சங்க கால மக்களின் சூழலியல் சார் விளையாட்டுப் பொருட்கள்

சங்க கால மக்களின் சூழலியல் சார் விளையாட்டு பொருட்கள்
முன்னுரை
       இயற்கையைப் பின்புலமாக வைத்துப் படைக்கப்பட்டது சங்க இலக்கியம் ஆகும். நிலம், நீர், காற்று, தட்பவெட்பநிலை என இயற்கை சார்ந்த  கூறுகளைப் பின்னணியாக வைத்து சங்க இலக்கிய பாடல்கள் அமைய பெற்றுள்ளன. இதன் மூலம் அக்கால மக்கள் இயற்கையோடு பின்னிப்பிணைந்து வாழ்ந்திருந்தனர் என்பதை அறிய முடிகிறது. சங்ககால மக்கள் அனைவரும் தாங்கள் வாழும் நிலப்பகுதியில் சூழ்ந்திருந்த மரம், செடி, கொடி, பறவை, விலங்கு, ஊர்வன ஆகியவற்றை மையம் இட்டு தங்களது வாழ்க்கையை வாழ்ந்தனர். என்பதைத் தொல்காப்பியர் தம் இலக்கணத்தில் கருப்பொருள்கள் என்று வரையறை செய்கிறார். சங்ககால மக்கள் வேட்டைக்கு அடுத்தநிலையில் விளையாட்டுக்கு அதிக இடம் கொடுத்துள்ளனர். தங்கள் நிலப்பகுதியில் கிடைக்கும் இயற்கை சார்ந்த பொருட்களைக் கொண்டு விளையாடி உள்ளனர். அவ்வகையில் அவர்கள் பயன்படுத்திய சூழலியல் சார் விளையாட்டுப் பொருள்களை இனங்கண்டு வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
சூழலியல் விளக்கம் 
       சூழலியல் என்பதை ஆங்கிலத்தில் (Ecology) எக்காலஜி என்ற சொல்லினால் குறித்தனர். சங்க இலக்கியப் பாடல்களில் சூழலியல் பதிவுகள் அதிக அளவில் இடம்பெற்றுள்ளன. விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடையே உள்ள தொடர்பினையும்  மற்றும் இவை சூழ்நிலையோடு கொண்டுள்ள உறவுகளையும்  விளக்கும் அறிவியலின் கிளை தொழில் என்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள். இவற்றை உணர்த்தும் வகையில் சங்க இலக்கியச்  செய்யுள்கள் அமைந்துள்ளன .
சூழலியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்கள்
சங்ககால மக்கள் பொழுதுபோக்கிற்காகவும் மன மகிழ்ச்சிக்காகவும் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி உள்ளனர். விளையாட்டு என்பது உலகினைப் புரிந்து கொள்ளச் செய்தல், சிந்திக்கப் பயிற்சி அளித்தல், நற்பண்புகளைக் கற்றுத் தருதல் போன்ற கருதுகோள்களை நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன  அவ்விளையாட்டால் நிகழும் நன்மைகள் என டபிள்யூ டி லால் விளையாட்டினால் ஏற்படும் நன்மைகளுக்கு  விளக்கம் தருகிறார்.
விளையாட்டு என்பதற்கு “பொழுது போக்கிற்காகவும் வேடிக்கைக்காகவும் விளையாடுவதே”  என கலைக்களஞ்சியம் விளையாட்டிற்கு விளக்கம் தருகிறது. அவ்வகையில் சங்க கால மக்கள் தங்கள் நிலப்பகுதியில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் விளையாடி உள்ளனர். பருவப் பெண்கள் தினைப்புனம் காவல் காக்கச் சென்ற இடம், புனலாடச் சென்ற  இடம் சோலைகள் கடற்கரைகள் எனப் பல இடங்களில் கவண்  , சுழற்சிக்காய், மண், நண்டு எனத் தங்கள் சூழல் சார்ந்த விளையாட்டுக்களை விளையாடி உள்ளனர். ஆண்கள் ஏறுதழுவுதல், சடுகுடு, கவண்   விடுதல் போன்ற விளையாட்டுகளையும் சிறுவர்கள் பனைக்குறும்பு ஓட்டுதல், யானைத் தேர், மண் வீடு கட்டுதல் போன்றவைகளை மரங்கள், மண் போன்ற பொருட்களைக் கொண்டு   விளையாடி உள்ளனர். இதன் அடிப்படையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களில் வாழ்ந்த மக்களின் விளையாட்டுப் பொருட்களை மூன்று வகையாகப் பிரித்துக் கூறலாம்.
