உறவுநிலை சார்ந்த கடிதங்கள்

உறவுநிலை சார்ந்த கடிதங்கள்
உறவுக் கடிதங்கள் எழுத கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்
1.உறவுநிலை சார்ந்த கடிதங்கள் ஆரமிக்கும் முன்பே வலப்பக்கத்தில் தேதியைக் குறிப்பிடவேண்டும். ஏனெனில் கடிதத்தைப் பிரிக்கும்போதே இக்கடிதம் எப்பொழுது எழுதப்பட்டது என்பதை தெரியப்படுத்த வசதியாக இருக்கும்.

2.அடுத்ததாக யாருக்கு என்பதைக் குறிப்பிட வேண்டும். அன்புள்ள | பாசமுள்ள | பிரிமுள்ள | மனைவிக்கு | அம்மாவுக்கு  என்று எதுவேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம். கட்டாயமில்லை.

3.பொருள் பகுதியில் நாம் என்ன சொல்ல வேண்டும் என நினைக்கின்றோமோ அவற்றை தெளிவான முறையில் சொல்ல வேண்டும். சுற்றி வளைத்துச் சொல்லுவது, சொன்னதை திரும்பதிரும்ப சொல்லுவது கூடாது. இப்படித்தான் சொல்ல வேண்டும் என்ற எந்தவொரு விதியும் இங்கு இல்லை. ஒவ்வொருவரும் தனக்கு வருகின்ற நடையை ஒட்டி எழுதலாம். ஆனால் பெறுநருக்குப் புரிய வேண்டும்.

4. வணக்கமும் நன்றியும் கடிதத்தில் போட்டே ஆக வேண்டும் என்ன கட்டாயமில்லை. இருந்தால் மகிழ்ச்சி. அதேபோல் தாழ்ந்த என்பது போடவேண்டாம். யாருக்கும் யாரும் தாழ்ந்தவர்கள் கிடையாது. ஆனால் பணிவு என்பது நல்லது.

5. இவ்வகையான கடிதத்தைப் பொறுத்தவரை கையெழுத்துப் போடுகின்ற பகுதியில் இப்படிக்கு, என்றும் அன்புடன், என்றும் நட்புடன், என்றும் பிரியமுடன் என எது வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளலாம்.  இறுதியில் காற்புள்ளி ( , )  வைத்தல் அவசியம்.  அதுவும் வலப்பக்கத்தில் இருத்தல் வேண்டும்.

6. இறுதியில் அனுப்புநர் முகவரியும் அதற்கு நேராக பெறுநர் முகவரியும் இடம் பெறுதல் அவசியம். ஆனாலும் அனுப்புநர் முகவரியை ஒரு பக்கத்திலும் பெறுநர் முகவரி மறுபக்கத்திலும் கூட இடம் பெறலாம்.

7.இவ்வகையான கடிதங்கள் தபால் துறையின் மூலம் செல்லுவதால் தபால் முத்திரையை ஒட்டுவது அவசியமாகும். அரசுத்துறை அஞ்சலில் அனுப்பினால் பணம் கிடையாது (இலவச கடிதங்கள் மட்டும்). கூரியரில் அனுப்பும் போது பணம் கட்ட வேண்டும்.

8. ஒருகாலத்தில் மின்னலாய் இருந்த அஞ்சல் துறையானது இன்று இணைய வரவால் கொஞ்சம் வலுவிழந்து தற்போது அஞ்சலக சிறுசேமிப்பு, வங்கி முறைகள் என முன்னேறி வருகின்றது எனலாம். ஆனாலும் எதுவாயினும் கடிதத்தில் எழுதி அனுப்புகின்ற அமைதி வேறெங்கும் இருக்காது என்றே எண்ணத் தோன்றுகிறது.

9. இறுதியாக உறவுநிலை சார்ந்த கடிதங்களைப் பொறுத்தவரை இக்கடிதம் இப்படித்தான் எழுத வேண்டும் என்ற கட்டாயமில்லை. எப்படி வேண்டுமானாலும் எழுதலாம். எந்தவிதமான விதிமுறைகளும் கிடையாது.

