பரத்தையர்கள் ஓர் ஆய்வு

மங்கையராய் பிறப்பதற்கேநல்ல

மாதவம் செய்திடல் வேண்டுமம்மா”.

            என்று பெண்மையின் சிறப்பை கவிமணி பாடியதற்கு இணங்க நம் நாட்டின் பெண்கள் கண்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றனர். தாய், மகள், மனைவி, தோழி என பல்வேறு படி நிலைகளில் தன்னை இவ்வுலகிற்கே அர்ப்பணித்துக் கொண்டவர்கள். ஒவ்வொரு கால நிகழ்வுகளிலும் பெண்களின் வாழ்வு அலைக்கழிக்கப்படுவதும், தூக்கி எறியப்படுவதும் வாடிக்கையாகவே இருக்கிறது. அவ்வாறு தொன்று தொட்டுவரும் மனிதர்களின் வாழ்க்கையில்பரத்தையர்என்றொரு குலம் காலம் காலமாய் மனித சமுதாயத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

யார் இந்த பரத்தையர்கள்?

            பழங்காலத்தில் தன் நகரத்தை விட பக்கத்தில் உள்ள நகரம் செல்வ சிறப்புமிக்கது எனில், உடனே அந்நகரை கைப்பற்ற எண்ணம் உருவானது. அக்கால மன்னர்களுக்கு அதன் விளைவாக எதிர் நாட்டு மன்னனை வழிய அழைத்துப் போரிட்டனர். இப்போரில் வெற்றி தோல்வி என்பது இரு நாட்டு மன்னர்களுக்கு தான். ஆனால் இப்போரிலோ உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையோ பல. மனிதர்கள் மட்டுமின்றி குதிரை, யானை போன்ற விலங்குகளும் தான்.

            இப்படிப்பட்ட பொறாமை, வஞ்சகம், ஆசை உள்ள காலக் கட்டத்தில் பகை நாட்டு மன்னனை தோற்கடித்த கையோடு அவ்வீரர்கள் அந்நாட்டில் உள்ள பொன், பொருட்களை எல்லாம் கொள்ளையடித்து தன் நாட்டிற்கு எடுத்துச் சென்றார்கள். இது போதாது என்று பெண்களின் தலைமுடியினை அறுத்து தன் தேரை இழுக்கப் பயன்படுத்தினான் எனப் பதிற்றுப்பத்து கூறுகிறது. மேலும் போரிலே இறந்த வீர மறவர்களின் மனைவி அன்றிரவே தன் கணவனோடு தீயினுள் புகுவாள். இல்லையென்றால் பகை நாட்டு மன்னன் பெண்களை வழிய இழுத்து செல்வான். அங்கு அவன் நாட்டிலே அடிமைகளாகவும், வீரர்களுக்கு தன் உடல் மூலம் விருந்து படைப்பவளாகவும் இருந்து சாகவேண்டும். இப்படியெல்லாம் புண்படுவதைவிட இன்றே கணவனோடு தீ புகுதல் தகும் என மகளிர்கள் நினைத்திருக்க வேண்டும். ‘‘இதுவே, பின்னாளில் உடன்கட்டை ஏறுவதற்கு காரணமாய் இருந்ததது’’1என முனைவர். .முத்துச்சிதம்பரம் கூறுகின்றார்.

            கணவனோடு தீ புகுந்த மகளிர்களின் மகள்கள் தன் பெற்றோரை இழந்து அநாதை ஆக்கப்பட்டு இருக்கலாம். அந்த சின்னஞ்சிறு வயதில் தனது வயிற்றுப் பிழைப்பிற்காக அந்த ஊரில் உள்ள கோவில்களில் வாசலை கூட்டியும், பெருக்கியும் வேலை செய்து அங்கு கொடுக்கும் உணவினை உண்டு தனது வாழ்க்கையினை நடத்தியிருக்கலாம். சொந்தபந்தம் இல்லாத அவர்களை சில ஆண் நாயக வர்க்கத்தினர் பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்திருக்கலாம். காலம் செல்லச் செல்ல இதுவே தொழிலாக மாறி இருக்க வேண்டும்.