             அ)   மகளிர் விளையாட்டுப் பொருட்கள் 
            ஆ)  ஆடவர் விளையாட்டுப் பொருட்கள் 
            இ)   சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்
அ) மகளிர் விளையாட்டுப் பொருட்கள்
             மகளிர் தங்கள் பொழுது போக்கிற்காகப் பலவகை விளையாட்டுகளை விளையாடியுள்ளனர். இல்லத்தில் உள்ளேயும், வீட்டின் முற்றத்திலும் தினைப்புனம் காவல் செல்லும் போதும், கடற்கரைக்குச் செல்லும் போதும் எனப் பல்வேறு சூழல்களில் பொழுதுபோக்கிற்காக மகளிர் விளையாடிய செய்திகளைச் சங்க அகநூல்கள் எடுத்துரைக்கின்றன. சங்ககால மகளிர் விளையாடிய சூழலியல் சார்ந்த விளையாட்டுப் பொருட்களாகப் புன்னைக்காய், கழற்சிக்காய், கவண்  போன்ற பொருட்கள் சங்கப்பாடல்களில் காணப்படுகின்றன. குறிஞ்சி நிலத்தில் வாழும் மக்கள் தினையை விதைப்பர். தினை வளரும் பொழுது அதனைக் காவல் காக்க வீட்டில் இருக்கும் மகளிர் செல்வது  வழக்கமாக இருந்துள்ளது.  பருவப் பெண்கள் தினைப்புனத்திற்குக் காவலுக்குச் செல்லும் போது கிளிகளை விரட்ட மரக்கம்பால் செய்யப் பெற்ற கவணை எடுத்துச் செல்வதனை நற்றிணைப் பாடல் புலப்படுத்துகிறது.
                    துய்த்தலைப்  புனிற்றுக்குரல் பால் வார்பு இறைஞ்சி
                    தோடு அலைக் கொண்டன ஏனல் என்று
                     துருக்கல் மிசைக்  குறுவன குழீஇச்
                     செவ்வாய் பாசினம் கவருமின்ற வாய்
                     தட்டையும் புடைத்தனை கவிணையுந்  தொடுக்கென” (நற்றிணை.206)
மகளிர் விளையாடும் விளையாட்டுகளில் ஒன்று கழங்காடல் ஆகும். இவ்விளையாட்டினைப் பெண்கள் மலைப்பகுதியின் கீழே கூட்டமாக அமர்ந்து, இயற்கையாக மரங்களில் இருந்து கிடைக்கும் காய்களைக் கொண்டு விளையாடி உள்ளனர் என்ற செய்தியினைப் பின்வரும் பாடல்களில் பதிவு செய்கின்றன.