10.மேலே சொல்லப்பட்டது கூட இப்படி இருந்தால் நன்றாயிருக்கும் என்றே சொல்லப்படுகின்றன.
மேற்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றி உறவுக்  கடிதத்தினை எழுதுங்கள்.

1.பாராட்டுக் கடிதங்கள் அல்லது வாழ்த்துக் கடிதங்கள்

       ஒருவரைப் பாராட்டிக் கடிதம் எழுதுவது பாராட்டுக்கடிதம் எனப்படும். இதனை வாழ்த்துக்கடிதம் என்றும் சொல்லலாம். பாராட்டுதல் என்பது அனைவருக்கும் வராது. ஆனால் மற்றவரை பாராட்டிப் பாருங்கள். மனம் மகிழ்ச்சியாகும். துன்பம் நம்மை விட்டு விலகும். முகம் மலரும். நேரடியாக ஒருவரைப் பாராட்டும்போது இயல்பாக நம்மிடையே இருக்கும் கூச்ச சுபாவம் நம்மை பேசவிடாமல் தடுக்கும். அதனால் மனதில் உள்ளதை கடிதத்தின் வாயிலாகச் சொல்லமுடியும். நேரில் வெளிப்படையாகப் பேச முடியாததைக் கூட கடிதம் வாயிலாக பேசமுடியும். அதுவும் பாராட்டுக் கடிதத்தைப் பொறுத்தவரை உணர்ச்சி, அன்பு, கருணை, வர்ணனை என எதுவேண்டுமானாலும் அமைத்து எழுதலாம்.

       இக்கடிதங்கள்  நம் குடும்ப உறவுகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், முன்பின் தெரியாதவர்களுக்குகூட பாராட்டி கடிதம் எழுதலாம். பாராட்டுதானே யார் வேண்டுமானாலும் யார்க்கிட்டேயும் சொல்லலாம். சாலையில் ஒருவர் நன்றாகப் பாடிக்கொண்டிருப்பார். நமக்கு அப்பாடலும் அப்பாடலை பாடியவரையும் பிடித்துப்போகும். உடனே சென்று வாழ்த்துகள் சொல்லுகின்றோம். அதுபோலத்தான். 

       இன்றைய இணைய உலாவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் மகம் தெரியாத ஒருவர் பதிவு போடுகின்றார். அப்பதிவானது நமக்கு பிடித்துப்போக, உடனே விரும்புதல் (லைக்) செய்கின்றோம்.  பிறரை பாராட்டாவிட்டாலும் பராவாயில்லை. உங்களுடன் இருக்கும் உறவுகள் மற்றும் நண்பர்களையாவது பாராட்டுங்கள்.
பாராட்டுவதும் வாழ்த்துவதும் ஒன்றாகவே கருதப்படுகின்றன.

கீழ்க்கண்டவாறு பாராட்டுக் கடிதங்கள் அமையலாம்
1. ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.

2.பத்தாம் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.

3. மேனேஜர் பதவி கிடைத்த தந்தையைப் பாராட்டிக் கடிதம் வரைக.

4. பிறந்தநாள் விழா கொண்டாடும் அம்மாவிற்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.

5.வேலை கிடைத்த அண்ணனுக்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.

6.அக்காவின் திருமணத்திற்கு வாழ்த்துச் சொல்லி கடிதம் வரைக.

7.பதவி உயர்வு, ஊதிய உயர்வு, அரசு வேலை ஆகியனவை பாராட்டியும் வாழ்த்துச் சொல்லியும் கடிதம் எழுதலாம்.
இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம்.
உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு அலுவலக கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்த நண்பனைப் பாராட்டிக் கடிதம் வரைக.
நாள் : 08.03.2024
அன்புடைய நண்பனுக்கு,           
        நண்பா! நான் நலம். நீ எப்படி இருக்கின்றாய். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. இப்பொழுதுதான் செய்தித்தாளில் நீ ஓட்டப்பந்தையத்தில் முதல் இடம் பிடித்ததைப் பற்றி பார்த்தேன். மிகவும் சந்தோசம். நீ சிறு வயதுள்ளபோதே நன்றாக ஓடுவாய். நான் அறிவேன். உன்னுடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் இன்று உன்னை வெற்றியடை வைத்திருக்கிறது. இன்னும் பல போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். மேலும் நம் நாட்டிற்காகவும், ஒலிபிக்கிலும் நீ கலந்து கொண்டு வெற்றி வாகை சூட வேண்டும். இறைவன் எப்பொழுதும் உன்னுடனே இருக்க வாழ்த்துகிறேன்.

