நேர்காணல் என்றால் என்ன?|நேர்காணல்-விளக்கம்|நேர்காணலின் வகைகள்

நேர்காணல் என்றால் என்ன - நேர்காணலின் வகைகள்
‘கற்றலின் கேட்டலே நன்று’! ஒரு புத்தகத்தைப் படிப்பதை விடவும் ஓர் அரைமணிநேர நேர்காணல் பலநூறு செய்திகளை நம் மனதில் பதிய வைத்துவிடும். இன்றைய தகவல் தொடர்பு சாதனங்களில் நேர்காணல் என்பது ஒரு முக்கிய நிகழ்ச்சியாக உள்ளது. பேட்டி ஒரு கலை. அதற்கு அறிவும் அனுபவமும் வேண்டும்’ என்று ஆர். இராமச்சந்திர ஐயர் கூறுகின்றார். நேர்காணும் கலையாக விளங்குகின்ற பேட்டி என்பது ஒரு நெகிழ்வான முறையாகும்.

நேர்காணல்-விளக்கமும்
ஒருவரோடு தொடர்பு கொண்டு நேரிலோ, தொலைபேசி மூலமோ, கடிதம் வாயிலாகவோ விவரங்களைக் கேட்டு அறிவதைப் பேட்டி அல்லது நேர்காணல் என்கிறோம். இருவரோ சிலரோ பலரோ கூடி உரையாடுவது பேட்டியாகாது. பேட்டியில் கேட்கப் பெறுகின்ற, கேள்விகள் தகவல்களைப் பெறுவதற்காகக் கேட்கப் பெறுபவை, இத்தகைய நேர்காணல் இயல்பாக, இறுக்கமற்ற சூழலில் அமைய வேண்டும். கட்டுப்பாடோ, நெருக்கடியோ அச்சுறுத்தலோ நேர்காணலில் இருக்கக் கூடாது.
நோக்கம்

ஒவ்வொரு நேர்காணலும் ஏதாவது ஒரு நோக்கத்தோடு நடத்தப் பெறுகின்றது. பொதுவாக நேர்காணல் அடிப்படையாகக் கொண்டு அமையலாம். பின்வரும் நோக்கங்களை
1.நடப்பு நிகழ்ச்சிகளை அறிய
2.நிகழ்ச்சியின் விவரங்களை வெளிக்கொணர
3. பிறரது கருத்தை, கண்ணோட்டத்தை வெளிப்படுத்த
என நேர்காணல் அமையும்.

நேர்காணலின் வகைகள்
நேர்காணல் என்பது அதனை நடத்துகின்றவரின் திறமையையும் அணுகுமுறையையும் ஒட்டிப் பலவகைகளாக அமைகின்றன.

1.பேட்டி காண்பவர் கூச்சம், அச்சம் கொள்ளக் கூடாது.

2.முன்பாகவே பேட்டி தருபவரிடம் இடம், நேரம் ஆகியனவற்றை உறுதி செய்து கொண்டபின் பேட்டிக்குச் செல்ல வேண்டும்.

3.கேட்கப்பட வேண்டிய வினாக்களை முன்கூட்டியே தயாரித்து வைக்க வேண்டும்.

பேட்டி பலவகைப்படும். அவற்றுள் முக்கியமானவை:
1.ஆளுமை விளக்கப் பேட்டி
வியத்தகு சாதனைகள் செய்தவரையோ புகழ்பெற்ற ஒருவரையோ அவரது ஆளுமைத் தன்மையை வெளிக்கொணரும் வகையில் பேட்டி காண்பது இவ்வகையாகும். முதலமைச்சர், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் போன்றவர்களின் பேட்டி இவ்வகையைச் சார்ந்ததாகும்.

2. செய்திப் பேட்டி
செய்தியைப் பெறும் நோக்கில், செய்தி தரும் ஒருவரைப் பேட்டி காண்பது செய்திப் பேட்டியாகும். இதில் செய்தியினைப் பெறுவது மட்டுமே நோக்கமாக இருக்கும். அதற்காக ஏற்கனவே தயாரிக்கப்பட்டிருக்கும் கேள்விகள் பேட்டியில் கேட்கப்படும்.