தொல்காப்பியர் கூறும் பரத்தையர்கள்

பரத்தையர்கள் தொல்காப்பியர் வாழ்ந்த காலத்திற்கு முன்னே இருந்திருக்க வேண்டும். அதனால் தான் தனது கற்பியலில்

            பூப்பின் புறப்பாடு ஈரறு நாளும்

            நீர்த்தகன்று உறையார் என்மனார் புலவர்

            பரத்தையற் பிரிந்த காலையான” (தொல்.கற்பு.185)

எனத் தலைவன் தன் மனைவிக்கு பூப்பு வெளிப்பட்டு பன்னிரெண்டு நாளும் அகலமாட்டான். அதன்பிறகு பரத்தையரின்; இல்லத்திற்கு செல்வான் என்றும், தொல்காப்பியர் பரத்தையரைகாமக்கிளத்தியர்எனவும் அழைக்கின்றார்.

சங்க காலமும் பரத்தையரும்

            சங்க கால இலக்கியத்தில் அகப் பொருள் பாடல்களில் பரத்தையர் பிரிவுச் செய்தியைக் காணலாம். குறிப்பாக மருதத் திணை பாடல்களில் மிகுதியாக காணப்படும். சங்க காலத்தைப் பொறுத்தவரைபரத்தமை என்பது ஒழுக்கமாகவே கருதப்பட்டிருக்கிறதுபரத்தை, கணிகையர், சேரிப் பரத்தையர், காம கணிகையர், காதல் பரத்தையர், காம கிளத்தியர், உரிமை மகளிர் எனப் பல்வேறு பெயர்களுடன் அவர்கள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். இவ்வகை பரத்தியர்களில் இரு வகை உண்டு. முதலாவதாக தினம் தினம் ஒரு ஆடவரோடு தம் வாழ்க்கையை நடத்திய பரத்தியர்கள் சேரிப்பரத்தியர் அல்லது காம கணிகையர் எனப்பட்டனர். இரண்டாவதாக ஏதேனும் ஒரு ஆண் மகன் மேல் விருப்பம் கொண்டு அவன் ஒருவனோடு மட்டும் சேர்ந்து வாழ்தல், ஆனால் அவர்கள் திருமணம் மட்டும் செய்வதில்லை என்ற குறிக்கோளும் இருந்திருக்கிறது. இதற்கு உதாரணமாக கோவலன், மாதவி உறவைச் சுட்டிக் காட்டலாம்.

பரத்தையரின் வாழ்க்கை

            மதுரைக் காஞ்சியில்; பரத்தை ஒருத்தி கூர்மையான பற்களையும், மூங்கில் போன்ற தோளினையும், கைவந்திகை என்னும் அணிகலனும், நீண்ட கருமயிரினை உடையவளும், இனிமையாக பேசும் திறனுடையவளான இவள், தன்னை அழகு செய்து கொண்டு வீதிகளில் மெத்தென நடந்து இளைஞர்களை கைத்தட்டி அழைத்தாளாம் என்பதனை,

            மயில் இயலோரும், மட மொழியோடும்,

            கைஇ மெல்லிதின் ஒதுங்கி, கைஎறிந்து,

            கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப” (மதுரை.418-420)

என ஆசிரியர் கூறுகின்றார். மேலும் காமம் நுகர்ச்சியின்றி வேறொன்றையும் அறியாத இளைஞர்களை மயக்கி புணர்ந்தார்கள். இவர்கள்;நீண்ட வீதிகளிலும் வீடுகள் தோறும் கையில் மணம் கமலும் பூக்களை ஏந்தியவர்களாய் நிற்பார்களாம்.   ஐங்குறுநூற்றில் பரத்தையர் வீட்டிற்கு சென்றிருந்த கணவன் மேல் மனைவி மிகுந்த கோபத்துடன் இருந்தாள். அவனைக் கண்டவுடன் அவள் கோபம் மாறிவிட்டது, இதற்கு அன்பே காரணம் என ஆசிரியர் கூறுகிறார். “ஆண்கள் பரத்தையர்களின் வீட்டிற்கு போகும் குணமுடையவராக இருப்பினும், இல்லாவிடினும் எப்போதும் அன்புடன் தான் இருந்தார்கள்”2 என சாமி சிதம்பரனார் கூறுகிறார்.