                        கூரை தன் பனைக் குறுந்தொடி மகளிர்
                        மணல் ஆடு கழங்கின் அறை இசைத் தா அம்” (நற்றிணை.79)
                        “காதல் தந்த மை அறியாத உணர்ந்த
                        அணங்குறு கழங்கின் முதுவாய் வேலன்” (நற்றிணை பாடல்.282)
கழற்சிக்காய்களைக் கொண்டு காய்மறை விளையாட்டினை விளையாடி உள்ளனர்.  இச்செய்தியை நற்றிணைப் பாடல் எடுத்துரைக்கிறது. தலைவி, தோழியுடன் மணலில் விளையாடும் போது புன்னைமரக் காயை மணலில் புதைத்ததனை மறந்து இல்லம் திரும்புகின்றாள்.   தலைவியின் செயலால்  அந்தக் காயானது பிற்காலத்தில் புன்னை மரமாக வளர்ந்து விட்டது. இம்மரத்தினை தம் தமக்கையாகக் கருதுகின்றாள் தலைவி என்ற செய்தியை பின்வரும் பாடல் வரிகள் புலப்படுத்துகிறன.
                       “விளையாடு ஆயமொடு வெண் மணல் அழுத்தி
                        மறந்தனம் துறந்த கால் முளை அகைய
                       அம்ம நாணுதும் நும்மோடு நகையே” (நற்றிணை.172)
ஆ) ஆடவர் விளையாட்டுப் பொருட்கள் 
          ஆடவர்களின் விளையாட்டுக்கள் பெரிதும் வீரமிக்கதாகவே இருந்துள்ளன. உடல் திறனை வெளிப்படுத்தும் ஏறுதழுவுதல், சடுகுடு போன்ற விளையாட்டுகளை விளையாடி உள்ளனர். மகளிரை விட ஆடவர்கள்  குறைவான விளையாட்டையே விளையாடியுள்ளனர். இவர்களும் தினைப்புனம் காக்கச் செல்லும் போதும் புனலாடச் செல்லும் போதும் கவண், தூம்பு போன்ற இயற்கைப் பொருட்களைக் கொண்டு விளையாடிய செய்திகள் சங்க அகநூல்களில் இடம்பெற்றள்ளன.  ஆடவர்களின் விளையாட்டுப் பொருட்களில் ஒன்று தூம்பாகும்.  இது உயிர்த்தூம்பு என்று அழைக்கப்பட்டு இருக்கிறது. மரத்தால் ஆன கம்புகளில் சிறிய துளைகளைப் போட்டுப் புல்லாங்குழல் போன்ற இசைக்கருவிகளைப் பயன்படுத்தியதையே  தூம்பு என்று நற்றிணை மற்றும் அகநானூற்றுப் பாடல் வரிகள் குறிப்பிடுகின்றன.
                           நீர்வளர் ஆம்பல் தூம்பு உடை திரள் கால் (நற்றிணை.6)
                           அம் தூம்பு வள்ளை ஆய்க்கொடி மயக்கி (அகம்.6)
ஆண்கள் பயன்படுத்தும் விளையாட்டுப் பொருட்களில் மற்றொன்று கவண்  ஆடவர்கள் தினைப்புனம் காவல் காக்க செல்லும் போது அங்கு வரும் யானைகளை விரட்ட இந்தக் கவணைப் பயன்படுத்தி உள்ளனர். அதே கவணால் கனிகளை அடித்துச் சென்ற செய்தி  அகப்பாடலில் குறிப்பிடத்தக்கது.
                        இலங்கு ஒளி மருப்பின் கைம்மா உளம்புநர்
                        புலம் கடி கவணையின் பூஞ்சினை உதிர்க்கும் (கலித்தொகை.23)
இ) சிறுவர் விளையாட்டுப் பொருட்கள்
                 சங்ககாலச் சிறுவர்கள் சூழ்நிலைகள் சார்ந்த பொருட்களைப் பயன்படுத்தி விளையாடி உள்ளனர். வட்டுப்பனை, பனங்குறும்பை ஓட்டுதல், மரப்பொம்மை ஆகிய விளையாட்டுகளை இயற்கைப் பொருள்கள் மூலம் விளையாடிய செய்தியை சங்ககால நூல்கள் எடுத்துரைக்கின்றன. சிறுவர்கள் விளையாடும் விளையாட்டு பொருட்களில் ஒன்று வட்டாகும். அரக்கினால் செய்யப்பட்ட வட்டினை வைத்து குவித்து இருக்கும் நெல்லிக்காய்களை அடித்து விளையாடியுள்ளனர் இதனை
                                     “முளிந்த வோமை முதையலங் காட்டுப்
                                      பளிங்கத் தன்னப் பல்காய் நெல்லி
                                     மோட்டிரும் பாறை யீட்டு வட்டய்யே”       (அகம்.5)
என்று அகநானூற்றுப் பாடல் கூறுகிறது. பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனங் குரும்புகளை கோல்களால்  வண்டி செய்து சிறுவர்கள் விளையாடியுள்ளனர் ஒரு கோளின் இருபுருமும் பனங் குறும்புகளை சக்கரம் போலப் பொருத்தி, அதனை ஒரு கோலின் மூலம் தள்ளி விளையாடிய செய்தியை கலித்தொகைப் பாடல்கள் பதிவு  செய்கின்றன.       
