நான்மணிக்கடிகை உணர்த்தும் நன்நட்பு

போட்டிகள் நிறைந்த இவ்வுலகத்தில் மனிதன் தன் கை,கால்களை ஊன்றி நிற்பதற்கே அவனுடைய வாழ்நாள் முழுவதும் முடிந்துவிடுகிறது. வாழ்க்கையில் முட்டி, மோதி வெற்றிப் பெற்றவனே இவ்வுலகத்தை ஆள்கிறான். தோற்றுப்போனவன் மீண்டும் மீண்டும் தோற்று ஒருநாளில் வெற்றியை நெருங்குகிறான். ஆனால், ஏற்கனவே வெற்றிப் பெற்றவன் தோற்றுப்போனவனின் வெற்றியைத் தடுக்க, மீண்டும் அம்மனிதன் தோல்வியையேச் சந்திக்கின்றான். வெற்றித் தோல்விகள் இரு மனிதர்களுக்குள்ளே அல்லது இரு தரப்பினருக்குள்ளேயே நிர்ணிக்கப்படுகிறது. அவ்வாறு வெற்றிப் பெற்றவனிடம் நற்பண்புகள் காணப்படுமாயின் அவனுடன் சேர்ந்து மக்களும் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள். ஒரு மனிதனின் உள்ளத்தைக் கணக்கிடும் போது அவனின் ஒழுக்கமும், நற்பண்புகளுமே மக்களின் மனதில் என்றுமே நிற்கும்.

இரு மனிதர்களிடம் காணப்படும் போட்டி, பொறாமை, வஞ்சகம், சூது இவற்றை தவிர்த்து நட்பு பாராட்டப்படுமாயின் இவ்வுலகினில் நல்லதொரு ஆட்சியை நடத்தலாம். கடந்த காலத்தில் அப்படிப்பட்ட ஒரு நல்ல நட்பு நம்மிடையே இல்லாதப்பட்சத்தில்தான் நாட்டை ஆங்கிலேயரிடம் தாரைவார்த்து விட்டோம். அவர்களும் நம்மை அடிமைப் படுத்தி ஆண்டு வந்தார்கள். “நாடு ரெண்டு பட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டமாம்” என்ற பழமொழிக்கு ஏற்ப இன்றைய நட்புகள் பகைமையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன எனலாம். அவ்வகையில் பதினெண் கீழ்க்கணக்கு அறநூல்களில் ஒன்றான நான்மணிக்கடிகையில் சொல்லப்பட்டிருக்கும் நல்ல நட்பின் பெருமையும், சிறுமையையும் இக்கட்டுரையின்கண் ஆராயலாம்.

 நான்மணிக்கடிகை:

            நான்மணிக்கடிகையின் ஆசிரியர் விளம்பிநாகனார் ஆவார். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அடி அளவினால் பெயர்ப்பெற்ற நூல். இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு பாடல்களிலும் நான்கு கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. ஓவ்வொரு கருத்துக்களும் சிறப்பு வாய்ந்தவையாகவே கருதப்படுகிறன. “கடிகை என்பதற்குரிய பொருள்களில் துண்டம் என்பதும் ஒன்றாம். எனவே, நான்மணிக்கடிகை என்பது நான்கு இரத்தினத் துண்டங்கள் என்று பொருள்படும்” என முனைவர் வே.இராமநாதன் அவர்கள் கூறுகின்றார். தெளிந்த தமிழ்ச்சொற்களோடு எளிமையாகப் பாடல்களைக் கொண்டிருப்பது ஆசிரியரின் தனிச்சிறப்பினைக் காட்டுகிறது.

சங்ககாலத்தில் நட்பு:

            சங்ககாலத்திலே நட்பைச் சிறந்ததாகக் கருதினர். கோப்பெருஞ்சோழன் – பிசிராந்தையார், கபிலர் – பரணர், அதியமான் – ஒளவையார் ஆகியோரின் நட்பினை உதாரணமாகக் காட்ட முடியும். நட்பின்மேல் அன்பும், ஆழ்ந்த பற்றும் சங்க காலத்திலே இருந்து வந்தது எனலாம். அரசன் புலவனென்று பாராமல் நல்ல நட்பானது அன்றாடம் வளர்ந்து வந்தது. தோழிக்காக அதிசய நெல்லிக்கனியைக் கொடுத்ததும், நண்பனுக்காக உயிரை துட்சமென மதித்து உயிரை விடுவதும் இன்றும் நம்நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றது. ஒரு பக்கத்தில் போர் சண்டையென இருப்பினும் நட்பு பாராட்டும் நல்உள்ளங்களையும் இருக்கக் காண்கிறோம்.