            பண்டைய தமிழர்கள் பலதாரமணம் புரிந்து வந்துள்ளனர். தலைவன் பரத்தையரிடம் செல்வதும், தலைவி ஊடல் கொள்வதும் தன் குழந்தையை முன்னால் நிறுத்தி தலைவன் தலைவியின் ஊடலை தணிப்பதும், பரத்தை தன் தலைவனின் குழந்தையை தூக்கி கொஞ்சுவதும்; அதனைக் கண்ட தலைவி பரத்தையை திட்டுவதும் மருதத்திணையில் நடக்கும் அன்றாட நிகழ்வாகும். இப்பரத்தையர்களால் பல குடும்பங்களில் சண்டையும் சச்சரவும் எழுந்தது. பரிபாடல் தலைவி ஒருத்தி பரத்தையை காமுகர்க்கு பொதுமகளின் இரண்டு இதழ்களும் சேர்த்த பன்றித் தொட்டி, உழுகின்ற சால் என பழித்துரைக்கிறாள்(பரி.20). இப்பரத்தையர் ஒழுக்கத்தினை சான்றோர்களும், பெண்களும் கண்டித்தும் இருக்கிறார்கள்.

வள்ளுவர் குறளில் பரத்தையர்

            பெண்இயலார் எல்லோரும், கண்ணின் பொது உண்பர்

            நன்னேன், பரத்தநின் மார்பு” (குறள்.132-1)

            என வள்ளுவர் பரத்தையர்கள் உன் மார்பினை கண்ணால் கண்டு அனுபவிப்பர். ஆதலால் நான் உன்னை அணைக்கமாட்டேன் என தலைவி கூறுகிறாள். ஆக இருண்ட காலத்தில் களவு, சூது, பொய், வஞ்சகம் இவையெல்லாம் நடந்திருக்கும்போது கண்டிப்பாக பரத்தையரின் வாழ்க்கையும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

தேவாரக் காலம்

            சமணமும், பௌத்தமும், இசையும், நடனத்தையும் அறவே வெறுத்தன. ஏனெனில் அவை காமம் விளைவிக்கும் என்பதால். ஆனால் சைவம், வைணவம் போன்ற மதங்கள் இசையையும், நடனத்தையும் போற்றியது. அப்போது நடனம் கற்றுக் கொண்ட நடன மகளிர்கள் வேத்தியல், பொதுவியல் போன்ற கூத்துக்களை ஆடினர். “மதுரையில் அரசன் முன்னால் நாடக கணிகையர் நடன அரங்கேற்றம் நிகழ்ந்தது. அவர்களுக்கு பாண்டியன் தலைக்கோலிப் பட்டம் அளித்ததோடு, அவர்கள் ஆடல், பாடல்களுக்கு 1008 கழஞ்சு பொன் கொடுத்துச் சிறப்பிக்கப்பட்டனர்.”3 என முனைவர் எஃப் பாக்ய மேரி கூறுகிறார்.

பெருங்காப்பியம் சிலப்பதிகாரம்

            சிலம்பில் மாதவியின் தோற்றமே கணிகையர் குலத்தை வெளிக்காட்டத்தான் என்பது போலவே ஆசிரியர் அமைத்திருக்கின்றார். தனது குலத்தொழிலான பரத்தமையை ஏற்கும்படி தாய் சித்ராபதி மாதவியிடம் கூறுகின்றாள். நடனத்தில் கற்று தேர்ந்துள்ள மாதவியும் பரத்தமை தொழிலுக்கு ஒத்துக்கெண்டு கூனியிடம் ஒரு மாலையைக் கொடுத்து, இந்த மாலையை யார் அதிக விலை கொடுக்கிறார்களோ அவரை இங்கு கூட்டி வா என கூறுகிறாள். இதனை,

நூறு பத்து அடுக்கி எட்டுக் கடைநிறுத்த

மாலை வாங்குநர் சாலும்நம் கொடிக்குஎன,

மான்அமர் நோக்கிஓர் கூனிகைக் கொடுத்து,”(சில்மபு.164-167)