3.தொலைபேசிப் பேட்டி
இன்று ஊடகங்களில் பெருகி வரும் பேட்டியாக இம்முறை பிரபலமடைந்து வருகிறது எனலாம். செய்திகளை விரைந்து சேகரிக்க இம்முறை பயன்படுகிறது. இதனால் நேரத்தை மிச்சப்படுத்த முடியும். ஆனால் நேரடிப் பேட்டியில் பேட்டியளிப்பவரின் முகபாவங்களையும் கண்களையும் பார்த்து அவர்களின் உணர்வுகளையும் உண்மைகளையும் அறிந்து கொள்ள இயலும், தொலைபேசியில் இந்த வாய்ப்பு இல்லை.

4.பேட்டி நடத்துதல் பேட்டி

நடத்துகின்றவர் சிறப்புத் திறமைகள் பெற்றிருக்க வேண்டும். பேட்டி என்பவர் பேட்டியாளரின் மனத்தில் நம்பகத் தன்மையை ஏற்படுத்த வேண்டும். இனிமையாகவும் பொறுமையாகவும் பழகும் முறையின்மூலம் வேண்டிய தகவல்களைப் பேட்டியாளரிடமிருந்து பெறலாம்.

பேட்டி எடுப்பவர் கீழ்க்கண்டவற்றைக் கவனத்தில் கொண்டு செயலாற்ற வேண்டும்.
1.முன் கூட்டியே திட்டமிடுதல்

2.கேள்விகளை முன்னரே தயாரித்தல்.

3. பேட்டிக்குரிய இடத்தையும் நேரத்தையும் முன்கூட்டியே தீர்மானித்தல், (சோலை (பார்க்), தனிமைப்படுத்தப்பட்ட யாருமில்லாத மரங்கள் செடிகொடிகள் நிறைந்த இடமாக இருந்தால் சிறப்பு. மேலும்,  மாலை நேரமாக இருத்தல் நலம். ஏனெனில்  சூரியன் இறங்கும் பொழுதாயின் பேட்டி கொடுப்பவர் மனதிலிருந்து நிறைய கருத்துகள் வெளிவரும். காலை – மதியம் நேரத்தில் நாம் நினைக்கின்ற அளவுக்குப் பேட்டியை அவ்வளவாகச் சிறப்பாக முடிக்க இயலாது.

4.பேட்டியாளரிடம் எதைப்பற்றிய பேட்டி என்பதைத் தெரிவித்துத் தயார்ப்படுத்துதல்

செய்ய வேண்டியவைகள்
1. பேட்டி எடுப்பவர் கேட்க வேண்டிய கேள்விகளை வரிசைப்படுத்திக் கொள்ளுதல் வேண்டும்.

2. பேட்டியாளரைப் பற்றியும், பேட்டிப் பொருள் பற்றியும் நன்கு தெரிந்து கொள்ள வேண்டும்.

3. ஆர்வமும் பொறுமையும் கவனமும் பேட்டியின்போது அவசியம்.

4. பேட்டியின் நோக்கத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்.

செய்யக் கூடாதவைகள்

1. பேட்டி தருபவரை விடத் தனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்கக் கூடாது.

2.இடையில் குறுக்கிடவோ, கூறும் கருத்துக்களை அலட்சியப்படுத்தவோ கூடாது.

3. கருத்து முரண்பாடுகளையோ, உணர்வுகளையோ வேறுபடுத்தக்கூடாது.

4.பேட்டியானது முடிந்தவரை பேட்டி எடுக்கும் அவரின் வீட்டில் இருக்கவே கூடாது. ஏனெனில் அவர்களது உறவினர்கள் அவ்வவ்போது இடையிடையே குறுக்கீடு செய்து கொண்டிருப்பார்கள். அதனால் பேட்டியை சரியான நேரத்திற்கோ அல்லது தெளிவான கருத்துக்கோ அங்கே இடம் இருக்காது.

இவை நேர்காணலின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும். பொதுவாக பேட்டியை எழுத்து வடிவமாகத் தர முற்படும்போது பேட்டி பற்றிய ஒரு சிறிய முன்னுரையைக் கொடுத்துவிட்டு, பேட்டி நடந்தது நடந்தபடியே கேள்விகளாகவும் பதில்களாகவும் சொற்களைக்கூட மாற்றாமல் அப்படியே எழுதுவது ஒரு முறையாகும்.

பேட்டியை எழுத்து வடிவில் தரும்போது பின்வருவனவற்றைக் கவனத்தில் கொள்வது சிறந்தது.
1.அறிமுக உரை :பேட்டியைப் படிப்போர், எந்தச் சூழ்நிலையில் எப்படிப் பேட்டி நடந்ததென்பதை அறிந்து கொள்ளும் வகையில் ஒரு தொடக்க உரை அமைதல் வேண்டும்.

