குதிரை குட்டியின் வழக்கு – கிராமத்துச் சிறுகதை

iniyavaikatral.in

The case of the pony

ஒரு வழிப்போக்கன் குதிரையோடு அந்த வழியே வந்து கொண்டிருந்தான். குதிரையோ நிறைமாத கர்ப்பம். இவனுக்கும் சரி குதிரைக்கும் சரி அதிக தூரம் நடக்க முடியவில்லை. பசி வேறு வயிற்றைக் கிள்ளியது.

வழியிலே ஒரு இட்லிக் கடையைக் கண்டான் அவன். சாம்பார் வாசனை மூக்கைத் துளைத்தது. பிடித்திருந்த குதிரையைப் பக்கத்தில் உள்ள  எண்ணெய் ஆட்டுகின்ற செக்கில் கட்டினான். கையோடு கொண்டு வந்திருந்த கொல்லை கரைத்து குதிரைக்கு வைத்தான்.

சுடச்சுட இட்லியை புட்டு வாயிலே போட்டு வயிற்றை நிரப்பிக் கொண்டான். வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு கைகழுவினான். செக்கில் வந்து குதிரையைப் பார்த்த போது குதிரை குட்டி போட்டிருந்தது. குதிரையையும் குட்டியையும் அழைத்துச் செல்லலாம் என்று நினைத்தான். அப்போது அங்கு வந்த செக்கன்,

“நீ குதிரையை மட்டும்தான் செக்கில் கட்டிவிட்டுச் சென்றாய். குட்டியை நீ கொண்டு வரவே இல்லை. இந்தக் குட்டியை என்னுடைய எண்ணெய் செக்குதான் குட்டியாகப் போட்டது. அதனால் உனக்கு நான் குட்டியைத் தரமாட்டேன்” என்று சொன்னான்.

குதிரைக்காரன் எவ்வளவு பேசியும் குட்டியைச் செக்கனிடமிருந்து வாங்க முடியவில்லை. வழக்கு ஊர் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஊர்க்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் கேட்பதாக தெரிவில்லை. வழக்கும் முடிந்தபாடில்லை.

சரியென்று வழக்கானது ஏழூர்க்காரர்கள் சேர்ந்து செய்யும் பஞ்சாயத்திற்குச் சென்றது. ஏழூர் பஞ்சாயத்துக்காரர்கள் எவ்வளவு சொல்லியும் செக்கன் பிடிவாதமாய் குதிரைக்குட்டி எனக்குத்தான் சொந்தம் என்று வாதாடினான்.

இது என்னாடா வம்பா போச்சு! வழக்கு இழுத்துக்கொண்டே போகுதேன்னு ஊர்மக்கள் நினைச்சாங்க. சரின்னு ஏழூர் பஞ்சாயத்துக்காரங்களும் வடக்குல  இருக்குற குள்ள நரிக்கிட்ட இந்த வழக்க கொண்டு போனாங்க.

வழக்குக்குண்டான  செய்தியை குள்ள நரிக்கிட்ட சொன்னாங்க. குள்ளநரியும் கேட்டுச்சு..

“சரி… வர்ற ஞாயிற்றுக்கிழமைதான் அனைவருக்கும் லீவு. அதனால  அன்னிக்கே பஞ்சாயத்த வச்சிப்புடுவோம். ஆறு மணிக்கெல்லாம் ஏழூர் மக்களையும் பஞ்சாயத்து ஆட்களையும் வரச்சொல்லிடுங்க. நானு ஏழு மணிக்காட்டம் வந்திடுறேன்” ன்னு நரி சொல்லிடுச்சி.

அன்னிக்கு ஊர்மக்கள் எல்லோரும் காலையிலேயே ஆறு மணிக்கெல்லாம் பஞ்சாயத்துல கூடிட்டாங்க. நரி வருவதற்கு இந்தா இப்ப வரும். இந்தா அப்ப வருமுன்னு பாத்துப் பாத்துக் கண்ணு பூத்துப் போச்சு.

சாயுங்காலம் ஆறு மணிக்கு வந்துச்சாம் குள்ளநரி.  எல்லோரும் நரிக்கிட்ட போயி,

“என்ன நரியண்ணே… காலையில ஆறு மணிக்குப் பஞ்சாயத்துன்னா… நீங்க சாயுங்காலம் ஆறு மணிக்கு வாரீங்களே… ” அப்படின்னாங்களாம்.

“பஞ்சாயத்துக்கு புறப்பட்டுக்கிட்டு இருந்தேனா…. அந்த நேரம் பார்த்து பிரம்மன்கிட்ட இருந்து ஒரு அழைப்பு… என்னான்னா… தெக்க வங்காளவிரிகுடா கடலு பத்தி எரிஞ்சிக்கிட்டு இருந்திச்சி. நெருப்ப அணைக்க வரகு வக்கீல மேல போட்டு மூடி அணைச்சிட்டு வருவதற்று நேரமாயிடுச்சி” அப்படின்னுதாம்.

வாய வச்சிக்கிட்டு சும்மா இருக்க முடியாத செக்கன்,

“அதெப்படி வங்காளவிரிகுடா கடலு பத்திகிட்டு எரியும்” அப்படின்னானாம்.

            குள்ளநரி, செக்கானை பக்கத்தில் கூப்பிட்டதாம், செக்கானின்  கன்னத்தில் ஓங்கி ரெண்டு அறைவிட்டு, “ஏண்டா செக்கு குதிரைக்குட்டிப் போடும்போது – வங்காளவிரிகுடா கடலு நெருப்புல பத்திகாதாடா” என்று கேட்டதாம்.

            செக்கன் தலைதெரிக்க அவ்விடத்தை விட்டு ஓடினானாம். வழிப்போக்கனும் குதிரையையும் குட்டியை அழைத்துக்கொண்டுச் சென்றானாம்.

சிறுகதையின் ஆசிரியர்

முனைவர் க.லெனின்

உதவிப்பேராசிரியர்,

எம்.ஜி.ஆர் கல்லூரி, ஓசூர் – 635 130.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here