            கோயிலில் மாதவியின் நடனத்தை கண்டு ரசித்த கோவலன் ஆயிரத்தெட்டு கழஞ்சு பொன் கொடுத்து மாலை வாங்கி, அன்றிரவே மாதவியுடன் இன்பம் நுகர்ந்தான். சோழர் காலத்தில் கோயில்களில் ஆடவும் பாடவும் நிவந்தங்கள் கொடுக்கப்பட்டன. “தஞ்சைக் கோயிலில் மட்டும் 400 தேவரடியார்கள் இருந்தனர். அவர்களுக்கு ஆளுக்கொரு வேலி நிலம் கொடுக்கப்பட்டது. பதிலியார் என இவர்கள் பெயர் பெற்றனர். இக்காலத்தில் திருவிழாக்களில் இவர்களது நடனம் தவறாது இடம் பெற்றது.”4

நாயக்கர் காலம்

            தேவரடியார்கள் என்ற வழக்கம் நாயக்கர் காலத்தில் தேவதாசி முறை என மாறிப்போய் இருந்தது. “நாயக்கர் மன்னர் காலத்தில் தேவதாசிகள் என்போர் கோயில்களில் அமர்த்தப்பட்டனர். அவர்கள் பூசையின் போது சிலைக்கு முன் நடனமாடியதோடு இறைவனுக்கு உணவூட்டியதாக டாக்டர் .தட்சிணாமூர்த்தி கூறுகிறார். கோயிலுக்கு பெண்களைப் பொட்டுகட்டும் வழக்கம் இவர்கள் காலத்தில் இருந்தது. அரண்மனையில் இருந்த அரசன் சிலைக்கு முன் நின்று ஒவ்வொரு சனிக்கிழமையிலும் மகளிர் நடனம் ஆடினர் என்கிறார் நியுனிசு.”5

கணிகையர்கள் கற்று வைத்திருக்க வேண்டிய கலைகள்:

1.         வேத்தியல் மற்றும் பொதுவியல் கூத்துக்கள்

2.         பந்தெறிந்து ஆடதல்

3.         உணவு வகை பற்றிய கலை

4.         காதற்கலையின் எல்லா செயல்களும்

5.         திறம்படவும் நயம்படவும் பேசுங்கலை

6.         பிறர் காணாது திரியும் கலை

7.         பிறர் எண்ணங்களை உய்த்துணரும் வன்மை

8.         வேடமணிதல்

9.         சோதிடம் முதலிய 64 கலைகளை உணர்ந்திருத்தல்6

கணிகையர் இவையெல்லாம் கற்றிருக்க வேண்டுமென முனைவர் .சுப்ரமண்யன் கூறுகின்றார். இப்பரத்தையர்கள் தங்களது தொழிலை செய்யாது விடுப்பின் தண்டனையும் தரப்பட்டது.

இக்காலத்தில் பரத்தையர்

            பரத்தையர் தங்களை அழகுப்படுத்திக் கொள்வதிலும், புன்சிரிப்பையும் மயக்கும் கண்களையும் எப்போதும் தன்னிடத்தில் கொண்டிருப்பவர்கள். கவிதை, சிறுகதை, நாவல் போன்ற எத்தனையோ இலக்கியங்கள் இவர்களின் நிகழ்வுகளை சொல்லி இருக்கின்றது. இத்தொழிலுக்கு காவல்துறை கடுமையான தண்டனையும் தருகின்றது. இருப்பினும் சினிமா மற்றும் கையில் காசு உள்ள செல்வந்தர்களின் கடற்கரை ஓர பங்களாவிலும் இன்னும் மறைமுகமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. வாழ்வை தொலைத்த இந்த பெண்களை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்.

சான்றெண் விளக்கம்

1.         பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும், முனைவர் .முத்துச்சிதம்பரம், முத்துப்பதிப்பகம், திருநெல்வேலி. ஐந்தாவது பதிப்புஅக்டோபர் 2005,-91.

2.         எட்டுத்தொகையும் தமிழர்பண்பாடும், சாமி.சிதம்பரனார், அறிவுப்பதிப்பகம், சென்னை. இரண்டாம் பதிப்புஜூலை 2008,-37

3.         காலந்தோறும் தமிழர் கலைகள், முனைவர் எஃப்.பாக்யமேரி, அறிவுப்பதிப்பகம், சென்னை. முதல்பதிப்புமார்ச் 2008,-48

4.         மேலது. -84.

5.         மேலது. -85

6.         சங்ககால வாழ்வியல், முனைவர் . சுப்ரமண்யன், நியு செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. இரண்டாம் பதிப்புஜனவரி 2010, -398

 

 

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here