 நான்மணிக்கடிகையில் நட்பு:

            நட்பைப் பற்றி எந்நூலூம் பேசாமல் இருந்ததில்லை. நான்மணிக்கடிகையும் நட்பைப் பற்றி விளம்புகிறது. நண்பன் பக்கத்தில் இருக்கும் போது கவலையில்லை, மன உறுதி மிகும், முகம் புத்துணர்ச்சி பெறும் போன்றவை மட்டுமில்லாமல் நண்பர்களுக்கிடையேக் காணப்படும் ஒற்றுமை, வேறுபடும் தன்மை, பிரிவுகள், நண்பனுக்காகவே வாழ்தல், உதவி செய்தல், நண்பனை மதிப்பிடும் முறை போன்றவற்றைப் பற்றி பேசுகிறது.

 நகையினிது நட்டார்:

            தோல்விகளாலும், துன்பங்களாலும் துவண்ட மனிதனின் இதயமானது ரொம்பவே கனத்துப் போயிருக்கும். அப்பொழுது மனதில் உள்ள துயரத்தை மற்றவர்களிடம் பகிரவே நினைப்பான். எல்லோரிடமும் தன் அந்தரங்கத்தை வெளிப்படுத்த முடியுமா? அதனால், தனக்கு நெருங்கிய நண்பனைத்தான் தேடுவான். அந்த நண்பனிடம் தன்னுடைய கஸ்டத்தைச் சொல்லி அழுவான். அழுகையின் முடிவில் கண்ணீராய் துன்பம் கரைந்து போகும். அக்கண்ணீரை முகமலர்ச்சியுடன் நண்பன் துடைப்பான்;. நான்மணிக்கடிகையில்,

            “நகையினிது நட்டார் நடுவன்” (நான்மணி.38:1)

            “நசைநலம் நட்டார்கண் நந்தும்” (நான்மணி.26:1)        

போன்ற பாடல்கள் நண்பர்கள் ஒருசேர இருக்கும்போது முகமலர்ச்சியுடன் சிரித்து மகிழ்ந்து காணப்படுவார்கள் என்கிறார் ஆசிரியர். துன்பத்தில் இருந்து மீட்டு இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளவே நண்பன் வருகின்றான். ஆனால்; இக்காலத்தில் முகத்தில் மட்டும் நட்பை வைத்துக்கொண்டு அகத்தில் வஞ்சனையை சூடிக்கொண்டிருக்கிறார்கள். வள்ளுவர் கூட,

                 “முகம்நக நட்பது நட்புஅன்று நெஞ்சத்து

                அகம்நக நட்பது நட்பு” (குறள்.786)

            முகத்தில் தோன்றுவது நட்பல்ல. உள்ளத்தில் தோன்றுவதுதான் நட்பு என்கிறார். இக்காலக்கட்டத்தில் சிரித்துப் பேசும் எல்லோரையும் நண்பனாக்கிப் பார்க்க முடிவதில்லை. வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில் அவை ஏமாற்றத்திலேயே முடியும்.

நட்டார்கண் விட்ட வினை:

    நண்பர்களுக்குள்ளே உண்மைதான் முதலில் இருக்க வேண்டும். உண்மைப் பொய்யாகும்போது அங்கு விரிசல் ஏற்படுகிறது. பொய் சொன்னால் நட்பானது கெட்டழியும் என்கிறார் விளம்பிநாகனார்.