                       “பெருமடற் பெண்ணைப்  பிணர்த் தோட்டுப்  பைங்குருமைக்
                        குடவாய்க்  கொடிப்  பின்னல் வாங்கி தளமும்
                        பெருமணித் தேர்க் குறுமக்கள் நாப்பண்” (கலித்தொகை.83)
 செல்வந்தர்கள் வீட்டுச் சிறுவர்கள் முத்துக்கள் பதிக்கப்பட்ட மரத்தால் செய்யப்பட்ட யானையைக்  கையிற்றினால் கட்டி மெல்ல மெல்ல இழுத்து விளையாடினர் என்பதைக் கலித்தொகை எடுத்து இயம்புகிறது.
                                 திகழ் ஒளிமுத்து அங்கு அரும்பாகத் தைய்ப் 
                                  பவழம் புனைந்து பருதி சுமப்ப
                                  கவளம் அறியா நின்கை பனைவேழம்
                                  புரிபுனை பூங்கயிற்றின் பைய வாங்கி” (கலித்தொகை.80)
முடிவுரை
சங்கப் பாடல்களின் மூலம் சங்ககால மகளிர் விளையாட்டுப் பொருள்களாகக் கவண் கழற்சிக்காய், புன்னை மரக்காய் போன்ற சூழல் சார்ந்தப் பொருட்கள் இருந்துள்ளன.        ஆடவர்களின் விளையாட்டுப் பொருள்களாக தூம்பு, கவண் போன்றவையும் சிறுவர் விளையாட்டுப் பொருள்களாக வட்டு  பனங்குறும்பை மரத்தால் செய்யப்பட்டப் பொம்மைகள் போன்றவைகள் இருந்துள்ளன.
இதன் மூலம் சூழல் சார்ந்த பொருட்களைக் கொண்டு விளையாட்டுப் பொருட்களை உருவாக்கிக் கொண்டமையை அறிய முடிகின்றது.
சங்ககால மக்கள்  சூழல் சார்ந்த சிந்தனை உடையவர்களாக வாழ்ந்துள்ளனர் என்பது கட்டுரை வழி அறியலாகிறது.
சூழலியல் சார்ந்து  விழிப்புணர்வைச் சங்கப் பாடல்கள் வழி உணர முடிகிறது.
 
 அடிக் குறிப்புகள்
 கா. பஞ்சாங்கம், இலக்கியத் திறனாய்வு கோட்பாடுகள்- பக்கம் 32 
தனலட்சுமி,  குழந்தைப் பாடல்களில்  பாடு பொருள்களும் பாடு நெறியும் – பக்கம் 12
 
ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர் 
முனைவர்.இரா.செங்கோட்டுவேல்,
உதவிப்பேராசிரியர்,

முதுகலைத்தமிழ் மற்றும் உயராய்வுத்துறை,

கருப்பண்ணன் மாரியப்பன் கல்லூரி,

செட்டியார்பாளையம், முத்தூர் 638 105,
திருப்பூர் மாவட்டம்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here