நன்றி நண்பா

என்றும் நட்புடன்,
 
(சரவணன்)

அனுப்பநர்                                                                          பெறுநர்
                                                 
               க.சரவணன்,                                                                        த.முருகவேல்
           
               விவேகானந்தர் தெரு,                                                     ராம் நகர், அடையார்,

                ஆத்தூர்.                                                                               சென்னை.


2.சுற்றுலாக் கடிதங்கள்
           

          உலகம்  மிகப்பெரிது. நாம் பார்க்காத காட்சிகள் இவ்வுலத்தில் நிறையவே இருக்கின்றன. ஒவ்வொரு காட்சியும் இயற்கையும் செயற்கையுமாய் கலந்து விரிந்து நிற்கின்றன. சிலவற்றை நாம் நேரில் பார்த்து ரசித்திருப்போம். சிலவற்றை தொலைகாட்சியிலோ அல்லது புகைபடத்திலோ பார்த்திருக்கலாம். அவ்வாறு நேரிலே பார்க்காத சில காட்சிகளைப் பார்க்க வேண்டும் என்று ஆர்வமும் உண்டாகிறது. அப்படிப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்த்து ரசிப்பதும் உண்டு. 
           
       நாம் அனைவரும் பார்க்க வேண்டிய இடங்கள் உலகத்தில் நிறையவே இருக்கின்றன. அவ்விடத்திற்கு எல்லாம் தனி மனிதனாய் சென்றால் அவனுக்கே போரடித்துவிடும்.  கூட்டமாக உறவுகளுடன் நண்பர்களுடன் சென்று பாருங்கள். அதனுடைய சுவாரிசயத்தைப் புரிந்த கொள்ளலாம். அவ்வாறு செல்லும் இடங்களைச் சுற்றுலா தளங்கள் என்கிறோம்.
           
     இவ்வுலகத்தில் எங்கும் இல்லாதுபோல் தனித்து அமைந்த பொருட்கள், இயற்கை  காட்சிகள், செயற்கை உருவாக்கங்கள், பழைய இடங்கள், கோவில்கள், கடல், ஆறு, மலை, வயல், மனிதன் என அனைத்துமே சிறப்புடையதுதான். அவற்றை எல்லாம் பார்க்க மக்கள் கூட்டங்கூட்டமாக வந்து போவார்கள். மக்கள் சுற்றிப் பார்க்க ஏதுவாக இருப்பதால் சுற்றுலா எனப் பெயர் வந்திருக்கலாம். அந்த இடங்களைச் சுற்றுலா இடங்களாகக் கருதப்படுகின்றன.
           
     இன்று சுற்றுலா தளங்களுக்கென்று அரசாங்கமே ஏற்பாடு செய்கிறது. பெரியபெரிய தொழில் நிறுவனங்களும் சுற்றுலா தளங்களை விரும்பி வந்து பார்க்கின்றனர். இதனால் குடும்ப ஒற்றுமை வலப்படும், மனம்  இலேசாக உணர ஆரமிப்பீர்கள், நட்பு வளரும், பகிர்ந்துண்ணும் பழக்கம் ஏற்படும். குண்டு சட்டியில் குதிரை ஓட்டாமல் வெளியுலகத்தை அறிந்து கொள்ளலாம்.
           
      நமது ஊரில் நாம் எவ்வளவு பெரிய ஆளாக இரந்தாலும் அசலூரில் நாம் வேற்று ஆள்தான். அப்போதுதான் நம்மை நாமே உணர முடியும். அப்படிப்பட்ட சுற்றுலாவைப் பற்றி கடிதங்கள் எவ்வாறு எழுதுவது என்பதை பார்க்கலாம்.