2.பேட்டியின் சாரம் :
பேட்டியின் நோக்கத்தையும் பேட்டியின். சாரத்தையும் முதலிலேயே சுருக்கமாகச் சொல்வது பேட்டியை ஆர்வத்துடன் படிக்கத் தூண்டும்.

3.விடைகளே முக்கியம் :
பேட்டியாளர் அளித்த விடைகள்தான் முதன்மையான இடத்தைப் பெற வேண்டும். கேள்விகள் துணை இடத்தைத்தான் பிடிக்க வேண்டும். கேள்விகள் பெரிதாக அமைதல் கூடாது.

4.தொடர்ச்சி :
கேள்விகளும் பதில்களும் ஒன்றற்கொன்று தொடர்ச்சியுடன் திகழ்தல் சிறந்தது. பேட்டியாளரின் பதிலிலிருந்தும் கேள்விகள் அமையலாம்.

5. பேட்டியாளர் பற்றிய விவரங்கள் :
பேட்டியின் மூலமாக பேட்டியாளர் பற்றிய விவரங்களும் அவரது சிந்தனைகளும் அவர் வழியாகவே வெளிப்படும்படி பேட்டியை அமைத்தல் வேண்டும். தற்காலத்தில் எளிதாகத் தகவல் பெறும் தன்மையால் பேட்டி முறையை ஊடகவியலாளர்கள் விரிவாகப் பயன்படுத்துகின்றனர்.

கருத்துக்களை உள்வாங்கி செய்திகளை உருவாக்க இது ஒரு சிறந்த முறையாகத் திகழ்கின்றது. நேர்காணல் நிகழ்ச்சி நிகழ்ச்சியைத் தொடங்கும்பொழுது, பார்வையாளருக்கு நேர்காணப்படுபவரைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

1. நிகழ்ச்சியைத் தொடங்கும்பொழுது பார்வையாளருக்கு நேர்காணப்படுபவரைச் சுருக்கமாக அறிமுகப்படுத்த வேண்டும்.

2.நேர்காணப்படுபவர் குறைவாகப் பேசுதல் வேண்டும். அதாவது சுருக்கமான முறையில் கேள்விகளைக் கேட்க வேண்டும்.

3. நேர்காணப்படுபவரை நிறைய பேசவைக்கும் முறையில் கேள்விகள் அமைதல் வேண்டும்.

4. நேர்காணலுக்குரியவர் பேசிக் கொண்டிருக்கும்போது நேர்காண்பவர் அடிக்கடி குறுக்கிட்டுப் பேசக் கூடாது.

5. நிகழ்ச்சி தொடங்கும்போது வணக்கம் என்றும் முடியும்போது நன்றி. வணக்கம் என்றும் கூறுவதோடு, மகிழ்ச்சியையும் நிறைவையும் தெரிவித்துக் கொள்ளுதல் போற்றத்தக்கதாகும்.

6. புதுமையான முறையில் நேர்காணப்படுபவரை வரவேற்றும் நன்றி. தெரிவித்து நிகழ்ச்சியை மெருகேற்றலாம்.

7. தலைவர்கள், விடுதலை இயக்க வீரர்கள், கலைஞர்கள் இவர்களை நேர் காணும்போது புகைப்படங்கள், அவர்களின் சாதனைகள் ஆகியவற்றை இணைப்பு மொழியோடு கூறி அவர்களுடைய சிறப்பு நிலைகளைப் பார்வையாளருக்கு உணர்த்தலாம்.

8.நேர்காணப்படுபவருடைய கோபத்தைத் தூண்டுகிற முறையிலோ. குற்றஞ்சாட்டும் முறையிலோ கேள்விகள் கேட்பதைத் தவிர்க்க வேண்டும்.

9. நம் நாட்டை இழிவுபடுத்துகிற முறையிலான பதில்களை வரவழைக்கக் கூடிய வினாக்களை அறவே தவிர்க்க வேண்டும்.

10. நேர்காண்பவர் நிகழ்ச்சியை முடிப்பதற்கு முன், நேர்காணப்படுபவர் மக்களுக்கு ஆற்றிவரும் தொண்டினையும், நாட்டுக்கு அவரால் ஏற்பட்டுள்ள புகழையும் நன்மையையும் தொகுத்துச் சுருக்கமாகக் கூறுதல் நிகழ்ச்சிக்குப் பொலிவையும், நிகழ்ச்சியைக் கேட்போர். காண்போருக்கு நிறைவையும் பயனையும் உருவாக்கித்தரும்.

