விளக்கமுறைத் திறனாய்வு (Interpretation Criticism) என்றால் என்ன?

iniyavaikatral.in

        விளக்கமுறைத் திறனாய்வானது ‘Descriptive Criticism’ என்று வழங்கப்படுகிறது. ஆய்வு செய்யப்படும் இலக்கியமானது பல்வேறு கூறுகளை உடையதாகவும், தனித்தன்மைகளைக் கொண்டதாகவும் உள்ள நிலையில் அவற்றின் ஒட்டுமொத்தக் கூறினையும் ஒரேடியாக விளக்காமல், ஒவ்வொரு பகுதியாக விளக்குவது விளக்கமுறைத் திறனாய்வு ஆகும்.  

             இலக்கியத்தை ஆய்வு செய்யும் திறனாய்வாளர் விளக்கமுறைத் திறனாய்வை பின்பற்றுவோரானால். அவர் அதிக நுகர்வுத் திறனை உடையவராக இருத்தல் வேண்டும். நுகர்வுத் திறனானது இரண்டு நிலைகளில் இடம்பெற்றுள்ளது. திறனாய்வாளர் ஆய்வு செய்த இலக்கியத்தில் நுகர்ந்து உணர்ந்தது என்ற ஒன்றும், வாசகருக்கு உணர்த்துவது என்ற இரண்டாவது நிலையையும் கொண்டதாகும்.

                 விளக்கமுறைத் திறனாய்வின் போது ஆய்வு செய்யப்பட்ட இலக்கியத்திலிருந்து,

1) உவமைகள்

2) அணிகள்

3) உருவக முறைகள்

4) உணர்ச்சிப்பாடு

5) கருத்து வெளியிடப்பட்டுள்ள முறை

6) இலக்கிய நயம்

7) இலக்கிய உத்தி

8) சொல்லாட்சித் திறன்

9) வர்ணனை

10) அதனின் பின்னணி

         என்ற பலவகையான இலக்கியக் கூறுகளும் விளக்கமுறையில் திறனாய்வு செய்யப்பட்டு விளக்கப்படுகின்றன.

             புதிய சூழல் அமைப்பிற்கேற்ப ஒரு இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும்போது பொருளைச் சரியாகப் புரிந்துக் கொள்ள கூடுதலான சொற்கள் தேவைப்படுகிறது. பொருளைப் பிறருக்கு புரிய வைக்கும்போது கூடுதலாகச் சேர்க்கப்பட்ட சொற்கள் மீட்சித் தன்மை பெறுகின்றன. அச்சொற்கள் மீளப்பெறும் முறையை Re-phrasing என்கின்றனர். இதுவே விளக்கமுறை (Interpretation) ஆகும். இதனைப் புலப்பாட்டு முறைத் திறனாய்வு (Heurmanatics) என்று கூறுவதுமுண்டு. விளக்கமுறைத் திறனாய்வில் திறனாய்வு செய்பவனுக்கு,

1. மொழிப்புலமை

2. நுணுகிப் பார்த்து ஆராயும் நுண்ணறிவுத் திறன்

3. அறிவாற்றல்

       என்ற மூன்று தன்மையும் பல்கிப் பெருகக் கூடிய நிலையினை அடைவர். இவ்வகையானத் திறனாய்வு தமிழ், ஆங்கிலம் என்ற இரண்டு மொழிகளிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கில இலக்கியத் திறனாய்வாளர் டிரைடன் (Dryden) விளக்கமுறைத் திறனாய்வின் தந்தை என்று போற்றப்படுகிறார்.

விளக்கவியல் என்பதனை விளக்குகிறபோது லியோன்லெவி அவர்கள் கூறுவதாவது “ஒரு பொருள் அல்லது ஓர் அனுபவம், குறிப்பிட்ட ஒரு முறையில் அல்லது மொழியமைப்பில் அமைந்திருக்குமானால், அதன்மீது ஒளி பாய்ச்சி, அதன் உண்மையையும் பல்வேறு பண்புகளையும் வேறு சொல் வடிவங்களில் அல்லது மொழியமைப்பில் வெளிப்படுத்துவதே விளக்கவியல் எனப்படுகிறது.

“செருக்குஞ்சினமும் சிறுமையு மில்லார்

  பெருக்கம் பெருமித நீர்த்து”

            என்னும் திருக்குறளில் குற்றங்களைத் தவிர்த்தவர்களின் செல்வம் பற்றிய நிலையைப் பேசுகிறது. இக்குறளின் வாசகம் சரியான நிலையில் மக்களைச் சென்று சேரவில்லை எனக்கருதிய பரிமேலழகர் அதற்கு இணையாக வேறொரு பனுவலைத் தனது மொழியமைப்பில் தந்துள்ளார். அதாவது, ஒரு பனுவலுக்கு (Text) விளக்கமாக அதனைச் சார்ந்த மற்றொரு பனுவல் (Alternative Text) வருவது விளக்கமுறை ஆகும்.