சுற்றுலாக் கடிதத்தைப் பொறுத்தவரை இரண்டு  வகையாகப் பிரிக்கலாம்.
1.சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கோ அல்லது உறவுகளுக்கோ கடிதம் எழுதுவது.

2. இனி செல்லுகின்ற சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கோ அல்லது உறவுகளுக்கோ கடிதம் எழுதுவது.

கீழ்க்கண்டவாறு சுற்றுலாக் கடிதங்கள் அமையலாம்
1. கொடைக்கானல் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கு கடிதம் வரைக.

2.தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் செல்வதற்கு உன்னோடு வருமாறு நண்பனை அழைத்துக் கடிதம் எழுதுக.

3. குடும்பத்துடன் சிம்லா செல்ல உறவுகளை அழைத்துக் கடிதம் எழுதுக.
           
இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம்.  உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு சுற்றுலா கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

கொடைக்கானல் சென்று வந்த சுற்றுலாவைப் பற்றி நண்பனுக்கு கடிதம் வரைக.
  
நாள் : 10.03.2024

அன்புடைய நண்பனுக்கு,
           
       நண்பா! நான் நலம். நீ எப்படி இருக்கின்றாய். உன்னைப் பார்த்து ரொம்ப நாளாகி விட்டது. நான் தற்போதான் கொடைக்கானல் சென்று வந்தேன். மிக அருமையான இடம்.  இரண்டு நாட்கள் தங்கியிருந்தோம். கொடைக்கானல் முழுமையும் கண்டு களித்தேன். மனம் முழுவதும் நிம்மதி. குளிர்மையான பிரதேசம். மிக்க சந்தோசம் அடைந்தேன். ஆனால் ஒருகுறை இருந்ததுபோல் இருந்தது. அது என்னவென்றால், நண்பா! நீயும் என்னுடன் வந்திருந்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அந்த அழகான தருணத்தை உன்னுடன் பகிர்ந்திருப்பேன். அடுத்தமுறை மீண்டும் இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தால் கண்டிப்பாக வரவேண்டும். உனக்காகக் காத்திருக்கிறேன்!

நன்றி நண்பா

என்றும் தோழமையுடன்,

(கதிரவன்)

அனுப்பநர்                                                                      பெறுநர்
          
         ச.கதிரவன்,                                                                          த.முருகவேல்
           
         விவேகானந்தர் தெரு,                                                    ராம் நகர், அடையார்,

         ஆத்தூர்.                                                                               சென்னை.


3.உறவுக் கடிதங்கள்

          ஒரு காலத்தில், செய்தியை ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு செல்லும் பாலமாகக் கடிதங்கள் இருந்து வந்துள்ளன. கடிதங்கள் ஞாபகங்களைக் கொடுக்கும். நேரிடையாகச் சொல்ல முடியாத வார்த்தைகளைக் கூட எழுத்தின் மூலமாகச் சொல்லி தெரிவிக்கமுடியும்.  எங்கோ ஒரு மூலையில் இருக்கும் சொந்தங்களை நண்பர்களைக் கடிதத்தின் மூலம் இணைத்துக் கொள்ளலாம். கடிதத்தின் முக்கியக் கருப்பொருளாக விளங்குவது உறவுகளுக்குள் எழுதுகின்ற கடிதங்கள்தான்.

        அன்பின் வெளிப்பாடாகவும் உணர்ச்சிகளின் தூண்டுதலாகவும் கடிதங்கள் அமைந்திருக்கின்றன. வெளியூரில் இருக்கும் கணவனிடமோ அல்லது மகனிடமோ மாதத்திற்கு ஒருமுறையோ இல்லை ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ கடிதம் வந்து விட்டது எனில் அந்தக் குடும்பப் பெண்களின் கண்களைப் பார்க்க வேண்டும். அந்த அளவிற்கு கடிதங்கள் உள்ளங்களை நிறைவித்து வாழ்ந்தன.