                  “—————————— நாடாமை

                  நட்டார்கண் விட்ட வினை” (நான்மணி.27:3-4)

        நண்பர் ஒருவரிடத்தில் ஒரு வேலையைச் சொன்ன பின்பு, மீண்டும் அவ்வேலையை தன் நண்பனால் செய்ய முடியுமா என்று சந்தேகிப்பது மிகப்பெரியத் தவறாகும். தன்னுடைய நண்பர் இக்காரியத்தைச் செய்ய முடியும்யென நம்பித்தான் வேலையைக் கொடுக்கின்றீர். பிறகு சந்தேகப்பட்டு நல்ல நண்பனை இழக்கவே நேரிடுகிறது. இதுபொன்ற நிலை ஒருசில மனிதர்களிடம் இன்றும் கானப்படுகின்றன. இது மற்றவர்களிடம் நாம் கொண்டிருக்கும் நம்பகத்தன்னையைக் குறிக்கிறது. ஒரு மனிதனிடத்தில் இப்போக்கானது தொடர்ந்து காணப்படுமாயின் அவனின் மனமானது மிகுந்த குழப்பத்துடனும், தன் சொந்த பந்தகளைக்கூட சந்தேகப்பட்டு வாழ்க்கையை இருண்ட நகரத்துக்குள் தள்ளிக் கொண்டிருப்பார்கள். ஆகவே மனிதனின் மனம் சரியான ஒரு முடிவை எடுக்க வேண்டும். முடிவு எடுத்தப் பின்பு அவற்றை ஆராய்ந்து மற்றவர்களைக் காயப்படுத்தக் கூடாது.

 நண்பர்களின் தன்மை:

        உண்மையான நண்பர்கள் இருக்கிறார்கள் எனில் அவர்களுக்குள் விட்டுக்கொடுத்து ஒற்றுமையுடனே வாழ்வார்கள். அவர்களுக்குள் சின்னசின்னச் சண்டைகள் வரினும் தன் உற்ற நண்பர்களுக்கு தீய செயல்களை மட்டும் ஒருபோதும் செய்யமாட்டார்கள். ஒரு நண்பனின் நல்லகுணமும், தன்மையும் எப்பொழுது நமக்கு தெரிய நேரிடுகிறது என்றால், அந்த நண்பனை விட்டுப் பிரிந்து தனிமையில் துன்பப்படும்போதுதான் உயிர் நண்பனின் நினைப்பு வருகின்றது.

                             “—————————————————-ஒருவன்

                            கெழியின்மை கேட்டால் அறிக: பொருளின் ”   (நான்மணி.63:1-2)

            ஒருவன் கேடு செய்வதில் இருந்து அவன் தனக்கு நட்பில்லாதவன் என்பதை அறியலாம் எனச் சுட்டுகிறார் ஆசிரியர். நல்ல நண்பர்கள் இவ்வுலகினில் வாழ்ந்தாலும் இப்படிப்பட்ட தீய நண்பர்களும் இருக்கவே செய்கின்றனர். இவர்களுக்கு நண்பனுடைய நன்மதிப்பு தெரிவதில்லை என்றேச் சொல்லலாம். நட்பைப் பற்றி அறிய நேரும்போது ஒருவர்கூட இவர்களிடத்தில் நண்பர்களாக இருக்க மாட்டார்கள் என்பதுதான் வருத்தமான செய்தி. இவற்றை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும்.

 நண்பர்கள் உரைக்கும் இன்சொல்:

            நண்பர்கள் தீயச் சொற்களைப் பயன்படுத்தும் போது அவர்களுடைய நட்பு நீண்ட காலம் நீடிப்பது குறைவே. எந்நேரத்திலும் நுனிப்பொழுதினும் கூட நண்பர்களிடம் மாறுபட்டு நிற்கக்கூடாது. அவர்களின் நட்பில் சூது, வஞ்சகம், பொறாமை ஏற்படுமாயின் அந்நட்பு உடனடியாய் பிரியும் என்பதை,

                    “நாவன்றோ நட்பறுக்கும்? தேற்றமில் பேதை

                   விடுமன்றோ வீங்கிப் பிணிப்பான்?” (நான்மணி.80:1-2)

