் வன்முறை, வன்கொடுமை போன்றவை கலாச்சாரத்தை சீரழிக்க விடாமல் சாதி, மத, இனப் பாகுபாடு ஒழிய, சுற்றுச்சூழல் தூய்மை, இயற்கை பாதுகாப்பு, நீர் வளம் காத்தல், இளைய சமுதாயத்தை நெறிப்படுத்துதல் போன்ற விழிப்புணர்வுக் கருவை மையமாகக் கொண்டு எண்ணற்ற கவி படைத்து சமூக சேவை எண்ணத்துடன் பெண்கள் முன் வரவேண்டும்.  ‘வாளினும் கூர்மையானது பேனா முனை’ என்ற கருத்தை உண்மையாக்க பெண் கவிஞர்கள் எழுச்சியுடன் இன்னும் வீரியமிக்க படைப்புகளைப் படைக்க வேண்டும்.

“நுகத்தடியை எறிந்து விட்டு
சகத்தினிலே இன்னும்
சாதிக்க மறந்துவிட்ட
சிறகுகளை விரித்து
புறப்பட்டு விட்டாளவள் புயலாக!
புகழ வேண்டாம் பூவென்று கூறி
விருட்சம் தாங்கும் வேரவள்
தென்றலெனக் கூறி நிறுத்தி விடாதீர்கள்!”
          
         காலத்தால் அழியாத படைப்புகளில் வாழ்ந்து இவ்வுலகை இயக்கிக் கொண்டிருப்பாள் என்றும் பெண்!

Iniyavaikatral_Article_Published
 
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

தமிழ்ச்செம்மல்  ஓசூர்  மணிமேகலை


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here