   அதுவும், காதல் கடிதங்களைப் பொறுத்தவரை இன்னும் ஒருபடிமேலே சொல்லலாம். பிடித்தமானவர்களிடம் இருந்து வருகின்ற கடிதங்களை பெட்டியிலோ அல்லது மறவிடத்திலோ வைத்து அவ்வவ்போது மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்துக் கொள்வது காதலின் கவிதைதான்.

      உறவுக்கடிதங்களை மக்கள் விரும்பினார்கள். கடிதங்களை யாருக்கும் தெரியாமல் ஒட்டி அனுப்புவது (இன்லேண்ட் லெட்டர்), வெளிப்படையான கடிதங்கள் (போஸ்ட் கார்டு), வெள்ளைத்தாளில் எழுதி அதற்குண்டான கவரில் (ஆபிஸ் கவர்) போட்டு அனுப்புவது என அவர்அவர்களுக்கென தரம் இருந்தன. அப்படிப்பட்ட உறவுக்கடிதங்களை இங்கு  பார்க்கலாம்.

கீழ்க்கண்டவாறு உறவுக் கடிதங்கள் அமையலாம்
1. வெளிநாட்டில் இருக்கும் கணவனிடமிருந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எழுதும் கடிதம்.

2.விடுதியில் தங்கியிருக்கும் மகன் தன் குடும்பத்திற்கு எழுதும் கடிதம்.

3. பள்ளிப் பருவ நண்பனுக்கு கடிதம் எழுதுதல்.

4.காதல் சம்பந்தப்பட்ட கடிதங்கள்.

5. பிறந்தநாள் வாழ்த்துக் கடிதங்கள்.

        இவை போன்றனவும் இவைபோல் பிறவும் வரலாம். உதாரணமாக மேற்கண்டவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் எடுத்துக்கொண்டு உறவுக்கடிதம் எழுதுவது எவ்வாறு என்று பார்க்கலாம்.

        இன்று கடிதங்கள் குறைந்து வாட்ஸ் அப், பேஸ்புக் என பல்வேறு இணைய தொடர்புகள் வந்தவிட்டன. ஆனாலும் கடிதங்களுக்கென மன மகிழ்வு இன்றும் உள்ளன.

வெளிநாட்டில் இருக்கும் கணவனிடமிருந்து மனைவிக்கும் குழந்தைகளுக்கும் எழுதும் கடிதம்.
நாள் : 12.03.2022
அன்புள்ள மனைவி மற்றும் குழந்தைகளுக்கு,           
            நான் நலம்! உன் நலம் அறிய ஆவல்! ஊரில் மழை பெய்ததா! உன்னையும் குழந்தைகளையும் பார்க்க வேண்டும் என்று மனம் பாடாய்படுத்துகிறது. பெரியவன் எப்படி இருக்கின்றான். சின்னவன் அடம்பிடிக்கின்றானா? நம் இரண்டு குழந்தைகளையும்   நன்றாகப் பார்த்துக்கொள். அவர்களுக்கு என்ன வேண்டுமென்று கேட்டு வாங்கி கொடு. என்கூட தங்கியிருக்கும் இராமசாமி அண்ணா இன்னும் பத்து நாளில் இந்தியா வருகிறார். அவரிடம் பணமும் குழந்தைகளுக்கான பொட்களும் வாங்கி கொடுத்து அனுப்புகிறேன்.  என்னை பற்றி கவலைப்படாதே. நீ உடம்பை நன்றாகப் பார்த்துக்கொள். இன்னும் இரண்டு வருடங்கள்தான் வேலை இருக்கிறது. முடிந்தவுடன் ஊருக்கு வந்து விடுகிறேன்.

என்றும் உன் நினைவுடன்,
 (கேசவன்)

அனுப்பநர்                                                                                              பெறுநர்
           
       க.கேசவன்                                                                                                    கே.மலர்விழி
           
      துபாய்,                                                                                                              கும்பகோணம்.

 

1.அலுவலகம் சார்ந்த கடிதங்கள் பார்க்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here