           இக்கூற்றின் வாயிலாக அறிய முடிகிறது. ஆனால் நண்பன் தவறானப் பாதைக்குச் செல்லும்போது தடுத்து நிறுத்துபவனே உண்மையான நண்பன். தவறானப் பாதைக்குச் செல்லும் நண்பனோ அப்பேச்சைக் கேட்க மறுப்பான். மேலும் தனக்கு அறிவுரை சொன்ன நண்பன் மீது கோபமும் வெறுப்பும் அடைவதுடன் நட்பு முறிந்துபோகும் அளவிற்கு பிரச்சனையும் செய்வான். ஆனாலும் நண்பனுக்காக பொறுமையுடன் அவனை வழிநடத்த வேண்டும். அந்நண்பன் கோவப்படுவதற்கு காரணம் அவன் போகின்ற கீழானச் செயலே ஆகும் என்பதை அறிந்து நட்புடன் பழகுதலே அன்பு நிறைந்த வழியாகும். நான்மணிக்கடிகையில் நண்பனுடைய சொல்லானது இன்சொல் என்கிறது,

                                            “—————————————— பண்ணிய

                                           யாழொக்கும் நட்டார் கழறுஞ்சொல்;” (நான்மணி.100:2-3)

            நட்புடையார் இடித்துரைக்கும் சொல் வலிமையுடையதாயினும் முடிவில் யாழினைப் போன்று இனிமையினையே தரும் என்கிறார் ஆசிரியர். ஆகையால் நண்பர்கள் எப்போதும் கெடுதல் செய்ய மாட்டார்கள். காலமாற்றத்தால் நண்பர்களுக்குள் வெறுப்பினை உண்டாக்கி நட்பினை அழிக்கவும் செய்கிறது.

நண்பரை வாழச் செய்க :

            இன்றையக் காலச்சூழ்நிலையோடு ஒப்பிடும்போது நட்பில் ஆயிரம் மாற்றங்கள் உண்டாயிருக்கின்றன. பள்ளி வாழ்க்கையில் மிட்டாய் கொடுத்து பக்கத்தில் அமர வைத்து நான் இருக்கின்றேன் என்று சொன்ன முதல் நண்பனை இன்று எத்தனைப் பேருக்கு நினைவிருக்கிறது. ஒவ்வொரு பருவத்திலும் சில நண்பர்கள் வந்து போகின்றார்கள். எத்தனை பேர் நண்பனுக்காகத் தோள் கொடுக்கச் சென்றார்கள்? தோள் கொடுக்க வந்தார்கள்? எண்ணிப்பார்த்தால் ஒன்றுமே இல்லை. அன்றைய ஆண்-பெண் நட்புகளில் புனிதம் இருந்தன. போற்றுதலுக்குரிய மரியாதை இருந்தன. இன்று வேறுவிதமாய் இருக்கின்றன. இன்றைய ஆண்-பெண் நண்பர்களே ஒழுக்கமாக நடந்து கொண்டால் கூட இச்சமூகம் அப்பெண்ணைப் பழிதூற்றவே செய்கிறார்கள். இதனால் இங்கு நட்பானது மறுக்கப்படுகிறது. பெண் தோழிகள் என்றால் அவர்களின் நட்பு பள்ளி, கல்லூரி வரைதான். திருமணத்திற்குப் பிறகு வெறும் நலம் விசாரித்தல் மட்டுமே அவர்களுக்குள் நடக்கிறது. ஆண் நண்பர்கள் எனில் இன்பமானலும் துன்பமானலும் சரி உடனே மதுக்கடைக்கு மொய் வைக்கச் சென்று விடுகிறார்கள். இவர்களா நல்ல நண்பர்கள்? என நினைக்கத் தோன்றுகிறது. “இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள்ஃ788) என்ற வள்ளுவரின் வாக்கு இங்கு நினைவுக்கூறத்தக்கது. நட்பு என்ற பெயரினால் புகைக்கும், மதுவுக்கும் அடிமையாகி வாழ்க்கையே சீரழிந்து கெட்டுக் கிடக்கிறார்கள் இன்றைய இளைய சமூதாயத்தினர். நான்மணிக்கடிகை கூறும் நல்ல நண்பன் எங்கே இருக்கின்றான் என்று தேட வேண்டியிருக்கிறது. அந்த நல்ல நண்பன் எங்குமில்லை. நமக்குள்தான் தூங்கிக் கொண்டு இருக்கின்றான் என்பதை அறிய வேண்டும்.

            தான் கெட்டாலும் நண்பர்களை ஒன்றாக வாழச்செய்வதுதான் உண்மையான நட்பு. அந்நட்பானது அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே அனைவருடைய எண்ணமாக இருக்கின்றது.                                

ஆய்வுக்கட்டுரையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here