         பொதுவாக விளக்கமுறைத் திறனாய்வானது ஒரே மாதிரியாக மேற்கொள்ளப்படுவதில்லை. அதுசமயம், அவை வளர்நிலைக் கொண்டது என்பதையும் மறந்துவிடுதல் கூடாது.

1. படைப்பின் பண்புகள்

2. விளக்கம் கூற முயல்கின்றவரின் நோக்கம்

3.பயிற்சி

4. அவரின் மொழிவளம்

5. விளக்கம் யாருக்காக எனும் பார்வை

      முதலிய காரணங்களால் திறனாய்வாளருக்குத் திறனாய்வாளர் சற்று பார்வை வேறுபடுமேயொழிய, சொல்லப்படுகின்ற விளக்கம் ஏற்புடையதாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளிவந்துள்ள இலக்கிய உரைகளானது மேற்கூறியத் தன்மைகளை உடையதாகவே உள்ளன.

           விளக்கமுறைத் திறனாய்வானது உளவியல் பகுப்பாய்வில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பதாக சிக்மண்டு ஃபிராய்டு அவர்கள் கூறியுள்ளார். மனதின் ஆழ்நிலையில் உள்ள நிழலாடுகின்ற தோற்றங்களின் உண்மைகளை ஆராய்வதிலும், புதிர், இருட்குகை. என்று வர்ணிக்கப்படுகின்றதைப் பற்றி ஆய்வதிலும் விளக்கமுறை முக்கியமான பங்கு வகிக்கிறது.

         மனதின் படிநிலைகளையும், அதனில் ஏற்படும் எண்ணத்தின் எழுச்சிகளையும், மனித நடத்தைகளையும் உளவியல் ரீதியாக ஆராய்வதற்கு விளக்கமுறை ஃபிராய்டுக்கு அடிப்படையாக இருந்தது. அதனடிப்படையில் மனித உளவியல் பகுப்பாய்வில் அவர் வெற்றியும் கண்டார். அவர் ஆராய்ந்த ‘கனவுகள்’ பற்றிய நிலை நேரடியாக கூறப்படாமல், பல்வேறு வடிவங்களின் படிமங்களாகவும், குறியீடுகளாகவும் வெளிப்பட்டுள்ளன என்றும், மேலும் தனிமனித நடத்தையோடு தொடர்புக் கொண்டிருக்கிற தன்மைகளையும், உண்மைகளையும் தேடுவதற்கு விளக்கவியல் துணை செய்கிறது.

உருவகமும் – விளக்கமுறையும்

      கலைஞன், சுவைஞன் இருவருக்குமிடையில் உள்ள உறவுநிலையை வெளிப்படுத்த காரணமாக அமையும் தகவலியல் தொடர்பாக இலக்கியம் அமைகின்றது. கலைஞன் இலக்கியத்தைக் குறியீடாக, படிமமாக உருவகமாக வெளிப்படுத்தும் நிலையில், அதனைச் சுவைஞன் வாசிப்பு முறையால் தன் உள்ளத்தில் ஏற்றுக் கொள்கிறான். அத்தகைய நிலையில்தான் திறனாய்வாளனுக்கு வேலை அமைகிறது. இலக்கியத்தில்,

1. நேரடித் தெரிநிலைப் பண்பு

2. உருவகம்

3. படிமம்

4. குறியீடு

5. குறியீடு காட்டும் குறிப்புநிலைப் பண்பு

      இவையெல்லாம் நேரடிக் கூறுகளாக இடம்பெறுகின்றன. ஆனால் திறனாய்வில் தலைகீழ் விகிதமாகப் பயன்படுத்தப்படுகிறது. உருவகம் என்பது பொருளைப் பொதிந்து வைத்திருப்பது. விளக்கமுறைத் திறனாய்வு என்பது பொதிந்து கிடப்பதை வெளிப்படுத்துவது ஆகும். (Interpretation is metaphar in the reverse orders) உருவகமும் விளக்கவியலும் ஒரே தகவலியல் முறையின் இருவேறு சொற்கள் என்கிறார் பால் செஷான் (Edward Balcerzan) அவர்கள். விளக்கமுறை, இலக்கியத்தின் பல்வேறுபட்ட பண்புகளை தெளிவுப்படுத்துவதற்கும், புதியவற்றைத் தோற்றுவிக்கும் ஆற்றல் படைத்ததாகவும், வார்ப்பு முறையின் தன்மையை சிறப்பிற்குரியதாகும். வெளிக்காட்டுவதாகவும் விளக்கமுறைத் திறனாய்வு அமைந்துள்ளது

இக்கட்டுரை கீழ்க்கண்ட நூலிலிருந்து எடுக்கப்பட்டவை :

இலக்கியத் திறனாய்வு – வகைகளும் வளர்ச்சியும்

பேராசிரியர் இரா.மருதநாயகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here