வினாக்கள் அமைதல்
நேர்காணப்படுகின்றவரின், அதாவது விடுதலை வீரர், எழுத்தாளர், சமூகத் தொண்டர், அறிவியல் வல்லுநர்,தொழில் வல்லுநர், கலை வல்லுநர், விளையாட்டு வீரர், தொழில் அதிபர், ஆன்மீகவாதி, அரசியல்வாதி, சிறுதொழில் செய்வோர் ஆகியோரின் ஆளுமைப் பண்பு வெளிப்படும் வண்ணம் மொழிநடை குன்றாமல் நல்ல தமிழ்நடையில் வினாக்ககள் அமைதல் வேண்டும், நேர்காணல் நிகழ்ச்சியில், விருந்தினரைப் பற்றி அறிவதில் வளர்ந்த-வளர்க்கப்பட்ட முறை கல்வித்தகுதிகள் – செய்யும் தொழில் – அதன்கண் கைக்கொண்ட முறைகள் மற்றவருடன் பழகும் முறை ஒத்துழைக்கும் பண்பு – சமுதாயத்திற்கு ஆற்றிய தொண்டு – விடுக்கும் செய்திகள் வாயிலாக முழு ஆளுமையையும் வெளிக்கொணரும் விதமாக வினாக்கள் அமைதல் நலம்.

கீழ்க்கண்டவைகள் போன்று மாதிரி நேர்காணல்கள் அமையலாம்
1.இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு சிறை சென்ற செம்மல் ஒருவரை நேர்காணல்.
2. சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள சமுதாயத் தொண்டர் ஒருவரை நேர்காணல்.
3. புகழ்பெற்ற விளையாட்டு வீரர் ஒருவரை நேர்காணல் செய்க. (கிரிக்கெட், வாலிபால், கூடை பந்து, கால்பந்து, டென்னிஸ், ஹாக்கி, போன்றன…)
4. தம் ஆன்மீகச் சொற்பொழிவுகளால் பக்தி உணர்வினைப் பரப்பி வரும் ஆன்மீகவாதி ஒருவரை நேர்காணல்.
5.எழுத்தாளர் ஒருவரை நேர்காணல் செய்க.
6. ஜனாதிபதி ஒருவரோடு நேர்காணல் செய்க.
1.இந்திய விடுதலை இயக்கத்தில் தீவிரமாகப் பங்குகொண்டு சிறை சென்ற செம்மல் ஒருவரை நேர்காணல்.
நேர்காண்பவர் :  (அறிமுக உரை)
ஐயா! வணக்கம்! பாரதத்தாயின் அடிமைத்தளையை அறுத்தெரிந்து எங்களுக்கெல்லாம் பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற உரிமைகளை வாங்கித்தந்த தியாகச் செம்மல்களுள் ஒருவராக விளங்கும் தங்களைத் தொலைக்காட்சியின் / வானொலியின் சார்பாகச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தமையைப் பெருமையாகக் கருதுகிறோம். தங்களின் அனுபவங்களை நேயர்களுக்கு வழங்குமாறு வேண்டுகிறோம்.

1. தாங்கள் எத்தனையாவது வயதில் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டீர்கள்?

2. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்ற உணர்வினை உருவாக்கிய நிகழ்ச்சியைச் சற்று விளக்குங்களேன்?

3. தங்களின் பள்ளிப்பருவ வாழ்க்கையைக் கூறுங்கள்.

4. உங்கள் பெற்றோர் இப்போராட்டத்தில் ஈடுபட அனுமதித்தார்களா? உங்கள் குடும்பத்தில் உங்களைத் தவிர வேறு யாரேனும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார்களா?

5.நீங்கள் காந்தி அடிகளின் அறவழிப் போராட்ட முறையை ஆதரித்தீர்களா? அல்லது திலகர், நேதாஜி போன்றவர்களின் தீவிரவாத முறையைப் பின்பற்றினீர்களா?

6. திலகரின் வழிமுறைகளிலிருந்து மாறி எப்படி காந்தியடிகளைத் தலைவராக ஏற்றுக்கொண்டு செயல்பட்டீர்கள்?

7. தாங்கள் எந்தெந்தப் போராட்டங்களில் பங்கு கொண்டீர்கள்? சிறைப்படுத்தப்பட்டீர்களா? எங்கே, எத்தனை ஆண்டுகள் சிறையில் இருந்தீர்கள்?

8. தாங்கள் சிறையிலிருந்தபோது நிகழ்ந்த மறக்கமுடியாத நிகழ்ச்சியைக் கூறுங்கள்.

9. காந்தியடிகளை முதன்முதலில் சந்தித்தபோது உங்கள் மனநிலை எங்ஙனம் இருந்தது? அவர் இறந்தபோது தங்களுடைய மனநிலை எங்ஙனம் இருந்தது?

10. இந்தியா விடுதலை அடைந்தபோது தங்களுடைய தியாகத்திற்கு நல்ல பலன் கிடைத்ததாகக் கருதினீர்களா?

11. இன்றைய இளையதலைமுறைக்குத் தாங்கள் எத்தகைய அறிவுரையை வழங்குகிறீர்கள்?

முடிவுரை
தங்களது கடந்த கால வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறியதன் மூலம் கடந்த 75 ஆண்டு கால இந்திய வரலாற்று நிகழ்ச்சிகளை எங்களுக்குக் கூறியதோடு, எங்களுடைய கடமைகளையும் உரிமைகளையும், ஆற்ற வேண்டிய பணிகளையும் உணர்த்திய தங்களுக்கு நாங்கள் மிகவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

நன்றி, வணக்கம்.
2. சமூகத்தின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துள்ள சமுதாயத் தொண்டர் ஒருவரை நேர்காணல்.
நேர்காண்பவர் : (அறிமுக உரை)
ஐயா! வணக்கம்! கடந்த 50 ஆண்டுகளாகச் சமூக மேம்பாட்டிற்காகத் தன் இல்லற வாழ்க்கையையும் துறந்து தன்னலமற்ற தொண்டாற்றி வரும் நல்லவர் ஒருவரைத் தொலைக்காட்சி வானொலி மூலமாக அனைத்து மக்களுக்கும் அறிமுகப்படுத்துவதில் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகிறேன்.

1.சமூகத்திற்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற நோக்கம் சிறுவயதிலிருந்தே தோன்றிவிட்டதா? அத்தகைய நோக்கம் எப்படி ஏற்பட்டது?

2. ஏழ்மை மிக்க குடும்பத்தில் பிறந்து பள்ளிப் படிப்பைத் தொடரமுடியாமல் போனதால், தனக்கு ஏற்பட்ட நிலைமை மற்றவர்களுக்கு ஏற்படக்கூடாது என்பதற்காகச் சமுதாயப் பணியில் ஈடுபட்டதாகக் கூறினீர்கள். அப்படியானால் ஏழைகளுக்குக் கல்வி வாய்ப்பை அளிக்கும் பணியில் மட்டுமே ஈடுப்பட்டுள்ளீர்களா? வேறு பணிகள் உண்டா?

3. உதவி தேவைப்படுபவர்களைத் தேடிச் சென்று நீங்களே உதவுகிறீர்களா? அல்லது அவர்கள் உங்கள் உதவிவேண்டி வருகிறார்களா?

4. உங்களுடைய இத்தொண்டிற்கு மக்களிடையே எத்தகைய வரவேற்பு உள்ளது?
 
5. அரசாங்கத்தின் ஆதரவு ஏதேனும் உங்களுக்குக் கிடைத்துள்ளதா?

6. சமூக சேவையில் முழுமையாக ஈடுபடுவதற்காகவே நீங்கள் இல்வாழ்க்கையை ஏற்றுக் கொள்ளவில்லையா?

7. பல பணிகளுக்கிடையே பள்ளியையும் அனாதை இல்லத்தையும் நடத்துவதற்குத் தங்களுக்குத் துணையாக வேறு யாரேனும் உள்ளனரா?

8. நீங்கள் நடத்தும் ஆதரவற்றோர் பணியில் எத்தகைய பயிற்சிகளை மாணவர்களுக்குப் பயிற்றுவிக்கிறீர்கள்?

9. இக்கால இளைஞர்களுக்கும் மாணவர்களுக்கும் தாங்கள் ஏதேனும் அறிவுரை வழங்க இயலுமா?
நன்றி, வணக்கம்

மேலும் இலக்கணம் மற்றும் மொழிபெயர்ச்சிகளைக் காண்க..

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here